எழுத்தாளர் இமையம் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள்! #ChennaiBookFair
“மனித மனங்களுக்கிடையே இருந்து எண்ணங்களைக் கொண்டுவந்து குவிக்கும் தேனீக்கள், புத்தகங்கள்"- ஜேம்ஸ் ரசல்.
வாசிப்பு குறித்தும் புத்தகங்களின் அவசியம் குறித்தும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் பேசியுள்ளனர். வாசிப்பின் வழியே தங்களின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களை பலரும் பல தருணங்களில் நினைவுகூர்ந்துள்ளனர். பள்ளிகளில், கல்லூரிகளில் நாம் கற்கும் கல்விக்கு நிகராக நம்மைச் செம்மைப்படுத்தும் பணியை, புத்தகங்கள் மேற்கொள்கின்றன.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடப் புத்தகங்கள் மட்டுமன்றி பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களும் இலக்கிய நூல்களும் வைத்திருப்பதன் காரணம், வாசிப்பின் வாசலைத் திறப்பதற்காகவே. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூலகங்கள் அமைந்திருப்பதன் நோக்கமும் மக்களை வாசிப்பாளர்களாக உருவாக்கவே. பல்வேறு பதிப்பகங்கள் பல எழுத்தாளர்களின் படைப்புகளைப் பதிப்பித்து வெளிக்கொண்டு வந்துள்ளன. இணையவழிச் சமூகமாக இன்றைய தலைமுறை மாறிவிட்டபோதிலும் அச்சு ஊடகத்தின் மீதான நேசம் பலருக்கும் குறையவில்லை. இணையத்தில் படிப்பதற்கு நிகராக புத்தகம் வாங்கி படிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இமையம், தமிழ்ச் சமூகத்தில் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். மனித வாழ்வின் அவலங்களை, நேர்மையான முகங்களை, எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வை தன் எழுத்துகளின் வழியே கடத்துவதில் கைதேர்ந்தவர். சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளை வார்த்தை வடிவமாக்குவதிலும், கற்பனைக் கதாபாத்திரங்களை கதை வழியே கொண்டுவருவதிலும் வாசகர்களின் வாஞ்சையான எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவரின் படைப்புகளை இளையோருக்கு மட்டுமல்லாமல் எழுத்தை வாசிக்கும் வல்லமையுடைய அத்துணை மனங்களிலும் ஆழப் பதித்திருக்கும் அற்புதப் படைப்பாளி. `கோவேறு கழுதைகள்', `செடல்', `பெத்தவன்' போன்ற முக்கியமான படைப்புகள், இவரின் எழுத்தாற்றல்களில் சில.
சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழின் முக்கியமான எழுத்தாளர் இமையத்திடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், வாசகர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் குறித்தும் கேட்டோம்..!
“ஒருவன் ஏன் வாசிக்க வேண்டும்... அதன் தேவை என்ன?''
“இலக்கியத்தின் வழியாகத்தான் ஒருவர் சமூகத்தையும் மொழியையும் புரிந்துகொள்ள முடியும். விஞ்ஞானத்தைப் படிப்பதைவிட, மருத்துவத்தைப் படிப்பதைவிட முக்கியமானது வாழ்க்கையைப் படிப்பது. அதற்கு இலக்கியம் வகைசெய்யும். இலக்கியத்தின் மூலம்தான் ஒரு மனிதன் தான் வாழும் சமூகத்தையும், தான் வாழ்ந்த சமூகத்தின் முந்தைய காலத்தையும் அறிந்துகொள்ள முடியும். சகமனிதன் மீதும், தான் வாழும் சமூகத்தின் மீதும் மனிதன் அக்கறைகொள்ள, அன்பு செலுத்த இலக்கியமே வழிவகை செய்யும். தன் மொழியின், சமூத்தின் தொன்மைகுறித்த ஆவணங்களேஇலக்கியங்கள். ஆகவேதான் மனிதன் இலக்கியத்தைப் படிக்க வேண்டும்.''
“சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு, நீங்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் எவை?”
1) அமைதி என்பது நாமே - சீன மொழிக் கட்டுரைகள் - திக் நியட் ஹான்.
தமிழில்: ஆசை. கிரியா பதிப்பகம்.
2) போதியின் நிழல் - தமிழ் நாவல்
எழுத்தாளர்: அசோகன் நாகமுத்து, அந்திமழை பதிப்பகம்.
3) பெருவலி - தமிழ் நாவல்
எழுத்தாளர்: சுகுமாரன் , காலச்சுவடு பதிப்பகம்.
4) பனைமரமே... பனைமரமே! - கட்டுரைகள்
எழுத்தாளர்- ஆ.சிவசுப்ரமணியன் - காலச்சுவடு பதிப்பகம்.
5) அரசியல் பழகு - கட்டுரைகள்
எழுத்தாளர்: சமஸ்.
No comments:
Post a Comment