Sunday, 23 February 2025

புத்தகம்-17


#Reading_Marathon2025
#25RM055

Book No:17/100+
Pages:-148

தலைநிமிர்ந்த தமிழர்கள் பாகம்-2
-சரவணன்

ஆளுமைகளைப் பற்றி படிப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஏனெனில் அவர்களின் சாதனையை நினைவு கூறுவது மட்டுமல்லாமல் எப்படி எல்லாம் வாழ்ந்தனர் எனும் பிரமிப்பையும் உள்ளடக்கியதுதான். அப்படித்தான் இந்த புத்தகத்தின் இரண்டாவது பாகமும் வந்துள்ளது, ஆளுமைகள் குறித்து அறியாத செய்திகளையும் தெரிந்து கொள்ள உதவுகிறது.

வள்ளல் அழகப்ப செட்டியார் கல்விக்காக கொடை தந்த வள்ளல். சுதந்திரம் அடைந்த பின்பு அண்ணாமலை மற்றும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு அப்போது 5 லட்சம் ரூபாயை நிதியாக கொடுத்தார். அதனை நன்றி கூறும் விதமாக சென்னை கிண்டியில் அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியை நிறுவியது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி அமைத்து பலரையும் பட்டதாரிகள் ஆக்கி பெருமைப்படுத்தினார். நேரு பிரதமராக இருந்தபோது சிக்ரி எனும் மின்சார வேதியல் ஆராய்ச்சி கூடத்திற்கு பணமும் இடமும் கொண்டு வருபவருக்கு கொடுப்பதாக அறிவித்த மறுநாள் காலையே சென்று காரைக்குடிக்கு வர வைத்து என்றும் அவரின் பெயரை தாங்கி நிற்கிறது.

கல்லூரியில் படித்த நாட்களிலேயே தீக்குச்சிகள் தயாரிப்பது எப்படி சோப்பு தயாரிப்பது எப்படி என்பது போன்ற சிறு புத்தகங்களை எழுதி வெளியிட்டார் தினத்தந்தி அதிபர் ஆதித்தனார். தனது முதல் பத்திரிக்கையை மதுரை அரசு என்று பெயரிட்டு வாரம் இருமுறை மதுரையிலிருந்து வரவைத்தார்  இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அதனை பற்றிய செய்திகளை சிறப்பாக வெளியிட்டார். திருவிக எளிமையின் சிகரம் ஏனெனில் அவருக்கு சொந்தமாய் வீடு கூட இல்லை.கடைசி வரை வாடகை வீட்டில் தான் இருந்தார். நோயற்ற காலத்தில் அவருடன் யாரும் இல்லை .ஏனெனில் அப்பா அம்மா மனைவி குழந்தைகள் யாரும் உயிருடன் இல்லை .அவரிடம் இருந்தது தமிழ் மட்டுமே ஆகும் முதல் முதலில் பெண்களின் மறுமணத்தை ஆதரித்து பேசியவர் திருவிக தான்.

இரண்டாவது நியூட்டன் என்று அழைக்கப்பட்ட கணிதமேதை ராமானுஜருக்கும் அவரது தந்தைக்கும் ஒத்துப்போகாது. ஏனெனில் எந்நேரமும் மகன் கணக்கில் குறியாக இருந்ததால் அவருக்கு ஆத்திரம் .அதோடு வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற ஆசையும் அவரை மீண்டும் ஆத்திரமூட்டியது. மனைவியுடன் ஒரு வருடம் மட்டும் வாழ்ந்த ராமானுஜர் அதன் பின்பு மேற்படிப்புக்காக லண்டன் சென்று திறம்பட கணக்கினை கற்றாலும் லண்டன் வாழ்க்கை அவருக்கு நோயையும் சேர்த்து தந்தது. கணிதத்தில் அவர் சிறந்த மேதையை கவுரவிக்கும் விதத்தில் எஃப் ஆர் எஸ் எனும் விருது பெற்ற முதல் தமிழரும் இரண்டாவது இந்தியரும் ராமானுஜம் தான். அதன் பின்பு நோய்வாய்ப்பட்டு தாயகம் திரும்பினார். தனது 33 ஆம் வயதில் உயிர் நீத்தார். கடல் தாண்டி போனவர் என்பதால் அவரது இறுதி ஊர்வலத்துக்கு யாரும் வரவில்லை அவரின் இரு தம்பிகள் நண்பர்கள் சிலரே வந்திருந்தனர்.

திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் எஸ் எஸ் வாசன் அவர்கள். பெரியார் மீது இருந்த அன்பின் காரணமாக பெரியார் குடியரசு பத்திரிக்கை தொடங்கிய காலத்தில் விளம்பரம் சேகரிக்கும் ஏஜென்டாகவும் பெரியார் நடத்திய மாநாட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வீடு தேடி சென்று கொடுத்தவரும் அவர்தான். ஔவையார் படத்தினை பார்த்துவிட்டு அண்ணா அவர்கள் தமிழ் மாநாட்டுக்கான விளம்பர பொறுப்பினையும் அவரிடம் ஒப்படைத்தார். பல அரசியல் தலைவர்களிடம் மிகவும் நன்மதிப்பாக நடந்து கொண்டவர்.

குழந்தை பேறு இல்லாத கவிமணி அவர்கள் தன் அக்காள் மகன் சிவதாணுவை தன் மகனைப் போல வளர்த்து வந்தார். வாட்ஸ் என்னும் ஆங்கிலேயர் இருந்த பெண்கள் கல்லூரியில் கவிமணி விரிவுரையாளராக வேலை பார்த்தார். பெண்கள் கல்லூரியில் ஆண்கள் வேலை பார்க்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த சலுகையும் கிடைக்கவில்லை. இதனை அறிந்த திருவிதாங்கூர் அரசர் மாதம் 60 ரூபாய் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார் தன் வாழ்நாள் முழுவதும் அத்தகையை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மார்ஷல் நேசமணி தான். அறம் தொகுப்பு வந்த போது தான் இன்னும் அதிகம் நேசமணி பற்றி தெரிந்து கொண்டேன். முதன்முதலில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதாட சென்றிருந்தபோது அங்கிருந்த பணியாளர் பின் வரிசையில் அமருமாறு நேசமணியிடம் சொன்னார். ஆனால் அந்த நாற்காலியை எட்டி உதைத்து விட்டு முன் வரிசையில் போய் தைரியமாய் அமர்ந்தார். ஏனெனில்  உயர் ஜாதியை சேர்ந்த வக்கீல்கள் மட்டுமே முன் வரிசையிலும் மற்றவர்கள் பின்வரிசையிலும் அமர வேண்டும் என்ற விதியினை உடைத்தவர்.

வ உ சிதம்பரம் பற்றி சொல்லும்போது பல்வேறு தகவல்களை சொல்லிவிட்டு இன்னொரு தகவல்களையும் இந்த புத்தகத்தில் சொல்லி இருப்பார்கள். வ.உ.சி மீது கோர்ட்டில் விசாரணை நடந்தபோது அவருக்கு எதிராக ரங்கசாமி ஐயங்கார் தான் வாதாடினார். ஒருநாள் தன்னுடைய வீட்டில் சவரம் செய்து கொண்டிருந்தபோது..இதனை அறிந்த தொழிலாளி பாதியில் விட்டுவிட்டு உனக்கு சவரம் பண்ணுவது பாவம், நாட்டுக்கு நான் செய்யும் துரோகம் என்று கூறி எழுந்து போய்விட்டார். அதற்குப்பின் யாருமே அவருக்கு சவரம் செய்ய வரவில்லை என்பதும் வ.உ.சி மீது அன்று மக்களுக்கு இருந்த பற்றினை காட்டுகிறது. 

சூரிய கதிர்கள் உள்ள ஏழு நிறங்களில் நீல நிறம் மட்டுமே கடல்மேல் பட்டு அதிகமாக ஒளி சிதறல் ஏற்படுகிறது. அதனால் தான் கடல் நீல நிறமாக தெரிகிறது என்று உணர்ந்தார். ஒளி பல பொருள்களில் பட்டு பல நிறங்களுடன் தோன்றுவதை பற்றி ஆராய்ச்சிகள் செய்தார். ஏழு நிறக்கதிர்கள் சேர்ந்ததே வெண்ணிற சூரிய ஒளி என்பதை நியூட்டன் கண்டறிந்தார். பிறகு ராமன் இச்சோதனையில் புதிய முயற்சியாக ஒளியை நீரின் வழியாக செலுத்தி புதிய நிறங்கள் தோன்றுவதை கண்டார். சில நிறங்கள் சிதறிப் போய் புதிய நிறங்களாக தோன்றியிருக்கலாம் .உதாரணமாக தனிநிறமாகிய ஊதா நிறத்தை நீரினூடே செலுத்தி பார்த்ததில் அப்போது பச்சையும் நீலமாக தோன்றின இந்த வேறுபட்ட தோற்றத்தை தான் ராமன் விளைவு என்றனர்.

இதுபோல் ஒவ்வொரு ஆளுமைகளை பற்றியும் அறியாத சில தகவல்களை கூடுதலாக தெரிந்து கொள்ள இந்த புத்தகம் உறுதுணையாக இருந்தது சொன்ன தகவல்களையே சொல்லாமல் படித்த தகவல்களை பதிவிடாமல் இன்னும் கூடுதலாக விவரம் திரட்டிய புத்தகம் குமுதம் பதிப்பாக வெளிவந்துள்ளது. பழைய புத்தகம்தான் ஆனாலும் சுவை உடையது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment