#Reading_Marathon2025
#25RM055
#12மாதம்_12எழுத்தாளர்
Book No:81/100+
Pages:-175
மாயம்
-பெருமாள் முருகன்
எழுத்தாளர் பெருமாள் முருகனின் 20 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு தான் இப்புத்தகம். பொதுவாகவே பெருமாள் முருகன் அவர்கள் கதாபாத்திரங்களுக்கு பெயர் சூட்டுவது வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடிப்பார். அதேபோல் இந்த புத்தகத்தில் உள்ள 20 கதைகளும் எறும்பு வரிசை கதைகள் என சொல்லும்படி ஒரே ஒரு கதாபாத்திரம் அல்லது ஒரே ஒரு பெயர் கொண்ட கதாபாத்திரம் 20 கதைகளின் நாயகனாக உருவெடுக்கிறான். அதாவது இரட்டை தசாவதாரம் போல. ஆனால் எல்லா கதைகளும் தொடர்புடையது இல்லாமல் தனித்தனியே முருகேசன் என்னும் கதாபாத்திரத்தின் வழியே எளிய மக்களின் வாழ்வியல் கதைகளை சொல்லி இருப்பார்.
முருகேசன் என்னும் இளைஞன் தான் இந்த புத்தகத்தின் நாயகன் என்று சொல்லலாம் .அவன் ஒரு எளிய மனிதனாக, பெண் தேடும் இளைஞனாக, கல்லூரியில் படிக்கும் மாணவனாக, குடும்பஸ்தனாக என பல்வேறு அவதாரங்களை எடுப்பது போல இந்த கதைகள் அமைந்துள்ளது. கதைகளில் மிகப்பெரும் புதிர்களோ எதிர்பாராத திருப்பங்களோ என இல்லாமல் ஒவ்வொரு கதைகளும் சமவெளியில் பயணிப்பது போல மலைகளில் ஏறுவது போல காடுகளில் அலைந்து திரிவது போல பல்வேறு அனுபவங்களை தருகிறது.
ஊரு கதைகளின் இறுதிகளும் நாம் ஊகிக்க முடியாத சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன சில கதைகளில் இயல்பாகவும் முடிந்து இருக்கின்றன.
வாசகர்களைப் பிடித்து உலுக்காத வண்ணமும் இயல்பான நடையில் இந்த கதைகள் பவனி வருகின்றன.
தந்தை மகனுக்கு உள்ள உறவை பற்றிய கதையில் மகன் தந்தையை மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து விட்டால் அல்லது புகழடைந்து விட்டால் ஒரு தந்தையின் எண்ணம் பெருமிதப்படும் அதோடு தன்னுடைய சுயத்தை இழந்ததை எண்ணி ஒரு சில கனமேனும் அவர்களும் இயலாமையில் ஆற்றாமையில் வருந்துவார்கள் என்பதை தான் கடைக்குட்டி, நுங்கு, ஆட்டம், தொழில் போன்ற கதைகளில் மகனின் வளர்ச்சி அப்பாவின் சுயத்தை எப்படி ஒருகணமேனும் எண்ண வைக்கிறது என்பதை உளவியல் பூர்வமாக சொல்லி இருப்பார். மாறாக ஒளி என்னும் கதையில் தந்தையை இழந்து வாடும் மகனின் பார்வையில் தந்தை குறித்து பிம்பத்தை இதில் பதிவு செய்திருப்பார்.
பொதுவாக காதல் திருமணம் இன்றி பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணத்தில் உள்ள பெரும் குறைய பெண் தேடும் படலம் தான். அவ்வாறு பெண் தேடி அலுத்துக் கொள்ளும் இளைஞனின் மனநிலையை முருகேசன் தன்னுடைய கதைகளில் பதிவு செய்திருப்பார். போதும் என்னும் கதையில் காதல் தோல்வியை தாங்கும் இளைஞனாகவும், புதிதாய் திருமணமான புதிதில் ஏற்படும் கணவன் மனைவி இடையேயான பிணக்குகள் கதையை பசி என்னும் கதையிலும் ,திருமணம் ஆகி விருந்துக்கு செல்லும் வீடுகளில் பணம் வைத்து கொடுப்பதில் கணவன் மனைவியிடையே வரும் சந்தேகம் ஈகோவாக உருவெடுக்கும் தருணங்களில் பெண் என்ன செய்வார் என்பதனை அபிஷேகம் கதையில் அழகாக சொல்லி இருப்பார்.
இளம் வயதில் நண்பர்கள் கிடைப்பது வரம் ஆனால் சில சமயங்களில் நண்பர்களுக்கிடையே ஏற்படும் உணர்வுகள் சண்டைகள் சச்சரவுகள் பற்றிய கதைகளை தமக்கே உரிய பாணியில் இயல்பாக சொல்லி இருப்பார். அருவிக்கரையில் குளிக்கச் செல்லும் நான்கு நண்பர்களில் ஒருவன் இறந்து போனால் மீதமுள்ளவர்களின் மனநிலையை அருவி என்ன?இறந்து போன மகனை பெற்ற பெற்றோரின் மனநிலை எவ்வாறு மற்ற நண்பர்களை நடத்துபவர்கள் என்பதனை அருவி எனும் இக்கதை அழுத்தமாக விவரிக்கிறது.
முருகேசன் நண்பனான ரமேஷ் காதல் திருமணம் செய்து கொள்ள காதலியை முருகேசன் வீட்டிற்கு அழைத்து வருகிறான். தவறான நடவடிக்கையாக இருந்தாலும் நண்பனின் ஆசை நிறைவேற்றும் விதமாக முருகேசன் குடும்பமே நடந்து கொள்கிறது. ஆனால் விடியற்காலையில் எழுந்து பார்த்தால் ரமேஷை காணவில்லை அவன் அம்மாவின் பாசத்தினால் ஊருக்குச் சென்று இருப்பான். அங்கே உள்ள பெண்ணின் மனநிலை, முருகேசனின் குடும்பமும் தவிப்பும் இறுதியில் அந்த பெண் எடுக்கும் முடிவும் நான் என்னும் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.
பொதுவாக பிரதிபலன் பார்க்காமல் செய்யும் உதவிகள் தான் நண்பர்கள் செய்வது. இது பண விஷயத்துக்கும் நிச்சயம் பொருந்தும். அடிக்கடி பணம் கேட்டு வாங்கிக் கொள்ளும் வீரேஷ் ஒருமுறை முருகேஸுடம் 10,000 உடனே அனுப்ப வேண்டும் என்று கூறுகிறான். மாத ஊதியத்தில் வேலை பார்க்கும் இவனிடம் பணம் இல்லை என்றாலும் பல்வேறு யோசனைகளுக்கு பின் அந்த பணத்தினை நண்பனுக்கு உடனே அனுப்புகிறான். ஆனால் அதற்கு பின்பு தான் தெரிகிறது அந்த நண்பனும் அவர்களின் நண்பர்களும் வைத்த சோதனை தான் அந்த பணம் கேட்பது என்று கூறி பணத்தினை திரும்ப 10500 ஆக அனுப்பும் போது நண்பனின் நம்பிக்கையை பெற்ற பெருமிதம் இருந்தாலும் ஒருமுறை சலனம் வந்ததை எண்ணி முருகேசன் வருந்துவது இயல்பான மனிதர்களின் எண்ணங்களை நம் முன் நிறுத்துகிறது.
ஒரு நொடி நேரத்தில் எடுத்த தவறான முடிவுகள் எவ்வாறு பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் ,உளவியல் சிதை மாற்றத்துக்கு உள்ளாகும் போது மனித நடவடிக்கைகள் எவ்வாறு எல்லாம் தவறான எண்ணத்தினை ஏற்படுத்துகிறது என்பதையும் முத்தம் என்னும் கதையிலும் பொண்டாட்டி என்னும் கதையில் கொலை செய்யும் அளவுக்கு செல்லும் காதலனின் நிலைமை சமகாலத்தில் நடைபெறும் கொலைகளுக்கான காரணங்களாகவும் இருக்கலாம் என்று எண்ணத்துடன் படிக்க வைக்கிறது. சில சமயம் நாம் நகைச்சுவை என்று செய்வதும் சர்ப்ரைஸ் செய்ய நினைப்பதும் எவ்வாறு தவறான நிலையை ஏற்படுகிறது என்பதனை வீராப்பு என்ற கதை நமக்குச் சொல்கிறது.
கதைக்களங்கள் மிகவும் யதார்த்தமாகவும், கிராமத்து பின்னணியிடனும் இருக்கிறது. கதை நாயகன் பெரிய வேலை செய்வது போல் காட்டாமல், ஆடு மேய்ப்பவராகவும் அட்டை கம்பெனிக்கு வேலைக்கு போவோராகவும், காரை வேலை செய்பவனாகவும் கதை மாந்தர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். எனினும் அன்றாட வாழ்க்கையில் விளிம்பு நிலை மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சனைகள், வாழ்வியல் சிக்கல்கள் உளவியல் காரணங்கள் பிரச்சனைகள் என அவர்கள் கடந்து செல்லும் வாழ்க்கையை நம்மையும் வாழ்ந்து பார்ப்பது போல் தன் எழுத்தில் வழயே காட்டியிருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment