#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105
Book:3
Pages:222
ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
-டி.எல் சஞ்சீவிகுமார்
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கும் போதும், வடியாத வெள்ளநீர் சென்னையை சூழ்ந்திருக்கும் போதும் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்கும் விஷயம் இயற்கையையும் ஆறுகளையும் முறையாக பேணி பாதுகாக்காததே என்பது. ஆனால் வெள்ளநீர் வடிந்தவுடன் மனதும் அந்த கேள்வியோடு வடிந்து விடும். ஆனால் ஒரு சிலர் தான் அதற்கான காரணத்தையும் தீர்வையும் முன்னெடுத்துக் கொண்டு செல்வார்கள். அவர்களில் இந்த புத்தகத்தின் ஆசிரியரும் ஒருவர். தி இந்து நாளிதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது.
நகரமயமாதலின் முதல் சாபம் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது தான். ஒவ்வொரு பருவ மழையின் போதும் அதிக மழைப்பொழிவை தமிழகம் பெற்றிருந்தும் சில மாதங்களிலேயே அண்டை மாநிலங்களை கையேந்தும் நிலை தொடர்ந்து இருக்கிறது. ஒவ்வொரு இயற்கை நிகழ்வின் போதும் நடைபெற்ற சம்பவங்களை அதற்குண்டான தீர்வுகளையும் இந்த கட்டுரைகளில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.
பழந்தமிழர்கள் கண்டறிந்த நீர் மேலாண்மைகளை நாம் தவற விட்டது , இன்றைய இயற்கை இடையூறுகளுக்கு முக்கிய காரணமாகும் என்பதை சான்றுகளுடன் விளக்கியுள்ளார். நதியின் படுகொலை ஆகட்டும், பராமரிக்கப்படாத நீர்நிலைகள் ஆகட்டும், இப்படி திட்டமிட்டு செய்கின்ற ஒவ்வொரு விஷயமும் பின்னாளில் எவ்வாறு மனிதர்களுக்கு இடையூறாக அமைகிறது என்பதை கூறியுள்ளார்.
*மடையர்களை போற்றுவோம்
பேச்சு வழக்கில் மடையர்கள் என்று அடிக்கடி திட்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கான உண்மையை இந்த புத்தகத்தின் மூலம் அறிந்து கொண்டேன். ஏரியை வடிவமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேற கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் மடை. அந்த மடைகளை அமைக்க பனை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. மரம் வெட்டுப்படாமல் நெருப்பு தெறிக்க வேண்டும். அதுதான் மடைக்கு உகந்த மரம். அப்படியான மரங்களை தேர்வு செய்து உள் தண்டை நீக்கி குழாய் போல தயார் செய்வார்கள். ஏரிக்கரையின் அடி ஆழத்தில் பதித்து ஓட்டையில் கோரை, நாணல்கள் கலந்து அடைத்து விடுவார்கள். இது தான் ஆரம்ப காலகட்டங்களில் மடைகள் உருவாக்கப்பட்டன.
வெள்ள காலங்களில் மடைகளை திறப்பதற்கு என்று ஆட்கள் இருந்தார்கள் .அது சாதாரண விஷயமல்ல. உயிரை பணயம் வைக்கும் பணி. ஏரியில் நீர் நிரம்பி வழியும்போது கரை வெடிக்க காத்திருக்கும். நேரம் கடந்தால் ஊர் அழிந்துவிடும். மடையை திறக்க ஒருவர் உள்ளே மூழ்கும்போது உயிர் பிழைத்தால் உண்டு என்று கடவுளை வேண்டிக் கொண்டுதான் அனுப்புவார்கள். இப்படி மடைதிறக்க சென்று மாண்டு போனவர் பலர், மீண்டு வந்தவர்கள் பலர். இவர்கள்தான் மடையர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இனிமேல் யாரையாவது மடையா என்று திட்டுவார்கள்?
வரலாற்றில் முன்னோடியாக இருக்கும் கல்லணை கச்சமங்கலம் அணை குறித்த தொழில்நுட்பங்கள்,
நீர்நிலைகளை புதுப்பித்த தன்னார்வலர்கள், ஏரிகளை தூர்வாரி பொதுமக்கள், அதற்கு ஆதரவாக நின்ற அதிகாரிகள்.. கோவையில் சீரமைப்பு பணிகளுக்கு பின் நிரம்பிய உக்கடம் பெரியகுளம் என சமகாலத்தில் நீர்நிலைகளை பாதுகாத்த புள்ளி விவரங்களையும் நமக்கு தந்துள்ளார்.
எழுத்தாளர் நக்கீரன் எழுதிய நீர் எழுத்து புத்தகத்தில் ஒரு கார் ஏற்றுமதியாகும் போது 6 லட்சம் லிட்டர் தண்ணீரையும் சேர்த்து ஏற்றுமதி செய்கிறோம் என்று எழுதியிருப்பார். இவ்வாறு கண்ணுக்குத் தெரியாமல் நீரை நாம் வீணடித்து இருக்கிறோம். இதனால் கேன் தண்ணீரின் வரவும் நிலத்தடி நீர்மட்டமும் குறையும் காரணமாக நாமே காரணமாக இருக்கிறோம்.
தன்னைத்தானே தூர்வாரி கொண்ட அதிசய அணைகள் பகுதியில் கொடிவேரி அணைக்கட்டு பற்றிய தகவல்களை தந்திருக்கிறார். பவானி ஆற்றின் குறுக்கே ஏராளமான பாறைகளைக் ஒட்டி சிறுநீர் தேக்கம் போல உருவாக்கி பயன்படுத்தியுள்ளனர்.1490ல் ஆட்சி புரிந்த நஞ்சராயன் உடையாரிடம் கீழ்த்தட்டு மக்கள் தடுப்பணை கட்டிக்கொள்ள கேட்க.. கொடிவேலி செடிகள் சூழ்ந்த ஒரு இடத்தில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அங்கே பாறைகள் இல்லாததால் சத்தியமங்கலத்திலிருந்து பாறைகள் வெட்டி கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அப்போது வெள்ளம் வந்து அணை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. மீண்டும் அணைகட்ட உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இப்போது மீண்டும் வெள்ளம் வந்தது இரண்டாவது முறையாக.
மீண்டும் மன்னர் அணைகட்ட உத்தரவிட்டு மூன்றாவது முறையாக 151 மீட்டர் நீளமும் 30 அடி அகலத்தில் அணை கட்டப்பட்டது. வலது பக்கத்தில் தடப்பள்ளி வாய்க்கால் இடது பக்கத்தில் அரசன் கோட்டை வாய்க்காலும் சுமார் 5 கிலோமீட்டர் நீளத்துக்கு ஆற்றை ஒட்டியே வெட்டப்பட்டன.பிற்காலத்தில் இந்த வாய்க்கால் விரிவடைந்தது. அணையில் பாசனத்துக்காக 800 கன அடி தண்ணீர் திறந்தால் இடைப்பட்ட பகுதிகளில் பாசனத்துக்கு போக மீதம் 400 கன அடி தண்ணீர் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காலிங்கராயன் அணைக்கு சென்று சேர்கிறது. இது மிகச் சிறந்த நீர் மேலாண்மைக்கு உதாரணமாகும்.
இவை தவிர ஒரத்துப்பாளையம் அணை பிரச்சனை, நியூயார்க்கின் நீர் மேலாண்மையை சென்னை பின்பற்றுமா, கோவை கவுசிகா நதியை அறிவீர்களா, காணாமல் போன நதிகள், மழை நீர் இன்றி அமையாது உலகு போன்ற கட்டுரைகள் சிந்திக்க வைப்பதாக உள்ளன .எதிர்காலத்தில் தண்ணீருக்குத் தான் அதிக மதிப்பு இருக்கும். உயிர்வாழத் தேவையான தண்ணீரை வணிகரீதியாக பயன்படுத்துவதால் ஏற்படும் இன்னல்களை எதிர்காலம் நிச்சயம் சந்திக்கும் என்ற நினைவோடு இப்புத்தகத்தை முடிக்கிறேன்.
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment