#30நாள்_வாசிப்புப்போட்டி
#30D105
Book no:2
Pages:112
ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்
ச தமிழ்ச்செல்வன்
முதல்வன் படத்தில் அர்ஜுன் மணிவண்ணனிடம் ஒருநாள் முதல்வராய் இருந்ததை சொல்லும் போது ஏன் சார் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஆண் சமைக்கிறோம்.. அதுக்காக எல்லா நாளும் சமைக்கச் சொன்னா நடக்கிற காரியமா என திரும்பி கேட்பார். அப்போது சமையல் என்பது ஆண்களுக்கான தனி செயல்பாடு அல்லதுஒருநாள் கூத்து எனும் மனநிலையில் தான் ஆண்கள் இருப்பார்கள்.
இந்த நூலில் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் தன் வாழ்வில் கிடைத்த அனுபவங்களை இதில் நம்மோடு பகிர்ந்துள்ளார். ஒரு பெண் இறுதிவரை கணவனை விட சமையலறையில் தான் அதிகம் இணைந்து வாழ்க்கை நடத்துகிறார் என்பதற்கு உதாரணமாய் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் கதையில சாவதற்கு முன்பு கூட தன் கணவனுக்காக சமைத்து வைத்து இருந்திருப்பாள் என்ற வரியை சிலாகித்துக் கூறுவார்.
மனிதன் தோன்றிய காலம் முதல் உணவுக்காக அவன் தேடிய கதைகளையும்.. இலக்கியங்களில் உணவு குறித்த பதிவுகளையும் அவ்வப்போது குறிப்பிட்டு இருப்பார். வண்ணதாசனின் ஒரு கதையில் .. மனைவி வேலையெல்லாம் முடித்து குளித்து வேறு புடவை உடுத்தி பளிச்சென தன்னை மாற்றிக் கொண்டு நிற்கும் போது.. மாலை ஆகியிருக்கும் .உள்ளே நுழையும் கணவன் எங்க கிளம்பியாச்சு என்று கேட்பான். எங்க போக அடுப்புக்கு தான் போகணும் என்பாள் மனைவி. ஆணோடு வாழும் இந்த வாழ்க்கை பற்றிய பெண்ணின் ஒரு வரி விமர்சனமாக இந்த வார்த்தையை அழுத்தமாக மனதை சுடும்.
தோசையின் நினைவுகளை சொல்லும்போது "எதையும் தோசையாக விடலாம் என்பதுதான் தோசையின் மகத்துவமே . சமையல் செய்யும் ஒருவர் முதலில் துவங்குவது தோசையாக தான் இருக்கும். பெரும்பாலானோருக்கு பிள்ளையார்சுழி
தோசை தான். எழுத்தாளர் அம்பையின் வெளிப்பாடு கதையில் பத்து வயசு தொடங்கி 40 வருஷத்திலே ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை என்று கணக்குப் போட்டுப் பார்க்கிறாள். ஒரு வருடத்துக்கு 7300 தோசை 40 வருடங்களில் 2 லட்சத்து 92 ஆயிரம் தோசை என்று அந்த கதை போகும் ..இந்த வரிகள் காலங்காலமாக தோசை சுட்டு கொண்டு இருக்கும் அம்மா பாட்டி அவர்களின் கணக்கு இன்னும் அதிகமாக இருக்கும் என்று மலைப்பாக அந்த கதை போவதாக சொல்லி இருப்பார்.
சின்ன சமையல் பெரிய சமையல் என்ற கட்டுரையில் பெரும்பாலானோருக்கு பரிமாறுவது என்பது கூட ஒரு கலைதான். கிராமத்திலே தன்னாலை கண்டா தனிஞ்சு வரும் அகப்பை.வேத்தாளைக் கண்டா மிதந்து வரும் அகப்பை என்று ஒரு சொலவடை. சட்டிக்குள்ளே ஆழமாக தணிந்து போகும் அகப்பை தான் நிறைய காய்களை அள்ளி வரும்.
வேற்று ஆளுக்கு மேலால் மிதந்து வரும் அகப்பை காய்கறி இல்லாமல் பரிமாறப்படும்.காய்கறிகள் பரிமாறுவதில் உள்ள பாரபட்சத்தை சொல்வதாக கூறியிருப்பார். இது கறிவிருந்தில் நன்றாகவே தெரியும்.
யூடியூப் சேனல் இல்லாத காலத்திலேயே வயதான தாயிடம் கேட்டால ஓராயிரம் சமையல் குறிப்புகள் கிடைக்கும். கர்ப்ப காலத்தில் சாப்பாடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை வண்ணநிலவனின் பலாப்பழம் என்ற கதையில் உதாரணமாக சொல்லியிருப்பார். நிறைமாத கர்ப்பிணியான இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் பலாப்பழம் அறுக்கும் வாசனை தரும் ஏக்கம் தான் கதையின் கரு. தனக்கு பக்கத்து வீட்டார் அறுக்கும் பலா பழத்தில் இருந்து இரண்டு சுளைகளாவது கொண்டுவந்து தராமல் போவார்களா என்ற எதிர்பார்ப்பிலேயே அவளுடைய பகல் பொழுது கழியும். ஆனால் பலாச்சுளை வராது .மாலை வந்துவிடும் என அந்தப் பெண்ணின் ஏக்கத்தை அந்த கதையில் சொல்லி இருப்பார்.
இவ்வாறு உணவு ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையில் எவ்வித அசைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதையும், தான் கிராமத்து வாழ்க்கையில் சந்தித்த உணவு குறித்த பல்வேறு தகவல்களையும் இதில் பகிர்ந்து உள்ளார்
தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் தான் உணவருந்திய ஆளுமைகளுடன் உண்டான தொடர்பினையும் கூறியுள்ளார். ஒரு வேளை பசி தாங்காத நண்பர்களையும், வெறும் தேநீர் மட்டும் அருந்திக்கொண்டு ஒரு நாள் வாழும் நண்பர்களையும் பார்த்திருக்கிறோம். சிறுவயதில் உணவு கிடைக்காத பலரின் வாழ்க்கை பின்னாளில் இறக்கும் வரை அதை நினைவு கூறுவதையும் பார்த்திருக்கிறேன்.
உண்மையில் பசிதான் மனிதனை போராட வைத்திருக்கிறது. பசியைப் பற்றி, உணவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஜெயமோகனின் இந்த வரியை நினைத்துக்கொள்வேன்
"பசி என்பது உண்மையில் ஒரே வித அனுபவம் அல்ல.ருசியான உணவு கிடைக்கும் என்ற உறுதி உள்ள ஒருவனுக்கு பசி என்பது ஒரு இனிய அழைப்பாக இருக்கக்கூடும்.கடுமையாக உழைத்த பிறகு பசி உடலெங்கும் ஊறிப்பரவும் ஓர் இனிய அனுபவம்.
பசித்து வெகுதூரம் நடக்கும்போது பசி தூரத்தை அளக்கும் முழக்கோல்.தனியறையில் பசித்து படுத்திருக்கையில் அது ஒரு ஓயாத சத்தம். காத்திருக்கும் போது நச்சரிப்பு.
ஆனால் பசியின் பயங்கரம் அதற்கான உணவு கிடைக்கும் என்பது எவ்விதத்திலும் நிச்சயமற்ற ஒன்றாக இருக்கும் போதுதான் தெரியவரும்.
அந்தப்பசி அணைக்கப்படாது பெருகி நம் உயிரையே காவு கேட்கும் வாய்ப்பு உள்ளது என்று அறியும்போது ,பசி என்பது பெரும் அச்சம்"
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment