Saturday, 22 April 2023

book-82


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-29
Book-82
Pages-303

தோன்றியதென் சிந்தைக்கே 
இறையன்பு

ஆரம்பகால வாசகர் முதல் மேம்பட்ட வாசகர்கள் வரை அனைவராலும் படிக்கப்பட வேண்டிய ஆளுமை தான் இறையன்பு அவர்கள். தினத்தந்தியில் வாரந்தோறும் இவர் எழுதிய சிந்தித்தவை சந்தித்ததை படித்தவை பார்த்தவை ரசித்தவை என்ற தொடரில்.. அவர் தான் படித்த விஷயங்களை பார்த்த குறும்படங்களை சந்தித்த நபர்களை பற்றி எல்லாம் விரிவாக சொல்லி இருப்பார் .அதேபோல் இந்த புத்தகத்தில் தான் படித்து ரசித்தவற்றையெல்லாம் நம்முடன் பகிர்ந்து இருப்பார். இந்தத் தொடர் எழுதுவதற்காக 500க்கும் மேற்பட்ட குறும்படங்களை பார்த்ததாகவும் அதிலிருந்து சிலவற்றை இதில் கொடுத்ததாகவும் நமக்கு சொல்லி இருப்பார். நாம் பல புத்தகங்களை படித்ததுக்கு சமமாக இருக்கிறது

தேவையானவை என்கிற கிரேக் மிக்கான் என்கிற நூலை வாசித்த போது வாழ்வின் ஞானம் தேவையற்றவற்றை நீக்குவதில் தொடங்குகிறது என்கிற சீன பொன்மொழியோடு தொடங்கும் நூல். பல நேரங்களில் நாம் அதிக பணிகளை செய்து கலைத்துப் போய் விடுகிறோம். அதே நேரத்தில் ஒன்றும் செய்யாததை போன்ற உணர்வும் ஏற்படுகிறது‌. இது குறித்து விரிவான அலசலை சொல்லியதோடு தேவையற்ற வேலைகளை செய்கிற பலர் என்னை விட்டால் யாரும் இல்லை என்று புலம்பிக்கொண்டே செய்வதை பார்க்கலாம். இது ஒரு வகையான கற்றுக் கொண்ட தவிப்பு என்கிறார்.

அவமானங்கள் இரண்டு வகை ஒன்று நாமாக தேடிக் கொள்பவை, மற்றொன்று தாமாக வருபவை. தாமாக வருவதை பற்றி நாம் கவலைப்படக்கூடாது. தேவையில்லாமல் சிலர் முகத்தை திருப்பிக் கொண்டு போவார்கள். நாம் செய்யாதவற்றுக்கு கோபப்பட்டு எரிந்து விழுவார்கள் .அதற்கெல்லாம் முகம் தளர்ந்து மனம் சுருங்கி நிம்மதியை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. நாமாக தேடிக் கொள்ளும் அவமானம் அபாயகரமானது .அதற்கு நாமே பொறுப்பு. நாம் செய்கிற பிழைகளால் நேர்மையின்மையால் மாட்டிக்கொண்டு பெறுகிற அவப்பெயர். அதற்குத்தான் கூனி குறுக வேண்டும். அப்படிப்பட்ட அவமானம் ஒரு முறை கூட ஏற்படாமல் வாழ்வதே உன்னத வாழ்க்கை என்கிறார்.

குப்பை என்கிற குறும்படத்தை தான் பார்த்ததாகவும் அதில் வரும் ஒரு சிறுவனுக்கு இளம் வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத நிலைமை. காற் சட்டையோடு காத்திருக்கும் அவனுக்கு மேல் சட்டை வாங்க கூட வசதி இல்லை. இரண்டு இளைஞர்கள் இருக்கும் பெட்டிக்கடையில் தயாரிக்கப்பட்ட உணவு பண்டம் ஒன்றை வாங்கிக் கொண்டு நடந்து செல்கிறார்கள் .அவனைத் தாண்டி போகும்போது பையில் நொறுங்கி போயிருக்கும் தின்பண்ட்டத்தை தூக்கி எறிகிறார்கள் .அவன் அதை ஊர்ந்து சென்று எடுக்கிறான். அதனைப் பார்த்ததும் புதிய தின்பண்டம் வாங்கி கொடுத்து எச்சில் பை அங்கே ஒதுக்கி விடுகிறார்கள். அவர்கள் தருவதை வாங்கிவிட்டு அவன் தரையில் ஊர்ந்து சென்று அங்கு இருக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடுவதோடு படம் நிறைவடைகிறது. நாமே ஊர்ந்து சென்றதைப் போன்ற வலி உடல் முழுவதும் என்று முடித்து இருப்பார் . இதே போல் தான் சமீபத்தில் வாழைப்பழத்தை குரங்குக்கு தருகிறார்கள் அந்த குரங்கு சாப்பிட்டவுடன் குப்பை தொட்டியில் போடுகிறது குரங்கு.
தெருவில் எறிபவர் மனதிலா, தொட்டியிலா குப்பை? என்கிற கேள்வியோடு அதனை நிறைவு செய்திருப்பார்.

21 ஆம் நூற்றாண்டிற்கும் அவர் கூறும் 21 பாடங்கள் புத்தகம் கவனிக்க வேண்டியவை. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு எப்படி எல்லாம் அறிவு உலகத்தை ஆளப்போகிறது என்பதையும் நாம் எப்போதும் கவனிக்கப்படுகிறோம் என்பதையும் படிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது .2050 ஆம் ஆண்டில் நோய்கள் வலி வருவதற்கு முன்பே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று வாசிக்கும் போது ஆறுதலாக இருக்கிறது. மனித உணர்ச்சிகளை கூட அறிந்து கொள்வதற்கான மென்பொருள் உருவாக்கும் முயற்சியை இப்போது நடந்து கொண்டிருக்கிறது எதிர்காலத்தில் தியான முக்கியமான பங்கை வைக்கப் போகிறது என்பதை அவருடைய சொந்த அனுபவத்திலிருந்து விவரிக்கிறார்

பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படுபவர்களே பெரும்பான்மையான மனிதர்கள் அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது மணல் வீடுகள் கட்ட கடின உழைப்பை சிந்தும் குழந்தைகளை போல அவர்கள் என்று லாமா குறிப்பிடுகிறார். குழந்தைகள் தாங்கள் கட்டிய மணல் வீடு சரிந்ததும் அழுது அடம் பிடிப்பர்.
அது போல புகழுக்கு ஆசைப்படுபவர்கள். பெயரில் எந்த சாரமும் இல்லை புகழ் எந்த பொருளும் இல்லை. அதை நம்மை சான்றான்மையிலிருந்து விலகி விடக் கூடியவை. பௌத்தத்தின் சாரமே வெறுமை என்பதிலிருந்து தலாய்லாமா குறித்த அவருடைய பேச்சுக்களை குறிப்பிடுகிறார்.

பாரசீக குறும்படத்தில் ஒன்றில் கணவனும் மனைவியும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவு ஆழமான தூக்கம். தொலைபேசி அழைப்பு வருகிறது அவன் அம்மாவிடமிருந்து .பதறிப் போய் என்ன என்று கேட்கிறான். உன் ஞாபகம் வந்தது பேச வேண்டும் என்று தோன்றியது என்கிறார். சொன்னதும் கோப குரலில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது எழுப்பி என்னை தொந்தரவு செய்ய வேண்டுமா? என்று அவன் கூறுகிறான். அதற்கு அவள் 35 ஆண்டுகளுக்கு முன்பு இதே நேரத்தில் நீ என்னை தொந்தரவு செய்தாய். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி வைக்கிறாள். அவன் முகம் முழுவதும் பரவசம் .தாய் என்கிற அந்த படம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததாக குறிப்பிடுகிறார்.

*முகத்தில் அழுக்கு இருப்பதைச் சொன்னால் பதறிப் போய் துடைத்துக் கொள்கிறோம். ஆனால் மனதில் அழுக்கிருப்பதை யாராவது சுட்டிக்காட்டினால் கோபப்படுகிறோம்

*பலவீனங்களையே பலமாக நினைப்பவர்களை என்ன செய்ய முடியும்

*அம்மா.. 
அடுப்பை பற்றவை 
குளிராவது காயலாம் 
-இளம்பிறை

*இலக்கை மறக்காமல் சொற்களை எடுத்து வைப்பதே பயனுள்ள உரையாடலை ஏற்படுத்தும்

*உறங்குகிற ஓராயிரம் பேரை விட விழித்துக் கொண்டிருக்கிற ஓர் இருவர் போதும். பார்வையாளர்களே பேச்சின் தரத்தை உயர்த்துபவர்கள்

*மரணப்படுக்கையில் உங்கள் சாம்ராஜ்யத்தை யாருக்கு விட்டுச் செல்ல போகிறீர்கள்? என்று கேட்டதற்கு இருப்பதிலேயே வலிமையானவருக்கு என்ற அலெக்சாண்டர்

*எழுதப்படாத பலகையாக இருக்கும் குழந்தைகள் இதயத்தில் எப்படி எல்லாம் கிறுக்கி விடுகிறோம்

கருத்தாழம் மிகுந்த மனநிறைவு அளிக்கும் வகையில் இருந்தது. இந்த புத்தகத்தில் நான் படித்த சாரம்சத்தை மட்டும் குறிப்பிடுகிறேன். இது தவிர இன்னும் நிறைய கருத்துக்கள் குறும்படங்கள் படித்தவைகள் சந்தித்தவர்கள் சிந்தனைகள் என பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன இது ஒரு நல்ல புத்தகம் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment