Saturday, 27 February 2021

கற்பதுவே..பகிர்வதுவே-4*மணி


நேற்றின் அனுபவங்களை நிராகரித்தவனுக்கு நாளை என்பது கிடையாது   -தொ.ப

நீராட்டும் ஆறாட்டும்
-தொ.பரமசிவன்

வழக்கம் போல் இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் நுழைந்ததும் முதலில் தேடியது தொ.ப வின் புத்தகம் ஏதேனும் வந்துள்ளதா என்றுதான். சில கட்டுரைகள் மீள் பார்வைக்குட்பட்டு தொகுத்து இக்கட்டுரை நூலை காலச்சுவடு கொண்டு வந்துள்ளது.

வழக்கம் போல் எளிமையான ஒருபுள்ளியில் துவங்கி..நேர்த்தியாக கோலமிடுவது போல் நிகழ்காலத்தை கடந்த கால பண்பாட்டுடன் தொடர்புபடுத்தி ஆய்வு நோக்கில் ஒரு கட்டுரையை முடிக்கும் போது இறந்தவர் விளம்பரம் இல்லாத செய்தித்தாள் படிப்பது போல் சுகமளித்தது. தமிழகத்தில் 90% அம்மன் கோவில்கள் இருக்கின்றன எனச் சொல்லும்போது நம் குலதெய்வ அம்மன்கள் கண நேரத்தில் வந்து சென்றன.

மஞ்சள் மகிமை கட்டுரையில் பூசுமஞ்சளில் புகழ்பெற்றது விறலி மஞ்சள்.விறலி என்றால் முகபாவங்கள் காட்டி நடிக்கிற நடனமாடும் பெண்களை குறிப்பது. விறலியர் மட்டும் பூசிய மஞ்சள் காலப்போக்கில் குடும்பப் பெண்களும் பூசினர்.விறலி மலை விராலி மலையானதை கூடுதல் தகவலாய் தந்திருப்பது சிறப்பு. தாலியின் சரித்திரம் குறித்து சங்க காலம் முதல் கூறுகிறார். ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில சாதியார் தாலிக்குப் பதில் காரைக்கயிறு எனும் கறுப்புக் கயிறு கட்டியுள்ளனர் எனும் செய்தி புதிதாய் இருந்தது.

சுமைதாங்கி கற்கள் தோன்றியது வரலாறு, கோலம் இடுவதற்கான உட்பொருள்,பூ மாலையின் பல்வேறு பெயர்கள், நீராடலுக்கும் குளித்தலுக்கும் உண்டான வேறுபாடுகள் குறித்த கட்டுரைகள் படிக்க படிக்க சுவாரஸ்யமானவை.வீடு குறித்த ஆய்வில் தொழில்களத்திலிருந்து 'விடுபட்டு' நிற்கும் இடத்தைத்தான் குறித்தது.இதிலிருந்து விடுதி யும் வந்தது.பின் மேலோர் மண்ணுலகம் விட்டு சேரும் துறக்கத்தை(வீடு) அதாவது சொர்க்கத்தை வீடு என அழைத்தனர்.

இதை விட முக்கியமாய் வீடு கட்டும் போது கயிறு கட்டி அதன் நிழல் வழியே திசை குறித்துக்கொண்டு, அத்திசை தெய்வத்தை வணங்கியே வீடு கட்ட ஆரம்பிக்கனுமாம். ஒவ்வொரு ஆய்வு புத்தகத்திலும் எப்படி ஒவ்வொரு கட்டுரைக்கும் சங்கப் பாடலை மேற்கோள் சொல்கின்றனர் என்பது ஆச்சர்யமான விஷயம்.ஏனெனில் சங்க இலக்கியத்தை முழுமையாய் ஆழ்ந்து வாசித்தால் மட்டும் அதிலிருந்து தேர்ந்தெடுத்து மேற்கோள் சொல்ல முடியும்.அது அசாத்திய சாதனைதான்.

சமீபத்தில் என் மகளுக்கு காலில் வட்டமாக ஸ்கின் அலர்ஜி போல் வந்தது.பல மருத்துவரிடம் காண்பித்தும் சரியாகவில்லை. ஒரு முறை விஷேசத்தில் பார்த்த ஒரு பாட்டி பூவரசங்காயை அரைத்து பூசுனு சொன்னாங்க.உண்மையில் ஆச்சர்யம் தான் பத்து நாளில் சரியாகிடுச்சு.அன்னிக்கு தோல் டாக்டர் எல்லாம் எங்க இருந்தாங்க.இதான் மருந்துனு சொன்னது இன்னும் காதில் ஒலிக்குது."பிணி பற்றிய அறிவும் மருந்து குறித்த தெளிவும் பாட்டிக்கு இருக்கிறது.அதான் பாட்டி வைத்தியம்."
நம் பாரம்பரிய வேர்களை அழித்தால் தான் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதையும் சந்தைப்படுத்த முடியும்" எனும் தொ.ப வரி நிதர்சன உண்மை

#ரசித்தவை

*திருமண வீடுகளில் அரசாணிக்கால் நாட்டுதல் என்பது அன்றைய அரசதிகாரத்தின் அனுமதி பெற்று திருமணம் நடத்தப்பட்டதன் சாட்சியம்.

*மருத்துவரில் மரு எனும் சொல் தமிழில் மணம்.அக்காலத்தில் மருத்துவ குணமுள்ள தாவரங்களை மணங்களினால் அறிவதில் இருந்து வந்திருக்க வேண்டும்.

*மருந்துகளின் மீது எழுதப்படாத அதிகாரமாய் வரி விதித்தனர் (அப்பவே வா)

*மருத்துவ கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.1920ல் நீதிக்கட்சி அமைந்த பிறகுதான் அந்த ஆணை நீக்கப்பட்டது

*சோழ அரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்..அடித்தள மக்களை சார்ந்து நிற்கிற வணிக குழுக்களை புறந்தள்ளியதே.

*பொன் என்று பொருள்படும் பாலி மொழிச்சொல் 'சோனா' இது சோணைமுத்து,சோணாசலம் என பெயர் வைத்து அழைத்தனர். பின் சோனா தங்கமாய் மொழி பெயர்த்து தங்கமுத்து, தங்கமலை என விழித்தனர்.ஒடுக்கப் பட்ட மக்களிடத்தில் இன்னும் சிறு தெய்வ பெயர்களான ஒச்சன், சுடலை, பேச்சி,பிச்சை என இருப்பதை காணலாம்.

இது போன்ற எண்ணற்ற தகவல்கள் புத்தகம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.ஆயிரம் பக்கம் எழுதினால் தான் எழுத்தாளர் என்னும் நிலை இருக்கும் போது ஐந்து பக்கம் எழுதினாலும் வாசகனை சிந்திக்க வைக்க வேண்டும்.என்றும் அறியாத தகவல்களை அறிய வைக்க வேண்டும் எனும் வேட்கை தொ.ப விடம் கடைசி வரை இருந்தது.உலகமயம் குறித்து, டங்கல் திட்டம் குறித்து பேசும் போதெல்லாம் சந்தைய மயமாக்கலில் அழிக்கப்படும் பண்பாட்டினை குறித்து ஒவ்வொரு முறை கவலைப்படுவார்.

ஆயிரம் பக்கங்களை படிப்பதை விட இவரின் நூறு பக்கங்களுக்கு வலிமை அதிகம்.தொ.ப வை படிப்போ.ஞானத் தேடல்களை தொடர்வோம்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment