Tuesday, 19 March 2024

புத்தகம்-11 குழந்தைகளுக்கான பொருளாதாரம்


Reading_Marathon2024
#24RM050

Book no:11/100+

குழந்தைகளுக்கான பொருளாதாரம்
-ரங்கநாயகம்மா

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. 464 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் வெறும் 180 ரூபாய்க்கு டிஸ்கவரி புக் பேலஸில் வெளியானது.

பாமரனுக்குச் சொன்னால் பண்டிதனும் புரிந்து கொள்வார்கள் என்ற பழமொழி உண்டு. அதே போல் தான் இந்த புத்தகத்தில் குழந்தைகளுக்கு எடுக்கப்படும் பாடங்கள் பெரியவர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் பொருளாதாரக் குறித்த மார்க்சிய நோக்கில் அனைத்து பாடங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
 ஆந்திராவில் நானி என்ற குழந்தை மாதாந்திர இதழில் முதல் 8 பாகம் வந்து நின்று விட்டது. பிறகு அதன் தொடர்ச்சியாக அதே நடைமுறை பயன்படுத்தி பொருளாதார பாடத்தை குழந்தைகளுக்கு மிகவும் எளிய வகையில் விளக்கி ஒவ்வொரு பகுதி முடியும்போது அத்தியாயம் முடியும் பொழுதும் வினா விடையும் இருப்பதால் அந்த பகுதியை மிகவும் எளிமையாக உணர்ந்து கொள்ள முடிவதாக இந்த புத்தகம் அமைந்துள்ளது.

 மார்ச்சின் மூலதனம் படிக்காதவர்களுக்கு அல்லது அதை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு அடிப்படை பாடமாக அமையும். இந்த நூலில் 95 கட்டுரைகள் இடம்பெற்றன ஒவ்வொன்றும் மிக எளிய வடிவில் புரிந்து கொள்ளும் மொழியில் உள்ளது.

பணம் குறித்து துவங்கும் போது பொருள் வாங்கும் போது கொடுக்கிறோமே அதுதான் பணம். மனிதர்கள் உருவாக்கியதை மட்டுமே நாம் பொருள் என்று சொல்ல வேண்டும் நாம் படிக்கும் புத்தகங்கள் நாற்காலி இப்படி அனைத்தும் பொருட்களே. மனிதர்கள் பொருட்களை உருவாக்கிய வரலாறும் அந்தப் பொருள் உற்பத்தி செய்ய வேண்டிய கச்சா பொருட்களும் அதற்கு உறுதுணையாக இருக்கும் கருவிகளும் என்னென்ன என்பதை உதாரணத்துடன் விளக்கி இருப்பார்கள்.

பொருட்களை உற்பத்தி செய்த பின் அதற்கான உழைப்பை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. உழைப்பு என்பதை மனிதர்கள் மட்டும் செலுத்தும் ஒன்றாக நாம் புரிந்து கொள்ள வேண்டியதாய் சொல்கிறார்கள். உழைப்பு என்பது சில வகையான வேலைகளைக் குறிக்கும் நாம் சொந்த தேவைக்காக செய்து கொள்ளும் வேலை உழைப்பாகாது குறிப்பாக மூச்சு விடுவது உணவு உண்பது போன்றவை.

முற்காலத்தில் செய்த பரிவர்த்தனை பண்டமாற்று, பின்பு ஒரு பொருளின் பயன் மதிப்பு, ஒவ்வொரு பொருளுக்கும் பயன் மதிப்பு வேறுபடும் விஷயம் அதேபோல் ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பு,
உதாரணத்திற்கு ஒரு பானை செய்ய ஒரு மணி நேரம் ஆகிறது. காலணி மதிப்பு 2 மணி நேரம் என்றால் 2 பானைகள் கொடுத்து ஒரு ஜோடி காலனிகளை பெற வேண்டும். இதுதான் மதிப்பு விதி.

இவைகள் அனைத்தையும் விளக்கிய பின்பு உழைப்பில் சுரண்டல், ஏற்றத்தாழ்வுக்கான காரணங்கள், அடிமை முறை, கூலி முறை, வர்க்கங்களாக பிரிந்து கிடத்தல், அடிமை சமூகத்தில் வணிகம் லாபம் கடன் மற்றும் வட்டி ஆகியவை, அடிமைகளுக்கு மத நூல்கள் அளிக்கும் போதனைகள் பாவம் புண்ணியம் சொர்க்கம் நரகம், முதலாளி தொழிலாளிக்கான உறவுகள், நிலப்பரப்புத்துவ சமூகத்தில் உள்ள உழைப்பு சுரண்டல், முதலாளித்துவ அமைப்பின் தொடக்கம், லாபம் மூலதனத்தின் ஒரே குறிக்கோளாய் பார்க்கப்படுகிறது.. இவ்வாறு அதன் வரலாற்றை மிகத் துல்லியமாக எளிமையாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறார்கள்.

ஒரு தொழிலாளி 10 மணி நேர வேலையில் அவரின்
 மதிப்பு பத்து ரூபாய். ஆனால் கூலி தரப்படுவது ஐந்து ரூபாய். தொழிலாளர் 18 பொருட்களை உற்பத்தி செய்கிறார் .உற்பத்தி சாதனங்களின் மதிப்பு எட்டு.இந்த தரவுகளின் அடிப்படையில் உபரி உழைப்பு உபரி மதிப்பு உபரி உற்பத்தி ஆகிய மூன்றும் மிக விரிவாக அலசப்படுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த உழைப்பு சுரண்டலை 1867 இன் இறுதியில் இதை கண்டறிந்து வெற்றி அடைந்தவர் ஜெர்மனிய பொருளாதார வல்லுனரான காரல் மார்க்ஸ் ஆவார். இதனை நிரூபிக்க உபரி மதிப்பு பற்றிய கோட்பாடுகள் நாலு தொகுதிகள் அடங்கிய மூலதனம் என்ற நூலை எழுதினார். இதில் கடந்த கால அறிவு ஜீவிகளின் வரலாற்றினை விவரித்தும் அலசியும் புகழ வேண்டி இடத்தில் புகழ்ந்தும் விமர்சிக்க வேண்டிய விமர்சித்தும் அவர்தன் வாதங்களை முன் வைத்தார் . உழைப்பு சுரண்டலை அவதானிப்பது என்பதை அதை ஒழிப்பதற்கான முதல் படி

இதுபோல் புத்தகம்முழுக்க பொருளாதார பார்வை மனித உழைப்பு, பொருட்களின் தோற்றம், ஆட்சி, அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் படிப்படியாக தெரிந்து கொள்ள உதவுகிறது.

*ஒரு பிரச்சனையை அனைவரும் ஒரு மாதிரி புரிந்து கொள்ள, சரியான தீர்வு என்பது அனைவருக்கும் ஒன்றுபோல் ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு விஷயத்திலும் நான் முரண்பட்ட கருத்துக்களை காண்கிறோம் .ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த தத்துவம் இருக்கிறது .எது சரி எது தவறு என்று ஆய்ந்தறிந்து நாம் அதனை பின்பற்ற 
வேண்டும்.

*பொதுவாக ஒரு பொருள் செய்ய தேவைப்படும் நேரமே அதன் மதிப்பாகும். மண்மீது எவ்வளவு உழைத்து செலுத்தப்பட்டதோ அதுவே என் மண்ணுக்கான மதிப்பு.

*அனைத்து மதிப்புகளும் உழைப்புக்கு சொந்தமானது அவை பொருட்களுக்கு உரியது அல்ல.

*விற்பனைக்கு தயாராக இருக்கும் ஒரு பொருள்தான் சரக்கு.

*புழக்கத்தில் இருக்கும் காகித பணத்தின் மதிப்பானது அரசாங்கம் சேமித்து வைத்திருக்கும் தங்க நாணயத்தின் மதிப்பை சார்ந்து இருக்கும். இன்றைக்கும் கூட அவை ரிசர்வ் வங்கியில் உறங்கிக் கொண்டிருக்கும்.

*எவ்வளவுக்கு எவ்வளவு கூலியை உயர்த்திக் கொடுக்கிறாரோ அதற்கு மேல் லாபத்தை கூட்டி வைப்பார். ஆகவே கூலி என்பது உழைப்பின் மதிப்பு ஆகாது.

*காவலர்கள் மற்றும் ராணுவ பணியாளர்களும் உற்பத்திக்கு பங்களிக்காத உழைப்பாளர்களே. ஆனால் இவர்கள் முதலாளி வர்க்கத்தின் உழைப்பு சுரண்டலை காப்பதற்காக செயல்படும் உழைப்பாளர்கள்

*போட்டி என்னும் ஒரு புதிய தோற்றப்பாடு முதலாளித்துவ கட்டத்தில் தொடங்கிய ஒன்றாகும். மூலதனத்துக்கு இடையில் போட்டி அதுதான் முதலாளிகளுக்கு இடையிலான போட்டி

புத்தகத்தை முழுவதும் படித்தவுடன் ஏதோ புதிதாய் தெரிந்து கொண்ட ஒரு சந்தோஷமும் தெரிந்ததை நினைவூட்டிக் கொள்ளவும் மிகவும் உதவிகரமாக இருந்தது. நவீன காலத்தில் ஜெயமோகன் ஒரு இடத்தில் குறிப்பிட்டார்.. ஒரு தொழில் செய்யும் ஆசாரி, பிளம்பர் ஆகியோர் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் மாத ஊதியத்துக்கு செல்லும் படித்த ஒரு பட்டதாரி மாதம் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே  வாங்குகிறார். அந்த மாத ஊதியம் பெறுவோர் கண்ணுக்குத் தெரியாமல் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகிறார். ஆனாலும் மனித வளம் அதிகம் உள்ளதால் ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஆட்கள் அதிகம் கிடைப்பதாலும் குடும்ப வறுமையாளும் இது பன்ற நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

தற்போதைய காலத்தில் வரி மின் கட்டணம் போன்றவை முதலாளிகளை தொழிலாளிகளாக மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர். எத்தனையோ சுய தொழில் செய்வோர்கள்..தற்போது திருப்பூரில் வேலைக்கு செல்லும் அவல நிலையும் உள்ளது. இது முதலாளிகளின் கண்ணோட்டத்தில் இருந்தும் நாம் நடுநிலமையோடு நோக்க வேண்டிய அத்தியாவசிய பணியாகும். ஆகவே இரு தரப்பினரையும் கற்றுணர்ந்து அடிப்படை தேவைக்கான கூறுகளை இந்த நூல் மிகவும் விரிவாக அலசி இருக்கிறது.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment