Wednesday, 14 September 2016

மகுடேஸ்வரன்

எப்பணியாளரும்
இமைப்பொழுதேனும்
பணியிடை சோரலாம்,
ஓட்டுநர் தவிர.
எப்பணியாளரும்
பெண்டு பிள்ளைகள்
முகம் தினங்காணலாம்,
ஓட்டுநர் தவிர.
எப்பணியாளரும்
வீட்டுச் சோறுண்டு
ஓய்வெடுத்திருக்கலாம்,
ஓட்டுநர் தவிர.
எப்பணியாளரும்
வீடண்டி தினமும்
இராத்துயில் கொள்ளலாம்,
ஓட்டுநர் தவிர.
எப்பணியாளரும்
தவறினால் தன்னுயிர்க்கு
ஊறு விளையாது,
ஓட்டுநர் தவிர.
எப்பணியாளர்க்கும்
எதிர்வருகின்றவர்
எமனாகமாட்டார்,
ஓட்டுநர் தவிர.
எப்பணியாளரும்
பிறர் தவறொன்றால்
தன்னுயிர் நீங்கார்,
ஓட்டுநர் தவிர.
எப்பணியாளரும்
பிறர் உயிருக்குத்
தான் பொறுப்பாகார்,
ஓட்டுநர் தவிர.
எப்பணியாளரும்
நாடெங்குமுள்ள
மண்படமாட்டார்,
ஓட்டுநர் தவிர.
அப்பணி ஆற்றுவர்
அழத் தகும்தானோ ?
அவர் விடும் கண்ணீர்
நீதிக்கு முறையோ ?
அத்தகு மனிதர்க்குப்
பாதகம் இழைக்க
அறிவும் ஆண்மையும்
உள்ளோர் துணிவரோ ?
அன்னார் நொந்து
அழுத பாவம்
ஆயிரமாண்டு
போயினும் நீங்குமோ ?
- கவிஞர் மகுடேசுவரன்

No comments:

Post a Comment