Thursday, 30 January 2020

28-1-20

எதிர்பார்ப்புகள் தான் நம் முதலீடு.அதை கைவிடாமலிருக்க வேண்டும்

-ஷாபு கிளித்தட்டில்
தமிழில் கே.வி.ஷைலஜா

#அன்பினுக்கு அவதி இல்லை.’ என்னை ஆட்கொள்ளும் அன்பு கொஞ்ச நஞ்சமில்லை. ‘அடைவு என்கொல்?’ இதனால் என்ன நேரும்? ‘அறிதல் தேற்றேன்!’

-

மலை மீது ஏறி வரும் இருவர்; அவர்களை நோக்கி இறங்கி வரும் அனுமன். அவர்களை அணுகுவதற்குள் முகத்தோற்றம், உருவம், காட்சியினால் கிடைக்கும் விவரம் என்று ஒவ்வொன்றாக அலசிப் பார்த்துக் கொண்டே முன்னேறுகிறான். அறிவு பூர்வமான விளக்கமும் ஓரளவு கிடைத்தது. உணர்வு பூர்வமாக ‘ஏன் இப்படி ஓர் அன்பு தோன்றுகிறது, எதனால் நான் இவர்கள்பால் ஈர்க்கப்படுகிறேன், என்னை எது இப்படி ஆட்கொள்கிறது’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு

வருகின்ற நேரத்திலும் அறிவு முற்றிலுமாக ஒடுங்கவில்லை. ‘இதனால் என்ன நேரும்’ என்று கேட்டுக்கொள்கிறான். அது குறித்த தெளிவின்மையை ‘அறிதல் தேற்றேன்’ வெளிப்படுத்துகிறான். எல்லாம் சில கணங்களுக்குத்தான்.

-கம்பர்

#அசைவ உணவகம்
முனியண்டி விலாஸைப்
போன்றதுதான் இந்தியாவும்
எல்லா மாநிலத்திலும்
இதற்குக் கிளைகளுண்டு

பரிமாறுபவர்கள்
முதலமைச்சர்களையும்
கல்லாவில் இருப்பவர்
பிரதமரையும் நினைவூட்டுவர்

அனைத்து வகை
அசைவமும் வீற்றிருக்கும்
அகலமான தட்டுபோல
நாட்டின் வரைபடம்

தவறுதலாக மட்டுமே
தென்படும்
விலைப்பட்டியல்கள்
பட்ஜெட்கள்

முண்டா பனியன்கள்
சமையற்காரர்கள்
முக்கிய மந்திரிகளாகவும்
மேஜைத் துடைப்பவர்
எதிர்க்கட்சியாகவும்
நடத்தப்படுவர்

ரசமிழந்த கண்ணாடி
பாராளுமன்றமாகவும்
கையலம்பும் நீராக
ஐந்தாண்டுக் கொள்கையும்
நிரந்தரமானவை

-யுகபாரதி

#இன்றெமது ஊரில் எட்டுத் துளிகள் விழுந்தன.அதை மழை என்றெண்ணி மகிழ்ந்தோம்

-மகுடேசுவரன்

# கும்பலே
கோமாளி 
வேடமிட்டு
நடந்தால்
கோமாளிக்கு 
யார் 
சிரிப்பார்?
- புதுமைப்பித்தன்

#ஆச்சர்யத்துடன் அன்னாந்து பார்த்தே பலரை உயரமாக்கி விட்டோம்.
-ராஜா சந்திரசேகர்

No comments:

Post a Comment