Monday, 23 June 2025

116


#கற்கை_நன்றே_116

நம் அனைத்துச் சிக்கல்களையும் இறுதியில் அறிவியல் தொழில்நுட்பத்தால் தீர்த்துவிடலாம் என்று நம்புவது, பில்லி சூனியத்தை நம்புவதைவிடக் கேடு கெட்டது

-இஸ்ட்வான் மெசாரோஸ்

அண்மையில் நண்பர் ஒருவர் பேனாவிற்கு ரீபிள் வாங்கச் சென்றதை பார்த்துச் கடைக்காரர் ஏளனமாய்  சிரித்து, அதனை எறிந்துவிட்டு புதுப்பேனாவை வாங்குங்கள் சார் என்றாராம். இப்படித்தான் நுகர்வு கலாச்சாரம் திட்டமிட்டு ஒன்றை பழசாக்குகிறது.
இவ்வாறு வீசப்படும் கழிவுகள், பால்பாக்கெட்டின் நுனியை வெட்டி வீசி எறியும் சிறு துகள், மின்னணு கழிவுகள் போன்றவை தான் அன்றாடம் மக்களால் உமிழ்ப்படும் கழிவுகள்.

சரி இவைகளை மறுசுழற்சி செய்யும் தொழில் நுட்பம் வந்துவிட்டதே என நம் ஏழாம் அறிவு கூறும். மறுசுழற்சியிலும் அரசியல் உள்ளதாக கூறுகிறார் சூழலியலாளர் நக்கீரன்.. 

'அனைத்துக் கழிவுகளையும் மறுசுழற்சி செய்ய முடியாது. செய்தாலும் மறு உருவாக்கத்தில் அவற்றின் தரம் குறைந்து விடும் அதனை 'குறை சுழற்சி' என்கின்றனர்.உதாரணத்திற்கு வாட்டர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து மீண்டும் அதே தரத்திலான வாட்டர் பாட்டில்களாக மாற்ற முடியாது.வணிக உலகில் மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காததும் காரணம் என்கிறார்.

இதோ ஒரு உவகைக்கதை

புத்தரின் சீடர் ஆனந்தர் ஒருமுறை மன்னரைக் காண அரண்-மனைக்குச் செல்கிறார். அவர் சென்ற நேரம் மன்னர் அங்கில்லை. ஆனந்தரை அரசியாரைப் பார்த்து,தம் மடத்திலுள்ள துறவிகளுக்கு ஐந்நூறு ஆடைகள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கிறார். அரசியும் ஆனந்தர் கேட்ட ஆடைகளை அன்பளிப்பாக அளிக்க, அரசிக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்படுகிறார். ஆனந்தர்.

வெளியே சென்றிருந்த மன்னர் திரும்பி வருகிறார். ஆனந்தர் வந்த விவரத்தை அரசியார் தெரிவிக்கிறார். "ஒரு துறவி அத்தனை ஆடை -களையும் வைத்துக்கொண்டு என்ன செய்வார்? என்று அவருக்கு ஐயம் எழுகிறது.உடனே புறப்பட்டு நேரே மடத்துக்குச் செல்கிறார். அங்கு அரசருக்கும் ஆனந்தருக்கும் நடைபெற்ற உரையாடல் இது;

"துறவியே, நீங்கள் வாங்கி வந்த ஆடைகள் அனைத்தையும் என்ன செய்யப் போகிறீர்கள்?"

"இங்குள்ள துறவிகளின் ஆடைகள் கிழிந்துவிட்டன. அந்தக் கிழிந்த ஆடைகளுக்கு மாற்றாகப் புதிய ஆடைகளை வழங்குவேன்."

"அப்படியானால், அவர்கள் ஏற்கனவே அணிந்துள்ள ஆடைகளை என்ன செய்வீர்கள்?"

"அவற்றைப் படுக்கை விரிப்புகளாகப் பயன்படுத்துவோம்.'

"பழைய படுக்கை விரிப்புகளை எப்படி மாற்றுவீர்கள்?"

"தலையணை உறைகளாக மாற்றிடுவோம்.'

"பழைய உறைகள் என்னவாகும்?"

"அவை தரை விரிப்புகள் ஆகிவிடும்."

"பழைய விரிப்புகள்?"

"வாசலில் மிதியடிகளாக மாறிவிடும்."

"பழைய மிதியடிகள்?"

"அவற்றைத் தரைத் துடைக்க வைத்துக் கொள்வோம்."

''பழைய கந்தல் துணிகள்?"

"அவற்றைக் கிழித்துச் சேற்றுடன் குழைத்து மடத்தின் சுவர்மீது பூசி சுவரை வலுப்படுத்துவோம்."

பொருட்களை மறுசுழற்சி செய்து நாம் எளிமையாக வாழவேண்டும். அதுவே சுற்றுச்சூழலைக் காக்கும் என்பதைக் கற்பிக்க நமக்குக் கூறப் படும் ஒரு கதை இது. நல்ல கதைதான். எளிமையும் மறுசுழற்சியும் சுற்றுச்சூழலைக் காக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த அறிவுரை ஏன் எளிய மக்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது? மன்னர் ஆனந்தரைக் கேட்டது போலவே, பதிலுக்கு ஆனந்தரும் மன்னரிடம் இதுபோலத் திருப்பிக் கேட்டிருந்தால்...?

இதுதான் இன்று பெருநிறுவனங்கள், வளர்ந்த நாடுகள் மூன்றாம் தர நாடுகளுக்கிடையேயான உரையாடல். 

நெகிழி மறுசுழற்சியின் மூலம் நெகிழிக் கழிவுகளை நிர்வகிக்க முடியாது என்று தெரிந்தும் கூட நிறுவனங்கள் இலட்சக்கணக்கில் செலவு செய்து மக்களை அதற்கு மாறாக நம்ப வைக்கின்றன லூயிஸ் ஃப்ரீமேன் கூறியுள்ளார்.  நெகிழி மறுசுழற்சி மேன்மையான ஒன்று என்று நெகிழி தொழிற்துறை மக்களை நம்ப வைத்து வருகிறது.

வருங்காலத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகமிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கு எளிய மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொல்லுவார்கள். பயணப்படுவது கடினமாகும் போது கடினமே பயணப்பட்டுவிடும் எனும்  பில்லி ஓஷனின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment