Monday, 6 August 2018

கற்றதும் பெற்றதும்-13

கற்றதும் பெற்றதும்-13

*மணி

நடந்தேன்
நடந்தேன்
நடந்துகொண்டே இருந்தேன்
யாரோ மயில்(k.m) கணக்கு சொன்னார்கள்
கால் வலித்தது
-சி.சு.செல்லப்பா

வாடிவாசல்

புத்தகத்தின் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு.வெறும் எழுபது பக்கத்தில் ஒரு நேரிடை அனுபவத்தை வேகம் குறையாமல் கொடுக்க முடியுமா..அதுவும் 1959 ல் வந்த எழுத்தை இன்னும் நூறு வருசம் கழித்து படித்தாலும் இன்னும் புத்தம் புதிதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை

கதை:

ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் உள்ள ஒரு கிழவன் மற்றும் கிழக்கில் இருந்து வந்துள்ள பிச்சி, முருகு ஆகியவர்களின் நடுவே நடக்கும் உரையாடலில் துவங்குகிறது நாவல். கிழவன் ஜல்லிகட்டை பற்றி சற்று விவரிக்கிறான். கிழவனுக்கும் தெரியும் வகையில் பிச்சியும், முருகுவும் மனம் பாதி பேச்சிலும் பாதி நோட்டம் விடுவதுமாக இருந்தார்கள். அப்போது அம்புலி என்கிற ஒரு ஜல்லிக்கட்டு வீரரை பற்றி சிலாகிக்கும் வகையாக பேசுகிறார். அம்புலிக்கு காரி என்னும் காளையால் நேர்ந்த துயரத்தை வருத்துடன் சொல்கிறார். அப்போது கிழவன் திகுதிகுக்கும் வகையில் இது அம்புலி புள்ள பிச்சி என்று முருகு சொல்கிறான். தன் தந்தையிடம் அவரின் மரணப் படுக்கையில் கொடுத்த வாக்கிற்காக காரியை அடக்குவதற்க்காக வந்திருக்கிறான் பிச்சி. பிச்சி காளையை அடக்கினானா, காளையின் சொந்தக்காரரான ஜமீன்தாரின் கோபத்தினால் என்ன ஆனது என்பதே க்ளைமேக்ஸ்

#சுவாரஸ்யம்

ஒவ்வொரு பக்கத்தையும் நேர்த்தியாகவும்,அதே சமயம் வேகமாகவும் இம்மி கூட சுவாரஸ்யம் குறையாமல் எழுதியிருப்பார் சி.சு செல்லப்பா. இவர் வாடிவாசலுக்கே சென்று அக்காலத்தில் காமிராவில் படம் எடுத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்."எழுத்து" எனும் இதழையும் நடத்திவந்துள்ளார்

#நடை

" ஒரு தவ்வு,இரண்டு தவ்வு;  மூன்றாவது தவ்வுக்கும் அவன் நின்று விட்டான்; மூன்று தடவையும் காளை அவனை உருட்டி எறிந்து கிழித்திருக்க வேண்டும்.

ஒத்தைக்கு ஒத்தையாக கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும் மனிதனுக்கும் நடக்கிற விவகாரத்துக்கு இரண்டில் ஒரு முடிவு காணும் இடம் தான் அந்த வாடிவாசல்.

அப்பன் ஆசைக்கு மட்டுமின்றி உயிருக்கே உலை வைத்த காரி, அதன் கொம்பில் இன்னும் அப்பன் ரத்தம் வழிந்து கொண்டு இருப்பது போன்ற பிரமை ஏற்பட, அவனுக்கு நேர் எதிரில் வந்து நின்றபோது அந்த கிழக்கத்திய வாலிபன் பிச்சி..

அந்த வாடிவாசலில் மனுச ரத்தம் சிந்தலாம்; காளை உடலில் ஒரு சொட்டு ரத்தம் காணக்கூடாது. எதன் கை ஓங்குதோ அதுதான் தூக்கும். மனுஷன் இதை விளையாட்டாக நினைத்தாலும் மிருகத்துக்கு அது விளையாட்டல்ல. அது தான் ஜல்லிக்கட்டு.என தன் உரையில் எழுதியிருப்பார் சி.சு.செல்லப்பா

#மனதை தொட்ட வரிகள்

* மனிதனுக்குள்ளே அடங்கிக் கிடக்கும் சுபாவமான மிருகவெறி அந்தப் பொழுதுக்கு மேலோங்கி, பொங்கி நின்ற நிலையில், மிருக சக்திக்கும் மனித சக்திக்கும் இடையே நடக்கப்போகும் போராட்டத்தைக் காணத் தவிக்கும் பதைபதைப்பில் முதுகைச்சுடும் வெப்பம் அவர்களுக்கு பெரிதாக படவில்லை

* மிருகத்தை ரோசப்படுத்தி அதன் எல்லையைக் கண்டு விட்டு, அதை மனிதன் அடக்கி வசப்படுத்தி வெற்றி காட்ட துணிவதை ஒரு கலையாக சாதகம் செய்து இருக்கிறார்கள் அவர்கள் அத்தனை பேர்களும்.

* மவராசா சமீன் மாட்டைப் பிடிக்க இந்த நாய் வல்லீங்க. மூச்சு போறதுக்கு முந்தி அப்பாரு சொன்னாரு, 'பிச்சி நீயாவது காரி கழுதையை.. அதை அவர் முடிக்கலீங்க. அதுக்கு தான்.." அவன் கண்களில் நீர் வந்துவிட்டது.

* மிருகத்துக்கு ராசா வந்தாலும் போச்சு, மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!"

" என்ன இருந்தாலும் அது மிருகம் தானே!"

-தொடரும்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment