Saturday, 7 June 2025

கோ.கமலக்கண்ணன்


பெரும் புதினங்கள் எழுத தன்னம்பிக்கையின்மையும் அதீத வியப்பும் தடைகள் ஆகின்றன. இரண்டையும் வீழ்த்தும் ஒரே கல் மனனத் திறனே. மேம்பட்ட சொற்கிடங்கும், கற்பனை வளமும், நுண்ணிய அவதானிப்புகளும் ஒரு புனைவெழுத்தாளருக்கு எவ்வளவு இன்றியமையாப் பண்புகளோ அவ்வளவு இன்றியமையாதது மனனத் திறன். 

மனனம் என்பது சங்கிலித் தொடராக அடுத்தடுத்து வருவன யாவை என்பதை  தெளிவாக நினைவில் இருத்துதல். ஒரு புதினத்தில் பகுதிகள், அத்தியாயங்கள், பத்திகள், காட்சித் தொடர்கள், காட்சிகள், சொற்றொடர்கள் என பல அலகுகள் உள்ளன.  நுண்ணிய அலகுகளில் எவ்வளவு ஆழம்வரை மனனத் திறன் பயன்படுகிறதோ, அந்த அளவுக்குப் படைப்பு துலங்கும். 

புதினத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு அலகுகளிலும் வரிசையில் சில மாற்றங்களையும் நீட்டல் குறுக்கல்களையும் செய்ய வேண்டிய தேவையும் எழும். அப்போது நினைவாற்றல் வெகுவாக கைக்கொடுக்கும். நினைவில் வைக்காமல் குறிப்புகளாக எழுதி வைத்திருந்தால் அதைத் தேடி வரிசைப்படுத்த திட்டமிடுவது அதிக ஆற்றலை வீணடிக்கும். ஒவ்வொரு முறையும் செய்ததைத் திருத்துகையில் வரிசையை மாற்றி அமைக்கவும் வேண்டியதாகும். எழுத்தே உற்சாகத் தடைக்குக்  காரணமாகிவிடும். மனனம் செய்த ஒரு தரவைத் தேர்ந்தெடுத்து அழிக்கவும் வழிகள் உள்ளன. 

மூளையை விடப் பெரிய கணினி ஏதுமில்லை. 

மனனம் என்பது ஒரு நேரடி படிமத்தையோ, சொல்லடைவின் வழியாக விரியும் காட்சியையோ ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி வரிசையாக நினைவில் இருத்துவதே. வரிசை என்பது ஒரு வசதிக்காகத்தான். எந்த ஒரு புள்ளியில் இருந்தும் விரைவாக ஒரு பொருத்தமான பார்வையை உருவாக்கித் தொகுத்துக்கொள்வதற்கு அது உதவும்.

திருக்குறளை மனனம் செய்தபோதும் மேளகர்த்தா ராகங்கள், குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள் உள்ளிட்ட பல பட்டியல்களையும் மனப்பாடம் செய்தபோதும் இதை நன்கு உணர்ந்தேன். சொற்களை நினைவில் மீட்டெடுப்பதற்கு அதை உள்ளே பதியும் முறைகளில் ஒரு நிதானமும் தெளிவும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும். 

மனத்தில் பதிவேற்றிய உணர்ச்சிகளும் நிகழ்வுகளுமே புனைவெழுத்தை உற்சாகம் மிக்கதாக்குகிறது. புனைவின் அடிப்படை அம்சமே நினைவுகள்தான். வாசிப்பின் கோணத்தில் பார்த்தாலே இதற்கு விடை கிடைக்கும். படித்து முடித்ததும் நம்முள் எத்தனை நுண்கதைகளும் பெருங்கதைகளும் பாத்திர அம்சங்களும் படிமங்களும் உவமைகளும் நினைவில் நிற்கின்றன என்பதும் அவை எவ்வளவு உவகை தருவனவாக இருக்கின்றன என்பதும்தான் அகத் தரத்தை நிர்ணயிக்கின்றன. புனைவு எழுதுகிறவருக்கும் நினைவுத் திறன் மிகுந்திருக்க வேண்டும். தொழில் நுட்ப ரீதியாகவும் அழகியல் ரீதியாகவும் அது மிக உதவும்.

-கோ.கமலக்கண்ணன்

No comments:

Post a Comment