Saturday, 22 February 2025

புத்தகம்-16


#Reading_Marathon2025
#25RM055

Book No:16/100+
Pages:-340

பேச்சு சமூகம்
-இளங்கோ கிருஷ்ணன்

பொன்னி நதி பாடலின் மூலம் உலகறிந்த கவிஞராய் தெரிந்தாலும் அதற்குமுன்பே முகநூலில்.அனைவரையும் ஈர்த்த வார்த்தை வித்தகர் இளங்கோ அவர்கள்.ஆழ்ந்த கருத்துகளை எளிமையானசொல்லின் மூலம் நகைச்சுவை ததும்ப சொல்பவர்.இந்த ஆண்டின் புதிய வருகையாக இப்புத்தகம்.62 கட்டுரைகளில்.தனது அனுபவத்தையும் கருத்தியலையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கிறிஸ்தவம் அளித்த கொடை என்ன என்பதை நன்றியுடன் நினைவு கூற வைக்கிறார். அண்மை காலங்களில் நம்மை அதிகம் ஆக்கிரமித்துள்ளது சமூக ஊடகங்களும் இணையமும் தான் ஒருபுறம் Read more வந்தாலே படிக்காமல் இருக்கும் கூட்டம் என்றால் இன்னொரு புறம் உடனடியாக மனதில் தோன்றும் கருத்துக்களை கூறுவதும் தாங்கள் பின்பற்றும் அரசியல் கட்சிகளை பின்பற்றி சண்டை இடுவதும் நண்பர்களை இழப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது இதனைத் தான் முகநூல் குறித்த கட்டுரையில் கொஞ்சம் மாறுங்க பாஸ் எனும் விதத்தில் சரியான தரவுகளுடன் நமக்கு கொடுத்திருக்கிறார்.

பிளாஸ்டிக் பொருட்களில் தலையாட்சி இல்லாமல் உருவாக்கப்படுவதில்லை இவைகள் தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கி அதை இஷ்டப்படி விளக்கி உதவுகிறது இதில் ஏழு வகையான டாலெட்ஸ்கள் மனிதர்களுக்கு எங்கனம் தீங்கு விளைவிக்கின்றன என்பதனை விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியான கட்டுரையாக அமைகிறது.

சமகாலத்தில் ஒருவருக்கு கிடைக்கும் புகழ் 15 நிமிடங்கள் தான் என்று சுஜாதா மேற்கோள் காட்டி இருப்பார். ஆனால் சமூக ஊடகங்களில் தமிழுக்கு பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லை வரை இறங்குகிறார்கள் என்பதுதான் நமக்கு பகிரென்று வருகிறது. சமகாலத்தில் ஆன்லைனில் டிக் டாக் மற்றும் ரீல்ஸ் மூலமாக இவர்கள் செய்யும் விஷமத்தனங்கள் எவ்வாறெல்லாம் கொண்டு போய் முடிகின்றது என்பதனை தீர்வுகளுடனும் நமக்கு சொல்லி இருக்கிறார்.

குழந்தை வளர்ப்பில் குழந்தைகளை பெற்றோர்கள் அடிக்கலாமா கூடாதா எவ்வாறு அவர்களை நல்வழிப்படுத்துவது என்பது குறித்த தீர்வினை குறும்பு செய்யும் குழந்தைகளை அடிக்கலாமா எனும் கட்டுரை விவரிக்கிறது செல்போன்களினால் குழந்தைகளிடம் பெரியவர்களிடம் ஏற்பட்டுள்ள மாறுதல்களை சமகாலத்திய பிரச்சனையாக பேசியுள்ளார். கோடை கலம் நெருங்கிவிட்டது இனி ஒவ்வொருவரும் தண்ணீருக்கு எவ்வாறெல்லாம் கஷ்டப்பட போகிறோம் அண்டை மாநிலங்களில் இனி தண்ணீர் பிரச்சனை தலை தூக்கும் என நாம் தினசரி சந்தித்திருக்கும் பேசு பொருள்களை கண்ணீரில் தவிக்கும் மக்கள் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார். 

தேர்தலிலும் ஜனநாயக திருவிழா பகுதியில் 
ஒரு சாதாரண ஆண்ட்ராய்டு போன் அரசியலைத் தீர்மானிக்குமா என்று கேட்டால் தீர்மானிக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் பாதிக்கும் அளவுக்கு வலுவான காரணியாகவே அது உயர்ந்துள்ளது. ஏனெனில் பல இளைஞர்கள் செய்தித்தாள்களையோ செய்திகளையோ படிப்பது பார்ப்பது குறைந்து இணையத்தில் மட்டுமே தங்களின் தலைவர்களை தேடுகின்றனர் அல்லது தேடப்பட வைக்கின்றனர் என்பதனை குறிக்கும் விதத்தில் எழுச்சியும் இளையோர் சக்தி பகுதி அமைந்துள்ளது.வீடு வீடாக ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து, தொகுதி தொகுதியாய் பிரசாரம் செய்வதைவிடவும் இப்படி ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல கோடி வாக்காளர்களை நேரடியாகச் சந்திப்பது அரசியல் கட்சியினருக்கும் எளிதாக உள்ளதாக கூறியுள்ளார் இதுவே வியூக வகுப்பாளர்களுக்கான வழியாக நமக்கு புரிகிறது.

குழந்தைகளின் பாலியல் கொடுமை காற்று மாசுபாடு, அதிகரிக்கும் குழந்தைகளின் வன்கொடுமை ,போதையால் மாறும் இளைஞர் சமூகம், மீ டூ பிரச்சனை, கொரோனாவுக்கு பின்னான தொழில் வளர்ச்சியும் தொழில் புரட்சியும், தற்கொலைக்கு முயல்வோர் எண்ணிக்கை எதனால் அதிகரிக்கிறது, படித்ததால் பெருமை அடையும் நாம்தான் சாதி ஆணவக் கொலைகளும் முன்னணியில் இருக்கிறோம் என்ற நிதர்சனத்தையும், நவீன மயமான கார்ப்பரேட் உலகம் எவ்வாறு எல்லாம் இந்த உலகில் ஆக்கிரமித்துள்ளது என்பதனையும், சிறை துறையில் ஏன் குற்றவாளிகள் அதிகரிக்கின்றனர், பழங்குடியினர் பண்பாட்டு சடங்குகள் உள்ளிட்ட நமக்கு அறிந்த மற்றும் அறியாத தகவல்கள். நாளேடுகளில் நாம் கடந்து செல்லும் செய்திகளில் இருக்கும் உண்மையான அடிப்படை கருத்துகளை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் போது நம்மிடமும் ஒரு தெளிவு பிறக்கத்தான் செய்கிறது.

ஒவ்வொரு கட்டுரைகளும், ஒவ்வொரு பேசு பொருளை பேசுகிறது எதுவும் ரிப்பீட்டட் வராததால் ஒவ்வொரு கட்டுரையும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் படிக்க முடிகிறது.

தொடர்ந்து வாசிப்போம் 

 தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment