#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105
Book:27
Pages:256
எப்படி கதை எழுதுவது?
-ரா கி.ரங்கராஜன்
புதுக்கவிதை வந்த புதிதில் வால்ட் விட்மன் ஒரு மேடையில் பேசும்போது சொன்னார்.. புதுக்கவிதையின் தோற்றம் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும். இனி கவிதை படிப்பவர்களை விட கவிதை எழுதுபவர்கள் அதிகரிப்பார்கள் என்றார். அதுபோலவே கதைகளும். தற்காலத்தில் நூற்றுக்கு 80 பேர் கதை எழுத ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் கதைக் காண வடிவம் இலக்கணம் என்று ஒரு வகை இருக்கிறது. அதனை அறிந்து கொள்ளும்போது தன் எழுத்துகளில் மெருகேற்றுவதுடன் சுவாரஸ்யத்தையும் கூட்டலாம். அவ்வாறு குமுதம் இதழில் ரா.கி ரங்கராஜன் அவர்கள் எப்படி கதை எழுதுவது? என்பது குறித்து விளக்கமாக ஒரு நூலை வெளியிட்டுள்ளார்.
கதைக்கான கரு என்பது ஒவ்வொரு மனிதர்களும் மனதின் உள்ளே நடைபெற்ற போராட்டத்தால் உந்தப்பட்டு, விவரித்து எழுதுகிறார்கள். அது எந்த நாட்டுக்கும் எந்த காலத்துக்கும் எந்த வாசகனுக்கும் ஏற்கக் கூடியதாக இருந்தது. சேக்ஸ்பியரும் அதுபோலத்தான் பல காவியங்களை படைத்துள்ளார். கதைக்கான கரு என்பது ஒவ்வொருவரின் கற்பனையில் முளைத்தாலும் நாள்தோறும் அன்றாட வாழ்க்கையில் கிடைக்கும் கருவுக்கான கதையை விவரிக்கும்போது அந்த கதை இன்னும் மாறாத இலக்கியமாகிறது. கதைக்கான தீம் கிடைத்தவுடன் அதற்கு கதை வடிவம் தாருங்கள். அந்த கதையில் ஏதேனும் ஒரு தத்துவம் உங்களை அறியாமல் வந்திருக்கும் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அந்த தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கதை அமையுங்கள் என்று சொல்கிறார்
ஒரு கதையை எது நடத்திச் செல்லுகிறதோ அதைத்தான் கதையின் ஆரம்பம் என்று சொல்லவேண்டும் .அந்த ஆரம்பத்தை பிடிப்பதற்கு தெரிந்து கொள்வதுதான் சிறுகதை மாணவனின் முதல் வேலை. அதன்பின் கன்றின் பின்னால் மாடு வருகிற மாதிரி கதை தன்னாலே வரும் என்று சிறுகதை ஆரம்பம் வழியை குறித்து சொல்கிறார்.
சுஜாதா எழுதிய ஒரு கதை
" சைக்கிளில் வந்த ஒரு நபரை ஒரு வேன் மோதி தள்ளி விடுகிறது . பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுக்கலாம் என்று பக்கத்தில் உள்ள ஓட்டலில் டெலிபோன் செய்ய முயலுகிறார். இந்த மாதிரி விபத்துகளில் போலீஸ் சாட்சியாக மாற்றிக் கொண்டால் பிற்பாடு என்னவெல்லாம் கஷ்டம் ஏற்படும் என்பதை ஓட்டல்காரர் சொல்கிறார். போலீசுக்கு தெரிவிக்க வேண்டுமென்று இதயமும் தெரிவிக்க போய் தேவையற்ற தொல்லையில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று அறிவும் சொல்ல அந்த கட்டம்தான் அரிசி என்ற கதைக்கு ஆரம்பம்.
மேலும் உதாரணமாக சில வரிகளை ஆரம்பமாக சொல்லியிருப்பார். விமலாவுக்கு பட்டுப்புடவை என்றால் மோகம். ஏற்கனவே 17 புடவை வாங்கி வைத்திருக்கிறாள். இன்று 18-ஆவது புடவை வாங்குகிறாள். சரி அப்புறம் அப்புறம் ஒன்றுமில்லை. கதையை நடத்திச் செல்லக்கூடிய ஆரம்பம் இங்கே எதுவுமே இல்லை.
அதனையே சற்று மாற்றி "விமலா பட்டுப்புடவைகள் வாங்குவது அவள் கணவனுக்குப் பிடிக்காது. 'இன்னொரு தரம் நீ வாங்குனது தெரிந்ததோ அத்தோடு தொலைந்தாய் என்று எச்சரித்திருக்கிறார் ஆகவே இப்போது வாங்கின புடவையை விமலா ஒரு பெட்டிக்குள் மறைத்து வைத்திருக்கிறாள். ஆனால் அவள் கணவன் ராமு ஏதோ ஒரு பழைய கடிதத்தை தேடி பெட்டி பெட்டியாக திறந்து பார்க்கிறான்.
விமலாவுக்கு பதைப்பு! கதைக்கு தேவையான ஒரு பிரச்சனை இங்கே அமைகிறது.
கதை ஆரம்பித்த உடன் கதை சரியான திசையில் சரியான சம்பவங்களுடன் வளரும்போது அதற்கு ஒரு கட்டுக்கோப்பை ஏற்படுகிறது. ஒரு கதை எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதில் மேற்கொள் சொல்கையில் கதையின் முன் பகுதி பின் பகுதிகளில் எவ்வாறு அமையவேண்டும் என்பதையும் விளக்கமாகச் சொல்லி இருப்பார். கதைகளுக்கான ஐடியா வானத்திலிருந்து வந்து குதிப்ப தில்லை. இந்த மண்ணை அதனுள் உடன் கலந்துபோன கற்களையும் சேர்ற்றையும் அவற்றை மிதித்துக் கொண்டு நடக்கிற- அப்படி நடக்க நேர்ந்த காரணத்தையும், தகுந்த வார்த்தைகளால் நையப்புடைக்க் படாத சொற்களால் மிகைப்படுத்தாத வர்ணனைகளால் விவரிப்பதே கதை.
கதையின் ஒரு காட்சியில் இரண்டு பாத்திரம் இருந்தாலே போதும் எழுதுகிற படி எழுதினால் விறுவிறுப்பு வந்துவிடும். பரபரப்பான கட்டமாக இருந்தால் 3 அல்லது4 பேர் இருக்கலாம்.
முக்கிய காட்சிகளை பிரிக்க தெரிந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு காட்சியாக பிரித்து எழுதினால் நன்றாக இருக்கும் .மொத்தையாக எழுதாதீர்கள். கதையின் எந்த கட்டம் முக்கியமானது என்பதை அறிந்து அந்த கட்டத்தை மட்டுமே காட்சியாக அமைக்க வேண்டும் .கதையின் எல்லா பகுதிகளையும் காட்சிகளாகவே அமைத்துக் கொண்டு செல்லக்கூடாது போன்ற முக்கிய அம்சங்களை சொல்லி இருப்பார்.
நாவல்களிலும் சிறுகதைகளிலும் வருவதுபோல் சிறுகதைகளும் பிளாஷ்பேக் வருவதுண்டு. கதையின் வலிமை கருதி வைக்கலாம் .ஆனால் பெரிதாக இருக்க கூடாது .கடந்தகால கதையை காட்டிலும் இன்றைய நிகழ்வுகளே மிகவும் முக்கியம். சிக்கலான இடத்தில் கதையை கொண்டு போய் நிறுத்தி விட்டு அங்கே தான் பிளாஷ்பேக் தொடங்கப்பட வேண்டும். சுருக்கமான சில வாக்கியங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கதையின் முக்கிய அம்சங்களான பிளாட் ஆரம்பம் நடு முடிவு இவைகளை நீங்கள் மனதில் தெளிவாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு எழுத உட்காருங்கள் .எழுதி முடித்த பிறகு எல்லா முக்கியமான அம்சங்களும் இடம் பெற்றிருக்கிறதா என்பதை கவனியுங்கள். சமீபத்தில் வெளிவந்த 3 வார இதழ்களில் உள்ள சிறுகதைகளை வாசியுங்கள்
*அந்த கதைகள் உங்களுக்கு சுவாரசியமாக இருந்ததா? இருந்ததென்றால் ஏன்? இல்லை என்றால் ஏன் இல்லை ?
*கதைக்கு முக்கியமான பாத்திரங்கள் எவ்வளவு பேர் இருந்தார்கள?
* இவர்களில் எந்தப் பாத்திரம் ஏதும் இல்லை என்றால் கதை கெட்டுப்போயிருக்குமா?
* உங்களுக்கு புரியக்கூடிய ஒரு சிக்கல் அல்லது மோதல் அந்த கதையில் இருந்ததா?
* கதையின் முடிவில் அந்த சிக்கல் அல்லது மோதல் தீர்ந்ததா?
* முக்கியமான கதாபாத்திரம் ஏதேனும் சாதித்தாரா?
* போதுமான அளவுக்கு உரையாடல் இருந்ததா? உரையாடலினால் கதை நகர்ந்ததா?
இவ்வளவு கேள்விகளுக்கு உங்களால் பதில் கொடுக்க முடிந்தால் கதையின் முக்கியமான அம்சங்களை நீங்கள் சரியானபடி புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்படும் என்று ஆரம்ப நிலையில் எழுத உள்ளோருக்கு மிகச்சிறந்த கலங்கரை விளக்கமாய் ரா கி ரங்கராஜன் அவர்கள் அந்த புத்தகத்தை கொடுத்துள்ளார். புதிதாய் எழுதுவோர் இதனை நிச்சயம் வாசித்துவிட்டு எழுதினால் நல்ல எழுத்தாளர்கள் கிடைப்பார்கள்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment