Thursday, 10 November 2016

மனுஷ்யபுத்திரன்

பாலியல் தொழிலாளிகள் இந்த இரவில்
ஆடை மாற்றிக்கொள்வதற்குள்
செல்லாததாகிவிட்ட நோட்டுகளை
வாங்க மறுத்து கூச்சலிடுகிறார்கள்
அவர்கள்
கடன் அட்டைகளை ஏற்பதில்லை

வாடகைக் காரோட்டிகள்
நிறகாமல் செல்கிறார்கள்
அவர்கள் செல்லாத நோட்டுள்ள
வாடிக்கையாளர்களின்
முகங்களை பார்க்க விரும்பவில்லை

குடிகாரக்கணவனுக்கு தெரியாமல்
சேர்த்துவைத்த பணத்தை
எடுத்துப்பார்த்து
இந்த இரவில் ஒரு பெண் விசும்புகிறாள்
அவளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை

உணவகங்களில்
ஒரே ஒரு ஐநூறு ரூபாய் நோட்டுள்ள
மனிதர்கள் பசியுடன் நின்றுகொண்டிருக்கிறார்கள்
கடைகள் வேகமாக அடைக்கப்படுகின்றன

இரண்டு நாள்
தேசத்திற்காக எல்லாவற்றையும்
பொறுத்துக்கொள்ளுங்கள்
என்கிறார் அரசர்

ஒரு எளிய மனிதனின்
இரண்டு நாள்
எவ்வளவு பெரியது
எவ்வளவு பெரியது
ஒரு செல்லாத நோட்டைப்போல
செலவழிக்கவே முடியாத
இரண்டு நாட்கள் அவை

கரையில் துள்ளும்
சிறிய மீன்களைக் கண்டு
கண் சிமிட்டுகின்றன
நீருக்கடியில்
பெரிய முதலைகள்

-மனுஷ்ய புத்திரன்

No comments:

Post a Comment