வறுமையால் வாடிய ஒரு புலவர் அதிலிருந்து மீள வேறேதும் வழியறியாது, அந்நாட்டு மன்னனிடம் சென்றார். திறமையைப் போற்றும் தாராளகுணம் படைத்த அந்த மன்னன், புலவரின் அருமையான கவிதையை செவிமடுத்துவிட்டு, ""என்ன பரிசு வேண்டும்?'' எனக் கேட்டான்.
மன்னனின் முன்பிருந்த சதுரங்கப் பலகையைப் பார்த்த புலவர், ""மன்னர் பெருமானே, இந்த சதுரங்கப்பலகையின் முதற்கட்டத்தில் ஒரே ஓர் அரிசியை வைத்து, ஒவ்வொரு கட்டம் நகரும்போதும் அதனை இரண்டு மடங்காக்கி எனக்குப் பரிசளித்தால், அதுவே எனக்குப் போதும்'' என்றார்.
எண் திறனில்லா அந்த மன்னன் அதனைச் சாதாரணமாக நினைத்துக்கொண்டு, ""கையளவு அரிசி போதுமா?'' என்று ஏளனத்துடன் கேட்டான். ""போதும்'' என்றார் புலவர். அப்படியே செய்ய ஆணையிட்டார் அரசர்.
அரண்மனை ஊழியர்கள் சதுரங்கப்பலகையின் முதற்கட்டத்தில் ஓர் அரிசியை வைத்தார்கள்.
இரண்டாவது கட்டத்தில் 2 அரிசிகள், மூன்றாவது கட்டத்தில் 4 அரிசிகள், நான்காவது கட்டத்தில் 8 அரிசிகள் என்று வைத்துக்கொண்டிருந்தார்கள். பத்தாவது கட்டத்துக்கு வந்தபோது, 512 அரிசிகள் தேவைப்பட்டன. இருபதாவது கட்டத்தை அடைந்தபோது, 5,24,288 அரிசிகள் வைத்தார்கள். மொத்தம் 64 கட்டங்கள் கொண்ட சதுரங்கப்பலகையின் பாதியான 32}வது கட்டத்தை எட்டியபோது, 214,74,83,648, அதாவது 214 கோடிக்கும் அதிகமான அரிசிகள் தேவைப்பட்டன.
தேவைப்படும் அரிசிகளின் எண்ணிக்கை லட்சம் கோடிகளைத் தாண்டிச் சென்றது. என்ன பரிசு வழங்குகிறோம் என்று எண்ணிப் பார்க்காத மன்னன், எண்ணற்ற அரிசியை வழங்க வேண்டிய நிலைக்கு ஆளாகி, தனது நாட்டையே அந்தப் புலவனிடம் இழந்தான். அத்தனையும் ஒரே ஓர் அரிசியில் தொடங்கியது
-சுப.உதயகுமாரன்
No comments:
Post a Comment