Thursday, 5 June 2025

104



#கற்கை_நன்றே_104

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்றுவது பற்றி சிந்திக்கிறார்கள். ஆனால், ஒருவர்கூட தங்களை மாற்றிக் கொள்ள சிந்திப்பதே இல்லை.
-டால்ஸ்டாய்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினம் இயற்கை ஆர்வலர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலம் மாறும் வேகத்தை விட சூழலியலும் மிக வேகமாக மாறிவருகிறது.

இயற்கையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று கொண்டாடப்படுகிறது. இயற்கையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அதன் மதிப்புகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று மக்களுக்குச் சொல்ல உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்த 2025 ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் 'உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்பதாகும்.#BeatPlasticPollution.
2030 ம் ஆண்டிற்குள் ப்ளாஸ்டிக் ஒழிப்பை மேற்கொள்ள செயல்திட்ட உருவாக்கம் நோக்கத்தை கொண்டுள்ளது.

உலகில் ஆண்டுக்கு 40 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 2040ல் இரு மடங்காக அதிகரிக்கும். இதில் பாதி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படுபவை. இதில் 10 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஏரி, ஆறு, கடலில் 1.1 கோடி டன் பிளாஸ்டிக் குப்பை சேர்கிறது.இதனால் பூமியின் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. 'உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

எந்த வடிவத்துக்கும் மாற்றலாம் என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையான "பிளாஸ்டிகோஸ்" என்பதிலிருந்து பிறந்த வார்த்தைதான் "பிளாஸ்டிக்"

ஒரு மெட்ரிக் டன் நெகிழி தன் முழுமையான வாழ்க்கைச் சுழற்சியில் 5 மெட்ரிக் டன்கள் CO2e (கார்பன்டை ஆக்சைடுக்கு நிகரான பசுங்குடில் வாயுக்கள்) உருவாக்குகிறது. 2019ஆம் ஆண்டில் நெகிழி உற்பத்தியினால் ஏற்பட்ட உமிழ்வு மட்டுமே அமெரிக்காவின் 200 நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களின் உமிழ்வுக்குச் சமமானது என்று CIEL ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது. நெகிழி உற்பத்தி இப்படியே தொடரும் நிலையில் 2030-2035களில் 2015ஆம் ஆண்டு உற்பத்தியை விட இரண்டு மடங்காகவும் 2050ஆம் ஆண்டு மும்மடங்காகவும் இது உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தநெகிழி உற்பத்தியில் 40% நுகர்பொருட்களை பொட்டலமாக்கும் (packaging) ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியாக பயன்பாட்டில் உள்ளன என்கிறார் ஜீயோ டாமின்.

#சுற்றுச்சூழல் தினம் தோன்றிய வரலாறு

1969ம் ஆண்டு மார்ச் மாதம் டென்மார்க்-கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இயற்கையியல் வரலாறு குறித்த கருத்தரங்கு நடந்து கொண்டிருந்தது.

மாணவர் குழு ஒன்று நுழைந்து அங்கிருந்த கதவுகளை பூட்டி.. சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டிற்கு எதிராய் முழக்கம் எழுப்பினர். மாசடைந்திருந்த குளத்து நீரை கொண்டுவந்து அனைவரின் மீதும் தெளித்தனர். ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது.

1970களில் வட அட்லாண்டிக் பகுதியில் குடிமக்களின் போராட்டம், சூழலியல் இயக்கங்களின் தன்னெழுச்சி போன்றவை 1970ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் புவிநாள் உறுதுமொழி நிகழ்வுக்கு முன்னுதாரணமாக அமைந்தது. இதற்கு கிடைத்த வரவேற்பு ஆகியவை சூழலியலாளர்களை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியது.1970ம் ஆண்டு புவிநாள் நிகழ்வுக்குப் பின் டைம் இதழ் பேர்ரி காமனர் படத்தை அட்டையில் வெளியிட்டு சூழலியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து 1972 இல் பொதுச் சபை சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட முதல் பெரிய மாநாட்டை நடத்தியது. இதனை மனித சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு அல்லது ஸ்டாக்ஹோம் மாநாடு என அழைக்கப்பட்டது. அந்த ஆண்டு ஐ.நா சபை ஜூன் 5ம் நாளை உலக சுற்றுச்சூழல் தினமாய் அறிவித்து முதன்முதலில் 1974 இல் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது.

"ஒரே ஒரு பூமி" எனும் முழக்கத்தைச் செய்தது. காற்று மாசுபாடு, பிளாஸ்டிக் மாசுபாடு, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம், போன்ற நமது சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு தளமாக WED உருவாக்கப்பட்டது நுகர்வு, கடல் மட்ட அதிகரிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு, தேசிய மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த WED உதவுவதற்காக அமைக்கப்பட்டது ஆகும்.

இந்த ஆண்டு கருப்பொருளை நிறைவேற்ற விழிப்புணர்வு செய்வதைவிட பெருநிறுவனங்களை கட்டுப்படுத்துதல் முக்கியம்.மீண்டும் மக்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என உபதேசித்துக் கொண்டே நெகிழி உற்பத்தியைக் குறைக்காமல் இருந்தால்.. இதுவும் விழிப்புணர்வு வாசகமாய் மட்டும் கடந்து போகும்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment