Saturday, 30 November 2024

கோகுல் பிரசாத்


பிறர் அறியாத ஆயிரமாயிரம் விஷயங்களை நீங்கள் இவ்வாழ்க்கையில் கடந்து வந்திருக்கிறீர்கள். உங்களை அதிர்வுக்குள்ளாக்கிய, உருமாற்றிய, சுக்குநூறாக்கிய, உங்களது ஆளுமையைக் கட்டமைத்த, படிப்பினையை வழங்கிய எண்ணற்ற அனுபவங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இவை அத்தனையும் சேர்ந்ததுதான் உங்களது இன்றைய ‘சுயம்.’

எனவே, எதேனும் ஒரு சூழலில் எதிர்வினையாகவோ உணர்ச்சியாகவோ நீங்கள் வெளிப்படுத்துகிற உங்களது சுயத்தின் சின்னஞ்சிறு பகுதியை மட்டும் எடைபோட்டு யாராவது மதிப்பிடும்போது, முத்திரை குத்தும்போது, நீங்கள் யார் என்பதை நினைவுகூருங்கள். அவை உங்களது பல்வேறு முகங்களுள் ஒரு முகம் மட்டுமே. நீங்கள் எத்தனை எத்தனை சவால்களைத் தாண்டி வந்திருக்கிறீர்கள் என்பதை எண்ணி ஒரு புன்னகையுடன் அவர்களைப் புறந்தள்ளுங்கள். முடங்கிவிடாமல் உங்களது லட்சியப் பாதையில் தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்கள் யாருக்கும் எதையும் விளக்கி நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை. 

ஒருவரின் முழுமையான அகத்தையோ சுயத்தையோ யாராலும் அறிய முடியாது என்பதை நினைவில்கொள்ளுங்கள். மற்றவர் கண்டிராத நூறு நூறு கொந்தளிப்பான புயல்களின் ஊடாக நீங்கள் எதிர்நீச்சல் போட்டு இவ்விடத்தை அடைந்திருக்கிறீர்கள். ஏற்கெனவே பல்வேறு முறை உங்களுக்கு நீங்களே நிரூபித்தது போதும்.

- கிர்ஸ்டன் கார்லே.

பயணவழிகளில் சன்னலின் வெளியே தோன்றி மறையும் காட்சிகளைப் போல கணநேரத்தில் நம் வாழ்விலிருந்து மறைந்துவிட மனிதர்கள் எப்படியோ பழகிக்கொள்கிறார்கள். பயணம் மீண்டும் அதே பாதையில் நம்மைச் செலுத்துகிறது. அதே சன்னல், அதே வேகம், அதே கணநேரத் தோற்றம், அதே கண நேர மறைவு. மனிதர்கள் வந்து வந்து போய்க்கொண்டேயிருக்கிறார்கள். நிறுத்தங்களற்றதாகவும், பரிமாறல்களற்றதாகவும் பரிணாம வளர்ச்சியை எட்டிவிட்ட இந்தப் பயணத்தை வாழ்க்கை என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. கனவு என்று உண்மையைச் சொல்ல மனமில்லாமல் வாழ்க்கை என்று ஒரு புனைப்பெயரைச் சூட்டி மிக நீண்ட ஒரு கனவில் மிதந்து திரிகிறோம்.-சேரவஞ்சி

புத்தகம்


புத்தகக் கடைக்கு போன போது கண்ணில் பட்ட அந்த குட்டி புத்தகம் தள்ளுபடியில் கிடைத்தது.

தனிமையில் இருக்கும் ஒரு சிறுவன் ஒரு பெருச்சாளியை சந்திக்கிறான். இருவருமாக தூரத்தில் தெரியும் காட்டை நோக்கி நடக்கிறார்கள். வழியில் பனியில் கட்டிப் போடப்பட்டிருக்கும் ஒரு நரியை சந்திக்கிறார்கள். எலி கயிற்றை அறுத்து நரியை விடுவிக்கிறது. மூவருமாக காட்டுக்குள் போகிறார்கள். அங்கே ஒரு குதிரையை சந்திக்கிறார்கள். அது கனிவு நிறைந்ததாக இருக்கிறது. நால்வருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு உருவாகிறது. அவர்கள் மணி ஸார் பாணியில் சுருக்கமாக பேசிக்கொள்கிறாரக்ள். சொல்லப்போனால் வாழ்க்கையில் நிறைய அடிபட்டிருப்பதால் நரி அவ்வளவாக பேசுவதில்லை.  மற்ற மூவரும் பேசுவதுதான். பெரும்பாலும் ஒன்லைனர்கள். கூடவே ஆசிரியர் வரைந்த கோட்டோவியங்கள் என்று சின்னஞ்சிறிய புத்தகம். 

”இருப்பதிலேயே மிகப்பெரிய டைம் வேஸ்ட் எது?”
”உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதுதான்” என்றது எலி

“நமக்கு நடக்கும் சம்பவங்களுக்கு நாம் எப்படி எதிர் வினையாற்றுகிறோம் என்பதுதான் நமக்கு இருக்கும் சுதந்திரங்களில் முக்கியமானது” என்றது எலி

”பெரும்பாலும் நாம் மன்னிக்க மிகவும் கஷ்டப்படும் நபர் நாமாகத்தான் இருக்கிறோம்” 

”நீ செய்த செயல்களிலேயே ரொம்ப தைரியமான செயல் எது?” என்றான் சிறுவன்
“உதவி. உதவி கேட்டதுதான்” என்றது குதிரை

“நீ ரொம்ப வலிமையாக உணர்ந்தது எப்போது?”
“என் பலவீனத்தை வெளிக்காட்ட துணிந்த போது”

முழு புத்தகத்தையும் பத்து நிமிடத்தில் முடித்து விடலாம். அல்லது ஒவ்வொரு ஒன்லைனருக்கும் பத்து நிமிடம் எடுத்து நம் வாழ்வியலோடு கனெக்ட் செய்து நிதானமாக பொறுமையாகவும் படிக்கலாம். 

தனியாக இருப்பவர்களுக்கும், கூட்டமாக இருந்தாலும் தனிமையாக உணர்கிறவர்களுக்கும், நட்பை மதிப்பவர்களுக்கும், கருணை உள்ளம் கொண்டவர்களுக்கும், மெய்யழகன் படம் பிடித்தவர்களுக்கு இந்த புத்தகம் பிடிக்கும். 

The Boy, the Mole, the Fox and the Horse - Charlie Mackesy

Monday, 25 November 2024

படித்தது


நாய்களுக்கான உணவு தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் விற்பனை மேலாளர் தன் விற்பனையாளர்களிடம் தங்கள் நிறுவனத்தின் புதிய விளம்பரத் திட்டம் பிடித்திருக்கிறதா என்று கேட்டார். 

"பிரமாதம்! நம் துறையிலேயே மிகவும் சிறந்த ஒன்று," என்று விற்பனையாளர்கள் பதிலளித்தனர்.

 "நம் புதிய லேபிளையும் அட்டைப் பெட்டியையும் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" 

"பிரமாதம்! நம் துறையிலேயே மிகச்சிறந்தது," என்று விற்பனையாளர்கள் பதிலளித்தனர்.

 "நம் விற்பனைக் குழுவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

 அவர்கள்தான் விற்பனைக் குழுவினர். தாங்கள் சிறந்தவர்கள் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டியிருந்தது.

 "சிறந்த லேபிளும், சிறந்த அட்டைப்பெட்டியும், சிறந்த விளம்பரத் திட்டமும், அதை விற்கக்கூடிய, இத்துறையிலேயே மிகச் சிறந்த விற்பனையாளர் களும் நம்மிடம் உள்ளனர். 

இருந்தும், இந்த நாய்களுக்கான உணவுத் தயாரிப்பில் நாம் ஏன் பதினேழாவது இடத்தில் இருக்கிறோம் என்பதை யாரேனும் கூற முடியுமா?" என்று கேட்டார். அங்கு அமைதி நிலவியது. 

கடைசியாக ஒருவர், "அதற்குக் காரணம் அந்த உருப்படாத நாய்கள். அவை நம்முடைய தயாரிப்பை உண்ண மறுக்கின்றன." என்று கூறினார்.

-பொறுப்பை ஏற்றுக் கொண்டு எங்கு தவறென கண்டுபிடிப்பதற்கு சொல்லப்பட்ட கதை

Sunday, 24 November 2024

பூட்டு


திண்டுக்கல் பூட்டின் வரலாறு:

பரட்டைஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு.

இப்படி இரு வகையான பூட்டுகளைத் தயார் செய்த பரட்டை ஆசாரி. அதனை கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்தார். கொஞ்ச நாள்கள் கழித்து கடைக்காரர்கள் அனைவரும் ஆசாரியைத் தேடி ஓடி வந்தனர். ஆசாரிக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரையும் வரவேற்று என்ன விஷயம் என்று விசாரித்தார். வந்திருந்த அனைவரும் ஆசாரியைப் பாராட்டியதோடு நில்லாமல், இதுபோல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் செய்ய தயாரானார். தனக்கு உதவுவதற்காக ஆள்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டார். பூட்டு வியாபாரம் அங்கிருந்துதான் சூடுபிடிக்கத் தொடங்கியது.

பரட்டை ஆசாரி மிகுந்த ஈடுபாட்டுடன் வழக்கமான ஒன்றாக இல்லாமல் அழகிய கற்பனைத்திறனோடும், நீண்ட நாள்கள் உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துத் திறக்க முடியாத அமைப்போடும் சிரத்தையுடன் பூட்டுகளைத் தயாரித்தார். பரட்டை ஆசாரியின் பூட்டுகளுக்கு நிகரில்லை என எல்லோரும் பாராட்டினார்கள். நிறைய ஆர்டர்கள் தேடி வந்தன.

நாளுக்குநாள் பூட்டின் வியாபாரம் அதிகமாக அதிகமாக பரட்டை ஆசாரியிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர்கள் அவரிடமிருந்து பிரிந்து, தனித்தனியாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.

பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிகமாக கிடைப்பதால் திண்டுக்கல் பூட்டு மிக மிக வளர்ச்சியடைந்து பிரபலமானது. இப்படியாக வளர்ச்சியடைந்த பூட்டுத் தொழில். 1945ம் ஆண்டு திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழானது.

இதனை ஒழுங்குபடுத்துவதற்காக 1957ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது, 1972-ல் பூட்டு விற்பனை உச்சத்தில் இருந்த சமயம். திண்டுக்கல்லில் இருநூறுக்கும் மேற்பட்ட பூட்டு தொழிற்சாலைகள் உருவாகியிருந்தன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூட்டு செய்யும் வேலையில் ஈடுபட்டனர்.

ஓர் இரும்பு தகட்டின்மேல் ஒர் அடையாளம் செய்து முதலில் துளைசெய்கின்றார்கள். அதன்பின்னர் பேஸ் ராட், லீவர் போன்றவைகளைத் தனித்தனியாக தயாரித்து, ஆர்க் வெல்டிங் மூலம் பேஸ்ராட், லீவர் இரண்டையும் இரும்பு தகட்டின் மீது இணைக்கின்றனர். பூட்டு தயார். தயாரான பூட்டுக்கு நிக்கல் பாலிஷ் போட்டு பூட்டை பளபளப்பாக்கின்றனர். புது பூட்டு ரெடி. கையால் மட்டுமே செய்யப்படுகின்றன பூட்டுகள்.

டிலோ பூட்டு:

திண்டுக்கல் கூட்டுறவு சங்கம் தயாரிக்கின்ற இந்தப் பூட்டு உலகப் புகழ் பெற்றது என்றே சொல்லலாம். இந்தப் பூட்டுக்கு ஒரே ஒரு சாவிதான். அது தொலைந்துவிட்டால் பூட்டை உடைப்பது ஒன்றுதான் சிறந்த வழி. வேறு வழியே கிடையாது. ஏனென்றால் கள்ள சாவியோ, வேறு சாவியோ போட்டு இந்த பூட்டைத் திறக்க முடியாது.

பெல் லாக்:

இந்தப் பூட்டு சற்று வித்தியாசமானது. பூட்டும்போதும், திறக்கும்போதும் மணி அடிப்பதால் இதற்கு ‘பெல் லாக்’ என்று பெயர்.

லண்டன் லாக்:

ஆங்கிலேயர் காலத்தில் லண்டனிலிருந்து வந்த பழுது பார்ப்பதற்கு வந்த பூட்டைப் பார்த்து தயார் செய்யப்பட்டது. பூட்டினுள் ஷட்டர் போன்ற மெல்லிய காகிதம் இருக்கும். வேறு சாவி போட்டு பூட்டைத் திறக்க முயன்றால் அந்த காகிதம் கிழிந்துவிடும். அப்புறம் பூட்டைத் திறக்கவே முடியாது.

இதனை மாடலாகக் கொண்டு திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பவர்களும் இதேபோன்ற பூட்டினைத் தயார் செய்தனர். இந்தப் பூட்டுகளை பெரிய பெரிய நிறுவனங்கள் விரும்பி வாங்கினார்கள். ஒரு நிறுவனத்திற்கு 25 பூட்டுகள் தேவைப்பட்டால் 25 பூட்டுக்கும் தனித்தனி சாவிகள் கொடுக்கப்படும். அத்துடன் மாஸ்டர் கீ ஒன்றும் கொடுப்பார்கள். மாஸ்டர் கீயைக் கொண்டு 25 பூட்டுகளையும் திறக்கவும் பூட்டவும் முடியும்.

பூட்டின் விலை ரூ.100 -முதல் அதிகபட்சமாக கோயில் பூட்டின் விலை 5000 வரை இருக்கும். கோயில்களுக்காக செய்யப்படுகின்ற ஒரு பூட்டின் எடை எவ்வளவு தெரியுமா?

22 கிலோ!

-படித்தது

நாமக்கல் நகரத்தின் நடுவில் ஒரேஒரு மொட்டைக் கரடு. கரட்டின் மீது கோட்டைச்சுவர். கோட்டை கிடையாது. போர் வீரர்கள் தற்காலிகமாகத் தங்கித் தூரத்தில் வரும் படையைக் காண்பதற்கும் பீரங்கியால் தாக்குவதற்குமான ஏற்பாடு போலும்.கோட்டை என்றிருந்தால் உடனே அது திப்புசுல்தான் கட்டியது என்பது வழக்கம். இதையும் திப்புசுல்தான் கோட்டை என்பர்.ஆனால் இராமச்சந்திர நாயக்கர் என்னும் குறுநில மன்னர் கட்டியது என வரலாறு சொல்கிறது. அங்கே ஒரு பெருமாள் கோயிலும் மசூதியும் உள்ளன. போர் வீரர்கள் வழிபாட்டுக்காகக் கட்டியிருக்கலாம்-படித்ததுநாமக்கல்லை சுத்திப்போகும் போது பார்த்திருக்கேன். இன்னிக்கு தான் அதன் சேதி தெரிந்தது

janakiram


சம்பளம் செய்யாததை "சுதந்திரம்" செய்யும்.
இப்ப நிறைய நிறுவனங்களில் லீடர்ஷிப்புக்கு இருக்கும் பெரிய பிரச்சனை, புது பசங்க வந்து ஒரு வருஷம், ரெண்டு வருஷத்துக்குள்ள வேலையை ரிசைன் பண்ணிடறாங்க. விசுவாசம் இல்லை என கவலைப் படுகிறார்கள். அவர்கள் இந்த தலைமுறையின் மனநிலையை கவனிக்க தவறிவிட்டார்கள். 

ஒவ்வொறு 20 ஆண்டுகளுக்கும் பெரும்பான்மை பணியாளர்களின் மனநிலை மாற்றமடைந்து வருகிறது. 60களில் Loyalty முக்கியமாக இருந்தது. சேர்ந்த கம்பெனியிலேயே ரிடயர்ட் ஆகும்வரை வேலை செய்தார்கள். 80களில் standard of living முக்கியத்துவம் பெற்றது. பணியாளர்கள் தமக்கு வீடு, நகர வாழ்க்கை, குழந்தைகளுக்கு நல்ல கல்வி, சுகாதாரம் போன்றவற்றை விரும்பினர். இதனால் பத்து - பதினைந்து வருடங்களுக்கு ஒருமுறை  வேலையை மாற்றிக்கொண்டனர்.

 2000த்துக்குப் பிறகு freedom of choice தான் மற்ற எதையும் விட முக்கியம். 
பத்து வருடங்களுக்கு முன்பு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்கார்ட்டா எனும் உலகளாவிய என்சைக்ளோபீடியாவை உருவாக்க திட்டமிட்டது. அதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து, பல துறைகளைச் சார்ந்த மிகச்சிறந்த வல்லுனர்களை கட்டுரைகள் எழுத நியமித்தது. தனியாக பெரிய அணியையும் கட்டமைத்து, மிக அதிகமான செலவில் என்கார்ட்டா எனும் மின்மய என்சைக்ளோபீடியாவை ஏற்படுத்த தீவிரமாக உழைத்தது.

இன்னொறு பக்கம், ஏறக்குறைய அதே காலகட்டத்தில் கட்டுரைகளுக்கு பத்து பைசா கூட சன்மானமாக தராமல், ஆர்வமும் அறிவும் இருப்பவர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்கள் தமது ஓய்வு நேரத்தில் தமக்கு விருப்பப்பட்டதை எழுதி பங்களிக்கலாம் என்ற யோசனையுடன் வேறொரு மாடல் உருவானது. பிற்காலத்தில் அது மிகப்பெரிய தகவல் கருவூலமாக, விக்கிப்பீடியாவாக மாறியது.

 என்கார்ட்டாவை விட பல மடங்கு உயரத்துக்குச் சென்றது.
இது மிக முக்கியமான செய்தி. ஒரு செயலில் வெற்றியும், சாதனையும் நிகழ வெறும் சம்பளம், பணம் சார்ந்த இன்சென்டிவ்கள் உதவுவதில்லை. பங்கேற்பாளர்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரமும், பொது தேவை குறித்த புரிதலுமே சாதனைகளை நிகழ்த்துகின்றன. 
கூகிள் தனது பணியாளர்களுக்கு மொத்த வேலை நேரத்தில் 20% நேரத்தை அவர்கள் விரும்பும் பணியை செய்துகொள்ளலாம் என்ற சுதந்திரத்தை அளித்தது. கூகிளின் மிகப்பெரிய வெற்றி பெற்ற கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை அந்த 20% நேரத்தில் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆக, 2k கிட்ஸ்சை, சம்பளத்தை வைத்து மட்டுமே இன்ஸ்பையர் செய்ய முடியாது. அவர்கள், ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக பணி செய்ய, பங்களிப்பு செய்ய சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். இதனை புரிந்துகொண்ட புதிய தலைமுறை நிறுவனங்களே சாதித்து வருகின்றன.

Janakiraman

Friday, 22 November 2024

மனதில்+மனத்தில்


‘தமிழில் பிழையின்றி எழுதுதல் தொடர்பாக இணையத்தில் குறிப்புகள் தரும் தமிழாசிரியர் ஒருவர்  ‘மனம்’ என்னும் சொல் பற்றிப் பேசியதைக் கேட்டேன்.  ‘மனம் + அத்து + இல் = மனத்தில்’ என்று வருவதுதான் சரி என்கிறார். ‘மனதில்’ என்பதைப் பெருமளவு பரப்பியது பாரதியார் எழுதிய பாடல்தான்.

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
இதில் வரும் ‘மனதில்’ என்பது தவறு; மனத்தில் உறுதி வேண்டும் என்பதே சரி என்கிறார். ‘மனத்தில் உறுதி வேண்டும்’ என்று சொல்லிப் பார்க்கிறேன். ஓசை நயமாக இல்லை. ‘மனதில் உறுதி வேண்டும்’ என்பது இலகுவாக இருக்கிறது. ‘மனத்தில் உறுதி வேண்டும்’ என்று அழுத்தமாகச் சொன்னால் தானே உறுதி வரும் என்று சொல்வோரும் இருக்கலாம். எனக்கென்னவோ  ‘மனதில் உறுதியே’ நன்றாக இருக்கிறது.
இப்பாடலைச் ‘சிந்துபைரவி’ படத்தில் ஜேசுதாஸ் பாடியிருக்கிறார்.

 ‘மனதில் உறுதி வேண்டும்’ என்றொரு திரைப்படத்திற்கும் கே.பாலசந்தர் தலைப்பிட்டார். கர்நாடக சங்கீதப் பாடகர்கள் பலரும் இப்பாடலைப் பாடியுள்ளனர். திரைப்பாடல்களில் மனது, மனதை, மனதில் ஆகியவை சாதாரணமாக இடம்பெற்றிருக்கின்றன. அ.மருதகாசி எழுதிய ‘கண்ணை நம்பாதே’ பாடலில் ‘என் மனதை நானறிவேன்’ என்று ஒருவரி வரும்.  

‘என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம்’,  ‘எங்கே எங்கே என் மனது அது அங்கே இருந்தால் தந்துவிடு’,  ‘என் மனதைக் கொள்ளையடித்தவளே’ என்று எத்தனையோ பாடல்கள்.
வழக்கிலும் திரைப்பாடல்களிலும் ‘மனசு’ ஏராளம். ‘மனசாரச் சொல்லு’ என்று கேட்பதுண்டு. ‘மனதார வாழ்த்துகிறேன்’ என்பதும் பெருவாரியான வழக்குத்தான்.

 ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ என்றொரு பாடலும் உண்டு. அதே தலைப்பில் திரைப்படமும் வந்தது. ‘மனசுக்கேத்த மகராசா’ எனத் திரைப்படமும் வந்திருக்கிறது. மனசுக்கும் பல சான்றுகள் தரலாம். இவையெல்லாம் பிழைகள் என்றால் ஒருபோதும் திருத்த முடியாது. எங்கெல்லாம் சென்று திருத்துவது? யாரையெல்லாம் திருத்துவது? தமிழ்ப் பேரகராதியில் மனசு, மனது, மனம் ஆகிய மூன்று சொற்களும் இடம்பெற்றுள்ளன.


நான் ‘மனதில்’ என்றுதான் எழுதி வருகிறேன். என் எழுத்தில் ‘மனத்தில்’ என்று எங்கேனும் இருக்குமானால் மெய்ப்புத் திருத்துநர் செய்த வேலையாக இருக்கக் கூடும். என் நூல்கள் சிலவற்றுக்குச் செம்மையராகச் செயல்பட்ட நஞ்சுண்டனுடன் இதைப் பற்றி ஒருமுறை பேச்சு வந்தது.

‘நீங்கள் தமிழாசிரியர். நீங்களே மனதில் என்று பிழையாக எழுதலாமா?’ என்று அவர்  கேட்டார்.
‘மூலச்சொல்லை மனம் என்றுதான் கொள்ள வேண்டுமா? மனது என்றெடுத்துக் கொண்டால் என்ன?’ என்றேன்.
‘மனது பேச்சு வழக்குத்தானே?’




அப்படியானால் மனசு?’

‘ஆம். மனதுதான் மனசு என்று பேச்சு வழக்கில் வந்திருக்க வேண்டும்.  மனம் என்பது?’

‘ஒரு சொல்லுக்கு இருவடிவம் இருக்கக் கூடாதா? மனத்தில் என்பதன் மூலம் மனம். மனதில் என்பதன் மூலம் மனது.’

என் விளக்கத்தை அவர் ஏற்றுக்கொண்டு சொன்னார்.

‘சுந்தர ராமசாமிகூட மனதில் என்றுதான் எழுதுகிறார். அதை மனத்தில் என்று மாற்றலாமா எனக் கேட்டேன். மனதில் என்றே இருக்கட்டும் எனச் சொல்லிவிட்டார். அவர் விளக்கம் சொல்லவில்லை.’
‘ஏற்றுக்கொண்டீர்களே, உங்களுக்குப் பெரிய மனது’ என்றேன்.
சிரித்தார். இவ்விஷயத்தில் தமிழாசிரியர்களும் மனது வைத்தால் நல்லது

-பெருமாள்முருகன்

அமெரிக்க நாட்டு நீதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின் பாரிசுக்கு போனார். பாரிசுக்கு அவர் போவது இரண்டாவது முறை. 30 ஆண்டுகளுக்கு முன் புது மனைவியுடன் தேனிலவு சென்றிருந்தார்.அந்த நகரை மூன்று நாட்கள் சுற்றி பார்த்துவிட்டு வருத்தமாக சொன்னார்.பாரிஸை பார்க்க வேண்டும் என்று எவ்வளவு எதிர்பார்ப்புடன் வந்தோம். ஆனால் இங்கு எல்லாமே மாறிவிட்டது. முன்னால் இருந்தது போல் எதுவும் இல்லை என்றால். அவர் மனைவி பெரிதாக சிரித்தார். எல்லாமே முன்பு இருப்பது போல் தான் இருக்கிறது. அப்போது நாம் இளைஞர்களாக இருந்தோம். இப்போது நமக்கு வயதாகிவிட்டது. பாரீஸ் அப்படியேதான் இருக்கிறது என்றார்.உலகம் அப்படியேதான் இருக்கிறது நீங்கள் தான் மாறிக் கொண்டிருக்கிறீர்கள் -ஓஷோ

Thursday, 21 November 2024

புத்தகம்-27


Reading_Marathon2024
#24RM050

Book No:27/100+
Pages:295

சுஜாதா அவர்களின் வீட்டில் லாண்டரி பில்களை புத்தகமாக போட்டாலும் வாங்கும் அளவுக்கு வாசகர்கள் தயாராக இருந்தார்கள் எனில் அவர்கள் அத்தனை பேரும் நம்பிக்கையோடு நம்பியது சுஜாதா எனும் பெயரை தான். அவரின் எழுத்துக்கள் ஒரு நாளும் வாசகர்களை ஏமாற்றியதில்லை.புதுமை இளமை என எழுத்துக்களில் அவர் கொண்டு சேர்த்த அத்தனை வாசகப் பரப்பையும் சுஜாதா எனும் வார்த்தைகளில் அடக்கி விடுவார்.அப்படித்தான் மர்மமும் திகிலும் கலந்த 29 மர்ம கதைகளை அவர் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். ஆறு பக்கங்களில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் உருவாக்கி இறுதியில் இதுதான் என நம்மோடு கைகுலுக்க வைத்திருப்பார் சுஜாதா.

ஆபீஸில் உள்ள 180 ரூபாய் பணம் எடுத்து மனைவிக்கு ஒரு புடவை வாங்க நினைத்தான் ராகவன். ஆனால் நூறு ரூபாய் களவாடியது தெரிந்தால் அவன் வேலை போய்விடும். அதனால் என்ன ஊரிலிருந்து அவனுக்கு மணி ஆர்டர் வரப்போகிறது. எடுத்து விடலாம் என தைரியமாக எடுக்கிறான் .புடவையை எடுத்து மனைவியோடு சந்தோஷமாய் வெளியே போகும்போது நாளை குருநானக ஜெயந்தி தபால் அலுவலகம் விடுமுறை என நினைவுக்கு வருகிறது. எடுத்த பணத்தை வைக்க வேண்டும் என்ன செய்ய போகிறான் என்பது தான் கதை

ஆள் இல்லாத அமைதியான நள்ளிரவு என் கீழே எக்ஸ் வடிவில் ரமணன் செத்துக் கிடந்தான். ஹாக்கி மட்டையால் ஒரே அடி. உயிர் நண்பன் தான் ஆனாலும் அவன் செய்த ஒரு காரியம் ஒப்பவில்லை. விஞ்ஞானியான நான் சுவடின்றி கொன்றேன். திரும்ப வீட்டுக்கு வந்து படுத்தேன். எல்லாம் சரியாய் செய்த திருப்தி.பாக்கெட்டை தொடும் போது பர்ஸ் இல்லை.சிந்தித்து சிந்தித்து மீண்டும் ரமணன் வீட்டுக்கு செல்கிறான். பர்ஸ் கிடைத்ததா போலீசிடம் மாட்டினாரா என்பது வந்தேன் பார்த்தேன் கொன்றேன் மீதிக்கதை

டாக்சி ஓட்டும் குமாரசாமி முதலாளி ஆதியின் நம்பிக்க்கைக்கு உரியவராகி காரியதரிசி ஆகிறார். நல்ல பெயர் எடுத்து பணத்தை சுருட்டி கொண்டு ஓட நேரம் பார்த்து காத்திருக்கிறார். ஒரு முறை பெரும் தொகையை கொடுத்து வரச் சொல்லும் போது அதை எடுத்துக் கொண்டு எக்மோர் செல்கிறார் குமார்சாமி.வட நாட்டு ரயில் பிடித்து போகும்போது . தமிழ்நாட்டை தாண்டியதும்..அந்த கவரை பிரித்துப் பார்க்கிறான் அதிர்ச்சி அடைகிறான். அது என்ன என்பது சஸ்பென்ஸ் ..

தன் வீட்டின் எதிரில் புது வீடு கட்டும் சுமந்த்..கூலி ஆட்கள் மேஸ்திரி சமயம் வேலை நடக்கிறது. வேலையாள் வள்ளியும் முருகனும் காதலிக்கின்றனர். மேஸ்திரிக்கு வள்ளி மீது ஒரு கண். இடையில் மூன்று நாட்களாக முருகனை காணவில்லை. உரிமையாளரும் போலிசும் சேர்ந்து முருகனின் பிரேதத்தை கண்டுபிடிப்பதே அஸ்திவாரத்தின் கதை

பேங்கில் கொள்ளையடித்த பணத்துடனும் பாலாவும் பெர்னாடும் வேகமாய் காரில் சென்று கொண்டிருந்தனர். போலீசிடமிருந்து தப்பித்த மகிழ்ச்சி ஊரைவிட்டு சென்று விட வேண்டியது தவிப்பு இரண்டும் சேர்ந்து வாகனத்தை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றனர். இடையில் நிறுத்தி காரில் வைத்திருந்த நம்பர் பிளேட்டை மாற்றிக் கொண்டனர். செக் போஸ்டில் எம் எல் ஏ கார் என்று கூறி சாமர்த்தியமாய் தப்பிக்கிறான் பாலா
இனி கவலை இல்லை எல்லா பணத்தையும் டிக்கில் வைத்து விட்டு செல்லும்போது விதி ஒருவனை சைக்கிளில் அனுப்பியது. கண்ணயர்ந்த பாலா நிமிட நேரத்தில் அந்தப் பையனை இடித்து விட்டான். எங்கும் நிற்காமல் வேகமாக சென்று கொண்டிருந்தான். திருச்சியை நெருங்கும் போது மீண்டும் செக்கிங் இப்போது போலீஸ் வேறு ஒரு தடையத்தை வைத்து பிடிக்கிறது என்ன என்பது அகப்பட்டுக் கொள்ளாத வரை திருடின நலல கதையின் சஸ்பென்ஸ்

ராத்திரி பத்து மணிக்கு ஜுப் ஒன்று இன்ஸ்பெக்டர் துரைவேலனுடன் வந்தது. உள்ளே ஒருவர் இறந்து கிடக்கும் செய்தி அறிந்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் பேசிக்கொண்டனர். வீட்டின் உள்ளே இறங்கிய கான்ஸ்டபிள் உள்ளே தாழிடப்பட்டதை அறிந்து கொண்டு சுடப்பட்ட பிணத்தினை பார்த்து சற்று பயத்துடன் தாழ்பாளை திறந்தார். துரைவேலன் பிரேதத்தை நன்கு பரிசோதித்து அனைவரும் தற்கொலை என்று கூறும் போது அவர் மட்டும் இதில் ஏதோ வேறு ஒன்று இருப்பதாக சந்தேகிக்கிறார். அவர் நினைத்தது போலவே சந்தேகத்து இடமெல்லாம் கொலை நடந்துள்ளது அது எவ்வாறு என்பது தான் ஒரே இரவில் கதையில் மர்மம்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சேகர் தன்னுடைய தந்தையும் தாயையும் சிறுவயதில் இழந்தவன். அவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் தற்கொலை செய்யும்போது அம்மாவின் நான்கு விரல்களை அப்பா வெட்டி விட்டார். அதனால் சிறுவனின் மனதில் நான்கு விரல்களை அப்பாவிடம் கொடுத்தால்தான் அவரின் ஆத்மா சாந்தி அடையும் என நினைத்து மூன்று பெண்களை விரல் வேண்டி கொலை செய்கிறான். நான்காவது பெண்ணை விரல் வேண்டி கொலை செய்கையில் எவ்வாறு மாட்டிக் கொள்கிறான் என்பதுதான் மறக்க முடியாத சிரிப்பு கதையின் மர்மம்.

*மனைவி சன்னமாய் குறட்டை விடுகிறாள்

*அவளை பார்த்தால் சிரிக்க வேண்டும் போலிருக்கும். பார்த்தவர் உள்ளத்தில் லேசான கிளர்ச்சியை எழுப்புவாள்.

*அருகில் ஒரு இளைஞன் கொட்டாவிய்சி மென்று கொண்டிருக்கிறான்

ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விறுவிறுப்பு. எல்லா கதைகளும் கொலைகள் கதைகள் அல்ல ஏதோ ஒரு சுவாரசியமான சம்பவத்தை பின்பற்றி நாம் அந்த சம்பவங்களை யூகித்து முடிப்பதற்குள் தனது வேறொரு முடிவை சொல்லும் சுஜாதாவின் திறமை சொல்வதற்கு அரியது .படிக்க படிக்க சுவாரஸ்யம் ஒவ்வொரு கதைகளையும் படித்து முடித்தவுடன் அடுத்த கதை எவ்வாறு இருக்கும் என்பதை நம்மளுடைய பார்வைக்கு விட்டு விடாமல் வேறொரு பாதையில் கதை போகிறது. இயல்பான நடை துள்ளலான எள்ளல என எப்போதும் போல் சுஜாதாவின் புத்தகம்  இருக்கிறது 

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday, 20 November 2024

கிஷ்கிந்தா


கிஷ்கிந்தா காண்டம் விமர்சனம்
*மணி

நல்ல படங்கள் இரண்டு முறை ஹிட்டடிக்கின்றன.. தியேட்டரிலும் ஓடிடியிலும். படம் வந்தபோதே பாசிட்டிவ் ரிவ்யூக்கள் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும்.விமர்சனம் படித்துவிட்டு கடந்தாலும் நாமே நேரில் பார்க்கும் போது இன்னும் பரவசமடைந்து ரசிக்கலாம். மலையாள படங்களை பொறுத்தவரை பொறுமையை வரவழைத்துக் கொண்டு பார்க்கும் எண்ணம் வந்துவிடும். பத்து கோடியில் உருவான படம் எழுபது கோடி வசூலித்திருக்கும் இப்படம் எப்படி இருந்தது என பார்ப்போம்.

கதை

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான விஜயராகவனுக்கு இரு மகன்கள். மூத்தவர் பிரான்சிலும், இளையவரான ஹீரோ ஆசிப் அலி வனத் துறையிலும் பணிபுரிபவர். முதல் மனைவி நோயில் இறந்துவிட.. மகன் காணாமல் போய்விடுகிறார். தந்தையின் துப்பாக்கியும் காணாமல் போகிறது.

அபர்னா பாலமுரளியை இரண்டாம் திருமணம் செய்யும் போது இந்தவிவகாரங்கள் எல்லாம் வருகிறது. அமைதியான இரண்டாவது வாழ்வை துவங்கும் இவர்களின் வாழ்க்கையில் தந்தையின் துப்பாக்கி போன விசயம் பூதாகரமாகிறது.தொலைந்து போன தன் மகனை தேடும் முயற்சியில் அபர்ணவும் இணைய என்ன ஆனது என்பதை 2. மணி நேரத்துக்கு மேல் நம்மை கட்டிப்போடும் திரைக்கதை தான் இப்படம்.

கதை கேட்கும் போது இதெல்லாம் இரு கதையானு கேட்கத் தோன்றும். ஆனால் பால் சூடாவது போல் மெதுவாக துவங்க.. இறுதியில் பொங்க வைக்கும் பூம் திரைக்கதையே பிரதானம்.இறுதியில் இவ்வளவு தானானு தோனும் ஆனா யோசிச்சு பார்த்தா இரண்டு மணி நேரம் அடுத்தடுத்த திருப்பங்களை நினைத்து மனம் ஓகே சொல்லும்

#ப்ளஸ்

*மறதி நோயால் பாதிக்க்ப்பட்டும், எரிந்து விழும் சிடு மூஞ்சியாக வாழ்ந்திருக்கும் விஜயராகவன்

*முதலில் உருகுவது, தந்தைக்காக கரைவது, மகனை நினைத்து ஏங்குவது என ஆசிப் அலி பாஸ்மார்க்

*ஒளிப்பதிவு நம்மையும் அப்பகுதிக்கு அழைத்துப் போகிறது. கதை திரைக்கதையும் இவரே என்பதால் மேஜர் வொர்க் பாஹூல் ரமேஷ்க்கு.

*எவ்வளவு நல்லவன மாறினாலும் அவன் கெட்ட பெயர் அவனைவிட்டு போகுமா? எனும் வசனம் நச்

#மைனஸ்

*எவ்வளவு சஸ்பென்ஸ் ஏத்தினாலும் இறுதியில தெரிஞ்சிடும்.அந்த வகையில் இறுதியில் இவ்வளவுதானானு தோனிச்சு. ஆனா தந்தை மகன் பாசத்தை வச்சு மேனேஜ் செய்திட்டாங்க

*அடிக்கடி பேப்பர்களை எரிக்கிறவர் அத்தனை நாள் கழிச்சு அபர்னா பார்க்கும் போதா முக்கிய தடயத்தை எரிப்பார்.

*மனைவி இறந்ததது ஓகே. பையன் காணாமல் போனதை மனைவியின் உறவினர்க்கு சந்தேகம் வராமல போய்டும்

ஆனாலும்திரைக்கதை ஓட்டத்தில் இக்குறைகள் எல்லாம் மறந்துவிடும். படத்தின் இறுதியில் பாசத்தை காட்டினாலும் அந்த சஸ்பென்ஸ்க்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

தோழமையுடன் மணிகண்டபிரபு

சவிதா


வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் மிகச் சரியாக முடிவெடுக்கும் திறன் யாருக்கும் கிடையாது. ஆனால், தப்போ, சரியோ முடிவை அவரவரே எடுத்துப் பழக வேண்டும். 
தவறெனில் அதற்கான பின்விளைவுகளை அவரே சமாளித்துக் கொள்ள வேண்டும். That is called Responsibility. என் சாலையை நான் தேர்ந்தெடுத்துக் கொள்வேன். அதில் மகிழ்ச்சியடைவேன் என்பதுதான் சுயம். 

எப்போதும் முடிவை இன்னொருத்தரிடம் விட்டுவிட்டு உன்னால்தான் இப்படியானது என்று மற்றவர்களுக்கு குற்றவுணர்வை உண்டாக்குவதில் கிஞ்சித்தும் லாபமில்லை. நல்ல முடிவென்றால் தன்னால்தான் எனவும், தவறென்றால் இன்னொருவரை கைகாட்டி தப்பித்துக் கொள்வதும் கோழைத்தனம். தனக்கான முடிவை, தனக்கான தேர்வைக் கூட ஒரு மனிதன் செய்து கொள்ளாமலிருப்பது கையாலாகாத்தனமில்லையா? 

சிறுவயதிலிருந்து இதை குழந்தைகளுக்கு பழக்குங்கள். உங்களிடம் வந்து விளையாட்டா, படிப்பா எனக்கேட்டால் படிப்புதான் உனக்கு நன்மை தரும் என்று அறிவுரை வழங்காமல், எதுவென நீயே முடிவு செய் என்று சொல்லுங்கள். இப்படிப்போனால் கஷ்டம் வரலாம். . நிச்சயம் அதை நீ தனியேதான் சமாளிக்க வேண்டும் என்பது மட்டுமே நம் அறிவுரையாக இருக்க முடியும்.

-சவிதா

புத்தகம் -26


Reading_Marathon2024
#24RM050

Book No:26/100+
Pages:163

இது உங்களுக்காக
-டாக்டர் பரத்சந்த்ரா
தமிழில் ரா.கி.ரங்கராஜன்

தீவிர இலக்கியத்தை படிக்கும்போது சற்று ரிலாக்சேஷன்காக தன்னம்பிக்கை புத்தகங்களையும் தேடுவது உண்டு.மேல்நாட்டு புத்தகங்கள் துவங்கி தமிழ்நாட்டில் உள்ள தன்னம்பிக்கை புத்தகங்களும் அடிக்கடி வாசிப்பேன். அப்படித்தான் இந்த புத்தகமும் கண்ணில் பட்டது. இந்த புத்தகத்தை வாசிப்பதற்கான முதல் காரணம் மொழி பெயர்த்தது ரா.கி ரங்கராஜன் அவர்கள். இந்த புத்தகம் முழுக்க முழுக்க மாணவர்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய புத்தகம். 

தன்னம்பிக்கை ஓவர் டோஸ் ஆகும்போது கொஞ்சம் திகட்டி விடும் இந்த புத்தகத்தில் சில இடங்களில்  அவ்வாறு இருப்பினும் மற்ற இடங்களில் எல்லாம் எதேச்சையான இயல்பான ரியாலிட்டியை ஒட்டி சில கருத்துக்களை சொல்லி உள்ளனர். தன்னம்பிக்கை புத்தகங்களின் பெரிய பலமே அதில் சொல்லப்படுகின்ற சிறுகதைகளும் சம்பவங்களும் தான். இந்த புத்தகங்களிலும் சில இடங்களில் மின்னுகின்றன.

மாணவர்களில் வாசிக்கும் போது 
 கோர்வையாக வைத்துக் கொள்ளாமல் தனித்தனியே வாசிப்பது தான் மனதில் இல்லாமல் போகிறது. ஆகவே எதனுடன் ஆவது தொடர்பு படுத்தி நினைவு கொள்ள வைக்கும் உத்தியை சொல்கிறது. ஒவ்வொரு நாளும் அதிக நேரம் வாசிக்கும்போது மறதியும் உடன் வருகிறது. அதற்கு விஞ்ஞானி எடின்பாஸ் அவர்கள் மறதி வளைவு என்று பெயர் சூட்டினார் .மறதிக்கான மருந்தாக மீண்டும் மீண்டும் நினைவு கூறும் திறனை அல்லது மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப படிக்கும் திறனை பற்றி அதில் சொல்லியிருக்கிறார்.

மற்றவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ள தவறுகளை ஒப்புக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அதற்கு உதாரணமாக டேல் கார்னகி என்ற எழுத்தாளர் பூங்காவிற்கு நாயுடன் சொல்கிறார். அங்கே உள்ள காவலாளி நாய்க்கு அனுமதியில்லை எனறு திருப்பி அனுப்புகிறார். 7 நாட்கள் கழித்து மீண்டும் நாயுடன் செல்கிறார் மீண்டும் அதே காவலாளி பணியில் உள்ளார். அவர் திட்டும் முன்பு
 " நான் வந்தது தவறு தான், நீங்கள் சொல்லியும் நான் வந்து விட்டேன். என்னை கைது செய்யுங்கள்" என்று கேட்கிறார். அதற்கு அந்த காவலாளி மனம் உருகி பரவாயில்லை. நீங்கள் உள்ளே நாயுடன் சென்று வாருங்கள்.யாருக்கும் தொந்தரவு தராமல் என்று கூறுகிறார். எதிரில் இருப்பவரிடம் நியாய பாவத்துடன் தங்கள் உறவினை தொடர வேண்டும். எதிரில் இருப்பவர்கள் சரி சரி என்று ஆமாம் என்று சொல்ல வைப்பது ஒரு டெக்னிக் தான் என்கிறார். அவர்களின் உள்ளார்ந்த உயர் சிந்தனை தூண்டுவதன் மூலம் பெருந்தன்மையை நம் மீது காட்டவும் வழிவகுக்கிறது.

ஆலோசனைகள் கீழ் மட்டத்திலிருந்து வரவேண்டும். ஒரு ஓட்டல் நிர்வாகி கூட்டம் நடத்துகிறார். அதில் ஊழியர்கள் தொடர்ந்து விடுப்பு எடுப்பது தொடர்கிறது .இதற்கு என்ன செய்யலாம் என்பதை ஊழியர்கள் அனைவரையும் உட்கார வைத்து கேட்கிறார். அதில் ஊழியர் சங்கத் தலைவர் கொஞ்சம் காலத்திற்கு அத்தியாவசியமானவர்களுக்கு மட்டும் விடுப்பு அளிக்குமாறு ஆலோசனை சொல்கிறார். அதனை கேட்டு சேர்மன் மற்றவர்களிடம் இந்த ஆலோசனை சரிதானா? என கேட்கிறார் .ஊழியர்கள் அனைவரும் ஆமோதிக்கின்றனர். அன்றிலிருந்து சில மாதங்கள் ஒரு ஊழியரும் விடுப்பு எடுக்காமல் வருகின்றனர். ஹோட்டல் நிர்வாகம் சரியாய் சரியான திசையில் பயணிக்கிறது. இதற்கான முடிவில் அவர் சொல்வது எந்த ஐடியாவாக இருந்தாலும் அது எதிராளி சொல்வதாக இருக்கட்டும். தனது ஐடியாவுக்கு மதிப்பு இருக்கிறது என்பதனை அவர் ஒப்புக்கொள்ளும் போது நிர்வாக வசதிக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் ஒரு நற்பண்பு இருப்பதை அது காட்டும் என்கிறார்.

ஒரு நிறுவனத் தலைவர் ஊழியர்களை முதலில் எவ்வாறு அழைக்க வேண்டும் பதவியை சொல்லியா அல்லது ஒருமையில் அழைப்பதா என்று பலருக்கு குழப்பம் இருக்கும் .ஆனால் ஒரு சம்பவத்தில் ஒரு நிறுவனத்தின் மேலாளர் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். பெயர் சொல்லி வேலையை செய்யவில்லை சொல்கிறார் .உரிமையோடு அவர் பெயர் சொல்லி அழைப்பதை ஒவ்வொரு ஊழியரும் பெருமிதம் அடைகின்றனர்.

ஒரு குழு புகைப்படத்தில் முதலில் யாரை தேடுவோம் நம்மைத்தான் சந்தேகமே இல்லை .ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் முதலில் நேசிக்கிறான். அவன் தான் ஹீரோ பிறகு தான் மற்றவர்களுக்கு. நம்மைத்தான் முதலில் முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நிறுவனத் தலைவர் அலுவலகத்தில் நுழையும் போது முதலில் அவர்தான் அனைவருக்கும் வணக்கம் வைக்கிறார். ஏன் என்று கேட்டதற்கு நான் வைப்பதற்கு முன் அவர்கள் வைத்துவிட்டால் நான் அவர்களுக்கு வைப்பது போல ஆகிவிடும். ஆதலால் முதலில் நான் தான் அனைவருக்கும் வணக்கம் வைப்பேன் என்ற ஒரு நல்ல பழக்கத்தை குறிப்பிடுகிறார்.

நம்மில் பலர் நமக்கு பிடித்தது தான் மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்ற மேதமைத்தனத்தில் இருப்பதால்தான் மற்றவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள இயலவில்லை. நமக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் மீன்பிடிக்கச் செல்லும் போது மீனுக்கும் அது பிடிக்கும் என தூண்டிலில் சாக்லேட் வைத்தால் எந்த ஒரு மீனும் சிக்காது. ஆகவே மீனுக்கு என்ன பிடிக்கும்.. புழு தான் தூண்டிலில் வைக்க வேண்டும். அதுபோலத்தான் மற்றவர்களின் அன்பையும் மதிப்பையும் பெறுவதற்கு சரியான வழி தெரியாமல் தடுமாறுகிறோம். மற்றவர்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதனை முதலில் ஒருவர் தெரிந்து வைத்திருந்தால் தான் அவரை முதலில் நண்பராகவே நாம் வைத்துக் கொள்ள முடியும்.

எந்த காரியத்தை முதலில் செய்வது.. நம்முடைய பாக்கெட்டில் 500 ரூபாய் முதல் 50, பத்து ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன. அவை காற்றில் பறக்கும் போது சிதறி விடுகின்றன .இப்போது முதலில் நாம் எந்த நோட்டினை முதலில் எடுப்போம். சந்தேகமே இல்லாமல் 500 ரூபாய் நோட்டை தான் .வாழ்க்கை இந்த தத்துவத்தை தான் நாம் கடைபிடிக்க வேண்டும். எந்த காரியத்தை முதலில் கவனிக்க வேண்டும் ,எந்த பிரச்சனையும் முதலில் தீர்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டாலே போதும். ஏதாவது ஒன்றை நீங்கள் பற்றிக் கொள்ளாவிட்டால் ஏதாவது ஒன்று உங்களை கீழே தள்ளிவிடும் என்ற சீன பழமொழி கூறுகிறது

நம்முடைய கண்ணோட்டமும் மனோபாவம் மிகவும் முக்கியம் என்பதை குறிக்கும் ஒரு சொல்லாடல் ரசிக்க வைக்கிறது .சிறைக்குள் இருக்கும் இரண்டு கைதிகள் ஜன்னல் வழியே பார்க்கிறார்கள். ஒருவன் பார்வையை தாழ்த்திக் கீழே பார்க்கிறான். மற்றவன் பார்வையை உயர்த்தி வானத்தைப் பார்க்கிறான். வெளி உலகம் எல்லாருக்கும் ஒரே மாதிரியானதுதான். அதை எப்படி பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம். உலகம் மாறுவது கிடையாது உங்கள் கண்ணோட்டம் மாறுவதால் உலகம் மாறி இருப்பதாக தெரிகிறது. நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படி ஆகிறீர்கள் என்று சொல்கிறார்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சிலசில சம்பவங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. உண்மையில் வாசிப்பு அனுபவம் என்பது பெரிய புத்தகங்களை விட சிறிய புத்தகங்கள் கிடைக்கும் சில சொற்றொடர்கள் நம்முடைய வாசிப்பவத்தை மேம்படுத்தும் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம்-25


Reading_Marathon2024
#24RM050

Book No:25/100+
Pages:231

பரிணாமத்தின் ஊடாக வாழ்க்கையின் விளக்கம்
-புரோசாந்தா சக்கரவர்த்தி
தமிழில் குமாரசாமி

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கிய மிக முக்கியமான புத்தகத்தில் இதுவும் ஒன்று.பரிணாமம் என்று சொல்லை பலர் பல்வேறு விதத்தில் சொல்லியுள்ளனர். அந்த பரிணாமத்தில் சொல்லப்படாத விஷயங்கள் கேட்டறியாத தகவல்களை இந்த புத்தகம் மிகவும் சுவைபட சொல்லி இருக்கிறது.

ஹாய் மதன் பகுதியில் ஒருவர் ஏன் இன்று குரங்கிலிருந்து மனிதன் தோன்றுவதில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அவர் ஒரு மரத்தின் ஒரு கிளைகள் கிளையிலிருந்து வரும் கிளையில் ஒரு குரங்கினம் நிமிர்ந்து நின்றதால் தான் அந்த இனம் பரிணாம வளர்ச்சி அடைந்தது. எல்லா குரங்கும் எழுந்து நிற்கவில்லை. ஒரே ஒரு குரங்கினம் எழுந்து நின்றதால் பல மில்லியன் ஆண்டுகள் கழித்து ஒரு மனித இனம் தோன்றியது என்று கூறி இருப்பார்.

இந்த உலகை படைத்தது கட்டுப்படுத்துவது கடவுள் என்றால் அதை உங்களால் மெய்ப்பிக்க முடியாது பொய்பிக்கவும் முடியாது. ஆனால் அறிவியல் பூர்வமாக அணுகினால் அதன் உண்மை விளக்கத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்ற முன்னுரையில் இருந்து இப்ப புத்தகம் துவங்குகிறது. ஏன் ஆப்பிள் கீழே விழுகிறது என்று கேள்விக்கு கடவுள் அவ்வாறு விழும்படி செய்தார் என்று நீங்கள் பதில் அளித்தால் அது தவறு என்று என்னால் நிரூபிக்க முடியாது. ஆனால் புவியீர்ப்பு விசை தான் காரணம் என்று என்னால் கூற முடியும். அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கேள்விகள் அனைத்திற்குமான விடையை புத்தகம் சொல்கிறது.

ஒரு ஆய்வாளரான ரிச்சர்ட் லென்ஸ்கி என்பவர் பாக்டீரியாவை பரிசோதனை பரிசோதனைச் சாலையில் 70 ஆயிரம் தலைமுறைக்கு மேலாக வளர்த்த போது அந்த பாக்டீரியா தன்னை பெரும் அளவு தகவமைத்துக் கொண்டிருந்தது அதனை தவறாக புரிந்து கொண்டவர் அது மனிதனாக மாறிவிட்டதாய் தவறாய் கூறினார். ஆனால் ஒரு மனிதனாக பரிணாம வளர்ச்சி அடையப் போவதில்லை. 

பரிணாம வளர்ச்சிச் செயல்முறையின் விளைவை, இன்று உயிர்பிழைத்திருப்பவர்களின் வடிவில் நாம் காண்கிறோம். அவர்களிடம் சிறிய அளவில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டிருப்பதால், ஒரு மூதாதையரிலிருந்து மறுமூதாதையர் என்று உங்களால் பின்னோக்கிச் சென்று கொண்டே இருக்க முடியும். அதற்கான சான்று, மரபணுக் குறியீட்டில் (டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ) அடங்கியுள்ளது. அதை நாம் கண்ணால் காண முடிகின்ற, இரத்தமும் சதையுமான வடிவிலும் நடத்தையிலும் நாம் பகிர்ந்து கொள்கிறோம். 

மொத்த பரிணாம வளர்ச்சியும் இயற்கை தேர்ந்தெடுப்பு கோட்பாட்டின் மூலம் விளக்க முடியாது என்பதை டார்வின் அறிந்திருந்தார். அதற்காக பாலியல் தேர்ந்தெடுப்பு கோட்பாடு ஒன்றை டார்வின் உருவாக்கினார் .அதேபோல டார்வின் மற்றொரு இடத்தில் பரிணாம வளர்ச்சியை மாறுதலுடன் கூடிய மரபுவழிப்போக்கு என்று பொருத்தமாகும் சுருக்கமாகவும் விலக்கியுள்ளார். உயிரினங்கள் ஏன் வேறுபடுகின்றன என்பதை விளக்குவதற்கு நமக்கு வேறு சில பரிமாண வளர்ச்சி கோட்பாடுகள் தேவை என்பதை உணர்ந்து இருந்தார்.

உங்களிடம் ஏற்படுகின்ற மாற்றங்களை பொறுத்தவரை தவறுகள் ஏற்படாமல் புதிய வகைகள் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதை டார்வினும் மெண்டலும் அறிந்திராத ஒன்று .உங்களுடைய டிஎன்ஏ குறித்து ஏற்படுகின்ற தவறுகள் மரபணு சடுதி மாற்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அது குறித்த விரிவாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

புதிய இனங்கள் உருவாவதற்கு இனத்தோற்றம் நடைபெறுவதற்கு வேறு ஏதேனும் வழிவகை உண்டா? என்பதற்கு தனிமை படுத்துதல்+ நீண்ட காலம் என்று இரண்டையும் சொல்கின்றனர். ஒரு இனத்தை பிரித்து தனிமைப்படுத்தி காலப்போக்கில் சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதன் மூலம் மாற்று வழிகள் மூலமும் மரபணு விரிவுறும் என்று கூறுகின்றனர். ஆனால் ஒரு சிலவற்றில் இருக்கும் குறைபாடுகளையும் கூறி பரிணாம வளர்ச்சியின் படங்களை இட்டு அந்தப் படங்களின் மூலம் விளக்கியுள்ளனர். முக்கோண வடிவிலான படத்தில் ஏ யிலிருந்து பிரியும்  பி,சி உருவெடுப்பதாகவும் அதற்கான விளக்கத்தையும் சொல்லியுள்ளனர்.

*நாம் சுறாக்களில் இருந்து பரிணாம வளர்ச்சி அடையவும் இல்லை. ஆனால் மிக நீண்ட காலத்துக்கு முன்னால் நமக்கும் சுறாவுக்கும் பொதுவான ஒரு நீர்வாழ் மூதாதைய விலங்கு ஒன்று இருந்துள்ளது. 

*நமக்கும் சிம்பன்சிக்கும் இடையேயான பொதுவான மூதாதையர் விலங்கு ஆறிலிருந்து எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது.

*லாமார்க் என்னும் அறிவியல் ஆனால் ஒவ்வொரு உயிரினமும் தம்முடைய தனிப் பண்புகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றன என்பதை கூறி இருந்தார். உதாரணத்துக்கு ஒட்டகச்சிவிங்கி கழுத்தை நீட்டியதால் தான் அது நீண்டிருப்பதாக கூறி இருந்தார் அதனை ஆய்வுகளின் மூலம் மறுத்திருக்கின்றனர்.

*டார்வின் மற்றும் வாலஸ் இருவருமே உயிர் பிழைத்தலுக்கான போராட்டம் மற்றும் விடாமுயற்சியின் மூலமாக ஏற்கனவே இருக்கின்ற இடத்திலிருந்து புதிய உயிரினங்கள் தோன்றுகின்றன என முடிவுக்கு வந்தனர்.

வினாக்களும் தவறான புரிதல்களும் பகுதியில் கங்காரு இரு காலுள்ள விலங்குகள் தானே அவைகள் ஏன் மனிதனாக முடியவில்லை.. முட்டையிடும் விலங்குகள் குட்டியிடும் விலங்குகள் என ஏன் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைகளும் இப்புத்தகத்தில் உள்ளன.

*மெண்டல் முதலில் பட்டாணி செடிகள் தன் ஆய்வுகளை துவக்கியது அவருடைய அதிர்ஷ்டம் என்று கூறலாம். அச்செடியில் பூக்களின் நிற வேறுபாடு போன்ற தனித்துவமான அம்சங்கள் இருந்தது. அவர் தன் முடிவு வெளியிட்ட வசதியாக இருந்தது. அவர் தேனீக்களை வைத்து இது போன்ற ஆய்வுகளை வெற்றி பெற முடியவில்லை ஏனெனில் தேனீக்கள் சிக்கலான பரம்பரை பண்புகளைக் கொண்டிருந்தன.

*இன்று உயிரோடு இருக்கின்ற அனைத்து விலங்குகளும் பரிணாம போராட்டத்தில் தப்பி பிழைத்தவர்கள்.

*தக்கன பிழைத்துக் கொள்ளும் எனும் சொல்லாடலை முதலில் பயன்படுத்தியது ஹெர்பர்ட் ஸ்பென்சர்.அது வசீகரமாய் இருந்ததால் டார்வின் தனது ஐந்தாம் பதிப்பில் அதைச் சேர்த்துக் கொண்டார்.

இதில் தக்கன என்பதற்கு வலியவன் வெல்வான் என அர்த்தப்படுத்துகின்றனர்.இது நாம் பிற விலங்குகள் நடத்தும் விதமும், நாம் ஒருவர் மீது ஒருவர் நடத்தும்விதமும் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறது. உயிரியலாளர்கள் இனப்பெருக்க தகுதி என்று சொல்கின்றனர்.உடல்ரீதி அல்ல.இன மேலாதிக்கம்

பூமியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும்? உயிரினங்களின் வரலாறு, பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்வது ஏன் முக்கியம் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு தகுந்த ஆதாரங்களுடனும் மேற்கோள்களுடனும் அறிவியல் பூர்வமான தகவல்களுடனும் படிக்க படிக்க சுவாரசியமா இப்ப புத்தகம் நமக்கு சொல்கிறது. சிக்கலான விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது..அறிவியல் பூர்வமான தகவல்களும் அறிவியல் சொற்களும் மூலம்தான் நமக்கு சொல்லியாக வேண்டும். ஆனாலும் அது எந்த இடத்திலும் கடுமையாக இல்லாமல் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் மற்றவர்களுக்கு சொல்லும் படியும் உள்ளது புத்தகத்தின் பெரிய வெற்றியாக பார்க்கிறேன் 

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 15 November 2024

வினோபாவே


சிறு குழந்தைகளுக்கு விளையாட்டு சிறந்த உடற்பயிற்சி என்று சொல்லப்படுவதில் ரகசியம் ஒன்றுள்ளது. விளையாடும்போது உடற்பயிற்சி என்னவோ நடந்துவிடுகிறது. ஆனால், உடற்பயிற்சி செய்கிறோம் என்ற எண்ணம் இருப்பதில்லை. ஆழ்ந்து இருக்கையில் அக்கம்பக்கத்திலுள்ள எதுவுமே தெரிவதில்லை. குழந்தைகள் அதிலேயே ஆழ்ந்துபோய் தான் வேறு அது வேறு என்று இல்லாத அத்வைத உணர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். உடல் நினைவில் இருப்பதில்லை. பசி, தாகம், களைப்பு என எதுவுமே தோன்றுவதில்லை. விளையாட்டில், உடற்பயிற்சி என்பது கடமையாக இல்லாமல் இயல்பாக நிகழ்கிறது. இதே விடயத்தை எல்லா கற்பித்தல் முறைகளுக்கும் நிகழ்த்த வேண்டும்.

மாணவர்களின் கற்றல்முறை அவர்களை அறியாமலேயே நிகழ வேண்டும். ஒரு குழந்தை தன் சிறுவயதில் தன் தாய்மொழியை இயல்பான முறையில் கற்றறிகிறது. அதே முறையில்தான் அவர்களின் மேற்படிப்பும் நிகழவேண்டும். விளக்கின் ஒளி குறையத் தொடங்குகையில் அனேகமாக அதில் எண்ணெய் இராது என்பதனை குழந்தையினாலும் அனுமானம் செய்து ஊகிக்க இயலும். இம்முடிவுக்கு உதவும் எல்லா தர்க்கங்களும் அக்குழந்தையின் மூளையில் எற்கெனவே இருக்கின்றன. கல்வி செய்யவேண்டியது அந்த ஜீவசக்திக்கு அடிக்கடி ஊட்டச்சத்து வழங்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவது மட்டுமே.

எல்லா சாத்தியங்களும், எல்லா கலைகளும், எல்லா நற்பண்புகளும் மனிதர்களிடம் இயல்பாகவே அமைந்துள்ளன. நமக்கு அது புலனாகாமல் இருப்பதால் விதையே இல்லை என்று சொல்லிவிடக் கூடாது. நாள்பொறுத்து முளை எழும்.

- கல்வியில் மலர்தல் குறித்து வினோபா...

கல்வி எனும் செயல்முறையை அறிவதற்கு முன்னர் கல்வி எனும் மனநிலையை புரிந்துகொள்வது அவசியமாகிறது. வினோபாவின் இப்புத்தகம் கல்வியின் அடிப்படை, ஆசிரியரின் குணத்தன்மை, எப்போதும் எதிலும் கற்கும் பண்பு, காலமும் சூழ்நிலையும் சார்ந்த விடுமுறை, செயல்பாட்டுக்கல்வி, தன்னிறைவுக் கற்றல், பூரணத்திலிருந்து பூரணம் என கல்வியின் பலபக்க பரிமாணத்தை ஒளிரப்படுத்துவதாக உள்ளது.

நவம்பர் 15, இன்று வினோபாவின் நினைவு தினம். ஒரு ஆசானாக அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள நிறையவிருக்கிறது என்ற காந்திய வரிகளை மனமேந்துகிறோம். நைதாலீம் எனும் நவகல்வி துவங்கி நம்மை நாமே கண்டடையும் ஆன்மக்கல்வி வரைக்கும் வினோபாவின் சொற்கள் நமக்கு வெளிச்சத்தூண்களாக நெடிதுநீண்டு நின்றிருக்கிறது. நடக்கும் கால்கள் நம்முடையது. இருள் கடப்போம்.

தாயம்


"நல்லவர்களுக்கு ஏன் மோசமான விஷயங்கள் நடக்கின்றன..?" என்று ஒருவர் கேட்டார். 

அதற்குப் பாதிரியார், "நல்லவர்களுக்கு மோசமான விஷயங்கள் நடக்கும்போது, அவர்களுக்கு என்ன நிகழ்கிறது.. என்பதுதான் உங்கள் கேள்வியாக இருக்க வேண்டும்...

நல்லவர்கள் சோதிக்கப்படும்போது 
அவர்கள் 'சிறந்தவர்கள்' ஆகிறார்கள் என்பதுதான் அதற்கான என் பதில்!", என்றார்.

நம் முன்னேற்றத்தின் வேகத்தை தீர்மானிப்பது நம் அறிவு அல்ல..

அந்த அறிவை நாம் உபயோகிக்கும் விதமே நம் முன்னேற்றத்தை தீர்மானிக்கிறது.

சரியான கேள்விகளை எப்படிக் கேட்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும்போதுதான்...

நம் அறிவை நம்மால் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

'ஏன் எனக்குப் போய் இப்படி நிகழ்கிறது?'. என்ற கேள்வி சுய பச்சாதாபத்தையே உண்டாக்கும்.

மாறாக, "இதிலிருந்து நான் எதைக் கற்றுக் கொள்ளலாம்..?", என்ற கேள்வி.. உயர்ந்த பக்குவத்திற்கு உங்களை வழிநடத்தும்!

"அடுத்து என்னவாக இருக்கக்கூடும்.."

"ஏற்கனவே செய்து கொண்டிருப்பதை இன்னும் சிறப்பாக எப்படிச் செய்யலாம்.."

"மிஞ்சி மிஞ்சிப் போனால் பெரிதாக என்ன நடந்துவிடும்..."

 போன்ற கேள்விகள், வாழ்வு குறித்து நீங்கள் கொண்டுள்ள கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றிவிடும்.

அனைத்துக் கண்டுபிடிப்புகளும், கண்டறிதல்களும் சரியாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில்தான் துவங்குகின்றன.

அர்ஜூனனின் சரியான கேள்விகளால்தான் நமக்கு 'பகவத் கீதை' கிடைத்தது!

எல்லா விடைகளும் உங்களிடம் இல்லாவிட்டால் பரவாயில்லை..

இங்கு முக்கியமான விஷயம், உங்களிடம் சரியான கேள்விகள் இருக்கின்றனவா என்பதுதான்!!

உங்கள் அறிவு காத்துக்கொண்டிருக்கிறது..

கேளுங்கள்..!! 

உங்களுக்குக் கொடுக்கப்படும்..!!!

-மஹாத்ரய ரா (தாயம்)

Thursday, 14 November 2024

விமானம்


விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!

 "இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக் குறுகிய தூரம் எப்போதும் ஒரு நேர் கோடாக இருக்கும், ஆனால் யூக்ளிடியன் வடிவவியலில் மட்டுமே.

 இது என்ன?  இது பொதுவாக பள்ளியில் கற்பிக்கப்படும் ஒரு வடிவவியலாகும், அங்கு புள்ளிவிவரங்கள் இரு பரிமாணங்களாகவும் மற்றும் தட்டையான தாள் போன்ற தட்டையான மேற்பரப்பில் வழங்கப்படுகின்றன.

 நிஜ வாழ்க்கையில், பூமியின் மேற்பரப்பில், மிகக் குறுகிய தூரம் பயணிப்பது ஜியோடெசிக் எனப்படும் வளைவு ஆகும்.

 வரைபடத்தில், நியூயார்க் மற்றும் மாஸ்கோ நகரங்கள் குறிப்புகளாகப் பயன்படுத்தப்பட்டன.

 ========
 பூமி ஒரு பந்தைப் போன்ற வடிவத்தில் உள்ளது, எனவே பந்தில் பயணிக்க எந்த குறுகிய வழியும் பெரிய வட்டம் அல்லது வளைவு பாதை என்று அழைக்கப்படுகிறது.  பெரிய கடலை கடக்கும்போது கப்பல்களும் இதையே பின்பற்றுகின்றன.

 பூமியின் மேற்பரப்பில் நாம் ஒரு வெற்றுப் பாதையை ஓட்டுவதை உணர்ந்தாலும், நடைமுறையில் அது கிட்டத்தட்ட 6400 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட வட்டத்தின் வளைவு போன்ற வளைந்த சாலையாகும்.  நமது பூமியிலிருந்து ஒரு நிலையான உயரத்தில் பறப்பதும் அப்படித்தான்.  2000 மீட்டர் உயரத்தில் பறக்கும் ஒரு விமானம் உண்மையில் பூமியின் ஆரம் மற்றும் 2 கிலோ மீட்டருக்கு சமமான ஆரம் வட்டத்தின் வில் மீது பறக்கிறது.

-படித்தது

Sunday, 10 November 2024

புத்தகம்-22


Reading_Marathon2024
#24RM050

Book No:22/100+
Pages:152

கதைக் கம்பளம்
-ச. தமிழ்ச்செல்வன்

ஸ்வீட் கடைக்குச் சென்று ஒரே ஒரு ஸ்வீட்டினை மட்டும் வாங்காமல் எல்லா சுவீட்டுகளையும் சாப்பிட்டு பார்த்தால் எப்படி சுவையாக இருக்குமோ அதுபோல இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு எழுத்தாளர்களால் எழுதப்பட்டு சரியான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிய சுவை உளள தொகுப்பாக இது அமைந்துள்ளது. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் மாணவர்களிடமும் வாசிப்பாளர்களிடம் ஆசிரியர் நான்கு விதமான கேள்விகளை கேட்கிறார் ..அது இன்னும் அக்கதையினை மீளாய்வு செய்து நமக்குள் நாமே விவாதித்துக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது.

முகத்தில் அவர் கொண்டு வர நினைத்திருந்த சாதாரண தன்மை மெல்ல மெல்ல பரவுவதை உணர்ந்தேன் என்று முன்னுரையிலேயே கதைகளை சொற்களால் நெய்துவிடும் திருச்செந்தாழையின் விலாசம்  கதை ராமவிலாசத்தின் வரலாற்றையும் மனித வரலாற்றையும் பேசுவதாக முதல் கதை உள்ளது.

முதன்முதலாக கிராமத்துக்கு வரும் பேருந்தினைப் பார்த்து அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாரும் அதிசயிருக்கின்றனர். மாடுகளை பேருந்தில் எங்கே கட்டி உள்ளார் என்பதை கண்டறியும் செம்பட்டை தான் அந்த ஊரில் பெரிய சயின்டிஸ்ட் ஆக வலம் வருகிறான். நகைச்சுவையோடு க.சீ.சிவக்குமார் சொல்லும் அந்த பஸ் கதை நம்மையும் அந்த ஊரில் பயணிக்க வைக்கிறது.

எண்பதுகளில் தொண்ணூறுகளில் தொலைக்காட்சியில் தோன்றுவது என்பது கடவுளாய் வரம் கிடைத்ததற்கு சமம் தான். டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க சொல்லும் ஒரு மனிதனும் அங்கு நடைபெறும் உரையாடல்களுமாய்
வேலையில்லாத இளைஞனின் கதையை சொல்லி இருப்பார் எழுத்தாளர் ஞா‌நி

அவன் நம்மளுக்கு எதிரி இல்லை நம்ம கோபம் தான் நம்மளுக்கு எதிரி. அதுதான் நம்மள கொலை வாங்குது என்ற கருத்தினை பேசும் கதையாய் எதிரி கதையை எழுத்தாளர் இமையம் எழுதி இருப்பார். காவல் நிலையத்துக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கச் செல்லும் ஒரு பெண்ணின் பார்வையும் பெண்ணினை அடித்தவரின் பார்வையும் காவல் நிலையத்தில் நடக்கும் அணுகுமுறையும் எவ்வாறு ஒரு கட்டத்தில் பெண்ணுக்கு எதிரியாக தெரிகிறது என்பதை நெற்றி போட்டில் அடித்தால் போல கதையில் சொல்லி இருப்பார்

பஸ் ஸ்டாண்டில் பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்யும் அயினுக்கு 5 பெண் பிள்ளைகள். ஆண் பிள்ளைகளை எதிர்பார்த்து ஏமாந்த ஏழை. நாள்தோறும் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்தால் தான் 30 ரூபாய் கிடைக்கும். இந்த அன்றாடம் காட்சியை வாழ்க்கையில் ..எட்டு குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பேருந்தில் ஏறும் போது ஒரு பெண் தன் குழந்தையை வைத்துக் கொள்ளும்படி தருகிறார் .அதை வாங்கி வைத்துக் கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்தால் பெண்ணினை காணவில்லை .எந்த இடத்தில் தேடியும் அவள் தாயினை கண்டறியாதலால் தான் திரும்பவும் வீட்டிற்கு வருகிறான். ஏற்கனவே பெண்பிள்ளைகள்.. தற்போது இன்னொரு பெண் பிள்ளையா என்று ஆயிரம் கேள்விகளுடன் வரும்போது அவன் மனைவி எதிர்கொண்ட விதமும் ,கருணை பொங்கும் ஏழையின் பார்வையும் லட்சுமண பெருமாள் வயனம் கதையில் எழுதி இருப்பார்.

வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்கும் தன் அக்காவின் வீட்டுக்காரர் உலகநாதனை பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்படும். ஒரு கட்டத்தில் அவர் செய்யும் காகித பொம்மைகளை பார்த்து மனமிறங்கும் அவன் அவரிடம் நட்பு கொள்கிறான். இப்படியே சென்று கொண்டிருக்கும் நாட்களில் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய நேரிடுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை இல்லாத தன் அக்கா மாமாவை சந்திக்க ஊருக்குச் செல்கிறான். அப்போது மாமா மளிகை கடையில் பொட்டலம் கட்டும் தொழில செய்கிறார் .அப்போது தான் இளமைப் பருவத்தில் தனக்கு செய்து கொடுத்த பொம்மைகளை மீண்டும் செய்து தரச் சொல்கிறான். அப்போது அந்த காகித பொம்மையை செய்யும் போதெல்லாம் பல சரக்கு கட்டும் பொட்டலமாக வருகிறது. அற்புதங்கள் தாங்கள் ஒரு காலத்தில் இருந்ததற்கான ஏதாவது அடையாளத்தை விட்டு வைக்காமல் போவதில்லையே. இழந்ததை நினைத்து தவித்துக் கொண்டிருக்கின்ற என் மாமாவின் கண்களில் அன்பின் ஒளி மீந்திருந்ததை நான் உணர்ந்தேன் என்று இறுதியில் உதயசங்கரின் கதை நம்மை நெகிழ வைக்கிறது.

நகரங்களில் வீடு மாறுவதற்கான வலியையும் வேதனையும் ஒரு வாடகை வீட்டுக்காரரின் பார்வையிலிருந்து அணுகும் ஆதவன் தீட்சன்யா தனது காக்கை குருவி உங்கள் ஜாதி என்னும் கதையில் விவரிப்பார். கடைசி பெஞ்ச் காரர்களின் உலகத்தினை தேர்வு எழுதும் நாட்களில் நடைபெறும் சம்பவங்களையும் கார்த்திக் புகழேந்தி தேர்வு காலம் கதையில் சொல்லி இருப்பார். 

கே என் செந்தில் அவர்களின் விருந்து கதை மிகவும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏற்கனவே தொகுப்பு நூலில் கதையினை படித்திருந்தாலும் இந்த கதம்ப மலரில் அந்த கதையும் தனித்து தெரிந்ததாய் அமைகிறது. கட்சித் தலைவரின் பிறந்தநாளில் வழங்கப்படும் பிரியாணியை உண்ணும் ஆர்வத்தில் பிச்சைக்காரர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் இறுதியில் என்ன ஆனது என்பதை தனக்கே உரிய வார்த்தை ஜாலங்களுடன் கதையினை நம் முகத்துக்கு நேராக கற்பனையில் விரியும் படி சொல்லி இருப்பார்.

கேபிள் டிவி வசூலுக்கு செல்லும் சிறுவனிடம் பணம் கொடுக்காத வாடிக்கையாளர்கள், பணத்தை வசூல் செய்து வர வலியுறுத்தும் முதலாளி என தற்போது இருக்கும் மன அழுத்தம் வேலை அழுத்தம் அந்த மாணவனுக்கும் ஏற்படுகிறது. அந்த அழுத்தத்தினால் அவன் இழந்தது என்ன பெற்றது என்ன என்பதனை அரிசங்கரின் புதுச்சட்டை கதை நமக்கு சொல்கிறது.

செந்தில் ஜெகதானனின் ஆடிஷன் கதையில் குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை பெற்றிருக்கும் உதவ இயக்குனர் முன்னாள் காதலியின் மகள் தேர்வுக்கு வரும் போது நிகழும் சம்பவங்களும்.. கலைடாஸ்கோப் மனிதர்களை அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சாதாரண மனிதனின் பார்வையை கார்த்திக் பாண்டியன் கதைகளிலும், ஐ கிருத்திகாவின் நாய்சார் கதையில் நாயின் தியாகமும் அன்பும் நன்றியுள்ள விசுவாசமும் கதைகளைப் படிக்கின்ற நமக்கும் ஏற்படுகின்றது.

*அவர் கண்களில் ஒரு தழும்பிய மகிழ்ச்சி கடந்திருக்கும் என உணர்ந்தேன் 

* பள்ளிச் சிறுவன் சிலேட்டையை நீட்டுவதை போன்ற ஒரு அறியாமை நிறைந்த முகத்துடன் மாப்பாவிடம் தந்தார்

*ஆவேசமான கண்கள் காருக்கு முன்பாக சாலையில் ஓடியபடி இருந்தன.

*பழைய நாட்களின் ஞாபகங்கள் மறதியின் புதைச்சியேற்றிலிருந்து மீறி கிளம்பி வந்தன

*தொலைந்த ஞாபகங்களை தேடிப் பிடிப்பவர் போல நெற்றியை சுருக்கினார்

ஆறாம் வகுப்பில் சிறுகதைபூங்கொத்து புத்தகம் வாங்கியவுடன் அந்த கதைகளில் வரும் 10 கதைகளையும் படித்து விடுவேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். குழந்தைகளுக்கு சொல்லும் படி இருக்கும். நாம் கற்றுக் கொள்ளும்படி இருக்கும் .நாமே முயன்று வாசித்தது மிகவும் இனிமையான வாசிப்பு நாட்களில் ஒன்று. அதேபோல இந்த புத்தகத்தில் உள்ள 15 கதைகளை வெவ்வேறு எழுத்தாளர்கள் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு அனுபவங்களை நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. ஒவ்வொரு கதையும் கதை நிகழ்ச்சியும் நம் வாழ்வினோடு சேர்த்து அசை போட வைக்கிறது. அனுபவங்களை கூர்தீட்டுகிறது. மிகச் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து தொகுத்த எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

சுதர்சன்


தன்னைப் பற்றிச் சிந்திக்கிற எல்லாருக்குமே ஒரு existential crisis வரும். ஒரு anxiety இருக்கும். எதற்காக உலகத்துக்கு வந்தோம்? உடல் ஒத்துழையாமல் இறந்துவிடுவோமோ? இந்த வாழ்க்கையோட ஆழமான அர்த்தம் என்னவென்று எல்லாம் கேள்வி வரும். இந்தக் கேள்விகள் எல்லாம் எனக்குள்ளும் வராமல் இருக்குமா என்ன? ஆனால் அப்படி எனக்குள் தோன்றுகிற அந்த எண்ணங்களை, Anxiety இனை எல்லாம் எதிர்த்து சண்டை போடுகிற சக்தி சிலவற்றுக்கு உண்டு. 

உதாரணமாக, அழகை ரசிப்பது, கலையில் அழகு காண்பது, புதிது புதிதாக எதையாவது அறிந்துகொள்வது, புத்தகங்கள், காதல், காமம், அம்மா, தமிழ், பெண்கள், இயற்கை, அன்பு, அழகின் ஆராதிப்பு என்று ஏராளம் இருக்கின்றன. இவையெல்லாம்  ஒன்றிலேயே என்னைத் திளைத்திருக்கச் செய்யும் விடயங்கள். நான் நுணுக்கம் தேடும் விடயங்கள். என்னை அந்தப்பொழுதில்  இன்பமாக வைத்திருக்கும் விடயங்கள். ஆமாம், இன்பம். என்னுடைய தத்துவம் இன்பம். ஆனால் அந்த இன்பங்களை இன்னுமின்னும் ஆழமாக, அர்த்தமுள்ளதாகக் காண விளையும் போது, நம்மை நாமே உணர்ந்து அந்த நான் என்கிற புரிதல் ஊடாக அவற்றை இரசித்துக் காண விளையும் போது அது இன்னோர் உன்னத நிலைக்குப் போய்விடுகிறது.  

-சுதர்சன்

Friday, 8 November 2024

குடத்துள் விளக்கும் தடற்றுள் வாளும் போல இதுகாண் அன்பு என்று போதத் திறந்து காட்டலாகாது. அன்புடையரான குணங் கண்டவிடத்து இவை உண்மையான ஈங்கு அன்பு உண்டென்று அனுமித்துக் கொள்ளற்பாற்று! அன்புடையரான குணம் யாவையோ எனின்... சாவிற் சாதல், நோவின் நோதல், ஒண்பொருள் கொடுத்தல், நன்கினிது மொழிதல், புணர்வு நனிவேட்டல், பிரிவு நனியிரங்கல் என இவை.’’ இது 8-ம் நூற்றாண்டு உரைநடை. 21-ம் நூற்றாண்டுக்கு மொழிபெயர்த்தால், அதில் உள்ள சிந்தனை தெளிவாகிறது; இன்றைக்கும் செல்லுபடியாகிறது. ‘குடத்துள் விளக்கு, உரைக்குள் கத்தி போல... இதுதான் அன்பு என்று அறியுமாறு திறந்து காட்ட முடியாது. அன்புள்ளவரின் குணங்களைப் பார்க்கும்போது இவை இருப்பதால் (உண்மையாய்) இங்கே அன்பு இருக்கிறது என்று அறிந்துகொள்ள முடியும். அன்புள்ளவரின் குணங்கள் என்னென்ன என்றால்... சாவில் சாதல், நோவு வந்தால் வருத்தப்படுவது, பொருள் உதவி செய்வது, நல்லதாக, இனிமையாகப் பேசுவது, சந்திப்பதை மிகவும் விரும்புவது, பிரிவில் மிகவும் வருந்துவது என இவை.’-சுஜாதா

Saturday, 2 November 2024

கீட்ஸ்


Too happy in thine happiness
-கீட்ஸ்

உங்கள் மகிழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருங்கள்

இந்த வரியை பார்த்தவுடன் சாதாரணமாக தோன்றும். ஆனால் அதை நினைக்க நினைக்க உளவியல் ரீதியான ஊற்று நம் மனதில் சுரக்கும். ஏனெனில் மகிழ்ச்சி என்பது பிறர் மட்டுமே இருப்பார்கள். சந்தோஷம் முழுவதும் பிறருக்கு மட்டுமே கிடைக்கும். தனக்கு எப்போதும் கிடைக்காது என்று ஒருவன் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொள்கிறான்.

 தனக்கு கிடைத்த மகிழ்ச்சியை கூட கொண்டாடாமல் பிறரின் மகிழ்ச்சியை பார்த்து ஏக்க உணர்வு கொள்கிறான். அதற்குத்தான் கீட்ஸ் அவர்கள் நைட்டிங்கேல் பறவை தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தப் பாடுகிறது. அதனை பார்த்து பொறாமைப்படாமல் உங்களுடைய மகிழ்ச்சியில் மகிழ்வாய் இருங்கள் என்று கவிஞர் கூறுகிறார்.

 தற்காலத்தில் இதை யோசித்துப் பார்த்தோமேயானால் பிறர் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து நாம் பெரும்பாலும் பொறாமை கொள்கிறோம். அப்படி இல்லாமல் நம்முடைய மகிழ்ச்சியை நாம் தான் முதலில் கொண்டாட வேண்டும் என சின்னஞ்சிறு வரிகள் பேருண்மையை உணர்த்துகிறது

நியாண்டர் செல்வன்


"முடிவற்ற குரங்குகள் தியரி" (Infinite Monket Theorem) என ஒரு கோட்பாடு புள்ளியியலில் உண்டு

1913 ஆண்டு எமிலி போரெல் எனும் கணிதவியல் நிபுனர் இதை முன்மொழிந்தார். இதன்படி "இன்பினிட்டி" எனும் முடிவற்ற எண்ணிக்கையில் உள்ள குரங்குகள் கையில் தலா ஒரு கணிணியை கொடுக்கவேண்டும். அதன்பின் அந்த குரங்குகள் தொடர்ச்சியாக அந்த கணிணியில் நொடிக்கு ஒரு பட்டனை அமுக்கவேண்டும்

இப்படி முடிவற்ற எண்ணிக்கையிலான குரங்குகள், பல, பல லட்சம் கோடி ஆண்டுகள் கணிணியை தட்டச்சிகொண்டே இருந்தால், ஏதோ ஒரு குரங்கு ஷேக்ஸ்பியரின் மொத்த படைப்புகளையும் எழுத்து மாறாமல் ரேண்டம் ஆக தட்டச்சும் என்றார் எமிலி

அளவற்ற நேரம் இருந்தால் தற்செயல் ஆக எது வேண்டுமானாலும் நடக்கலாம். ரேண்டம் ஆக நடக்கும் விசயங்களுக்குள் தற்செயலான முறையில் ஒழுங்கு உருவாகும் என இந்த கோட்பாடு கூறியது

பிரபஞ்சம் உருவானது, உயிர்கள் உருவானது எல்லாவற்றையும் இந்த முடிவற்ற குரங்குகள் தியரி விளக்குவதாக கூறப்பட்டது

ஆனால் இந்த கோட்பாடு தியரிட்டகல் ஆக சாத்தியமா என நூறாண்டுகளுக்கு மேலாகியும் யாரும் கணிதவியல் முறையில் ஆராயவில்லை

இந்த ஆண்டுதான் பிபிசி ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இருவர்  "இந்த தியரி சாத்தியமா?" என ஆராய்ச்சி செய்துவிட்டு பின்வரும் தீர்ப்பை சொன்னார்கள்

"பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அணுக்களையும் தலா ஒவ்வொரு குரங்காக மாற்றி, அனைத்தின் கையிலும் ஒரு கணிணியை கொடுத்து, அவற்றை நொடிக்கு ஒரு எழுத்தை அமுக்க சொன்னால், பெருவெடிப்பில் இருந்து பிரபஞ்சம் அழியும்வரையிலான நேரத்தை கொடுத்தாலும் அவற்றால் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை மட்டுமல்ல, வெறும் 79 எழுத்துக்கள் கொண்ட ஒரு டாக்குமெண்டை கூட உருவாக்க முடியாது

பல,பல கோடி பிரபஞ்சங்களை உருவாக்கினாலும், அதிலும் இது நடப்பதற்கான சாத்தியமே இல்லை" என்றார்கள்

ஆக போதுமான நேரத்தை கொடுத்தால் தற்செயலாக எல்லாமே நடக்கும் எனும் கோட்பாடு பிழையானது என்றது ஆய்வு.  இதை கண்டுபிடிக்கவே நூறான்டுகள் ஆகியிருக்கிறது

இதற்கு பிபிசி கொடுத்த தலைப்பு "குரங்குகள் எப்போதும் ஷேக்ஸ்பியரை எழுதாது"

எது முதலில் வந்தது — ஒழுங்கா, குழப்பமா?  
பிரபஞ்சத்தின் புதிரை யாரும் அறிந்ததில்லை

குரங்குகள் டைப் அடித்தால் 
ஷேக்ஸ்பியர் ஆகுமென்றார்கள்
ஒரு ஒற்றைபக்கத்தை கூட 
அவற்றால் அடிக்கமுடியவில்லை

எதனால் உருவானது இயற்கையின் நடனம்?  
எங்கிருந்து தோன்றின உலகத்து உயிர்கள்  
கூடுமா குழப்பத்தில் ஒழுங்கு தோன்ற?
நாம் அறிய முடியாத புதிரின் மொழியாக.

இது கேள்வி இல்லை, இது ஓர் சிந்தனை,  
ஒழுங்கில் இருந்து பிறந்தது ஒழுங்கற்றதன்மையா
அல்லது ஒழுங்கற்ற ரேண்டமில் பிறந்தது ஒழுங்கா?

நாம் காணும் உலகில் ஒவ்வொரு அணுவும்,  
அந்த ஒழுங்கின் அரிச்சுவடியா, குழப்பத்தில் பிறந்ததா?
குழம்புகிறான் மனிதன்
குழப்பமின்றி டைப்படிக்கின்றன குரங்குகள்
ஷேக்ஸ்பியர் ஆகும் ஆர்வத்தில்

#பூமியும்_வானமும்

~ நியாண்டர் செல்வன்