பவுன்சர் உருவான கதை
புயல் வேகத்தில் வீசப்படும் ‘பவுன்சர்’ பேட்ஸ்மேன்களின் தலை, கழுத்து பகுதியை நோக்கி சீறி வரும். சில நேரம் பேட்ஸ்மேன்களை விட மிக உயரமாக எழும்பும். பவுன்சர்களை பொறுத்தவரை அதை அடிக்காமல் விடுவது சிறந்தது. ஏனெனில் சரியாக கணிக்காமல் ஆடினால் காயம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
இந்த ‘பவுன்சர்’ ஒரு யுக்தியாக கையாளப்பட்டது 1930–களில் தான். அப்போது கிரிக்கெட்டில் இங்கிலாந்து–ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் தொடர் மட்டுமே தான் பிரபலம். 1930–ம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 2–1 என்ற கணக்கில் வென்றது. ‘கிரிக்கெட்டின் பிதாமகன்’ என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் அந்த தொடரில் மட்டும் 974 ரன்களை குவித்தார். அவர் ஓய்வு பெறாத வரை நம்மால் ஆஷஸ் தொடரை வெல்ல முடியாது என்று இங்கிலாந்து வீரர்கள் குமுறினார்கள். அந்த சமயம், அந்த தொடரில் ஒரு டெஸ்டில் மழையால் ஆடுகளத்தன்மை மாறியதும், கொஞ்சம் எழும்பி வந்த பந்துகளில் பிராட்மேன் தடுமாறுவதையும் கண்டறிந்தனர்.
1932–33–ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்ற போது இங்கிலாந்து கேப்டன் டக்லஸ் ஜார்டைன் ‘பாடிலைன்’ எனப்படும் உடலை குறி வைத்து தாக்கும் யுக்திகளை தனது பவுலர்கள் மூலம் தொடர்ச்சியாக மேற்கொண்டார். அவ்வாறு வீசும் போது லெக்சைடில் பேட்ஸ்மேன்கள் கேட்ச் ஆவார்கள் என்பது கணிப்பு. அதற்கு பலனும் கிடைத்தது. அந்த தொடரில் பிராட்மேன் 396 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் விளைவு இங்கிலாந்து 4–1 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது.
ஆனால் ‘பவுன்சர்’ பந்து வீச்சு சர்ச்சையாக உருவெடுத்ததால் அதில் சில கட்டுப்பாடுகளையும் கொண்டு வர வேண்டிய நிலைமை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) ஏற்பட்டது. 1970–80–களில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் பவுன்சர்களால் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியதை மறந்து விட முடியாது.
பவுன்சர் விஷயத்தில் அவ்வப்போது விதிகளை மாற்றும் ஐ.சி.சி. தற்போது ஒரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் 2 பவுன்சரும், 20 ஓவர் போட்டியில் ஒரு ஓவரில் ஒரு பவுன்சரும் வீச அனுமதித்துள்ளது டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனுக்கு ஒரு ஓவரில் 2 பவுன்சர் வீசலாம்.
பிலிப் ஹியூக்சின் மரணத்தால் பவுன்சர் வகை பந்து வீச்சு அவசியமா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் இது போன்ற பந்து வீச்சு தான் சுவாரஸ்யமானது. இந்திய முன்னாள் கேப்டன் நரி கான்டிராக்டர் கூறும் போது, ‘இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். கிரிக்கெட் உலகம் இளம் மற்றும் திறமையான ஒரு பேட்ஸ்மேனை இழந்து விட்டது. ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதி. இதனால் கிரிக்கெட் விதியில் மாற்றங்களை கொண்டு வந்து, பவுன்சரை நீக்கவேண்டும் என்று சிலர் வற்புறுத்துவதாக கேள்விப்படுகிறேன். பவுன்சர் பந்து வீச்சு தடை விதித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகே போய் விடும்’ என்றார்.
ஆபத்து ஏற்படாத அளவுக்கு ஹெல்மெட்டில் பாதுகாப்பு வசதிகளை இன்னும் அதிகப்படுத்துவதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்று மற்றொரு தரப்பினர் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment