Friday, 31 May 2024
எந்தவோர் அனுபவமும் அதுவாகவே வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மானிக்கின்ற ஒரு காரணியாக ஆகிவிடாது. அனுபவங்களின் அதிர்ச்சியால் நாம் துன்பம் அடைவதில்லை. அந்த அனுபவங்களிலிருந்து நம்முடைய நோக்கங்களுக்கு ஏற்ற விதத்தில் சிலவற்றை நாம் உருவாக்கிக் கொள்கிறோம். நம்முடைய அனுபவங்களால் நாம் தீர்மானிக்கப்படுவதில்லை. அந்த அனுபவங்களுக்கு நாம் அளிக்கின்ற அர்த்தம்தான் நம்மைத் தீர்மானிக்கிறது.-அட்லர்
ஐந்து விதிகள்
உலகின் பிரபலமான ஐந்து விதிகள்.
1. மர்ஃபி விதி - எது நடந்து விடக்கூடாது என்று அதிக அச்சத்துடன் இருக்கிறீர்களோ அது நடந்து விடும் வாய்ப்பு அதிகம்.
கணினித் துறையில் அதிகம் பயன்படுத்துவதுண்டு. உண்மையான வாழ்க்கைக்கும் பல நேரங்களில் பொருந்தும்.
2. கிட்லின் விதி - ஒரு பிரச்னையை தெளிவாகவும் துல்லியமாகவும் எழுதி வைத்து விட்டீர்கள் என்றால் அதைத் தீர்ப்பதில் பாதி வெற்றி பெற்று விட்டீர்கள்.
எழுதுவது என்பது ஒரு தெரபி போலத்தான். தெளிவாகவும் துல்லியமாகவும் எழுத அதை விலகி நின்று பார்க்க வேண்டும்.
3. கில்பர்ட் விதி - ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதை எப்படி சரியாக செய்து முடிப்பது என்ற வழியைத் தீர்மானிப்பது எப்போதும் உங்கள் பொறுப்பு மட்டுமே.
யாரும் வந்து உங்களுக்கு உதவ மாட்டார்கள். அப்படி யாராவது உதவ வேண்டும் என்றாலும் உங்கள் திட்டத்தில் அவர்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களே தீர்வைத் தருபவர்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது அவர்கள் விருப்பத்துக்கு நடக்குமே ஒழிய உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அல்ல.
4. வில்சன் விதி - உங்கள் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் செயல்களை முதன்மைப்படுத்தினால் பணம் உங்களைத் தேடி வரும்.
அனுபவத்தில் கண்ட உண்மை. சற்றே தாமதித்தாலும் தொடர்ந்து உங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அதற்கான பலன்கள் வரத் தவறியதே இல்லை.
5. ஃபாக்லேன்ட் விதி - ஒன்றைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டிய தேவை இல்லாதபோது எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.
தேவை இல்லாத ஆணியைப் பிடுங்காதீர்கள் என்பதுதான் இது. இதற்கு எதிர் விதி ஒன்றும் உள்ளது. முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயத்தில் முடிவெடுக்காமல் இருப்பதும் கூட நீங்கள் எடுத்திருக்கும் ஒரு முடிவுதான்.
Thursday, 30 May 2024
உன்னை தெருக்கூட்டுபவனாகநியமனம் செய்தாலும் ஷேக்ஸ்பியர் கவிதை எழுதியதைப் போலவும் மைக்கேல் ஏஞ்சலோ ஓவியம் தீட்டியதைப் போலவும் பீத்தோவன் இசைக்கோவை அமைப்பதைப் போலவும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் அதை நீ செய். அப்போது வானத்தில் பறந்து செல்லும் தேவதைகளும் ஒரு நிமிடம் அங்கே நின்று வியந்து, 'உலகத்தின் ஒப்பற்ற தெருக்கூட்டுபவன் இங்கே இருக்கிறான்' என்று பாராட்டிச் செல்லும்" -மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர்
மனக் குழப்பத்திற்கு மருந்து இருக்கிறது. ஒன்று தன்னை மறக்கும் அபார தெய்வபக்தி. அதாவது கேள்வி கேட்காமல், ஆவேசப்படாமல் ஆடுகள்போல எல்லாம் அவன் செயல் என்று இருப்பது. இன்னொன்று மூளை சலித்து களைத்துப்போகும்படி அதற்கு வேலை கொடுப்பது. இப்படி இரண்டில் ஒன்றைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்தால்தான் நம்மால் தப்ப முடியும்”-புதுமைப்பித்தன்
Wednesday, 29 May 2024
ஜி குப்புசாமி
”தன்னை அறிந்து கொள்ளும் தேடலில் மனிதகுலம் சேமித்து வைத்த மதிப்பு மிக்க களஞ்சியம் இலக்கியம் என நம்புகிறேன்”
-ஓரான் பாமுக்கின் நோபால் உரை
ஓர் எழுத்தாளன் என்பவன் தனக்குள்ளிருக்கும் இரண்டாவது சுயத்தையும் அவனை அவனாக ஆக்கும் உலகையும் கண்டறிய வருடக் கணக்காக பொறுமையோடு தேடிவருபவன். எழுதுவது என்பதைப்பற்றி நான் பேசும் போது என் மனதிற்குள் முதலில் வருவது ஒரு நாவலோ,ஒரு கவிதையோ அல்லது இலக்கியப் பாரம்பரியமோ அல்ல. ஓர் அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு , ஒரு மேஜையில் அமர்ந்து தனியாக தனக்குள்ளாகத் திரும்பி, வார்த்தைகளால் ஒரு புதிய உலகை அதன் நிழல்களுக்கு மத்தியில் கட்டமைக்கும் ஒரு மனிதன் தான்.
எழுத்தாளனின் ரகசியம் அகத்தூண்டுதல் அல்ல. அது எங்கிருந்து வருகிறதென்பது எப்போதுமே தெரிவதில்லை. அது அவனது மனவுறுதி, அவனது பொறுமை. ”ஊசியை வைத்துக் கொண்டு கிணறு வெட்டுவதைப் போல” என்ற அழகான துருக்கியப் பழமொழி எழுத்தாளர்களை மனதில் வைத்துக் கொண்டுதான் கூறப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது.
ஓர் எழுத்தாளன் தன் சொந்தக் கதையை கூற வேண்டுமென்றால் –அதை மெதுவாக நிதானமாகக் கூற வேண்டும். அது மற்றவர்களைப் பற்றிய ஒரு கதை என்பதைப் போல, தனக்குள் உருவான கதையின் சக்தி மேலெழும்பி வருவதை உணர வேண்டுமென்றால், ஒரு மேஜையில் அமர்ந்து தன்னை இந்தக் கலைக்கு, இந்த கை வினைக்குப் பொறுமையாக ஒப்புவிக்க வேண்டுமென்றால் , முதலில் அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை தரப்பட்டிருக்க வேண்டும். அகத்தூண்டல் தேவதை (இது சிலரிடம் அடிக்கடி வந்து ஆசீர்வதிக்கிறது. சிலரிடம் அரிதாகவே செல்கிறது)ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர்களையே ஆதரிக்கறது. ஓர் எழுத்தாளன் பெரும்பாலும் தனியாக உணரும் போது அவனது முயற்சிகள்,அவனது கனவுகள் அவனது எழுத்தின் மதிப்பு ஆகியவற்றைப் பற்றி பெரிதும் ஐயுற்றிருக்கும் போது அவனது கதையை அவனது கதையென்றே அவன் நினைக்கும் போது அத்தகைய தருணங்களில் அவனுக்குக் கதைகளையும் பிம்பங்களையும் கனவுகளையும் காட்டி, அவன் கட்டியெழுப்ப விரும்பும் உலகத்தை. அந்தத் தேவதை வரைந்தெடுக்கும். என் வாழ்க்கை முழுக்க அர்பணித்து எழுதி வந்திருக்கும் புத்தகங்களை நான் திரும்ப யோசிக்கும் போது, என்னை மிக உன்னதமான மகிழ்ச்சியில் திளைக்க வைத்த வாக்கியங்கள், கனவுகள், பக்கங்கள் எல்லாமே என் சொந்தக் கற்பனையிலிருந்து வந்தவையல்ல என்றும் வேறெதோ ஒரு சக்தி அவற்றைக் கண்டெடுத்து எனக்குத் தாராளமாக வழங்கியிருக்கிறதென்றும் நான் உணர்ந்த தருணங்களால் பெரிதும் ஆச்சரியமுற்றிருக்கிறேன்.
நம்மை அறைக்குள் அடைத்துக்கொண்ட பிறகு நாம் நினைத்தளவுக்கு தனியாக இல்லையென்பதை சீக்கிரமே கண்டு கொள்வோம். நமக்கு முன் வந்தவர்களின் வார்த்தைகளோடு, மற்ற மனிதர்களின் கதைகளோடு , மற்றவர்களின் புத்தகங்களோடு மற்றவர்களின் வார்த்தைகளோடு பாரம்பரியம் என்று நாம் அழைக்கிறோமே , அதனோடு நாம் சேர்ந்திருக்கிறோம். தன்னை அறிந்து கொள்ளும் தேடலில் மனிதகுலம் சேமித்து வைத்த மதிப்பு மிக்க களஞ்சியம் இலக்கியம் என நம்புகிறேன். அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு தனக்குள்ளாகவே முதன்முதலாகப் பயணம் செய்யத் தொடங்கும் எழுத்தாளன் வருடங்கள் செல்லச் செல்ல இலக்கியத்தின் சாசுவதமான விதியைக் கண்டு கொள்வான். அவனது சொந்தக் கதைகளை ,அவை மற்றவர்களுடைய கதைகள் போலவும் மற்றவர்களின் கதைகளைத் தன் சொந்தக் கதைகளைப் போலவும் சொல்வதற்கு அவனிடம் கலைநயம் இருக்க வேண்டும். அது தான் இலக்கியம் எனப்படுவதும். ஆனால் முதலில் நாம் மற்றவர்களின் கதைகளுக்கும் புத்தகங்களுக்கும் ஊடாக பயணம் செய்தாக வேண்டும்.
-”அப்பாவின் சூட்கேஸ்” என்னும் ஓரான் பாமுக்கின் நோபால் உரையிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள்
-ஜி குப்புசாமி
Tuesday, 28 May 2024
Monday, 27 May 2024
கதை
ஒரு அப்பா தன் மகனைக் கூப்பிட்டு ஒரு பானையைக் கொடுத்து, போய் தண்ணி பிடிச்சுட்டு வாடா அப்படின்னு சொன்னாராம்.
சரிப்பான்னு சொல்லிட்டு கிளம்பின பையனைக் கூப்பிட்டு, பானைய உடைச்சிடாதன்னு சொல்லி பையன் கன்னத்துல பளார்னு அடிச்சாராம்.
பக்கத்துல இருந்தவர் அதைப் பாத்துட்டு, ஏங்க பையன் பானைய உடைக்கறதுக்கு முன்னாடியே ஏன் அடிச்சிங்க அப்படின்னு கேட்டாராம்.
அதுக்கு அந்த அப்பா சொன்னாராம், பானைய உடைச்ச பிறகு அடிச்சா பானை திரும்பக் கிடைச்சிடுமா? இப்ப அவனுக்குள்ள ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கும், பானைய பத்திரமா கொண்டு வருவான்னு சொன்னாராம்.
கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவங்களுக்கு ஜென்டில் பேரண்டிங்கெல்லாம் தெரியாது. அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் வைஸ் பேரண்டிங் மட்டும்தான்.
Sunday, 26 May 2024
ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவரிடம், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட்டில் சிறந்த அணிகளாக இருந்த போதும், அதெப்படி ஆஸ்திரேலியா நிறைய முக்கியமான மேட்ச்களில் ஜெயிக்கிறது, இந்தியா முக்கியமான மேட்ச்களில் தோற்கிறது? என்று கேட்டனர்.அதற்கு அவர், "இந்தியாவில் ஒரு சிறுவன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் அவனது அம்மா, நீ எத்தனை ரன் அடிச்ச? என்று கேட்பார். ஆனா, ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலிய சிறுவனின் அம்மா, "உன்னோட டீம் வின் செய்ததா?" என்று கேட்பார்.இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தியாவில் அணியை விட தனி நபர் சாதனைகள் கொண்டாடப்படுகின்றன. ஆனால் ஆஸ்திரேலியாவில் அணியின் வெற்றி கொண்டாடப்படுகிறது" என்று கூறுவார்.😔
Saturday, 25 May 2024
மனிதர் மூன்று வகை- வாரியார்
மனிதர்கள் முன்று வகை உண்டு
1.கஜ கர்ணம்🐘
2.அஜ கர்ணம்🐏
3.கோ கர்ணம்🐂
1. கஜகர்ணம் : -
யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது !
அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்...
அவர்களை ' கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
2. அஜகர்ணம் : -
ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும்.
அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்.... திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.
... அவர்களை ' அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
3.கோகர்ணம் :-
பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் !
அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் .
இவர்களை 'கோகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
-கிருபானந்த வாரியார்.
Friday, 24 May 2024
போதிமரம்
புத்தர் மெய்ஞானம் அடைந்த அந்தப் போதிமரமானது அதனடியில் ஆயிரம் மாட்டு வண்டிகளை நிறுத்துகின்ற அளவுக்கு இருந்தது. அது இன்னமும் இருக்கின்றது.ஆனால் அது அதே மரம் அல்ல, ஆனால் அதே மரத்தின் ஒரு கிளையானது இன்னமும் உள்ளது.மற்ற மதத்தினர் அந்த மரத்தை அழித்துவிட்டனர். யாரோ ஒருவர் இந்த மரத்தின் அடியில் அமர்ந்து மிகப்பெரியவராக ஆகிவிட்டதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அந்த மரத்தை எரித்துவிட்டனர் அவர்கள் அந்த மரத்தை முற்றிலுமாக அழித்து விட்டனர்.
ஆனால் இந்தியப் பேரரசர்களில் ஒருவராகிய அசோகர் சந்நியாசி ஆகிவிட்ட தனது சொந்த மகள் சங்கமித்ரா மூலமாக அந்த போதி மரத்தின் கிளை ஒன்றினை இலங்கைக்கு அன்பளிப்பாக கொடுத்து அனுப்பி இருந்தார். புத்தர் ஞானமடைந்த அந்தப் போதி மரத்தின் ஒரு கிளையை இலங்கைக்கு சங்கமித்ரா எடுத்துச் சென்றார். எனவே அந்த மரத்தின் ஒரு கிளையானது மீண்டும் இலங்கையில் இருந்து எடுத்து வரப்பட்டு புத்தர் ஞானம் அடைந்த இடத்தில் மீண்டும் நடப்பட்டது. இது அதே மரத்தின் ஒரு பகுதிதான்; ஆனால் இது மூன்றாம் தலை முறையைச் சார்ந்த மரமாக உள்ளது.
-ஓஷோ
சோரென் கியர்கிகார்டு பயத்துக்கு 'அன்க்ஸ்ட் என்ற வார்த் தையை உபயோகித்தார். உள்ளுணர்வுகளால் விலங்குகள் பயமில்லாமல் இருப்பதாகவும். சுதந்திரமாக இருக்கும் மனிதனின் அடிமனசில் நம்பிக்கையின்மையும், விரக்தியும் முக்கியப் பங்கு வகிப்பதால் அந்த சுதந்திரத்திலிருந்து தவறும்போது பயம் .ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.எக்சிஸ்டென்ஷியலிசத் தத்துவங்களின் அடிப்படை இது. 'இருத்தலின் பயம் (excistential fear) அடிப்படையான ஒன்று. உலகின் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களால் பயம் ஏற்படும்போது கடவுள்களை நாடினர் பலர். சிலர் மந்திரவாதிகளையும், பேய் பூதங்களையும் நம்பினர்
Thursday, 23 May 2024
காட்டில் ஒரு காகம் மரத்தின் மேல் சும்மா அமர்ந்து கொண்டு இருந்ததாம் !!!!!!அந்த வழியே சென்ற முயல் காகத்தை பார்த்து !என்ன செய்து கொண்டு இருக்கிறாய் !!!!!!!!!! என்று கேட்ககாகமோ !!!!!! சும்மா உட்கார்ந்து கொண்டு பொழுதை போக்கி கொண்டு இருக்கேன் என்று சொல்லியதாம் !!!!முயல் ' அப்படியா நானும் அதையே செய்கிறேன் " என்று அதுவும் கீழே அமர்ந்து சும்மா இருந்ததாம் !!!!அந்த வழியே சென்ற புலி !!!!!சும்மா இருந்த முயலை பிடித்து சாப்பிட்டு !விட்டதாம் !!!!!!!!நீதி - வாழ்க்கையில் சும்மா இருக்க வேண்டும் என்றால் நீ உயரத்தில் இருக்க வேண்டும்
Wednesday, 22 May 2024
Monday, 20 May 2024
Friday, 17 May 2024
மொழியைக் கற்பது மேல்மனத்தின் செயல்பாடு அல்ல. ஆழ் மனத்தின் பங்களிப்பு. நாம் எந்த மொழியை முதலில் கற்கிறோமோ அந்த மொழியை ஆழ்மனத்திலிருந்து நாம் பேசுவதால் எளிதில் எதிர்வினை ஆற்ற முடிகிறது. ஆனால் இரண்டாவதாக கற்றுக் கொள்கிற மொழியை நாம் மேல்மனத்திலிருந்து பேசுகிறோம். அதன் காரணமாக முதலில் கற்ற மொழியில் சிந்தித்து பின்னர் மொழி பெயர்த்து அந்த இரண்டாவது மொழியில்உரையாற்றுகிறோம்-இறையன்பு
Wednesday, 15 May 2024
வெற்றியின் அளவுகோல். ஒரு சர்ச்சையில் எப்போதும் சிறிய தலைகள்தான் உருண்டுகொண்டிருக்கும். பெரிய தலைகள் எதற்கும் எதிர்வினையாற்றாமல் அமைதியாக இருப்பார்கள். அங்ஙனம் மௌனம் காப்பதாலேயே அவர்கள் பெரிய மனிதர்கள். ஏனெனில், உங்களது தவறுகளுக்கும் செயல்களின் பின்விளைவுகளுக்கும் நீங்களே வக்காலத்து வாங்கித் தடுப்பாட்டம் ஆடும்வரை நீங்கள் பெரிய மனிதர் அல்ல. உங்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காகப் பெரிய கூட்டத்தைத் தயார்செய்யும்போதே வெற்றியடைந்தவர் ஆகிறீர்கள்.-கோகுல் பிரசாத்
Tuesday, 14 May 2024
ஒருவர் போல்.இல்லை
மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மீண்டும் உருவாகாமல் எப்போதும் தனித்துவமாகவே உருவாகின்றன?
பரிணாம வளர்ச்சியின் தேவையால் இது நிகழ்வதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களை போலன்றி மற்ற உயிரினங்கள், தம் சக உயிரினங்களை அதிசயக்கத்தக்க பல வழிகளில் வேறுபடுத்தி அறிகின்றன.
எடுத்துக்காட்டாக, பென்குயின் பறவைகள் உருவத்தால் பெரும் வேறுபாடுகள் கொண்டவையில்லையெனினும், தத்தம் தனித்துவமான குரலோசையால் மற்ற பென்குயின்களை கண்டறிகின்றன. நாய்கள், தம் அதீதமான மோப்பத்திறனால் மற்ற நாய்களை அறிகின்றன. மனிதனின் உருவ வேறுபாடுகள் வியக்கத் தக்கவை. 700 கோடி மனிதர்கள் 700 விதமான முகங்கள். ஒத்த இரட்டையர்களின் மரபணுக்கள் ஒத்திருந்தாலும் உருவத்தில் வேறுபட்டு விடுவர். சிறு வேறுபாடுகளை கவனிக்கத் தவறுவதாலேயே நம்மால் வேறுபாட்டை அறிய முடிவதில்லை.
The Biology of belief நூலின் ஆசிரியர் முனைவர்.லிப்டன் அவர்கள் கூறுவதைப்போல், ஒவ்வொரு புறக்காரணி மட்டுமின்றி ஒருவரின் நம்பிக்கையும் அவர் தம் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார். உலகின் எந்த மனிதனுக்கும், புற, அகக்காரணிகள் ஒன்றாக இருப்பதில்லை
உடலின் ஒவ்வொரு உயிர் அலகும் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு உயிரலகும் புற, அகக்காரணிகளால் பாதிக்கப்படும்போது ஒவ்வொன்றும் நுண்ணிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, பலகோடி செல்களிலான உடல் எனும் பெரிய அளவில் பெரும் மாற்றத்தை வெளிக்காட்டுகிறது.
எனது ஆசிரியர் ஒருவர் கூறும்போது, சிறு பிழை எவ்வாறு பெரும் பிழையாய் மாறுமென்பதற்கு எடுத்துக்காட்டாய், நிலவிற்கு ஒரு பொருளை நேர்கோட்டில் அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் கோணத்தில் 0.0000000001 பாகை பிழை ஏற்பட்டாலும், அது நிலவை அடைய முடியாது. ஏனெனில், அந்த பிழையின் அளவுடன், நிலவின் தூரத்தை பெருக்கும்போது வரும் கோணம், நிலவை விட்டு அந்த பொருளை, வெகு தொலைவில் விலக்கி விட்டிருக்கும். அவ்வாறே, நுண்ணிய அளவில் ஏற்படும் மாற்றங்கள், பெரிய அளவில் பூதாகர மாற்றமாக இருக்கும்.
அடுத்த முறை நிலைக்கண்ணாடி முன் நிற்கும்போது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உலகின் தனித்துவமான உருவத்திற்கு சொந்தக்காரரை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை!
-படித்தது
Monday, 13 May 2024
அழியாத மை*வாக்களிக்கும் போது வைக்கப்படும் அழியாத மை முன்பு புள்ளி போல் வைக்கப்பட்டது.1.2.2006 முதல் விரல் முழுதும் வைக்கப்பட்டது*1950ல் மைசூரை சேர்ந்த NRTC நிறுவனம் காப்புரிமைப் பெற்றது.*1962ல் 3வது மக்களவைத் தேர்தலில் மைசூரில் மட்டும் முதன்முதலில் உபயோகிக்கப்பட்டது*இந்த 2024 மக்களவைத் தேர்தலில் 30 இலட்சம் லிட்டர் மை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.இதன் மதிப்பு 55கோடி*1976முதல் சர்வதேச அளவில் 29 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது-என்.மகேஷ்குமார்
Sunday, 12 May 2024
Saturday, 11 May 2024
routine
,அன்றாட ஒழுங்கின் அவசியம்
Power of Routine
நீங்கள் உங்களை எத்தனை சாதாரணமான ஆளாகக் கருதினாலும் உங்களுக்குச் செய்ய பெரிய விஷயங்கள் இல்லை என்றாலும் கூட Routine எனப்படும் அன்றாட ஒழுங்கை வைத்துக் கொள்ளுங்கள்.
காலை இத்தனை மணிக்கு எழுவது , பேப்பர் படிப்பது , உடற்பயிற்சி, ஃபேஸ்புக் பார்ப்பது, வீட்டு வேலைகள் , வாசிப்பது, எழுதுவது, ரிலாக்ஸ் பண்ணுவது என எல்லா விஷயங்களுக்கும் ஒரு ஒழுங்கு வைத்துக் கொண்டு அதன்படி செய்யுங்கள். எத்தனை சிறிய ரொட்டின் என்றாலும் பரவாயில்லை
பல விஷயங்களை நாம் செய்ய ஆசைப் படுவோம். ஆனால் அதைச் செய்ய ஒரு மூட் வரட்டும் எனக் காத்திருப்போம். அந்த மூட் வரவே வராது.இதுதான் Psychological Inertia எனப்படும் ஸ்டார்டிங் ட்ரபிள்.
அதுவே ஒரு அன்றாட ஒழுங்கு வைத்திருந்தால் அதுவே உங்களுக்கு ஒரு உந்துதலைத் தரும்.
அன்றாட ஒழுங்கை வைத்திருப்பவர்களுக்கு மனச் சோர்வு வரும் வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன.
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் இலக்குகளை அடைவதாலும் மனச் சோர்வு குறைகிறது.
வாழ்க்கையின் நோக்கம் என்றெல்லாம் அடிப்படையில் எதுவும் கிடையாது. இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க ஒரு ஒழுங்கையும் நோக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் . அது போலியாக இருந்தாலும். எதையாவது செய்தோம் என்ற நிறைவு இருக்கும்
So have a routine...
டாக்டர் ஜி ராமானுஜம்.
Thursday, 9 May 2024
புத்தர்
புத்தர் ஞானம் அடைந்தபின் தன் சொந்த ஊர் திரும்பி மனைவியை
சந்தித்தது பற்றி நிறைய கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதம்.
அதில் ஒரு வெர்சனில் புத்தர் தானே தன் மனைவியையும், மகனையும் சந்திக்கவேண்டும் என சொல்லி கிளம்புகிறார். அவருடன் இருந்த பிட்சுக்கள் "அனைத்தையும் துறந்துவிட்டு வந்தீர்கள். ஏன் மறுபடி போய் மனைவியை சந்திக்கவேண்டும்" என கேட்கிறார்கள். "பழைய வாழ்க்கையின் கடன். அவளிடம் சொல்லாமல், குழந்தையை விட்டுவிட்டு வந்தேன். அதற்கு போய் சமாதானம் சொல்லவேண்டும்" என்கிறார் புத்தர்.
புத்தர் மேல் கடும்கோபத்தில் இருக்கிறார் யசோதரா. புத்தருக்காகவும், அவரது சீடர்களுக்காகவும் புத்தரின் தந்தை சுத்தோதனர் ஒரு மண்டபத்தை கட்டியும் அங்கே அவள் போகவில்லை. "எந்த அறையில் என்னை இரவு தூங்குகையில் சொல்லாமல், கொள்ளாமல் தனியே விட்டுவிட்டு போனாரோ, அங்கேயே அவர் வந்து சந்திக்கவேண்டும்" என்கிறார்.
புத்தரும் அதே அறையில் சென்று யசோதராவை தனிமையில் சந்திக்கிறார். யசோதரா ஒரே கேள்வி தான் கேட்கிறார்.
"நீங்கள் இப்போது என்னவாக வந்து என் முன் நிற்கிறீர்கள் என்பது எனக்கு சரியாக புரியவில்லை. மகான் என்கிறார்கள், கடவுள் என்கிறார்கள். உங்கள் உபதேசங்களை உலகமே கொண்டாடுகிறது. ஆனால் ஒரே ஒரு விசயத்தை மட்டும் எனக்கு தெளிவு படுத்துங்கள். நீங்கள் வீட்டை விட்டு எங்கோ காட்டுக்கு சென்று அடைந்த அந்த ஞானத்தை, அறிவை, சாதகத்தை இதே அரண்மனையில் வசித்தபடி அடைந்திருக்கமுடியாதா? மனைவியையும், பிள்ளையையும் விட்டுவிட்டு காட்டுக்கு போயிருந்தால் மட்டுமே அந்த ஞானம் கிடைத்திருக்குமா?"
பதில் சொல்லமுடியாமல் ஸ்தம்பித்து நின்றார் புத்தர். ஞானிக்கு காடும், அரண்மனையும் ஒன்றுதான் என்பதை இப்போதைய புத்த நிலையில் அவரால் உணரமுடிந்தது. ஆனால் அன்று இளவரசன் நிலையில் அதை அவரால் உணரமுடியவில்லை.
