மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
-ராஜா சந்திரசேகர்
கவிதை புத்தகம் படிப்பதன் சுவாரஸ்யமே அடுத்தடுத்த பக்கங்களில் இருக்கும் ஆச்சர்யங்களுக்காகவே.
தரையிலிருக்கும் நீர் ஆவியாகி சென்று மேலிருந்து மழையாய் பொழிவதன் பிரமிப்பு போல
அன்றாட வாழ்வில் நாம் கவனிக்காத ஆயிரம் விஷயங்களை கவிதையில் சில வார்த்தைகளில் உணர்த்தும்போது மனம் தெளிவடைகிறது. கடந்துவந்த பாதைகளை நினைக்கிறது.
அவ்வாறுதான் ராஜா சந்திரசேகரின் கவிதைகளும். நுட்பமான பார்வையுடன் அவர் செல்லும் பாதைகள் முழுவதும் நம்மையும் ஒரு மீன் போல யதார்த்த உலகிற்கு அழைத்துச் செல்கிறார்.
சிறு அசைவுகளில் பெரிய விளைவுகள் உண்டாக்கும் சலனத்தை ஏற்படுத்துவது. பல ஆயிரம் பக்கங்களில் கிடைக்காத அனுபவம் ஒரிரு வரிகளில் கிடைக்கும்போது விதை விருட்சமான மனநிலை ஏற்படுகிறது.
"தனிமை அழகானது
தனிமையைப் போல..எனும் கவிதை போல
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தது போல் அல்லாமல் பெருக சிந்தித்து சுருங்க வெளிப்படுத்திய
நவீன கால உணர்வை இத்தொகுப்பு முழுவதும் பார்க்க முடிகிறது.
"ஓடிவருகின்றன மீன்கள்
நேற்று பொரி போட்ட கையில்
இன்று தூண்டில்"
மனித மனதை அறியாத மீனின் பார்வையில் இருந்து பார்த்த உயிர்ப்பு மிளிர்கிறது இவ்வரிகளில். வாக்கியங்களில் அடர்த்தியை கூட்டி, மொழியை கடுமையாக்கி புரியவைக்கும் இந்நாட்களில் எளிமையான சொற்களில் ஒட்டுமொத்த சூழலையே புரிய வைக்கிறார்.
"என் மரண ஊர்வலத்தில்
நானும் வந்து
கொண்டிருக்கிறேன்
உங்களை கவனித்தபடி"
"நண்பர் இறந்துபோன
குறுந்தகவல் வந்திருக்கிறது
எனது மரணச்செய்தியை
படிப்பது போலிருந்தது"
மரணத்தை மாற்றுச் சிந்தனையில் சொல்லியிருக்கிறார். யதார்த்தமும் நவீனத்தையும் இவ்விரு கவிதைகளில் இணைத்துச் சொல்லியிருக்கிறார்.
கவிதை குறித்து லா.ச.ரா சொல்லுவார்..
"கரைவதும் அனுபவமாவதும் தவிர வேறென்ன இருக்கிறது கவிதையில்"..
கவிதையில் மட்டும் மனம் லயித்து ஒன்றிவிடும்.வாசித்த வரிகள்
மனதை திறந்து உட்சென்று வாழ்வியல் நிகழ்வுடன் ஒன்றுபடுத்தி பார்க்கிறது.அதில் நனவின் பொலிவு கற்பனையைவிட அழுத்தமாய் இருக்கும்போது மனம் கவிதைக்கு பக்குவப்பட்டுவிடுகிறது.
கவிதைகள் பெரும்பாலும் மென்சோகத்தை அழுத்திச்
சொல்லும். இரவில் வரும் சோகத்துக்கு ஆறுதலே சொல்ல முடியாது..உறக்கத்தை தவிர.இதுபோன்ற நிகழ்வை படம்பிடிக்கிறார்
"துயரத்தை
தடவி தடவி
உறங்க வைக்கிறேன்
நான் விழித்திருக்கிறேன்"
"கண்ணீர் கவனிக்கிறது
கவனமாக பேசுங்கள்"
என்று சோகத்தை கூட தன் பார்வையில் எளிமையாய் அணுகுகிறார். சொற்களின் கவிஞர் காட்டும் ஈடுபாடு, கருத்துக்களை சொற்களின் வழியாகவே தரிசிக்க வைக்கிறார்.மனித மனதின் ஈரத்தை காய்வதற்குள் காண்பித்துவிடுகிறார். ஒருவரை நிராகரிக்க சொற்களைவிட சிறந்த ஆயுதம் வேறில்லை. அதன் வெளிப்பாடாய்..
"தவிர்க்க நீ
காரணங்களை வைத்திருக்கிறாய்
சந்திக்க நான்
அன்பை வைத்திருக்கிறேன்"
உள்ளார்ந்த சொல்லாடலில் அகவுலகை வெளிச்சமிட்டு காட்டுகிறார்.அதேபோல் புறஉலகை நடைமுறை வாழ்வியலோடு காண்ப்பிக்கிறார். அழுத்தமான உண்மையை முற்றிலும் புதுமையான பார்வையோடு காண்பிப்பது.
"ஆச்சர்யத்துடன்
அண்ணாந்து பார்த்தே
பலரை உயரமாக்கிவிட்டோம்"
எவ்வளவு நெகிழ்ச்சியுடன் கீழ்தட்டு மக்களின் அப்பாவித்தனத்தை அக்கறையோடு கூறியிருக்கிறார். தன்னால் கூறமுடியாதவற்றை ஒருவர் படம்பிடித்துக் காட்டும்போது நெகிழ வைப்பவையே நல் வரிகளாய் அமைகிறது.
இத்தொகுப்பு முழுவதுமே சொல்ல நினைத்ததை கேட்பது போல் இருக்கிறது.ஒரு அனுபவத்தை சொல்லும்போது அது எத்தனை பேரை சிந்திக்க வைக்கிறது என்பது முக்கியம். சிந்திக்கிற இயல்பை வாசிப்பவரும் உணரும் வகையில் இக்கவிதைகள் இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஒரு உலகத்தை வைத்திருக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் ஒரு இருட்டை ஒளித்து வைத்திருக்கிறாள் என்பார் தஞ்சை பிரகாஷ்.அதுபோல் பெண்களின் அகஉலகை காணும் கவிதைகள் இதில் உள்ளன. துயரத்தை பெண்களை போல் வெளிப்படுத்த யாராலும் முடியாது.அவ்வகையில்
"தெரியாமல் அழுதேன்
துடைத்துக் கொண்டபோது
தெரிந்துவிட்டது"
மெளனத்தின் குளத்தில் வீசப்பட்ட ஒரு கல் போல இத்தொகுப்பின் ஒவ்வொரு கவிதையும் படித்தவுடன் கரை நோக்கிச் செல்லும் அலைபோல் சிந்தனை விரியும்.இதனை படித்து முடித்தவுடன் கார் தடத்தில் தொலைந்த காலடித் தடங்களை நிச்சயம் நினைத்து பார்ப்போம்.
புத்தகத்தில் புதிய முயற்சியாக
புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் உள்ள QR code-scan செய்தால் youtube இணைப்பில் காணும் வசதி உள்ளது.
புத்தகம்:மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
ஆசிரியர்:ராஜா சந்திரசேகர்
சந்தியா பதிப்பகம்
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment