சொந்த மக்களின் பனிக்குடம் மறுத்து...
அந்நியக் கம்பெனி பாட்டிலில் நிரம்பும்
அருவருப்பு தாளாமல்....
தண்ணீர் அழுவது யாருக்கு தெரியும்...
கொட்டியும், ஆம்பலும், குளத்துறை மீனும்
துடித்து இறக்க...
ஒட்டிய வாழையும், ஓரிதழ் புல்லும்...
முகம் வெடித்துக் கருக....
கட்டிட உச்சியில் ஐய்ந்து நட்ச்சத்திர ஓட்டலில்
கேளிக்கைக்காக
நீச்சல் குளத்தில் கொட்டிடும்
அவலம் தாங்காமல்....
தண்ணீர் அழுவது யாருக்கு தெரியும்?
காவிரி, பெண்ணை, பாலாறு இப்படி
தாய் நிலமெங்கும்
தன் முகம்
பார்க்க முடியாமல்
கின்லே, அக்குவா, பாக்கெட்கென
அமரர் ஆனதன் அடையாளமாக
ஐய்ஸ் பெட்டிக்குள் இருப்பது கண்டு
தன் பிணம் பார்த்து தனியே உறைந்து...
தண்ணீர் அழுவது யாருக்கு தெரியும்?
நாற்றாங்காலில் பாய்ந்திருந்தாலும்
உலகம் பிழைத்தது...
ஊற்று நீராய் ஒளிந்திருந்தாலும்
பூமி தழைத்தது...
வெறும் பாட்டில் தண்ணி ஆனதனால்
பணம், காசுக்கு, விலை போனதனால்...
கைகழுவிட்டனரோ...? கையறு நிலைதானோ...?
வெகு மக்கள் நிலை விளங்காமல்....
தண்ணீர் அழுவது யாருக்கு தெரியும்?
ஆறுகள், ஏரிகள், ஓடைகள் அனைத்திலும்
அந்நிய ஜாடைகள் கண்டு...
அருவிகள் விழுவது தற்கொலையோ....?
தண்ணீர் தேடி அலைபவர்கள் விழிகளில்
தகிக்குது நெருப்பு...
நீரும் எரியும்
யாருக்கு தெரியும்?
- துரை. சண்முகம்
நீர் நிழல் கவிதை தொகுப்பிலிருந்து...
No comments:
Post a Comment