கனத்து கனத்து
மிகக் கனத்துப்போயிருக்கும் மனதை
சுமக்கமுடியாமல்
யாரிடமாவது கொடுக்கலாமென யோசித்தபடி
அமர்ந்திருக்கையில்
என்னருகில் வந்து பறந்த பறவையிடம்
கேட்டேன்
என் கனத்த மனதைச் சற்றே சுமக்கும்படி
தூக்கிப் பார்த்த பறவை தூக்கமுடியாமல்
முடியாதெனச் சொல்லிவிட்டுப் பறந்தது
எப்போதோ என்னிடம் ஏதோ
வாங்கிச் சாப்பிட்ட நாயாக இருக்கவேண்டுமது
என்னைப் பார்த்ததும் வாலாட்டியபடி
அருகில் வந்தமர்ந்த நாயிடம் கேட்டேன்
என் கனத்த மனதைச் சுமக்கச் சொல்லி
நன்றியோடு தூக்க முயறசித்த நாயால்
தூக்க முடியவில்லை
மன்னித்துவிடச்சொல்லி சோகத்தோடு
திரும்பிப்போனது அந்த நாய்
பின் ஓர் ஒற்றை மேகமொன்று
என்னைப் பார்த்தபடி வானில் வந்தது
மேகமும் முயன்றுவிட்டு முடியவில்லையென
அகன்றது
முகம் மோதிக்கொண்டிருந்த காற்றிடம் கேட்டேன்
மென்மையான தன்னால் இத்தனை கனத்தை
தூக்கமுடியவில்லையென நகர்ந்தது
பகலெல்லாம் எனக்குத் தெரிந்த
எல்லாவற்றிடமும் கேட்டேன்
எவற்றாலும் என் கனத்தை மனதை
சற்று நேரம் கூட தூக்கிச் சுமக்க முடியவில்லை
அந்தியில் முளைக்கத் தொடங்கிய
நட்சத்திரங்களிடம் கேட்டேன்
முயன்று பார்த்த அத்தனை நட்சத்திரங்களும்
முடியவில்லையென்று கைவிரித்துப் போயின
பிறகு வெகு அடர்த்தியாய் வந்த இரவிடம்
மிகுந்த நம்பிக்கையோடு கேட்டேன்
இரவும் தன் மிகப்பெரிய கைகளால்
தூக்கிப்பார்த்துவிட்டு முடியவில்லையென
அலுத்துப்போய் உறங்கத் தொடங்கியது
எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து உதவிகேட்ட
என் கண்களிடம் கேட்டேன்
அவை கண்ணீரைச் சொட்டி சொட்டி
கனத்த மனதை உடைக்கத் தொடங்கியது
யாருக்கும் கேட்காமல்
யாரையும் சலனப்படுத்தாமல்
-சௌவி
#காகிதம்
பணம் ஆனது...
பணம் மீண்டும்
காகிதமாகிவிட்டது!
பணத்தை
என்ன செய்வதென்ற
கவலை -
அதிபர்களுக்கும்
அதிகாரங்களுக்கும்!
பணத்திற்கு
என்ன செய்வதென்ற
கவலை -
அப்பாவிகளுக்கும்
அபலைகளுக்கும்!
கொள்ளை நோட்டுகளும்
கள்ள நோட்டுகளும்
குளிர் சாதன அறைகளில்
கூடிப்பேசுகின்றன...
பாவம் -
நல்ல நோட்டுகள்தான்
அலைகின்றன
நடுத்தெருவில்!
வங்கி வங்கியாய்
ஏறி இறங்கிக்கொண்டிருக்கும்
ஏழை எளியவர்களின்
பயத்தையும் பதற்றத்தையும்
பார்த்துப் பார்த்துத்
தொலைக்காட்சியில்
ரசிக்கின்றன
மாட மாளிகைகள்!
அதில் -
பணம்
பிணமாகும் முன்பே
பிழைத்துக் கொண்ட
முதலைகள்!
நோட்டுகள் செல்லாதென்று
அறிவித்த இந்தியா
ஓட்டுகளும் செல்லாதென்று
உறுமிடும் நாள்வருமோ?
அலைவரிசை மாறலாம்...
அலைகள் மாறுவதில்லை!
காந்தியின்
கண்ணெதிரிலேயே
கலகம் செய்தவர்கள்
காகிதத் தாள்களில்
கவனித்துக் கொண்டிருக்கும்
அவரது
கண்ணாடியைப் பற்றியா
கவலைப்படப் போகிறார்கள்?
#எதையேனும் சார்ந்திரு...
கவித்துவம்.. தத்துவம்
காதல்.. சங்கீதம்...
இங்கிதம்.. இப்படி
எதன் மீதேனும்
சார்ந்திரு...
இல்லையேல்
உலகம்
காணாமல் போய் விடும்..
-வண்ண நிலவன்
No comments:
Post a Comment