Tuesday, 9 August 2022

Old is gold-4*மணி



கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன்
-கிரேஸி மோகன்

2004ஆம் ஆண்டு முதல் சரித்திர நாவல்களை படிக்கத் துவங்கி கல்கி முதல் சாண்டியல்யன்  வரை விழுந்து விழுந்து படித்து வந்தேன். குதிரை குலம்பொலி ,நித்ரா தேவி, பருத்த தோள்கள் இன்னும் இன்னும் சரித்திர பெயர்கள் அப்படியே இருந்த காலம்.அதே காலகட்டத்தில் சரித்திரத்தை இன்னொருபுறம் நகைச்சுவையாக படிப்பதில் அலாதி இன்பம் ஏற்பட்டு அப்போது வந்த இந்த புத்தகமும் முக்கியமான ஒன்று. 

கதை தலைப்புக்கான விரிவாக்கம் தந்தையின் பெயர் கேணக்கிறுக்கசிம்மன். (முதல் எழுத்து கே.) தலைநகரம் பித்துப்பிடிச்சான்பாளையம் (முதல் எழுத்து பி.) அரசாங்க கொடிச் சின்னம் ஆராய்ச்சி மணி டிங்டாங் ஒலி என்பதால் டி சேர்த்து கே பி டி சிரிப்பு ராஜ சோழன் என்பதாகும்.
கற்பனை வீதியில் பொடி நடையாக நடந்து போய் சிரிப்பு ராஜ சோழனின் வரலாற்றை அறிந்து கொள்வோம்.
பிறந்தவுடன் பெயர் வைக்கும் நிகழ்வில் சிரித்ததால் அன்று முதல் சிரிப்பு ராஜ சோழன் என்று பெயர் வைத்தனர்

#கதை

கே.சிம்மன்  பலவீனமான ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். தந்தை ஒரு கட்டத்தில் மரணப்படுக்கையில் இருக்கிறார். அப்போது மகனை அழைத்து தன் மனைவியின் முறை மாமனான வக்கிரசேனன் தன்னை விருந்துக்கு அழைத்து மொட்டை அடித்து கரும்புள்ளி குத்தி அனுப்பிய அவமானத்தை துடைக்க நீ வக்கிர சேனன் தலையை துண்டிக்க வேண்டும் என்று கூறி சத்தியம் வாங்குகிறான் .கோழையான மகன் சிரிப்பு ராஜனும் இதற்கு உடன்படாமல் தயங்குகிறான். ஆனாலும் தந்தையின் கடைசி ஆசை நிறைவேற்ற முயல்கிறான்.

 அப்போது சத்தியம் செய்தவுடன் தந்தை இறந்து விடவே முடிசூட்ட நினைக்கும் போது சமுத்திரக்கனி மாதிரி ஒரு ஏழரை மூக்கன் ரெட்டை கண்ணன் வருகிறான். ராஜ்யத்தில் தனக்கு பங்கு இருப்பதாக கூறி இடைஞ்சல் செய்கிறான் .உடனே தேர்தல் வைத்து அந்த தேர்தலில் சிரிப்பு ராஜ சோழன் ஜெயித்து தன்னுடைய தாய் மாமனான வக்கிற சேனலின் மகள் சரசுவின் சுயம்வரத்தில் எவ்வாறு கலந்து கொண்டான்? எவ்வாறு மாமன் வக்கிரசேனை வென்றான் என்பதுதான் இக்கதை.

#கதாபாத்திரங்கள்

கதையின் பெரிய பலம் உரையாடல்கள் தான். ஒவ்வொரு உரையாடல்களும் மிக நயமாகவும் நகைச்சுவையாகும் படைத்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தன்மையையும் நகைச்சுவையுடனேயே விளக்குகிறார். அதில் சில

கேணக்கிறுக்க சிம்மனின் ராஜகுரு அவருடைய மாமனார் தான். அவருடைய கதை வித்தியாசமானது. தஞ்சை பெரிய கோயில் கட்டிக் கொண்டிருக்கும்போது மன்னன் ராஜராஜன் இவருடைய சிற்றூரில் (300 பேர் மட்டுமே வாழும் ஊரில்) தன்னுடைய பணியாளர்களுக்கு வீடு கொடுக்குமாறு வேண்டினான். அதனை சிறிதும் பொறுத்துக் கொள்ளாத இவன் தூதுவனை அவமதித்து அனுப்பினான். பதிலுக்கு தூதுவன் நான்கு பேருடன் வந்து இவனுடைய கோட்டையை முற்றுகையிட்டு இவனை உடனடியாக நாடு கடத்தி கால்நடையாய் நடந்து வந்து மருமகன் கே.சிம்மன் ராஜ்ஜியத்தில் ராஜகுருவானான்.
இதேபோல் சிரிப்பு ராஜ சோழனின் சகலை சோழன் கதையும் நகைச்சுவையாக இருக்கும். 

ஒருமுறை எதிரி நாட்டு மன்னன் படை எடுத்து வந்த போது கோட்டையின் மெயின் கதவு திறக்க முடியாததால் இரு பக்க வீரர்களும் சிறக்க மூச்சு பிடிக்க இரண்டு மணி நேரம் தள்ளு தள்ளு என்று தள்ளுவார்கள் இதுவும் ஒரு மூக்குப்பிடி யுத்தம் என்று அழைத்து ஒரு வழியாக கதவை திறந்தவுடன் மன்னர் ஓடி சென்று தன்னுடைய அரண்மனை கதவை சட்டென்று சாற்றிவிட்டதால் யுத்தம் முடிந்ததாக செப்பேடு செப்புகிறது.

#ரசித்தவை

*வழுக்கலூர்வாசிகளை மட்டும் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். அவர்களில் பாதிப் பேருக்கு நிச்சயமாக நெற்றி, தாடை, கைகால் போன்ற இடங்களில், அடிக்கடி சறுக்கிச் சறுக்கி விழுந்ததன் விளைவாக நிரந்தரச் சிராய்ப்புகள், வடுக்களோடு இருப்பார்கள்.

*‘எதிரி கோட்டையை முற்றுகையிட்டு முன்னூறு நாள்களாகிறது’ (சகலை சோழனுக்காகக் காத்திருந்து அலுத்துத் திரும்பிய எதிரிகளும் உண்டு)

*இன்று தூங்கி நாளை வா’ என்று கூற, இதுதான் சாக்கென்று சகலை சோழனும் உடனே திரும்பி விடுவான்

*‘முனுசாமி சோழன்’ என்ற பெயர் கேட்பதற்கு அவ்வளவு குளிர்ச்சியாக இல்லாததால், ‘சாதாரண சோழன்’ என்று புதுமையாகப் பெயர் சூட்டினார்கள். அதுவே நாளடைவில் மருவி, சாதா சோழன் என்றானது

*சோழ மன்னர்களின் கஜானாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால், கேணக்கிறுக்க சிம்மனின் கஜானா, சித்தாளின் சுருக்குப் பைக்குச் சமமாகும்.

*உனது குத்துவாளின் நுனியில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் தடவி, பிறகு அதைப் பயங்கரமாகக் கொதிக்கும் வாணலியில் போட்டு லேசாகச் சுட வைக்க வேண்டும். வாணலியில் குத்துவாளைப் போட்டு அது இளம் சூட்டில் இருக்கும்போது அம்மிக் கல்லில் சாணை பிடித்துக் கூராக்கி விட்டு வக்ரசேனனை வரவழைத்து அவனது தலையை உரலுக்குள் நுழைத்துப் பிடரி பாகத்தில் பதமாகச் சீவினால் வக்ரசேனன் தலையை கோணல் மாணலாக இல்லாமல் கச்சிதமாகக் கொய்ய முடியும்.”

*இருவருக்கும் ஒண்டிக்கொண்டி குருக்ஷேத்திரம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது... அதில் ஐம்பத்தொன்பது நிமிடங்கள் மோதாமல் இருவரும் சுற்றிச் சுற்றி வந்து பாவ்லா காட்டுவதிலேயே போக்கடித்தார்கள்

இன்றைக்கும் மன்னர் ஜோக்ஸ் வார இதழ்களில் கோலோச்சிக் கொண்டுதான் இருக்கிறது.
பலம் குறைந்த ராஜாக்கள் குறித்த வரலாறு எழுதும்போது சுவாரஸ்யமாய் இருக்கும்.இம்சை அரசனுக்கு முன்பே இப்புத்தகம் வந்ததாக நினைவு. நகைச்சுவை காட்சிகளை பார்த்து நகைப்பது வேறு..இதுபோல் கற்பனை காட்சிகளை படித்து மனதில் நகைச்சுவை உணர்வுகளை வளர்ப்பது வேறு. நகைச்சுவை உணர்வு மட்டுமே இல்லையென்றால் நான் என்றோ இறந்திருப்பேன் என்று காந்தி சொன்னது போல் இது போல் நகைச்சுவை புத்தகங்களை ரிலாக்சேசனுக்காக படிக்கலாம்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment