Thursday, 31 August 2023

படித்தது


Be like Pluto 

கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் மட்டும் தான் இருக்கின்றன என்ற நம்பி வந்தோம். 

1930ம் ஆண்டு நெப்ட்யூனைத் தாண்டி இன்னொறு கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கிரகத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று உலக அளவில் விவாதம் நடந்து, மினர்வா, க்ரோனஸ், புளூட்டோ எனும் மூன்று பெயர்கள் இறுதி செய்யப்பட்டு, அதில் புளூட்டோ என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த பெயரை புதியதாக கண்டுபிடித்த அந்த கிரகத்துக்கு சூட்டி, ஒன்பதாவது கிரகமாக அடையாளமிட்டனர்.

பிறகு ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த ஆராய்ச்சியில் புளூட்டோ மிகச் சிறிய கிரகம் (நிலாவை விட சிறியது), அது வெறும் வாயுக்கூட்டத்தால் ஆனது, அதன் அடர்த்தி மிகக்குறைவு என்று அறிந்தனர். 

சூரிய மண்டலத்தின் கடைசி பகுதியில் "குய்பர் பெல்ட்" என்ற ஒன்று இருக்கிறது. சின்னச் சின்ன விண்கற்கள் அதில் சுற்றிக்கொண்டிருக்கும். அந்த குய்பர் பெல்ட்டில் இருக்கும் ஒரு பொருள் தான் புளூட்டோ என்று தீர்மானித்து, அது கிரகம் அல்ல என்று 2006ம் ஆண்டு அறிவித்து சூரிய குடும்பத்தின் கிரகங்கள் பட்டியலில் இருந்து புளூட்டோவை தூக்கிவிட்டனர். இப்ப சமீபத்தில், புளூட்டோவை தனி கிரகமாக கருதலாம் என்று சில விண்வெளி ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

நாம புளூட்டோவை கண்டுபிடித்தது, அதனை கிரகமாக அங்கீகரித்தது, அதற்கு பெயர் வைத்தது, அப்புறம் அதனை கிரகம் அல்ல என்று அப்புறப்படுத்தியது, மீண்டும் அதனை கிரகமாக கருதலாம் என்று பேசுவது இவை எதுவுமே புளூட்டோவுக்குத் தெரியாது. அது தோன்றிய காலத்தில் இருந்து, அது பாட்டுக்கு அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம புளூட்டோவை பற்றி பேசியவை, ஆராய்ந்தவை ஆகியவை பற்றி புளூட்டோவுக்கு எந்த அக்கறையும் இல்லை.

நாமும் புளூட்டோவைப் போலத் தான் இருக்கனும். நம்மைப் பற்றி மற்றவர்கள் எதை வேண்டுமானாலும் பேசட்டும். நாம் நம்ம பாட்டுக்கு இயங்கிக்கொண்டே இருப்போம். நம்மைப் பற்றிய மற்றவரின் அபிப்ராயம், நாம் அல்ல. அது அவர்கள் பிரச்சனை.

😊

Sunday, 27 August 2023

ஒரு சிறு கோப்பையில் இருக்கும் நீருக்குள் கைப்பிடியளவு உப்பை அள்ளிப்போட்டால் அந்த நீரைப் பருக முடியாது. ஆனால், அதே அளவு உப்பை நதிக்குள் போட்டாலும் நதி நீரை நாம் அள்ளிப்பருகலாம், அதில் சமைக்கலாம் , துணி துவைக்கலாம். நதி மகத்தானது. எதையும் வாங்கி அரவணைத்து அதை மாற்றக்கூடிய திறன் அதனிடம் உள்ளது. எப்பொழுது நம்முடைய இதயம் ஒரு கோப்பையைப் போல் சிறியதாக மாறுதோ அப்பொழுது நம்முடைய புரிதல், கருணை எல்லாமுமே ஒரு கட்டுக்குள் சிறியதாகத்தான் இருக்கும். தவிர, அது நம்மை துயரத்தில் ஆழ்த்தும். நாம் எதையும் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் அல்லது அவர்களைச் சகித்துக்கொள்ளும் திறன் இருக்காது. தவிர, மற்றவர்களை மாறச்சொல்லி வற்புறுத்துவோம். ஆனால், எப்பொழுது நம்முடைய இதயம் நதியைப் போல் விரிவடையதோ அப்போது இதே விசயங்கள் நம்மை துயரத்தில் ஆழ்த்தாது. நாம் நிறைய புரிதல் உள்ளவர்களாகவும் கருணையுள்ளவர்களாகவும் எல்லோரையும் அரவணைத்து செல்பவர்களாகவும் இருப்போம். மற்றவர்கள் எப்படியோ அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வோம். Thich nhat hanh

காசி ஆனந்தன்


சேவல் கூவியது 

நான் எழும்போது இந்த சேவல் எத்தனை பெரிய அன்போடு என்னை வாழ்த்துகிறது என்று கதிரவன் பூரித்துப் போனான். மாலை வந்தது.

 மேற்கு திசையில் கவிழும் முன் நான் விழுகிறேனே என்னை தாங்க யாருமே வர மாட்டார்களா என்று ஏங்கினான் 

சேவலை அவன் எதிர்பார்த்தான் வரவில்லை விழுந்து கொண்டே கதிரவன் சொன்னான் 

"எழும்போது தாங்க வருகிறவனெல்லாம் 
விழும்போது தாங்க வருவதில்லை"

-காசி ஆனந்தன்

சொர்க்கம் என்பது வேறு ஒன்றுமில்லைநாம் ஒருபோதும் வாழாத,நாம் எப்போதும் வாழ அச்சப்படும்வாழ்க்கையைத் தவிர...- கே.சச்சிதானந்தன்.

சதுரங்க காய்களுக்குச் சுய சிந்தனை கூடாது என்பது முதல் பாடம்..-யுவன் சந்திரசேகர்

Wednesday, 23 August 2023

முதலை

முதலை

psi.(pounds per square inch )என்ற அளவீடு மூலந்தான், இதன் கடிக்கும் திறன் அளவிடப்படுகின்றது. இதன் கடிக்கும் திறன் 3,700 psi. ( மனிதர்களின் கடிக்கும் சக்தி 150 முதல் 200 PSI அளவில் இருக்கும். 

சிங்கம் அல்லது புலியின் கடிக்கும் சக்தி சுமார் 1,000 PSI அளவில் இருக்கும்.)இந்த ஒப்பஷீட்டில் முதலையின் மூர்க்கமான கடி வலு எக்கடி இருக்கும் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். மிகப் பலம் வாய்ந்த தாடையுடனான முதலைகள், 66 கூரிய பற்களைக் கொண்டவை..

மிகப் பலமான வேகத்தோடு இரையைக் கவ்வும் இந்த முதலைகள் எருமைகள், காட்டுப் பன்றிகள் என்று எதையும் சுலபமாகக் கவ்விப் பிடித்து நீருக்குள் இழுத்துச் சென்று விடுகின்றன. பற்கள் உடைந்தால் உடனடியாக வளர ஆரம்பிக்கும் தன்மை உண்டு...

#info

ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?புத்தர்:மனித வாழ்வு நூறாண்டுகள் அல்ல. நூறு நிமிடங்கள் அல்ல.நூறு விநாடிகளும் அல்ல. ஒரு விநாடி. "ஒவ்வொரு விநாடியையும் அனுபவித்து வாழ்வதுதான் உண்மையான வாழ்வு".

Tuesday, 22 August 2023

கற்கை நன்றே-32


கற்கை நன்றே-32
*மணி

1990-களில் தட்டுவோர் மற்றும் கேட்பவர் எனும் ஒரு சோதனையை எலிசபெத் நடத்தினர்.

இது மிகவும் எளிய சோதனை தான். அதாவது தட்டுபவர்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு 25 பாட்டுகளை கொடுத்து அதில் ஒன்றை தேர்ந்தேடுத்து அந்த மெட்டுக்கு ஏற்றார் போல் ஒரு மேசையில் தட்ட வைத்து அதை கேட்பவர்களை கண்டுபிடிக்கும் படி பணித்தார்.

இந்த சோதனையில் மொத்தம் 120 பாட்டுகளின் மெட்டுக்களை தட்ட வைத்தனர். அதில் வெறும் 3-க்கு மட்டுமே கேட்பவர்கள் சரியான பாடலை கண்டுபிடிக்க முடிந்தது. கேட்போர் பாடலின் பெயரை யூகிக்குமுன், கேட்போர் சரியாக யூகிக்கும் முரண்பாடுகளை கணிக்க எலிசபெத் தட்டியவர்களிடம் கேட்டார். அதற்கு தட்டுபவர்கள், 50 சதவீதம் சரியாக யூகித்து விடுவார்கள் என்று பதில் தந்தனர். ஆனால் கேட்பவர்களோ 2.5 சதவீதம் தான் கணிக்க முடிந்தது. ஏன் இப்படி?

தட்டுவோர் தட்டும் பொழுது, அந்த மெட்டுக்கள் அவர்கள் மனதில் உள்ளது. அதாவது ஒரு பாட்டின் பெயரை கேட்டவுடன் அந்த மெட்டுக்கள் அவர்களின் மனதில் ஓட ஆரம்பித்து விடுகிறது. அவர்களும் அதற்கு ஏற்றார் போல் தட்டுவதாகவே எண்ணினார்கள். ஆனால் கேட்பவர்கள் கேட்கக்கூடியதெல்லாம் மிகவும் வினோதமான மற்றும் சீரில்லாத வெறும் சத்தங்கள் தான்.

கேட்பவர்கள் அந்த மெட்டுக்களை கண்டுபிடிக்க மெனக்கெடுவதை பார்த்து தட்டுபவர்கள் மிகவும் கோபமுற்றனர். ஏனென்றால் தட்டுபவர்கள் தங்களை ஒரு இளையராஜாவாகவே பாவித்து தட்டுகிறார்கள் ஆனால் கேட்பவர்கள் அதை கண்டுபிடிக்க திணறுகிறார்கள்.

தட்டுபவர்களுக்கு மெட்டுக்கள் (அறிவு) வழங்கப்பட்டுள்ளது. அவர்களால் கேட்பவர்கள்(குறிப்பிட்ட அறிவில்லாதவர்கள்) மனநிலையை புரிந்துகொள்ள முடியாது. இது தான் அறிவின் சாபம்(Curse of Knowledge). ஒரு விடயத்தை பற்றி அறிந்தவுடன், அந்த ஞானம் இல்லாமல் இருப்பது பற்றி ஒருவரால் யோசிக்க முடியாது.

இப்படி தான் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் தொடர்பு ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறார்கள். ஒரு முதலாளிக்கு தனது தொழிலின் அனைத்து நுணுக்கங்களும் அத்துப்படியாக இருக்கும். ஆனால் ஒரு புதிய தொழிலாளி ஒரு சிறு தவறு செய்யும் பொழுது அந்த முதலாளி கோபம் கொள்கிறார். ஏனென்றால் அவர் அந்த தொழிலாளியின் இடத்திலிருந்து யோசிக்காமல் தன் அறிவு தந்த சாபத்தினால் யோசிக்கிறார்.

இது தான் ஒரு முதலாளி தொழிலாளி ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இந்த தொடர்பு ஏற்றத்தாழ்வு முதலாளி, தொழிலாளி உறவில் மட்டும் இல்லை. ஆசிரியர்கள்-மாணவர்கள், அரசியல்வாதி-மக்கள், சந்தைப்படுத்துபவர்கள்-வாடிக்கையாளர்கள், எழுத்தாளர்கள்-வாசகர்கள், ஆண்-பெண் ஆகிய பல இடங்களில் இந்த தொடர்பு ஏற்றத்தாழ்வு உள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய இரண்டு வழிமுறைகள் உள்ளன

புதிதாக எதையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது.
அடுத்தவர் மன நிலையிலிருந்து யோசிப்பது.

-படித்தது

இனிய காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

காதல் மிகவும் பேராசை கொண்டது. அது உலகிலுள்ள அனைத்தையும் தனதாக்கிக்கொள்வதற்குத் துடிக்கிறது. எந்நேரமும் எல்லாமும் தனக்கே உரியதாக இருக்கவேண்டும் என அடம்பிடிக்கிறது. அந்த ‘எல்லாம்’ என்பது மிகவும் எளிதாகவும் இருக்கிறது. உனக்கு நான், எனக்கு நீ. - பீத்தோவன் எழுதிய காதல் கடிதம்.

'வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்'நம்முடைய நல்வினைப்பயனாக இந்த உயர்ந்த மனிதப் பிறவியாகி இப்பிறப்பு கிடைத்துள்ளது. இதனை மதித்துச் செயல் பட வேண்டும் நாம். இப்பிறப்பின் நோக்கமே அதுதான்.-அப்பர்

கற்பனை ஒரு ஆற்றல். நீங்கள் அதை பயன்படுத்த முடிந்தால் அது உதவிகரமாக இருக்கும். நீங்கள் அதனால் பயன்படுத்தப்பட்டால் அது பேரழிவு பயப்பதாக இருக்கும்-ஓஷோ

Monday, 21 August 2023

கற்கை நன்றே-31*மணி




ஒரு கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் ஒரு குவளையில் நீரை நிரப்பி அதன் எடை என்னவென்று தன் மாணவர்களை கணிக்க சொன்னார். ஒவ்வொருவரும் ஒரு விடையை சொன்னார்கள்.

அதற்கு ஆசிரியர் கூறுகிறார் இந்த குவளையின் எடை இங்கே முக்கியமில்லை அதை நான் எவ்வளவு நேரம் தாங்கி பிடித்திருக்கிறேனோ அதற்கேற்றாற் போல் அதன் எடை மாறுபடும்.

இதை நான் ஒரு நிமிடம் தாங்கி பிடித்தால், அதன் எடை மிகவும் சிறிதாக தெரியும். இதையே நான் ஒரு மணி நேரம் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள் என் கை வலிக்க ஆரம்பித்து விடும். இதுவே நான் ஒரு நாள் முழுதும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தால் என் கை உணர்வற்று செயலற்றதாகி விடும்.

இங்கே அந்த குவளையின் எடை அதிகமாகவில்லை ஆனால் அதை நான் தாங்கிக் கொண்டிருக்கும் நேரம் அதிகமாகும் பொழுது அந்த குவளையின் எடை கூடுவது போல் ஒரு பிம்பம் உருவாகிறது.

நம் மன அழுத்தம், கவலைகள் எல்லாம் இந்த குவளை தண்ணீர் போல. சிறிது நேரம் அதைப் பற்றி நினைத்தாள் எந்த தொந்தரவுமில்லை. அதுவே கொஞ்சம் நேரம் கூடுதலாக அதை பற்றிய சிந்தனையில் இருந்தால் ஒரு சங்கடமான நிலையை உருவாக்குகிறது. சதா ஒரு நாள் முழுவதும் இதே சிந்தனையிலிருந்தால் அது நம்மை உணர்ச்சியற்றவராக எதுவும் செய்ய இயலாத நிலையை தந்துவிடும்.

இங்கே கவலைகளோ மன அழுத்தமோ நம்மை தொந்தரவு செய்வதில்லை. அதைப்பற்றி நாம் எவ்வளவு நேரம் யோசிக்கிறோமோ அந்த அளவு நம்மை ஆட்படுத்தும் சக்தியை நாம் அதற்கு கொடுத்து விடுகிறோம். இங்கே ஒரு மடுவை மலையாக்குகிறோம் நாம்.

இதற்கென்ன வழி? மிகவும் எளிது. எப்பொழுதும் அந்த குவளையை கீழே வைத்துவிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை

இனிய காலை

தோழமையுடன் மணிகண்ட பிரபு

‘பொதுவாக, உண்மையைப் பின்பற்றுவது என்றால், உண்மையைப் பேசுவது என்றுதான் எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மைக்கு இன்னும் விரிவான பொருள் உண்டு’ . ‘எண்ணத்தில் உண்மை வேண்டும், பேச்சில் உண்மை வேண்டும், செயலில் உண்மை வேண்டும்!’-என்.சொக்கன்

Sunday, 20 August 2023

படித்தது


அளிய தாமே சிறு பசுன் கிளியே

குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின்

மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும்

மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது

கோவலன் கண்ணகியை வர்ணிக்கும் சிலம்பு வரிகள். குழலிசையையும், யாழிசையையும், அமிர்தத்தையும் கலந்த உன் பேச்சைக் கேட்ட பசுங்கிளிகள் அதோடு போட்டியிட இயலாமல் வருந்தி அதனைக் கற்பதற்காக உன்னைப் பிரியாமல் இருக்கின்றன என்பது அதன் அர்த்தம்.

நான் உனது பெயரைச் சொல்லி ஒருபோதும் அழைத்ததில்லை,ஆனாலும்ஒரு வானம்பாடி பாடாதிருக்கும்போதும்அதன் தொண்டையைஅடைத்திருக்கும் பாடல் போலஎன்னுள் நீ நிரம்பியிருக்கிறாய்.- டல்ஸ் மரியா லொய்னாஸ் தமிழில் - க. மோகனரங்கன்

நாட்கள் பொல்லாதவைகளானதால், நாம்தான் அதை பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்-பாவெல் சக்தி

Friday, 18 August 2023

உண்மையிலுமே வாழ்க்கை நாற்பது வயதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.அதுவரைக்கும் நீங்கள் அதைப்பற்றி ஆராய்ச்சி மட்டுமே செய்துகொண்டிருக்கிறீர்கள்- யுங்

அலெக்சாண்டர் ஹெய்ஜர்.


நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்கள் என்றால் அதன் பொருள் நிறைய உழைத்துக் களைத்துவிட்டீர்கள் என்பதல்ல. உங்களை மலர்த்தும் செயல்களில், உத்வேகமூட்டும் காரியங்களில் மிகக் குறைவாக ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பதே. வேலை நாள்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் அன்றன்று அவசரகதியில் முடிக்க வேண்டிய, ஆனால் பயனற்ற பணிகளில் மட்டுமே மேலதிகக் கவனம் செலுத்துகிறோம். நம்முடைய முதலாளிகள் நம்மைச் சக்கையாகப் பிழிவதற்கான புதுப்புது வழிகளைக் கண்டறிந்தவாறே இருக்கிறார்கள். இதன் காரணமாக எப்போதும் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். தற்கணத்தில் வாழ்வதை மறந்துவிட்டு, அடுத்தக் குறிக்கோள், அடுத்தப் படிநிலை உயர்வு, அடுத்த வாகனம், அடுத்த வார இறுதி என வேறொன்றைத் துரத்தும் கனவிலேயே நேரத்தை வீணடிக்கிறோம். நண்பர்களே, நம் கைவசமுள்ள தருணம் நிகழ்கணம் மட்டும்தான். அது மட்டும்தான். 

நமது நேசத்துக்குரியவர்களோடு செலவழிக்கும் நேரத்தைவிடப் பணியில் அதிக நேரம் செலவிடுகிறோம். தாமதமாக வீடு திரும்பினாலும் நவீனக் கருவிகளோடு மல்லுக்கட்டி, மெய்நிகர் உலகில் பொய்யாக வாழ்ந்து, நம்மருகே இருக்கிற பிரியத்துக்குரியவர்களின் அன்பைத் தவறவிடுகிறோம். சோம்பிகளைக் காட்டிலும் மோசமான நிலையில் நாள்களைக் கடத்துகிறோம். அதன் பிறகு ஏதோவொரு பொழுதில், ‘வாழ்க்கை ஏன் சலிப்பாக இருக்கிறது?’ என அலுத்துக்கொள்கிறோம். அதற்குக் காரணம் வேலைப்பளுதான் என முடிவுகட்டுகிறோம். உண்மையாகவே பொருட்படுத்தத்தக்க விஷயங்களில், மனத்துக்கு நெருக்கமான பணியில் ஈடுபட்டால் நாம் சோர்வாக உணரப் போவதில்லை என்பதைக் குறித்து என்றேனும் சிந்தித்ததுண்டா? கடின உழைப்போ பணி அழுத்தமோ நம்மை வீழ்த்துவதில்லை நண்பர்களே! மனநிறைவைத் தராத பணியைச் செய்வதால்தான் நாம் எளிதில் அயர்ச்சியுறுகிறோம்.

- அலெக்சாண்டர் ஹெய்ஜர்.

Thursday, 17 August 2023

சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது?அது சூழலைப் பொறுத்தது. உணவு இருப்பவனுக்கு பசிக்கிற நேரமே சாப்பிடச் சரியான நேரம்.எதுவும் இல்லாதவனுக்கு உணவு கிடைக்கிற நேரமே சரியான நேரம்-சூஃபி

ஒட்டகம்


ஒட்டகம்
-அ.முத்துலிங்கம்

இக்கதை சோமாலியா நாட்டில் நடக்கிறது. நிலவும் கொடுமையான தண்ணிர் கஷ்டத்தில் தவிக்கும் மைமுன் என்ற இளம் பெண்ணின் கதையைச் சொல்கிறது. மைமுன் தினமும் அதிகாலையில் எழுந்து பதினாறு மைல் தூரம் நடந்து தண்ணீர் கொண்டுவருகிறாள். அந்தக் காரியம் அவளை மிகவும் சோர்வடைய வைக்கிறது. 

ஐ.நா. சிறகம் அவர்கள் ஊருக்கு வந்து என்ன வசதி வேண்டும் என்று கேட்டபோது பெண்கள் ஆழ்துழாய் கிணறு வேண்டுமென்கிறார்கள். ஊர்த் தலைவரான அவள் தகப்பனார், “மசூதியைக் கட்டித்தா மீதியை அல்லா பார்த்துக்கொள்வார்” என்று சொல்கிறார். அவ்வளவு நிதியை ஒதுக்க முடியாத ஐ.நா. சிறகம் இதனால் பக்கத்து ஊருக்குச் சென்றுவிடுகிறது. இந்நிலையில் தினமும் தண்ணீர் எடுக்கவரும் அவளை அலிசாலா விரும்புகிறான்.

 அவளோ பக்கத்து ஊரைச்சேர்ந்த ஐம்பது வயது கிழவனை மணக்கச் சம்மதிக்கிறாள். திருமணமும் நடக்கிறது. ஊருக்கு போகும்போது அவள் அழுகிறாள். விருப்பப்பட்டுத்தானே திருமணம் செய்துகொண்டாய் இப்போது ஏன் அழுகிறாய் என்று அவள் தாயார் காரணம் தெரியாமல் கேட்கிறாள். அதற்கு அவள், “பக்கத்து ஊரில் தண்ணீர் குடம் குடமாக வருகிறதாம்.

 பதினாறு மைல் நடக்கத்தேவையில்லையாம். அதனால் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்தேன்” என்று சொல்கிறாள்.

 இந்தக் கதைக்கும் ஒட்டகம் என்ற தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்? ஒட்டகம் பல நாள் தண்ணீர் அருந்தாமல் வாழக்கூடிய ஒரு பிராணி. தேவையான போது தண்ணீரை மொத்தமாகக் குடித்துக்கொள்ளும். அதே போல் மைமுன், தன் வாழ்க்கை முழுமைக்குமான தண்ணீரை இந்தத் திருமணத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறாள். 

தினமும் தேவைப்படும் தண்ணீரைப் பற்றிய கவலையைவிட இது எவ்வளவோ மேல் என்று அவளுக்குத் தோன்றிவிடுகிறது. மேலும் ஒட்டகம் முள்ளை விரும்பிச் சாப்பிடும். அதுபோல் அவளும் அந்தக் கிழவனுடடான திருமணத்தை, முள்ளாக இருந்தபோதிலும், விரும்பி ஏற்றுக்கொள்கிறாள்.

அ.மு


இடம் மாறியது
-அ.முத்துலிங்கம்

பிரபஞ்சன் எழுதிய ’வானம் வசப்படும்’ நாவலில் ஒர் இடம் வரும். ஏழைக் கவிராயர் ஒருத்தர் நீண்ட தூரம் பயணம் செய்து ஆனந்தரங்கம் பிள்ளையை பார்க்கப் போகிறார். கவிராயரின் மனைவி வீட்டில் சுகவீனமுற்றுக் கிடப்பதால் அவர் மனது சங்கடப்பட்டாலும் நம்பிக்கையுடன் பிள்ளை அவர்களிடம் செல்கிறார். 

பிள்ளை வீட்டில் இல்லை, களத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். கவிராயர் களத்துக்கே போய்விடுகிறார். அங்கே பார்த்தால் பிள்ளையவர்கள் களத்திலே கொட்டிக்கிடந்த நெல்மணிகளை ஒவ்வொன்றாக பொறுக்கி கூட்டிச் சேர்த்துக்கொண்டிருந்தார். புலவருக்கு திக்கென்றது. இவரிடமிருந்து பரிசில் பெறவா இத்தனை தூரம் நடந்து வந்தோம் என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டார். எனினும் மனதை தேற்றிக்கொண்டு தான் வரும் வழியில் கவனம்  செய்த பாடல் ஒன்றை பிள்ளையின் முன் பாடி அதற்கு பொருளையும் சொல்கிறார். கவிராயருக்கு யாசகம் கேட்டு பழக்கமில்லை. கூச்சத்துடன் நிலத்தை பார்த்தபடி நிற்கிறார்.

பிள்ளை உடனே பதில் சொல்லவில்லை. அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். பெரிய தட்டிலே பூ, பழம், வெற்றிலை, பாக்கு, பட்டு வஸ்திரத்துடன் பொற்காசுகளாக ஆயிரம் வராகன் பரிசளிக்கிறார். கவிராயர் முகம் பரவசமடைந்து கண்ணீர் துளிர்க்கிறது. அவரை பரிசுகளுடன் வண்டியில் ஏற்றி  அனுப்பி வைக்கிறபோது பிள்ளை சொல்வார் ‘இப்போதைக்கு ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது. கவலைப்படாதீரும்.’

பிரபஞ்சன் படைப்புகளில் நான் முதலில் படித்தது இந்த நாவலைத்தான். அது படித்து இன்றைக்கு 15 வருடம் ஆகியிருக்கும். அந்த நாவலில் எனக்குப் பிடித்த வசனம் இதுதான். 

இன்றுவரை ஞாபகத்தில் நிற்கிறது. ‘ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது.’ உலகத்திலே ஏழ்மையை ஒழிக்க முடியாது. ஓர் இடத்தில் ஒழித்தால் இன்னொரு இடத்தில் முளைத்துவிடும். இடம் மாற்றத்தான் முடியும்.

 John Steinbeck  என்ற அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய The Grapes of Wrath  நாவலிலும் இப்படி ஓர் இடம் வரும். இந்த உலகில் செல்வந்தர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் ஏழைகள் நிரந்தரமானவர்கள். அவர்களை ஒழிக்க முடியாது. 

இந்த இரண்டு நாவல்களிலும் காணப்பட்ட ஒற்றுமை என்னை வியப்படைய வைத்தது.

சிபில்


சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர் என்பதுஉங்களுக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம் எவ்வளவு கடன் கொடுக்கக்கூடாது என்று தீர்மானிக்கும் அளவே சிபில் ஸ்கோர் எனப்படும். இது அனைவரும் வாழ்க்கையின் பொதுவான ஒரு நடவடிக்கையாகும். நீங்கள் வங்கியில் பணம் வாங்கும்போது ஆதார் கார்டு பான் கார்டுபோன்ற ஆதாரங்கள் வங்கியில் கேட்கிறார்கள் அல்லவா! அது ஏன் என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்களா அவர்களிடம் இல்லை என்றால் நான் விளக்கம் சொல்கிறேன்.

நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் வங்கிகள் பொதுவான நடவடிக்கைகள் என்ன வென்றால் உங்கள் ஆதார் கார்டு பான் கார்டு டீடெய்ல்ஸ் சிபில் ஸ்கோர் என்ற இணையதளத்தில் தேடுதல் பொறியை தட்டுவார்கள். அதில் குறைந்தது "50" கீழ் இருந்தால் உங்கள் ஸ்கோர் இருந்தால் உங்களுக்கு நிச்சயமாக கடன் கிடைக்காது

அதுவே 80 90 க்கு உங்கள் ஸ்கோர் மேல் இருந்தால் நிச்சயமாக கடன் கிடைக்கும். பொதுவாக வங்கிகள் உங்கள் ஆதாரங்களை சேகரித்து சிபில் ஸ்கோர் அமைப்புக்கு அனுப்பிவிடுவார்கள் அந்த அமைப்பு உங்கள் ஆதாரங்களை பதிவு செய்து கொள்ளும் இப்படி நீங்கள் ஒரு வங்கியில் வாங்கிய கடன் மற்றொரு வங்கியில் உங்கள் கடன் நிலையை சோதிக்கும் போது உங்கள் இயல்நிலை தெரிந்துவிடும். சிபில் ஸ்கோர் ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.

அதில் அனைத்து வங்கியில் கணக்கு வைத்திருப்போர் ஆதாரங்கள் இருக்கும். இதன் வைத்தே கடன் கொடுக்கலாமா கொடுக்க கூடாதா என்று சிபில் ஸ்கோர் முடிவு செய்கிறது.

இதுவே சிபில் ஸ்கோர் ஆகும்." 50 "அளவு ஸ்கோர் கடன் கொடுக்க கூடாது "60 "அளவு ஸ்கோர் நன்றாக பரிசோதித்து கொடுக்கலாம் அல்லது கொடுக்காமல் போகலாம்

70 "ஸ்கோர் ஓரளவு செக்யூரிட்டிகள் அதிகரித்து கடன் கொடுக்கலாம்." (80 90)" சிபில் ஸ்கோர்கள் நிச்சயமாக கடன் கொடுக்கலாம்.

-படித்தது

Wednesday, 16 August 2023

பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் பளபளக்கிறது. கடலில் இருக்கும் நீரோ கருத்தேயிருக்கிறது. சின்ன உண்மைகள் தெளிவான சொற்களைக் கொண்டவை. பேருண்மையோ மெளனத்தை கருக்கொண்டவை-தாகூர்

மறதி எல்லாவற்றையும் குணப்படுத்துகிறது. மனதுக்குள் சதா சுழன்றுகொண்டு நம்மை துன்புறுத்திக்கொண்டிருக்கும் ஞாபகங்களை மறப்பதற்கான அழகான வழித்தடமாக பாடல் இருக்கிறது. மனிதன் தனக்குப் பிடித்த பாடலைக் கேட்கும்போது அவன் நேசிக்கிற விஷயங்களை மட்டுமே உணர்கிறான்.- இவோ ஆண்ட்ரிச்

சொர்க்கம் என்பது வேறு ஒன்றுமில்லைநாம் ஒருபோதும் வாழாத,நாம் எப்போதும் வாழ அச்சப்படும்வாழ்க்கையைத் தவிர...- கே.சச்சிதானந்தன்.

திச் நாத் ஹான்


சரியான பேச்சு

வெளிப்படையாக பேசுகிறோம் என்ற பெயரில் சில நேரங்களில் நாம் விகாரமாகப் பேசிவிடுகிறோம். அதன் மூலம் மற்றவர்களின் மனதில் உள் முடிச்சுகளை உருவாக்கிவிடுகிறோம். பிறகு, "நான் உண்மையைத்தானே சொன்னேன்" என்று சொல்லி சமாதானப்படுத்திக் கொள்கிறோம். 

நாம் பேசியது உண்மையானதாக இருக்கலாம், ஆனால் நாம் பேசும் விதம் தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்தினால், அது "சரியான பேச்சு" அல்ல.

உண்மையை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் முன்வைக்க வேண்டும்.  சேதப்படுத்தும் அல்லது அழிக்கும் வார்த்தைகளைக் கொண்டு பேசுவது சரியான பேச்சு அல்ல.

நாம் பேசுவதற்கு முன், நம்முடன் உரையாடுபவரை புரிந்து கொள்ளவேண்டும். நாம் எதையும் கூறுவதற்கு முன் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கவனித்து, அதன்படி பேச வேண்டும். இப்படி செய்தால், நமது பேச்சு, பேசும் விதத்திலும் உள்ளடக்கத்திலும் "சரியான பேச்சாக" மாறும்.

உண்மையான பேச்சு, சரியானதாகவும் இருக்கும் போது தான் அன்பும், அமைதியும் மலரும்.

 ~ திச் நாத் ஹான்

Tuesday, 8 August 2023

ஒரு நேசத்திற்குள் எல்லா மகிழ்வையும் கொண்டாடித் தீர்த்து விடாதீர்கள்.மறவாமல் ஒரே ஒரு புன்னகையையாவது எடுத்து ஓரமாக வைத்து விடுங்கள்.. பிரியும் தருவாயில் அது நிச்சயம் பயன்படும்.-விசித்திரன்

எதனால் அழுதாயோ அதனாலேயே ஆறுதல் அடைவாய்.எதற்காக காத்திருந்தாயோ அது உன் கைகளிலே வந்துவிழும். இழத்தல் இயல்பென்றால் அடைதலும் இயல்புதான்.-நிவேதிதா

ஒருவரின் கடைசி நாட்கள்தான் அவரது ஆரம்ப நாட்களை ஒவ்வொருவருக்கும் நினைவு கூர வைக்கும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது-பாவெல் சக்தி

நமக்குத் தெரிஞ்ச வாழ்க்க வேற,நாம தேடுற வாழ்க்க வேற,நாம வாழுற வாழ்க்கயும் வேற..-இமையம்

Monday, 7 August 2023

பட்டறைஇரும்பை உருக்கி எஃகாக உருமாற்றி அதனைக் கொண்டு வேளாண் கருவிகள், போர்க் கருவிகள் ஆகியவற்றை உருவாக்கப் பயன்படும் கொல்லர் தொழிற்கூடமே அன்றைக்கு உலை, பட்டறை, பட்டசாலை போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டது.பட்டடைக்கல் என்பது வார்ப்பிரும்பால் / வடித்த எஃகாலான தட்டையான மேற்பரப்பமைந்த அகலமான பாளம் ஆகும்.ஆங்கிலத்தில் ANVIL என்று பெயர் கொண்ட இது ஓர் எஃகு / இரும்புப்பாளம். இதன் மீது உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்குதல் நடைபெறுகிறதுஇரும்பு அல்லது எஃகுப் பணிப்பொருளை வைத்து வேலை செய்யப் பயன்படுத்தப்படும் வெட்டுதாங்கிக் கல்லின் பெயரே 'பட்டடைக்கல்' ஆகும். இதனை 'அடைக்கல்' என்றும் அழைப்பர்.பட்டடைக்கல் என்ற பெயரையொட்டி தோன்றிய பெயரே பட்டறை!-படித்தது

"அசையாதவர்கள், தங்கள் சங்கிலிகளைக் கவனிக்க மாட்டார்கள்." -ரோசா லக்சம்பர்க்

ஜானகிராமன்


நாம் பேசும் மொழிக்கு சக்தி உள்ளது. பேசும் போது பயன்படுத்தும் வார்த்தைகள், மனதுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும், அது குணநலனையே கூட மாற்றியமைக்கும்.

தமிழில் "நான் சோகமாக இருக்கிறேன்" என்று சொல்வோம். இதையே ஆங்கிலத்தில் "I'm Sad" என்று கூறுவோம். இரண்டிலும் சோகம் என்ற உணர்வு நமக்குள்ளிருந்து வெளிப்பட்டதாக அர்த்தமாகிறது.

ஐரிஷ் மொழியில், ஒருவர் சோகத்துடன் இருப்பதை "Ta Bron Orm" என்பார்கள். அதனைத் தமிழில் மொழி பெயர்த்தால், "சோகம் என் மீது உள்ளது" என்று அர்த்தப்படும். 

இது மிக அழகிய அணுகுமுறை. உணர்ச்சிகள் வெளியில் இருந்து நம்மை அவ்வப்போது ஆட்கொள்கிறது, அந்த உணர்ச்சிகள் நான் அல்ல என உணர்ந்து கொள்ளும் போது, உணர்வு வயப்படுவது குறைகிறது. இப்போதைக்கு சோகம் என்ற மீது உள்ளது. பிறகு அது மாறும். வேறொரு உணர்ச்சி என் மீது வரும் என்ற மனநிலை நம்பிக்கைத் தருகிறது. 

இதே தான் மகிழ்ச்சிக்கும். நான் மகிழ்வாக இருக்கிறேன் எனும் போது, மனதுக்குள் ஒரு வித துள்ளல் ஏற்படுகிறது. அதே, "மகிழ்ச்சி என் மீது உள்ளது" என்று கூறினால் நம்மால் சமநிலையுடன் இருக்க இயலும்.

-படித்தது

Sunday, 6 August 2023

தாவோ


ஒரு நாள் இளவரசன் ஒருவன் தன் படைகளோடு காட்டிற்கு சென்றான். அவனைப் பார்த்ததும் மரக்கிளைகளில் விளையாடிக் கொண்டிருந்த குரங்குகள் எல்லாம் ஓடிவிட்டன. ஆனால் ஒரே ஒரு குரங்கு மட்டும் இவனைப் பற்றி கவலைப்படாமல் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டிருந்தது. அது அந்த இளவரசனக்கு எரிச்சலை ஏற்படுத்த அந்த குரங்கை நோக்கி அம்பை எய்தான்.

 அந்த குரங்கு தன்னை நோக்கி பாய்ந்து வந்த அம்பை கையால் பிடித்து தூர வீசியது. கோபம் அடைந்த இளவரசன் தன் படைவீரர் அனைவரையும் அழைத்து குரங்கை கொல்ல உத்தரவிட்டான். அடுத்த கணம் நூற்றுக்கணக்கான அம்புகள் பாய குரங்கு அந்த இடத்திலேயே உயிர் விட்டது. ஒருவனுக்கு திறமைகள் இருந்தால் அதை அத்தனை பேருக்கும் விளம்பரமாய் காட்டக்கூடாது. அதுவே அழிவுக்கு காரணம் ஆகிவிடும்.

-தாவோ

"நல்லதைச் செய்து கிணற்றில் தள்ளிவிடு"'நல்லதை செய்தால் இருந்தால் உடனடியாக மறந்துவிடு.நான் நல்லது செய்துவிட்டேன் என்னும் நினைவை தூக்கிச் சுமந்து கொண்டு திரியாதே'-சூஃபி

அதிகாரத்துக்கு எதிரான மனிதர்களின் போராட்டம் என்பது சோர்வுக்கு எதிரான ஊக்கத்தின் போராட்டம்-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

Saturday, 5 August 2023

winwin method

ஜப்பானில் ஒரு பிரபல சொற்றொடர் உண்டு. "WIN WIN METHOD."

அதாவது தினம்தினம் ஒரு செயலை முன்புஇருந்ததைவிட சிறப்பாக செய்வது.

இன்று ஒரு படம் வரைகிறீர்கள் என்றால் அது எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் இதைவிட இன்னும் சிறப்பாக நாளை வரையவேண்டும் என்று முடிவெடுப்பதான் WIN WIN METHOD.

இதே போல் எந்த ஒரு செயலையும். நீங்கள் தூங்கினால்கூட நாளை இதைவிட அமைதியாக தூங்கவேண்டும் என்று நினைப்பது.

இதையே" ஓஷோ" வேறுமாதிரி சொல்வார்.

எதிலும் ஒரு பூர்ணத்துவம் ஒரு முழுமைவேண்டும்.

நீ பணக்காரன் என்றால் அம்பானியைவிட பணக்காரனாக இரு.

பிச்சைக்காரன் என்றால் உன்னைவிட ஒன்றுமேஇல்லாத பரதேசி யாருமில்லை என்ற அளவுக்கு பிச்சைக்காரனாக இரு என்பார்.

-இனியகாலை

தனிமனித வழிபாடு என்பது தத்துவங்களை மறைத்து தனிநபர்களைக் கடவுளாக்கும் வழி-அம்பேத்கர்

Thursday, 3 August 2023

மலைஅதன் மாறாத் தொல்லிருக்கையில்இவ்வெளியில் அமர்ந்துஆட்சிப் புரிகிறதுசகலத்தையும் கவனித்தபடிசகலத்தையும் விசாரித்தபடி-எமிலி டிக்கன்சன்

மேற்பரப்பினைக் கண்டுமெய்ம்மறப்போர்க்குஒரு கடல்அதன் ஆழத்தால் ஆனதுஎன்பது தெரியாது-மகுடேசுவரன்

பிரிவின் வலியோடுஇறுகிய மெளனத்துடன்காத்திருந்தது'பூட்டு'

ஒருத்தரோட பணிவிடைகளுக்கு இன்னொருத்தர் கொடுக்கற கைமாறல்ல, அன்பு. அது ஒருத்தங்க இன்னொருத்தங்ககிட்டக் கண்டடையற பூரணத்துவம்.”-கே. ஆர். மீரா

"வாழ்க்கையில் ஒரே சமயத்தில் எல்லாமே கிடைத்துவிட முடியாது. அது சாத்தியமேயில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும், கூடவே ஏதாவதொன்றை இழந்தாக வேண்டும். இந்தத் தேர்ந்தெடுக்கிற பிரச்சனைதான் வாழ்க்கையில் மிக மிகப் பயங்கரமான சங்கதியென்று எனக்குத் தோன்றியது. எதையென்று, எந்த அடிப்படையில், எப்படித் தேர்ந்தெடுப்பது?"-ஆதவன்

Wednesday, 2 August 2023

இருபது வருடங்களுக்குப் பிறகு நாம் சாதித்ததை விட செய்யத் தவறியது தான் நமக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும்.-மார்க் ட்வைன்

மனிதன் பயப்படும் போது பிறரையும் பயப்படுத்த முற்படுகிறான்.பிறரும் தன்போல் பயந்தால் தன் பயம் குறையும் என நினைக்கிறான்-ஓஷோ

போட்டிக்கும்... பொறாமைக்கும் என்ன வேறுபாடு? அடுத்தவர்களைவிட நாம் உயரமாக இருக்க வேண்டும் என முனைவது போட்டி. நம்மைவிட மற்றவர்கள் குள்ளமாக இருக்க வேண்டும் என நினைப்பது பொறாமை. செயல்பாட்டில் இருக்கிறது போட்டி. வயிற்றெரிச்சலில் இருப்பது பொறாமை!-இறையன்பு

காதலென்பது வாழ்நாள் முழுவதும் ஒருவன் ஈடுபடும் இடையறாத தேடல்-ஆதவன்

Tuesday, 1 August 2023

பாதை தெரியுது பார் ❤சந்திரயான் பூமியை 16 நாட்கள் தட்டாமாலை சுற்றி சுற்றி வந்தது.இன்று காலை கிழே வந்ததும் அதை அதி வேகத்தில் சர்ர்ர்ர்ர்ரென்று ஃப்யர் செய்து நிலவுக்குச் செல்லும் பாதையில் திருப்பி விட்டார்கள்.இதை sling shot என்பார்கள்.Discus throw விளையாட்டில் பல சுற்றுகள் சுற்றி வேகம் எடுத்து வெயிட்டை சர்ர்ரென்று தூக்கி தூரத்தில் எறிவார்கள்.அது மாதிரி கவணில் கல்லை வைத்து ரப்பரை கூடிய வரை பின்புறம் இழுத்து அடிப்பது.வேகம் கிடைக்கும் அதனால் இலக்கை அடையும்.இது எல்லாம் ஸ்லிங் ஷாட்தான்.நீலக் கலர் கோடு நிலவுக்கானப் பாதை.நிலவை அடைய 4அல்லது 5 நாள் ஆகும்.தூரம் 384400 கிலோ மீட்டர்.சந்திரயான் 3 ஒரு மணிக்கு 2500 -3000 கிமி வேகத்தில் பயணிக்கும்.அங்கே போயும் மீண்டும் தட்டமாலை சுற்றிவிட்டுதான் நிலவில் ஆகஸ்ட் கடைசியில் இறங்கும்.

ஓஷோ


ஜப்பானில் வாழ்ந்த, ஹோட்டே (Hotei) எனும் ஞானியை "சிரிக்கும் புத்தர்" என்று அழைப்பார்கள்.  அவர் ஜப்பானியர்களால் இன்று வரை  மிகவும் விரும்பப்படும் ஒருவர். ஆனால், அவர் தன் வாழ்நாளில் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.  

அவர் ஞானம் பெற்றவுடன், சிரிக்க ஆரம்பித்தார், யாராவது நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்கும் போதெல்லாம்,  அவர் மேலும் சிரிப்பார்.  அவர் சிரித்துக் கொண்டே கிராமம் கிராமமாகச் சென்றார்.

கிராமங்களில் வேடிக்கைப் பார்க்க அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடும், அவர் சிரிப்பார்.  சிறிது நேரத்தில் மெதுவாக -- அவரது சிரிப்பு மற்றவரையும் தொற்றி, கூட்டத்தில் யாரோ ஒருவர் சிரிக்கத் தொடங்குவார்கள், பிறகு வேறு யாராவது, இறுதியில் மொத்த கூட்டமும் சிரிக்க ஆரம்பிக்கும். காரணமே இல்லாமல் சிரிப்பது, அபத்தமானது என்று அவர்கள் உணர்ந்தாலும் சிரிப்பதை நிறுத்த முடிவதில்லை.

அதே சமயம், "இதைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? சிரிக்க எந்த காரணமும் இல்லையே."  என்று எல்லோரும் கொஞ்சம் கவலையும் அடைந்தார்கள். ஆனால் மக்கள் ஹோட்டேவின் வருகைக்காக காத்திருப்பார்கள். 

ஏனென்றால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இவ்வளவு முழுமையுடன் சிரித்ததில்லை, அந்த சிரிப்புக்குப் பிறகு அவர்களின் ஒவ்வொரு உணர்வும் தெளிவாக இருப்பதைக் கண்டார்கள்.  அவர்களின் கண்கள் நன்றாகப் பார்க்க முடிந்தது, மனதுக்குள் ஒரு பெரிய சுமை மறைந்துவிட்டதைப் போல, அவர்களின் முழு உடலும் ஒளியாகிவிட்டது.

மக்கள் ஹோட்டேயிடம், "மீண்டும் திரும்பி வாருங்கள்" என்று கேட்பார்கள், அவர் சிரித்துக்கொண்டே வேறு கிராமத்திற்குச் செல்வார்.  

ஹோட்டே, ஞானம் பெற்ற சுமார் நாற்பத்தைந்து வருடங்கள் அவரது வாழ்நாள் முழுவதும், அவர் ஒரே ஒரு காரியத்தைச் செய்தார், சிரித்தல்.  அதுவே அவருடைய செய்தி, அவருடைய பிரசங்கம், அவருடைய வேதம்.

(கடைசியாக நாம் எப்போது வாய்விட்டு சிரித்தோம்?)

- ஓஷோ