#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-29
Book-79
Pages-952
கோ.கேசவன் நூல் தொகுப்பு-2
தலித்தியம்
தீண்டாமையின் வேர் பார்ப்பனியத்திலும், பார்ப்பனியத்தின் வேர் அரசியலதிகாரத்திலும் உள்ளது
-அம்பேத்கர்
நேற்று காலை ஆரம்பித்த இந்த புத்தகம் தற்போது தான் முடிக்க முடிந்தது. காரணம் இந்த நூலில் உள்ள அரிய கருத்துக்களும் ஆய்வு கட்டுரைகளும் தான். வேகமாய் படிக்க முடியாது. மெதுவாகத்தான் படிக்க முடியும். அதனால் பரவாயில்லை இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் வரை வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இதனை முடிக்க வேண்டும் என்று ஒரு நாள் எடுத்துக் கொண்டது.இப்புத்தகம் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை, எதையும் தரவுகளின் படி அலசி ஆராய்ந்து முடிவு எடுத்தல் ,அனைவருக்கும் புரியும்படி உவமைப்படுத்தி விளக்குதல் என்று இந்த புத்தகத்தில் உள்ள மையக்கருத்து நமக்கு விளக்குகிறது.
இப்புத்தகத்தில் ஏழு இயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சமூக விடுதலையும் தாழ்த்தப்பட்டோரும், சாதியம், கோயில் நுழைவுப் போராட்டங்கள், சாதி ஒழிப்பு பெரியாரின் பங்கும் படிப்பினைகளும், அம்பேத்கரின் சாதிய ஒழிப்பும், தலித் இயக்கம், தலித் அரசியல் என்று.
சமூகத்தில் இழிவான தொழில்களை செய்வோர் ஆரம்பத்திலேயே இழிந்தவர்களாகவும் கருதப்பட்ட நிலையில் தமிழ் சமூகம் தொன்மை நிலையில் கீழ் சாதியினர்,இழி குலத்தினர் என்றெல்லாம் மதிப்பிட்டு வெளிப்படுத்தினர். தமிழகத்தில் உருவான சாதி தொகுப்புகளின் முதன்மை காலத்தில் கிபி 12ஆம் நூற்றாண்டு முதல் வலங்கை சாதிகள் இடங்கை சாதிகள் என்றே பகுக்கப்பட்டுள்ளன. அதில் தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் தீண்ட தகாதோர் என்பவர்களை பற்றி இடங்கை சாதிகள் என கூறிக் கொண்டனர்.
1822ல் சென்னை மாகாணத்தில் மாவட்டம் தோறும் முறை சாரா மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது .அவற்றை 1871 இல் மீண்டும் கணக்கெடுக்கப்பட்டு பிராமணர்கள் பிற இந்துக்கள் என்பனவற்றில் பிற இந்துக்கள் என்ற வகைப்பாட்டில் தாழ்த்தப்பட்டோர் அடக்கப்பட்டோர்
தீண்ட தகாதவர் என்ற பொதுவான அடையாளத்தை அவர்கள் பயன்படுத்தினர். அதன் பின் சென்னை மாகாண கல்வி ஆணையக் குழுவில் அறிக்கையில் பூர்வ குடிகள் தாழ்ந்த சாதியாளர் என்றெல்லாம் குறிப்பிட்டனர்.
20ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இத்தகைய தொகுப்பு அடையாளங்கள் அரசின் அறிக்கைகளில் வருகின்ற சொற்கள் விரிவடைந்து கொண்டே வந்தது. பஞ்சமர் என்று சொல் நால்வர்ணத்துக்கும் கீழானதோடு தொடர்புடைய இழிவான அடையாளமாக கருதப்பட்டு எம் சி ராஜாவால் எதிர்க்கப்பட்டது. இதனை மேலும் பல திராவிட இயக்க தலைவர்களும் களப்போராட்ட காரர்களும், களப் போராட்டக்காரர்களும் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இதனை ஒட்டி பல்வேறு முற்போக்கு சிந்தனை ஆளர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மாற்றாக ஆதிதிராவிடர் என்று அழைக்க முன்மொழியை துவங்கப்பட்டு அச்சொல்லை வழங்க வேண்டும் என திராவிட மகாஜன சபை கேட்டுக் கொண்டது.
இதே போல் தான் இந்தியாவில் அரிசன் என்னும் சொல்லை சட்டப்பூர்வ சொல்லாக மாற்ற முயன்ற போது (1938 பம்பாய் மாகாண சட்டமன்றம்) இந்த சொல் இனிப்பு தடவிக் கொண்டு வருகிறது என விமர்சித்தார் அம்பேத்கர். இந்த சமயத்தில் அம்பேத்கர் தலித் என்ற அடையாளத்தை முதலில் மகர்களுக்கும் பின்னர் தாழ்த்தப்பட்டோருக்கும் பயன்படுத்தியதாக குறிப்பிடப்படுபவர். ஆனால் அதற்கு முன்பே ஜோதிபா பூலே என்பவர் தான் ஒடுக்கப்பட்டவர்களுக்காக தலித் என்று சொல்லை பயன்படுத்தினார்.
மாண்டேகு ஜேம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தில் சென்னை மாகாணத்தில் 132 உறுப்பினர்களில் 34 நியமனங்களில் 10 பேர் தாழ்த்தப்பட்டவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது. இங்கு முதன்மையான அம்சம் 1921ல் சென்னை வாக்காளர்களில் 4.1% தாழ்த்தப்பட்டோராக இருந்தனர். படித்தவராகவும் சொத்து வரி கட்டுபவராகவும் உள்ளோர்க்கே வாக்குரிமை என்ற நிலையில் 4.1% வாக்காளர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தாழ்த்தப்பட்டோரும் அரசியல் இயக்கங்களும் எனும் தலைப்பில் தமிழ்நாட்டு தளத்தில் செயல்படும் திராவிட இயக்கம் இந்திய பின்னணியுடன் செயல்படும் காங்கிரஸ் இயக்கம் பொதுவுடைமை இயக்கம் போன்றவை தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்தில் எவ்வாறு பங்காற்றினார் என்பதை பற்றியும் அவர்களுக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகளும் இந்த ஆய்வில் சொல்லப்படுகிறது.
1930 களில் ஏற்பட்ட நிகழ்வுகள் தாழ்த்தப்பட்டோருக்கு பல பாதுகாப்பு வளையங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவையை உணர்த்தினர் .1930 களிலும் 40 களிலும் பொதுவுடமை இயக்கம் தமிழகத்தில் நடத்திய பல வர்க்க போராட்டங்கள் தாழ்த்தப்பட்டோரை பொருளாதார ரீதியில் வென்றெடுக்க பயன்பட்டன .கூலி விவசாயிகள் அதிகம் இருந்த நெல்லை மதுரை தஞ்சை பகுதிகளிலும் ஜமீன் பகுதிகளிலும் பொதுவுடமை கட்சியை சாதிய கட்சிகள் என்றே பெயர் பெற்றது. இக்காலத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தனி அமைப்புகள் யாவும் முக்கியத்துவம் குறைந்தே காணப்பட்டன.
தமிழகத்தில் சாதிய மோதல்கள் எப்போது இருந்து நடைபெற்றன என்னென்ன சாதியினருக்கு இடையே முரண்பாடுகளும் சண்டைகளும் வருகின்றன என்பது பற்றி சொல்லியுள்ளார். கோயில் நுழைவுப் போராட்டங்கள் எதனால் நடைபெற்றன என்பதற்கான காரணமும் விளைவுகளும் குடியேற்ற ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்தும் இந்த பகுதியில் சொல்லியுள்ளார். அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும் பகுதியில் புதிய ஜனநாயகப் போராட்டத்தில் அம்பேத்கரின் பங்கும் வர்க்க போராட்டமும், ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தமா? என்ற கேள்விகளோடும் அந்த கட்டுரைகள் மிக நீண்ட நெடிய ஆய்வுக்கட்டுரைகள் போல உள்ளது. அதில் இறுதியாக தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்கான அம்பேத்கரின் போராட்டம் பகுதியில் பல்வேறு போராட்டங்கள் குறித்து நமக்குச் சொல்லி உள்ளார்.
*அநீதிகள் என்பவை வர்க்க அளவில் மட்டுமின்றி சாதி அளவிலும் உண்டு
*இன்றைய சாதியத்தை எதிர்த்த போராட்டம் இல்லாமல் ஜனநாயகத்தையோ சோசியலிசத்தையோ அடைய இயலாது
*இங்கே மனித உரிமை அல்ல மனிதர்களாக கூட உரிமை இல்லாத நிலை. எல்லோரும் மனிதர்களாக மதிக்கப்பட்டால் தான் மனிதர்களுக்கு இடையிலான உரிமைகளை பேச இயலும். அதற்கு சாதியம் ஒரு வலுவான தடை.
*வேறுபாடுகள் அற்ற சாதியை தேடுதல் இருட்டுக்குள் தொலைந்த பொருளை விளக்கு பிடித்துக் கொண்டு தேடுவதாகும்.
*குறியீடுகள் மாற்றுக் குறியீடுகளால் அழிக்கப்படுகின்றன .ஆனால் ஆதிக்கத்தின் மையம் முற்றாக அழிக்கப்படுவது இல்லை.
*வர்க்க அமைப்புகளில் அணி திரண்டு தொடர்ந்து வர்க்கமாக இருத்தலுக்கே சாதி வலுவான தடையாக இருப்பதை அம்பேத்கர் உணர்ந்தார்.
*தவறான புரிதல்களுக்கு அடிப்படையாக உள்ள பொருண்மை காரணிகளை கண்டறிதலும் அவற்றை சரியாக விளக்கிக் கொள்வதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுதலும் ஆகும்
*உண்மையான தீர்வு என்பது கலப்பு மணமாகும். சாதி உருவாக்கிய உணர்வை அதுதான் மறைய செய்யும்.
*சாதி மற்றும் சமூக ஒடுக்கு முறையே மனிதனை மனிதன் ஒடுக்கும் முறைகளில் மிகவும் மோசமானது
புத்தகத்தில் இறுதியாக தலித் இலக்கியம் தலித் அரசியல் பற்றி எல்லாம் சொல்லியுள்ளார். இந்த புத்தகத்தை சிறு அறிமுக உரையில் அடக்குவது என்பது இயலாத காரியம்.பெருங் கடலில் இருந்து ஒரே ஒரு கோப்பை நீரை மட்டுமே எடுத்து தங்களுக்கு கொடுத்துள்ளேன். தலித்தியம் குறித்து அறிய விரும்புவர்கள் மறக்காமல் படிக்க வேண்டிய புத்தகம் இது
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment