சிங்கப்பூர் என்றவுடன் நினைவுக்கு வருவது சிங்கத்தின் வாயிலிருந்து வரும் நீர், வானுயர கட்டடங்கள், சினிமாக்களில் வரும் பாடல்கள் மற்றும் 90களில் யாரேனும் சிங்கப்பூரில் வேலையில் இருந்தால் சிங்கப்பூர்காரர் வீடு என வழிவழியாய் அவர்களை அழைப்பது என்பது தான் சிங்கப்பூர் குறித்த பால்ய வயது அறிமுகம். இணையம் அறிமுகமானவுடன் சிங்கப்பூர் குறித்து அறிந்து கொண்ட போது இன்னும் வியப்பை தந்தது. தென் கிழக்கு ஆசியாவில் 704கி.மீ உள்ள ஒரு தீவு தான் சிங்கப்பூர். மலேசியாவின் ஜோஹர் நீர்ச்சந்தியும், இந்தோனேசியாவின் சிங்கப்பூர் நீர்ச்சந்தியும் சிங்கப்பூரை பிரிக்கின்றன.
கிழக்கு ஜாவாவை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்தின் மீது அருகில் உள்ள அரசர்கள் போர் தொடுத்ததால் அந்நாட்டின் இளவரசன் சாங் நிலா உத்தமா நாட்டை விட்டு தப்பி ஓடினான். அந்நாட்டின் கடைசியாய் இருந்த ஒரு தீவில் தஞ்சமடைந்தான். காடுகள் நிறைந்திருந்த அத்தீவின் புலிகள் அதிகம் காணப்பட்டதை சிங்கங்கள் என நினைத்து இச்சிங்கத்தை கண்டதால்தான் இத்தீவு தனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாய் நினைத்தார். மலாய் மொழியில் சிங்கா என்றால் சிங்கம், பூரா என்றால் ஊர்.. என சிங்கங்கங்களுக்கு நன்றி அறிவிப்பாக தன் தீவுக்கு சிங்கப்பூர் என பெயரிட்டார்.
மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மீன்பிடித்தீவாய்.. கேளிகைக்கென உருவான நகரமாய் இருந்தது. போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்களால் ஆளப்பட்டாலும் முன்னேற்றமின்றி இருந்த நகரத்தை 1819 ஜனவரி 29ல் இங்கிலாந்தின் ராஃபிள்ஸ் பார்வையிட்டு இந்திய - சீன வர்த்தகத்துக்கு சிங்கப்பூரா துறைமுகத்தைத் தேர்ந்தெடுத்தார்.
பிப்ரவரியில் ஆங்கிலேயர் வசமாகி உச்சரிப்பில் சிங்கப்பூரா என வராததால் சிங்கப்பூர் ஆனது. மலாய், சீனர்கள், இந்தியர்கள் என கலந்து வாழும் கலாச்சாரம் துவங்கியது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் வசம் மூன்றரை ஆண்டுகளுக்குப்பின் 1942 செப்டம்பர் 12ல் மீண்டும் ஆங்கிலேயர் வசமானது சிங்கப்பூர்.
மொழிப்பிரச்சனை, தொழிலாளர் பிரச்சனை, தனி நாடு கோரிக்கை என முதல்வர் மார்ஷல் மற்றும் மலேய விடுதலைக்கு துங்குவும் போராடியதால் ஆகஸ்ட் 31,1957 மலேயா சுதந்திரம் பெற்றது. துங்கு ஒருங்கிணைந்த மலேஷியாவின் முதல்வரானார். சிங்கப்பூர் மக்களுக்கும் லீ க்கும் ஏமாற்றம் மிஞ்சியது.
#சிங்கப்பூர் உதயமானது
மலேசிய கூட்டமைப்பில் சிங்கப்பூர் தொடர்ந்து இருந்து வந்தது. இருப்பினும் சிங்கப்பூர் வளர்ச்சியையும் லீ யின் செல்வாக்கும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் உயர்ந்து கொண்டு இருந்தது. கோலாலம்பூரை விட சிங்கப்பூர் முக்கியத்துவம் பெறும் அச்சம், கூட்டரசுக்கும் மாநிலத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன.
சீனர்கள் மலாய் மக்களிடயேயும் கலவரங்கள் தொடர்ந்தது. இதன் விளைவாய் 1965 ஆகஸ்ட் 9ம் நாள் மலேசிய நாடாளுமன்றத்தில் சிங்கப்பூர் உறுப்பினர்கள் இல்லாத நிலையில் 126 உறுப்பினர்கள் வாக்களித்து சிங்கப்பூரை வெளியேற்றிவிட்டனர்.
போராட்டமின்றி சிங்கப்பூர் அரசு சுதந்திரம் பெற்றது.
#லீ குவான் யூ
சிங்கப்பூரின் காட் ஃபாதராக விளங்கியவர் லீ குவான் யூ. பள்ளிப் படிப்பை முடித்த பின் கேம்பிரிட்ஜில் சட்டம்படித்து சிங்கப்பூர் வந்து புகழ் பெற்ற வழக்கறிஞரானார். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசகராக இருந்தாலும் பின்னாளில் தனிக்கட்சி ஆரம்பித்தார். 1959ம் ஆண்டு சிங்கப்பூரின் பிரதமரானார். ஆட்சிக்கு வந்தவுடன் 14,000 அரசு ஊழியர்களில் 6,000 உயர்மட்ட அதிகாரிகளின் ஊதியத்தை குறைத்தார். ஏழைகளுக்கு அரசின் சார்பில் அடுக்குமாடி வீடு என அதிரடி காட்டினார். பொருளாதார ரீதியாக நாட்டை உயர்த்தினார். அரசு துறைகளை ஊக்குவித்தார்.
"நான் வகுப்புகளுக்குத் தாமதமாகச் சென்றபோதெல்லாம், என் ஆசிரியர்களிடம் பிரம்படி வாங்கியிருக்கிறேன். அதை நினைத்து நான் எப்போதுமே வருந்தியது இல்லை. இதுபோன்ற தண்டனைகள் சமூகத்துக்கு நன்மை செய்யும்’ எனச் சொல்லி ஒழுக்கமான தேசத்தை அவர் நிர்மாணித்தார்.
நான்யாங் பல்கலைக்கழகம், நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் என சர்வதேசப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக கல்விநிறுவனங்களை அமைத்தார். பிரதமர் பதவியைவிட்டு விலகும்போதுகூட, 'சவக்குழியில் என்னை இறக்கும் தருணமாக இருந்தாலும் சரி.. எங்கேயாவது தவறு நடப்பது தெரிந்தால், நான் எழுந்து வருவேன். ஜாக்கிரதை’ என ஆட்சியாளர்களை எச்சரித்திருந்தார்.
இன்றளவும் தேர்ந்த நிர்வாகியாக உலக மக்களால் நினைவுக் கூறப்படுகிறார்.
#Trace Together
உலகளவில் கொரோனா பாதிப்பு உச்ச்த்தை தொட்டாலும் சிங்கப்பூர் கணிசமாக கட்டுப்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு Trace Together என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு பயனரின் விபரங்களும் சேமிக்கப்படும். செயலியை இன்ஸ்டால் செய்து ப்ளூ டூத் ஆன் செய்தால் 10 மீட்டர் இடைவெளியில் கொரோனா எச்சரிக்கையை அருகில் உள்ளோர்க்கு MOH மூலம் தெரிவிக்கப்படும். COVID-19 க்கு பாசிட்டிவ் சோதனைக்கு முன்னும் பின்னும் தொடர்பு கொண்ட அனைத்து மக்களையும் விவரிக்க உதவும். வைரஸ் பரவுதலின் அபாயத்தை குறைக்க முடியும். தன்னார்வமாக பயனர் தன் சோதனை முடிவை பகிரலாம்.
ஒவ்வொருவரும் கடைசியாக சென்ற இடங்களை குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துக் கொண்டே இருக்கும். உதாரணமாக கடைசியாக இரு நாட்களுக்கு முன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் அங்கு யாருக்கேனும் இன்று பாசிட்டிவ் வந்திருந்தால் நாம் சென்றிருந்த தகவலை வைத்து நம்மையும் சோதனைக்கு அழைத்து பரிசோதித்து முழுமையாய் கட்டுப்படுத்த முடியும்.
*jobs support system எனும் வேலை ஆதரவு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதன்படி சிங்கப்பூர் வாழ் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தர வாசிகள்(permanent residents) ஆகியோர்களுக்கு கம்பெனிகள் ஊதியம் கொடுக்க சிரமப்படும் பட்சத்தில் 75% ஊதியம் வழங்க உதவுகிறது. இது ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
*தொடர்ந்து முழுமையாக பணியாற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கு சிபிஎஃப்-க்கு முதலாளிகளின் பங்களிப்புகள் உட்பட தற்போதுள்ள சம்பளத்தை வழங்க வேண்டும்.
#18 வது பொதுத்தேர்தல்
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 18வது சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தல் 93 இடங்களுக்கு நடைபெற்றது.
83 இடங்களில் ஆளும் மக்கள் செயல் கட்சி வென்று லீ சியன் லூங் பிரதமராகியுள்ளார்.10 இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
27 பெண்கள் வென்றிருப்பதும் ஒரு சாதனையே. இதுவும் ஒருவகையில் டிஜிட்டல் தேர்தலாக சமூக ஊடகங்களில் பரப்புரை மேற்கொண்டன. 21 வயது நிறைந்த அனைவரும் இரவு 10மணி வரை ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த முரளி கிருஷ்ணன் கூறுகையில், ``ஆளும் கட்சி தோல்வி அடைந்த இடங்களில் இனி அதிகம் களப்பணி ஆற்றும். மீண்டும் அந்த இடங்களில் அடுத்த முறை வெற்றி பெற கடுமையாய் உழைப்பார்கள். இதுதான் ஆளும் கட்சியின் மகத்தான பண்பு" என்றார். சிலாகித்துப்போனது.
#சுதந்திர தினம்
55 ஆண்டுகள் நிறைவு பெற்று 56வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது சிங்கப்பூர். எத்தனை சவால்கள் வந்தாலும் சாதிக்க தயாராய் உள்ளனர்.
நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு முக்கிய காரணமாய் விளங்குகிறது. உலக ஏற்றுமதியில் 14வது இடம் வகிக்கிறது. உலக அளவில் அதிகளவு கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாகவும், அதிக சரக்குகளைக் கையாளும் துறைமுகமாகவும் சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூரில் பணியாற்ற ஆங்கில அறிவு அவசியம். நிரந்தரவாசி (Permanent residents)பெற அதிகம் பேர் விரும்புகின்றனர்.
இதன் மூலம் சலுகைகள், குடியுரிமை பெற ஏதுவாய் இருக்கும். 2008 வரை எளிமையாய் இருந்த நடைமுறை பின்பு பாதுகாப்பு காரணங்களுக்காக விதிமுறைகள் அதிகம் வகுக்கப்பட்டுள்ளன. இன்றும் தம் நாட்டினை குறித்து பேசும்போது பெருமை பொங்க பேசுகின்றனர்.
Winners donot do different things, they do things differently.
வெற்றியாளர்கள் எதையும் புதிதாய் செய்வதில்லை. செய்வதையே வித்தியாசமாய் செய்கிறார்கள் வெற்றி பெறுகிறார்கள். சிங்கப்பூர்காரர்களும் அவ்வாறே!
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment