Sunday, 4 December 2016

திருமாவேலன்

இன்குலாப் என்றதும்
'மனுசங்கடா மனுசங்கடா
உன்னைப்போல அவனைப் போல
எட்டு சாணு  உசரமுள்ள மனுசங்கடா' பாடலும்-
இன்குலாப் என்றதும்
'நம்மூர் கம்யூனிஸ்ட்டுகளுக்கு
கிட்டப்பார்வை கிடையாது. தூரப்பார்வை தான் உண்டு' என்று சொன்னதும்-
ஒளவை நாடகமும்-
யார் நடத்துகிறார் என்று பார்க்காமல் எதற்காக நடத்துகிறார்கள் என்று பார்த்து அவர் பங்கெடுத்த குணமும்-
'அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்கக்காரனும் செவிமடுப்பதில்லை' என்ற முழக்கமும்-
தாடிக்குள் இருந்து விழும் காந்தத் தமிழும் நினைவுக்கு வரும்!
''காலம் கவிஞனைப் புனைகிறது.
காலத்தை கவிஞன் புனைகிறான்' என்றவர் அவர்.
காலத்தை புனைந்த கவிஞனுக்கு வணக்கம்!
'அகமும் புறமும் கலகம் செய்பவன் நான். எனக்கும் அமைதி உண்டு' என்றார் இன்குலாப்.
அந்த அமைதியும் கலகம் தான்!
'பெரும் கலகத்தில் நான் முகம் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதன் சொற்களில் எனதும் ஒன்று" என்றார் அவர்.
நாளைய சொற்களிலும் அவர் இருப்பார்!
திருவல்லிக்கேணி ஜானி ஜான் கான் தெரு வீட்டின் மேல் மாடி சாரளத்தைத் திறந்து கை தட்டி, 'தோழர் ரெண்டு டீ' என்று தெருவோர டீ கடைக்கு இன்குலாப் தகவல் சொல்லும் காட்சி கண்ணில் தெறிக்கிறது.
இப்போது மழை பெய்கிறது. அவருக்கு பூக்கள் பிடிக்கும்.
பூவாக தூவட்டும் மழை!

No comments:

Post a Comment