But moral of the story is -> எப்பேர்ப்பட்ட ஞானியானாலும் சம்சாரம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திண்டாடிதான் நிக்கணும் :-)
-படித்தது
Wednesday, 8 May 2024
மன அழுத்தம் ஒரு அளவுவரை நமக்குத் தேவையான ஒன்றே. ஆங்கிலத்திலே இதை யூஸ்டிரெஸ் (நல்ல அழுத்தம்) என்கிறார்கள். அந்த அழுத்தம் கொடுக்கும் வேகம், நமது கவனத்தை மேம்படுத்தித் திறமையை வளர்க்க உதவுகிறது.'அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' என்பார்கள்.அதுவே ஒரு அளவுக்கு மேல் போனால் டிஸ்டிரெஸ் எனப்படும் கெட்ட மன அழுத்தமாகிறது. அது நமது உற்சாகத்தைக் குறைத்து, செயல்திறனை வெகுவாகப் பாதிக்கிறது.-ராமானுஜம்
Tuesday, 7 May 2024
Monday, 6 May 2024
டாலரில் ப்ராங்க்ளின் படம்
பெஞ்சமின் ஃப்ராங்ளின்
அமெரிக்க டாலர்களில் படம் வரணும்னா அந்த நாட்டின் அதிபராக ஒருவர் இருந்திருக்கணும்.
ஆளானப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டனே $1 டாலர் நோட்டிலும், ஆப்ரஹாம் லிங்கன் $5 டாலர் நோட்டிலும் தான் படமாக வந்துள்ளனர். பெஞ்சமின் பிராங்களின் அமெரிக்க அதிபர் இல்லை. ஆனாலும் படமாக வந்து விட்டார். அதுவும் $100 டாலர் நோட்டுகளில்.
ஏனெனில் பிராங்க் செய்த தரமான சம்பவங்கள் அப்படி!
பிரிட்டனை எதிர்க்க, அமெரிக்கா பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. பிரஞ்சு காரனுக்கு இளகிய மனசு. இந்த ஒப்பந்தம் நிறைவேற ஆணி வேராக செயல்பட்டவர்களில் பிராங்க் தான் முதல் ஆள்.
அமெரிக்கா முன்னேற வேண்டுமானால் ஐரோப்பிய நாடுகளின் தயவு தேவை! என சீக்கிரமே புரிந்து கொண்ட பிராங்க், ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து கடனுதவி, மற்றும் வாணிபம் இரண்டையும் கொண்டு வந்து சேர்த்தார்.
மொத்தம் மூணு ஒப்பந்தங்கள் நிறைவேற பிராங்க் தான் காரணம்:
Treaty of France
Treaty of Paris
Declaration of Independence
மூன்றாவதாய் உள்ளது படி யாரையும் கைது செய்ய முடியாது.
முதலாம் Amendment குடுத்த பேச்சுரிமை இருப்பதால் வெள்ளை மாளிகை முன்பு கூட நின்று கொண்டு "அதிபர் ஒழிக!" என்று கோசம் போட முடியும்.
ஆனால் சனி பகவான் நாவில் வந்து அமர்ந்து விட, கொஞ்சம் வாய் தவறி "அமெரிக்கா ஒழிக! அல்லது ஒழித்து கட்டுவேன்!" என்று சொன்னால் 10 வருடம் நிச்சயம்! 25 வருடம் லட்சியம்! என்று தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள்.
பிராங்க் அறிவியல் அறிஞர். எதற்கும் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கவில்லை. நல்ல விஷயங்கள் மக்களுக்கு எளிதா போய் சேரனும் என்று பெருந்தன்மையா சொல்லி விட்டாராம்.அதனால் அவரால் அதிகம் டாலர் சம்பாதிக்க முடியவில்லக்.ஆனால் ப்ராங்ளினால் அந்த டாலரில் படமாக வர முடிந்தது.
-படித்தது
1770ம் வருஷம், ஆஸ்த்ரேலியாவுக்கு சென்ற ஜோசப் பேங்க்ஸ் எனும் ஆங்கிலேயர், அங்கு வேறெங்கும் காணாத வித்தியாசமான விலங்கு ஒன்றினைப் பார்த்தார். அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள, அங்கு இருந்த அபோரிஜினல் பழங்குடியினரிடம் அந்த விலங்கின் பெயரைக் கேட்டிருக்கிறார். அந்த பழங்குடியினர், "கங்காரு" என்றனர்.உடனே இவரும் தனது டைரியில் இந்த வகை விலங்குக்கு "கங்காரு" என்று பெயர் என குறித்துக்கொண்டார். பிறகு, அதனையே அதன் பொதுப் பெயராக உலகெல்லாம் பரப்பி விட்டனர். ரொம்ப நாளைக்குப் பிறகு தான் தெரிந்தது. அந்த பழங்குடியினர் பேசும் "கூகு யிமித்திர்" மொழியில் "கங்காரு" என்றால் "எனக்குத் தெரியாது / எனக்கு புரியவில்லை" என்று அர்த்தமாம். பாவத்த... 🤣
Sunday, 5 May 2024
Saturday, 4 May 2024
Friday, 3 May 2024
இயற்கையின் நிழலில்
மிக வலிமை வாய்ந்த இறகுகள்.. இவை..
நமது சீலிங் பேன் (Ceiling fan) சராசரியாக ஒரு நொடி பொழுதில், 4-5 முறை சுத்துகிறது..
அதுவே கணினியில் இருக்கும் விசிறி 40-50 முறை ஒரு நொடிக்கு..
கார்களில் பிஸ்டன் ஒரு நொடி பொழுதில் அதிக பட்சமாக 120 முறை சுற்றும்..
ஹெலிகாப்டரில் கூட ஒரு நொடியில் ரெக்கை 30-40 முறை சுற்றி விடும்..
ஒரு தேனீ பூச்சியின் ரெக்கை என்ன வேகத்தில் இயங்குகிறது தெரியுமா?
ஒரு நொடியில் 236 முறை..
நாம் பயன் படுத்தும் கண்டுபிடிப்புகள் வட்டமாக விசுறுபவை..
தேனீ பூச்சி மற்றும் பறவைகளின் ரெக்கை அப்படி அல்ல.. மேல்கீழாக இயங்குபவை..
இது வரை மனிதன் இந்த பொறிமுறையில் (mechanism) எதையும் பறக்கவிட்டதாக தெரியவில்லை..
செயற்கையான கருவிகள் மேள்கீழாக இயங்கி 236 முறை ஒரு நொடியில் இயங்கினால் அதை தாங்க வலிமை தர பல கோடிகள் செலவு செய்து வருட கணக்கில் உழைப்பு போட வேண்டி இருக்கும்.. அப்படியும் சாத்தியம் தானா என்பது சந்தேகம் தான்.. ஏராளமான எரிபொருள் அல்லது மின்சாரமும் தேவை படும்..
ஆனால் விரல் நுனி அளவே உள்ள தேனீ, ஒரு நொடிக்கு 236 தனது இறகை அடித்து பறக்கும்..
குறைந்த பட்சம் ஒரு தேனீ 10 மணி நேரம் வேலை செய்யும்..
10 மணி நேரம்
600 நிமிடங்கள்
36000 நொடிகள்
8496000 முறை ஒரு தேனீ இறகை ஒரு நாளில் அசைத்து விடும்..
இப்படி சராசரியாக 36 நாட்கள் செய்ந்தால், ஒரு தேக்கரண்டி யில் பண்ணிரண்டில் ஒரு பங்கு தேன் சேகரிக்கும்..
36 X 8496000 = 305856000 முறை ஒரு தேனீ பூச்சி தனது இறகை அடித்தால், நமக்கு கிட்டத்தட்ட, ஒரு சொட்டு தேன் கிடைக்கும்...
ஒரே தேனீ பூச்சியின் உழைப்பு இது..
கோடிக்கணக்கான தேனீக்கள் இப்படி தேன் சேகரிக்க சென்று, நமக்காக மகரந்த சேர்க்கை செய்கின்றன..
ஒரு பருக்கை சோற்றை, ஒரு துளி தேனை, ஒற்றை கடுகை, ஒரு நுண் துகள் உணவை, வீணடிக்க நமக்கு உரிமை இல்லை..
- இயற்கையின் நிழல்..
Thursday, 2 May 2024
உமா ரமணன்
ஆனந்த ராகம்..பாடல் ரேடியோவில் 90களில் ஒலிக்கும் போதெல்லாம் அந்த இசை கேட்டு ஓடிவரும் குரலில் அத்தனை துள்ளல் இருக்கும்.
கிளாசிக்கல் ஸ்டைலில் அமைந்த நிழல்கள் படத்தில் வரும் பூங்கதவே தாள்திறவாய் அந்த கதாநாயகியின் முக ஒற்றுமைக்கும் குரலுக்கும் அத்தனை பொருத்தம். ரேவதியின் நடிப்பில் உருவான பாடல்கள் சிலவற்றுக்கு உமா ரமணின் குரல் மிகப் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் அரங்கேற்ற வேலை படத்தில் வரும் ஆகாய வெண்ணிலாவே, புதுமைப்பெண் படத்தில் வரும் கஸ்தூரி மானே உள்ளிட்ட சில பாடல்களை சொல்லலாம்.
கேளடி கண்மணி என் நீ பாதி நான் பாதியும், புது நெல்லு புது நாத்து படத்தில் மரிக்கொழுந்து பாடலில் சித்ராவுடன் இணைந்து பாடியிருப்பார். அதேபோல் வைதேகி காத்திருந்தாள் படத்தில் துள்ளல் இசையாக மேகம் கருக்கையிலே பாடலில் கிராமத்து மணத்தை நமக்கும் தந்து இருப்பார். ராஜாவுடன் இணைந்து பாடிய மற்றொரு பாடல் பாட்டு பாடவா படத்தில் வரும் நில் நில் நில் பதில் சொல் சொல் பாடலும்.
பகவதிபுரம் ரயில்வே கேட் படத்தில் வரும் செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சேன் என்ற பாடலும் ராஜாவுடன் பாடியிருப்பார்.
வைக்காத செந்தூரம்தான் என சரணத்தில் ஆரம்பிக்கும் கும்பக்கரை தங்கையா படத்தில் வரும் பூத்து பூத்து குலுங்குதடி பாடலும் எப்போது கேட்டாலும் இனிக்கும். கண்மணி நீ வர காத்திருந்தாள் பாடலில் இவரின் குரல் மட்டும் தனித்து ஓங்கி ஒலிப்பது குறிப்பிடத்தக்கது. நந்தவன தேர் படத்தில் வரும் வெள்ளி நிலவே பாடலில் நாயகனின் ஆறுதலை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை குரலிலே தந்திருப்பார்.
மகாநதி படம் வந்தபோது படத்தில் ஒரு சரணத்தை வெட்டி இருப்பார்கள். ஆனால் ஆடியோவில் அது இருக்கும். அதுதான் ஸ்ரீரங்கநாதர் பாடலில் கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும் எனும் சரணம். அந்த பத்தியில் அவ்வளவு இயல்பாய் பாடியிருப்பார்.
முரளியின் படத்தில் வரும் தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே பாடலில் நாயகனுடன் ஊடல் ஆடும் நாயகியின் மனோ நிலையை அப்படியே பிரதிபலித்து இருப்பார். ஊரடங்கும் சாமத்துல எனும் துவங்கும் புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தில் சொர்ணலதா உடன் இணைந்து கலக்கி இருப்பார்.
இது என்ன இது என்ன புது மயக்கம் கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு போன்ற பாடலும்.தற்காலத்து நாயகியான திரிஷா விற்கும் சிவகாசி மற்றும் திருப்பாச்சி பாடல்களில் பாடி இருப்பார்
இன்னும் இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன. ஆனால் நினைவுக்கு வந்தவை இவைகள் மட்டுமே. தனித்துவக் குரலாக அதிகம் கவனத்தில் அறியாத உமாரமணன் அவர்களின் பாடல்கள் காலம் கடந்தும் நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை
-மணிகண்ட பிரபு
Wednesday, 1 May 2024
Laapataa ladies, (Hindi)-மணி
அமீர்கான் தயாரிப்பில் அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ள படம்
தொலைந்து போன பெண்கள் எனும் அர்த்தம் தரும் டைட்டில் தான்
லாபட்டா லேடிஸ்.செங்கல் செல்போன் உள்ள 2000ன் துவக்கத்தில் நடக்கும் கதை.
படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு குக் கிராமத்தில் திருமணம் நடைபெறுகிறது.பொது இடத்தில் பெண்கள் யாரையும் பார்க்காமலிருக்க முக்காடிட்டு நடக்கும் வழக்கமுள்ள ஊரில், தீபக் எனும் மணமகனுக்கு மணமுடித்து வைக்கின்றனர். மாப்பிள்ளை சைடுல ஒருத்தர் கூட இல்லை.
திருமணம் முடித்து தனது சொந்த ஊருக்கு தன் புது மனைவியுடன் கிளம்புகிறான்.. நெருக்கடியான ரயிலில் பயணம் செய்யும் போது அதே இருக்கைக்கு அருகே இன்னொரு புது மணத் தம்பதியினரும் பயணிக்கின்றனர். இரண்டு பெண்களுக்கும் ஒரே விதமான சிவப்பு நிற உடை + முக்காடு.
ரயில் காலதாமதமாவதால், நல்லிரவில் தீபக்கோட ஸ்டேஷன் வருகிறது.உண்மையான மனைவி உறங்கிக் கொண்டிருக்க, தீபக் இரயிலில் இருந்து இறங்கும் அவசரத்தில் பெட்டியில் இருந்த மற்றொருவரின் மனைவியுடன் அந்த ஸ்டேஷனில் இறங்கி விடுகிறான். அந்த பெண்ணுக்கு தான் இடம் மாறி இறங்குவது அறிந்தும், அவள் அமைதியாக தீபக்குடனே அவனது கிராமத்துக்கு செல்கிறாள்.
தீபக்கின் உண்மையான மனைவி வேறு ஒரு ஊரில் இறங்கி தவிக்க, அங்கு அவளுக்கு அந்த ஸ்டேஷனில் டீக்கடை நடத்தும் ஒரு வயதான பெண்மணி ஆதரவு அளிக்கிறார்.
இறுதியில் புது மணத்தம்பதி சேர்ந்தார்களா?புது மணப்பெண் என்ன ஆனாள் என்பது மீதிக்கதை.
*இடம் மாறிப்போன இரண்டு பெண்களின் நிலைதான் கதையாக பயணிக்கிறது. காவல் நிலைய புகார், ரயில் நிலையத் தொடர்பு என அன்றைய தொழில் நுட்பத்தில் எவ்வளவு பின் தங்கியுள்ள கோல்டன் நாட்கள் தெரிகிறது
*விருப்பமில்லாத மற்றொரு மணப்பெண் அமைதியாக தீபக்குடன் பயணிக்கிறாள்.ஆரத்தி எடுக்கும் போது வரும் அதிர்ச்சி பார்க்கும் நமக்கும் ஏற்படுகிறது
*புதிதாய் வந்த மணப்பெண்வந்த அன்றே செங்கல் செல்போனின் சிம்மை எரித்துவிடுகிறாள். இதனால் தொடர்பு கொள்ள இயலவில்லை என லாஜிக் வொர்க் அவுட் ஆகிறது
*தொலைந்து போன உண்மையான மனைவி பதறி அழும் இடம் இயலாமையை காட்டுகிறது. யாரையும் நம்பாமல் பின்னர் நம்பிக்கையுடன் நகர்வது பெண்ணின் தன்னம்பிக்கையை காட்டுகிறது
*கையிலிருக்கும் மருதாணியில் தீபக்கின் பெயர் அழிவதை பார்த்து இனி சந்திப்போமா என சந்தேகத்தையும் கூட்டுகிறது.
*பெண்ணை ஒருவர் துணையின்றி அனுப்புவார்களா?ஆணின் உறவினர் ஒருவரும் வரவில்லையா?கடிதப் போக்குவரத்தில் பெண் வீட்டார் விசாரிக்கவில்லையா?புதுப்பெண்ணை விருந்தாளி போல் தங்க வைப்பார்களா? என அடுக்கடுக்கான கேள்வி இருந்தும் அந்த விளிம்பு நிலை குடும்ப கிராமச் சூழல் கோவாக்சின் போட்டவர் போல் கேள்வி கேட்காமல் கோவிஷீல்ட் போட்டவர் மாதிரி அமைதியாய் கவனிக்க வைக்கிறது.
ஒருவரிக்கதை,நல்ல திரைக்கதை வித்தியாசமான அனுபவம், சினிமாத்தனம் இல்லாமல் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Subscribe to:
Posts (Atom)