Sunday, 4 December 2016

கவிதை

செத்துக் கிடப்பது
மனிதன் அல்ல
மனிதம்.
சினிமாவின் சாவுக்கே
சினந்து கதறும்
தமிழ்ச் சமூகத்தின் நேயம்
காயடிக்கப்பட்டு விட்டது
காவிக் கட்டையால்.
பணமாற்ற பதற்றத்தில்
பிணம் விழுவதுகூட
நிம்மதியைத் தருகிறதோ
சக போட்டியாளர் குறைந்த
திருப்தியில்.
வங்கியாளருக்கு
வேலை முக்கியம்
வாடிக்கையாளருக்கு
பணம் முக்கியம்
கேளிக்கையாளனுக்கு
காட்சியும் படமும் முக்கியம்
சர்வ அதிகாரம் படைத்த
குரூர பீடத்திற்கு இந்த
மொன்னைத் தனம்தான்
ரொம்ப ரொம்ப முக்கியம்.
முக்கியத்துவமற்று
மலிவாய்ப் போனது
எளிய மனிதர்களின்
உயிர்கள்தானடா பாவிகளே!
அரச அகோரிகளே...
உழைத்துக் களைத்தவனின்
பிணங்கள் மீதுதான்
உங்கள் வல்லாட்சி நடப்பதும்
தின்று கொழுத்தவனின்
கால் நக்கித்தான்
உங்கள் சட்டத்தின் ஆட்சி
நிலைப்பதும்
உயிருள்ள பிணங்களுக்கு
ஓர்நாள் தெரியவரும்போது
உங்கள் அதிகார பீடத்தில்
ஒரு செங்கல்கூட மிஞ்சாது
அதுவரை ஆடுங்கள்
அனுபவிக்கிறோம்.

- வெண்புறா.

No comments:

Post a Comment