Sunday, 3 April 2022

சாதி வர்க்கம் விடுதலை-பி.சம்பத்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:8
Pages:342

சாதி வர்க்கம் விடுதலை
-பி.சம்பத்

நம்முடைய துரதிருஷ்டமான மக்கள் தற்போதைய சுரண்டல்களிலிருந்தும் எதிர்காலத்தில் நம்மவர் சுரண்டல்களிலிருந்தும் விடுபடாதவரை அவர்களுக்கு சுதந்திரம் என்பதோ மகிழ்வு என்பதோ கிடையாது

-சிங்கார வேலர் காந்திக்கு எழுதிய கடிதத்தில்(1921ம் ஆண்டு)

தோழர் பி. சம்பத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்குபவர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அவர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சமூக நீதிக்கான பார்வையில் இருக்கும் நடுநிலையாளர்களின் சிந்தனைக்கு விருந்தாக முப்பத்தி இரண்டு கட்டுரைகள் இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

தீண்டாமை என்பது பெரும் குற்றம் மட்டுமல்ல, பெரும் சுரண்டல் என ஆரம்பித்து ஜாதியின் வேர் எங்கிருந்து வந்தது? அது பொருளாதாரச் சுரண்டல் உடன் எவ்வாறு பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை குறித்து இந்நூல் அலசுகிறது. சாதியால் பலனடைகிறார்கள், சாதியால் பாதிக்கப்படாதவர்கள், சாதியால் தொடர் பாதிப்புகளை சந்திப்பவர்கள், என ஜாதியின் தாக்கத்தை ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு விதமாக உணருகிறார்கள். எனவேதான் சாதி எந்த அளவுக்கு எதிர்க்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு ஆராதிக்கப்படுகிறது என்பதை பொட்டில் அடித்தால் போல் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சாதிய கலவரங்கள் சாதிய மோதல்கள் அதனுடன் நிகழ்ந்த அரசியல் பார்வைகள், இந்திய வரலாற்றில் சாதியத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு போக்குகள் நடைபெற்றதை அடிப்படை ஆதாரங்களுடன் நமக்கு விளக்குகிறார். சாதி எவ்வாறு இவ்வளவு எதிர்ப்புகளையும் சமாளித்து, எல்லா வகையான தாக்குதல்களையும் பொறுத்துக் கொண்டு தப்பித்து நீடித்து வந்திருக்கன்றன என்பதையும் கூறியிருக்கிறார்.

உலகின் பிற நாடுகளில் பொருளாதார பிரிவினைகள் மட்டுமே உள்ளன என்றும் இந்தியாவில் மட்டும் தான் சாதி மத பொருளாதார பிரிவினைகள் என மூன்றும் நம்மிடையே இருக்கின்றன என்றும் கூறுகிறார்.தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் உறவுகள், தீண்டாமை கொடுமைகள், புதிய புதிய சாதி அமைப்புகள் போட்டி போட்டு உருவாகத் தொடங்கிய காலகட்டத்தில் தற்போது சாதிக்குள் ஒற்றுமை என்ற கோஷம் மேலோங்கி இருக்கிறது. தேர்தல் அரசியலில் சாதி அமைப்புகளை எவ்வாறு பயன்படுத்துகின்றனர். வர்க்க வெகுஜன அமைப்புகளின் பலவீனம் குறித்தும் பேசியிருக்கிறார்.

இந்தியாவின் துவக்ககால வர்க்க சமுதாயத்தில் வர்க்கமே சாதியாக இருந்தது என்று ஆய்வாளர் டி டி கோசாம்பி குறிப்பிடுகிறார். மார்க்சிய பார்வையில் சாதியும் வர்க்கமும் என்ற தொடர் கட்டுரைகளில் இதற்கான வர்க்கப் போராட்டங்களையும், சமூக சீர்திருத்த இயக்கங்களின் தாக்கமும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் இதில் குறிப்பிட்டுள்ளார். மனு சாஸ்திரம் எவ்வாறு ஜாதியை கட்டமைத்து உள்ளது என்பதை ஆரம்ப காலம் தொட்டு ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.

மதுரை மாவட்டம் உத்தபுரம் தீண்டாமைச் சுவர் இடிப்பு விவகாரம் இடதுசாரிகளின் போராட்ட வெற்றியை உலகறியச் செய்தது. 2,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டதில் ஆயிரம் பேர் தலித்துகள், ஆயிரம் பேர் தலித் அல்லாதவர்கள் என இடதுசாரிகளின் போராட்டத்தையும், அவர்கள் முன்னெடுத்த கருத்தியல் ரீதியான விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளார். இது தவிர தேச முழுக்கவும் இடதுசாரிகள் முன்னெடுத்த பல்வேறு தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் ஒவ்வொன்றையும் விரிவாக சொல்லியுள்ளார்.

கீழ் தஞ்சையின் கிழக்கு வானம் கட்டுரையில் தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டி ஆதிக்க சாதி மக்கள் குடியிருக்கும் தெருக்களுக்கு தோழர் சீனிவாசராவ் தலைமையில் அழைத்துச் சென்றார். அங்கு வசித்த பிராமண மக்கள் தலித்துகள் ஊர்வலமாக வருவார்கள் என அறிந்து தங்கள் வாசல் கதவுகளை அடைத்து ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து அந்த ஊர்வலத்தை பார்த்தார்கள். பிராமண சமூகத்தில் பிறந்த சீனிவாசராவ்  தலித்துகள் உடன் ஒட்டிக்கொண்டு, கைகோர்த்து நடந்து சென்ற காட்சியை விவரிக்கும் போது சிலிர்ப்பாக இருந்தது.

கொடியங்குளம் பிரச்சனை, வாச்சாந்தி கொடுமைகளுக்கு எதிராக, பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக,
விழுப்புரம் மாவட்டம் முடியனூர் கிராமத்தில் தலித்துகளுக்கு எதிரான கொடியேற்ற பிரச்சனை, திண்ணியம் கிராமத்தில் மலம் தின்ன வைத்ததை கண்டித்து முன்னெடுத்த போராட்டம், தூத்துக்குடியில் தலித்துகள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது என கூறியதை எதிர்த்து போராட்டம்.. இப்படி தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டங்களை ஒவ்வொன்றாய் கூறியிருக்கிறார் கட்டுரையாளர்.

தென் மாவட்ட மற்றும் வட மாவட்டங்களில் நிகழ்ந்த ஜாதியை கொடுமைகளுக்கு எதிராக எடுத்த முடிவுகளும், போராடிய போராட்டங்களும்,நீதிமன்ற வழக்குகளும், களத்தில் எதிர்த்து போராடிய போராளிகளின் வாழ்வியலையும் விரிவாக குறிப்பிட்டுள்ளார். சாதியின் வேர்களை தேடுவதில் துவங்கி சமகால விவாதங்களில் பங்கேற்பது வரை நம்மோடு நெருங்கி இப்புத்தகம் உரையாடுகிறது.

*தொழில் மற்றும் வேலைப்பிரிவினை அடிப்படையில்தான் பண்டைய இந்து சமூகத்தின் வர்ணாசிரம முறை உருவானது

*வர்க்கப் பிரச்சனைகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சாதி ஒழிப்புக்கு தராத ஒரு பலவீனம் ஏற்பட்டது.

*துவக்க கால நிலையிலிருந்து பல மாற்றங்கள் இருப்பினும் மக்களிடையே சாதிய உணர்வுகள் இன்றளவும் வலுவாக உள்ளன

*வேதம் ஓதுதல், யுத்தம் செய்தல் வாணிபம் செய்தல், உடல் உழைப்பு செய்தல் என இந்த அடிப்படையில் வருணாசிரமம் அமைப்பு உருவானது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் சாதிய கட்டமைப்பு, சாதிய வேறுபாடும், தீண்டாமைக் கொடுமைகளும் அறற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கடமையும், விருப்பமும். மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை இந்த புத்தகத்தின் வழியில் வாசித்த கட்டுரைகளின் வாயிலாக அறிகிறோம். ஜாதிகளை ஒழிக்க முடியாவிட்டாலும் புறக்கணிக்க கற்றுக் கொள்ள  எண்ணி நினைத்தால் சாதிக்கொடுமைகள் ஓரளவு தீர வழிவகை காணலாம்.

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment