#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-2
Book-5
Pages:143
தோழர்கள்
-கி.ரமேஷ்
கம்யூனிசம் பேசுவது எளிது, கடைபிடிப்பது கடினம்.!
கிழக்கு டுடே இணையதளித்தில் தொடராக வந்த புத்தகம் இது.
இந்த மண்ணில் ஓரளவாவது லட்சிய வாதங்கள் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் இடது சாரிகளே. அவர்களின் அப்பழுக்கற்ற தியாகமும், போராட்ட குணமும், எளியவர்களின் பக்கம் நின்று போராடும் விதமும் அவர்களை மதிப்பு மிக்கவர்களாக பார்க்க வைக்கிறது. போராட்டத்துடன் அதிகம் வாசிப்பவர்களாகவும்,
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வரலாறும் இந்த புத்தகத்தில் தெளிவாகவும் வரையறுக்கிறது. அகில இந்திய அளவில் புகழ்பெற்று விளங்கிய 10 இடதுசாரி ஆளுமைகளை நமக்குத் தெரியாத விஷயங்களுடன் இப்புத்தகம் நம்மை பார்க்க வைக்கிறது. கம்யூனிச அச்சம் நீங்குவதற்கு ஒரே வழி கம்யூனிசம் என்றால் உண்மையில் என்னவென்றும் யாருக்கானது என்றும் நிதானமாக எடுத்துச் சொல்வதுதான். அப்பணியின் ஒரு பகுதியாக இந்த தொடர் இருக்கிறது என்று கூறுகிறார் ஆசிரியர்.
ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை அறிந்து முதலில் நமக்கு அறிமுகம் செய்தவர் பாரதியார் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதலில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் பெரியார் மாபெரும் காங்கிரசில் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று தன்னை பிரகடனம் செய்து கொண்டவர் சிங்காரவேலர்.இதுபோன்று கனவை நனவாக்க வேண்டுமானால் ஒரு முழு வாழ்நாளுமே கூட போதாது என்பதையும் உணர்ந்தவர்கள் தான் இடதுசாரிகள்
தமிழகத்தில் இடதுசாரி இயக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் சிங்காரவேலர். தொழிலாளர் சங்கத்தை தோற்றுவித்த வரும் அவரே. 1923 மே ஒன்றாம் தேதி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் மெரினா கடற்கரையில் மே தினத்தை கொண்டாடியவர் சிங்காரவேலர் தான். தொழிலாளி வர்க்க போராட்டம் என்றால் பொருளாதாரம் முன்னேற்றத்துக்காக மட்டும் போராடுவது அல்ல சுயராஜ்ய போராட்டத்திலும் தொழிலாளர்களின் பங்கு இருக்க வேண்டும் என்பது சிங்காரவேலரின் மகத்தான கருத்துக்களில் ஒன்று. மகாகவி பாரதியின் உற்ற தோழராக விளங்கியவர் சிங்காரவேலர். அவர் இறக்கும் தருவாயிலும் அவருடன் இருந்தார் என்பது புதிய செய்தியாக புத்தகத்தில் மூலம் தெரிந்தது.
இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காகவும் இந்தியாவில் கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் பங்காற்றியவர்களில் அமீர் ஹதர்கான் முக்கியமானவர். பாகிஸ்தான் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்து தொடர்ச்சியான பயணம் மேற்கொண்டு கம்யூனிச இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டு, நியூயார்க் அமெரிக்கா லண்டன் போன்ற பகுதிகளில் எல்லாம் கம்யூனிச இயக்கத்தை கற்றுக்கொண்டு, இந்தியாவில் கல்கத்தாவிலும் பம்பாயிலும் பல்வேறு போராட்டங்களில் முன்னெடுத்தவர் ஹைதர் அவர்கள். இறுதிக்காலத்தில் பாகிஸ்தானில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்க முயன்ற ஹைதரை அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்து விடுதலை செய்தது. இறுதியில் தனது ஆசைப்படி கிராமத்தில் ஒரு பள்ளியை உருவாக்கி மக்களுக்கு சேவை செய்து கொண்டு அங்கேயே தங்கினார் இது போன்ற அறியாத செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.
ஹேஷியாபூர் காங்கிரஸ் கமிட்டி எடுத்த முடிவின்படி அனைத்து நீதிமன்றங்களிலும் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு மூவர்ண கொடியை பறக்க விடுவோம் என்று அறிவித்தது. ஆனால் சில காரணங்களுக்காக அதில் பின்வாங்கவே இதை அறியாத சிறுவன் ஒருவன் என்று காங்கிரஸ் அலுவலகத்தில் நுழைந்து கொடியை வாங்கிக் கொண்டு சென்று.. நீதிமன்றத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றும் போது காவலர்களால் பிடிபட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். நீதிபதி அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்க ஓராண்டா என்று அலட்சியமாக கேள்வி கேட்டதனால் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனர். அந்த சிறுவன் தான் பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரான ஹர்கிஷன் சிங் சுர்ஜித். அடக்குமுறைகள் போராட்டங்கள் என 1939இல் ஒருமுறை கைதாகி தனிமை சிறையில் அடைக்கப்பட்டு பல நாட்கள் இருளிலேயே இருந்ததால் அவரின் கண் பார்வை பாதிக்கப்பட்டு இறுதிவரை அவ்வாறே வாழ்ந்து வந்தார்.
தகை சால் தமிழராய் திகழும் சங்கரய்யா குறித்து பல்வேறு செய்திகள் படித்திருந்தாலும், நகரங்களில் மட்டும் இருந்த நியாய விலை கடைகளை கிராமங்களை நோக்கி திருப்பிய பெருமை சங்கரய்யாவையே சாரும். 1977 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது சங்கரய்யாவின் இந்த கோரிக்கை ஏற்று நிறைவேற்றினார் என்பது புதிய தகவலாய் இருந்தது. கோதாவரி பருலேகர் மற்றும் ஷாம்ராவ் பருலேகர் இருவரின் கம்யூனிச வாழ்க்கை என்பது மிகவும் பிரமிப்பாய் இருந்தது. குழந்தை பேறு கூட இல்லாமல் கட்சிக்காக உழைத்தவர்கள். பம்பாய் மகாராஷ்டிரா பகுதிகளில் பழங்குடியினர் மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை முன்னெடுத்து பல்வேறு களப்பணிகளை செய்தவர்கள் .கணவன் இறந்த பிறகும் கட்சிக்காக பல்வேறு போராட்டங்களை செய்தவர்.
அன்றைய முதல்வர் சி சுப்பிரமணியன் சட்டமன்றத்துக்கு வந்த பி ராமமூர்த்தியை பார்த்து திருமண வாழ்த்துக்களை கூறினார். சட்டமன்றமே எழுந்து கரகோஷம் எழுப்பியது. ஏனெனில் முந்தைய நாள் கேரளத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டு மறுநாள் மக்கள் பணியாற்ற சட்டமன்றம் வந்தவர் தான் பி ராமமூர்த்தி. இளமையிலேயே தமிழ் ஆங்கிலம் வடமொழி ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்து காங்கிரஸிலிருந்து விலகி கம்யூனிசத்தின் பால் வந்தவர் .சைமன் கமிஷன் வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தபோது, திடீரென ராமமூர்த்தியின் தலைமையில் 30 படகுகள் மாணவர்களை ஏற்றுக்கொண்டு போய் சைமனே திரும்பி போ என்று முழக்கமிட்டு ராம் நகர் கோட்டை வரை விரட்டி சென்றவர் தான் பி.ஆர் என்பது புல்லரிக்க வைத்தது. சிறைச்சாலையில் இருந்தபோது பேபியன் சோசலிசம் பற்றிய நூலும் ராஜாஜி கம்யூனிசம் பற்றி எளிமையாக எழுதிய அபேதவாதம் எனும் இரு நூல்களும் படித்த பின்பு அவருக்கு கொள்கை பிடிப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்.
கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் இ எம் எஸ். மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்படாததால் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை அமைந்தது. 1940 இல் சோசியலிஸ்ட்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறும் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளையை அங்கு அமைத்தனர். இந்தியாவிலேயே முதல்முறையாக வாக்கெடுப்பின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது கேரளாவில் தான்.
இவர்களைத் தொடர்ந்து பா ஜீவானந்தம் சீனிவாசராவ் கே டி கே தங்கமணி போன்றோரின் வாழ்வியலையும் மிக முக்கிய அங்கமாக புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த புத்தகங்களை எல்லாம் படிக்கும்போது இவர்கள் பொது வாழ்வில் எந்தவித சுயநலமும் இன்றி மக்களுக்காக சிறை சென்றும், மக்களை முன்னேற்றுவதற்கான சட்ட போராட்டங்களிலும், களப்போராட்டங்களிலும், ஈடுபட்டு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே பணி செய்துள்ளார்கள் என்பதை நினைக்கும் போது நிச்சயம் வியப்பாகவும் மதிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. இன்றும் ஏதேனும் ஊரில் தினசரி ஆர்ப்பாட்டங்களில் ஏதேனும் ஒரு தோழர் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டே தான் இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் பணியும் கடமையும் விருப்பமும் மக்கள் பணி தான்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment