Sunday, 4 May 2025

கோகுல் பிரசாத்


நவீன மனிதனின் வாழ்வில் அனுபவங்கள் குறைந்துவிட்டன. சராசரி மனிதனின் அனுபவக் கணக்கு எப்போதுமே குறைவானது என்றாலும் சமகாலத்தில் அது மேலும் அருகிவிட்டது. அனுபவச் சேகரத்தின் இடத்தைத் தற்போது எதிர்வினைகள் ஆக்கிரமித்துள்ளன. தீ சுட்டதும் கை தன்னிச்சையாக விரைந்து விலகி உதறிக்கொள்ளும் உடலின் மறிவினை (reflex action) போல மனமும் எதிர்வினைகளுக்குப் பழகிவிட்டது. உடலின் புறவய reflex-ஐப் போல அகவயமான reflex-ஆக மனம் செயல்படுகிறது. நமக்கு நேர்ந்த மாபெரும் இழப்பு என இதையே குறிப்பிட முடியும்.

ஒரு நிகழ்வை அதன் போக்கில் ஒழுகிச்செல்ல நாம் அனுமதிப்பதில்லை. நமது கருத்துகளால், ஓயாத எண்ணங்களால், அகந்தையால், எமோஜிக்களால் அன்றாடச் சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றிக்கொண்டே இருக்கிறோம். பின்னர், அந்த எதிர்வினைகளையே அனுபவம் என்றெண்ணி மயங்குகிறோம். Reacting and responding. இங்கே அறிதல் (revelation) நிகழ்வதில்லை.

புதிதாக ஒருவரைச் சந்திக்கிறீர்கள், அவருடன் உரையாடுகிறீர்கள், அந்தச் சந்திப்பு நட்பாக நீடிக்கிறது என வைத்துக்கொள்வோம். அவருடைய ரசனை, அறிவு, அழகு, குணம், பேச்சு என ஏதேனுமொரு பண்பு பிடித்துப்போய் நட்பு மலர்கிறது எனில் அது உங்களது விழிப்புநிலையின் அல்லது நீங்கள் வளர்த்தெடுத்த ஆளுமையின் இயல்பான எதிர்வினை மட்டுமே. தன்னை ஒத்த சக மனிதரைக் கண்டுகொண்டதிலுள்ள ஆர்வம், குறுகுறுப்பு. 

இந்த நட்பானது எதிர்வினை அல்லது ஒத்திசைவுள்ள எண்ணப் பிரதிபலிப்பு (harmonious reflection) என்கிற படிநிலையிலிருந்து ஆழ்ந்து சென்று வாழ்க்கை அனுபவமாக மாற வேண்டுமெனில் அகங்காரத்திலிருந்து சுயத்திற்கான (ego to self) பயணம் நிகழ வேண்டும். மன நகர்வு உண்டாக வேண்டும். ஒரு சுற்றுலாவுக்குச் செல்கிறீர்கள். இயற்கைப் பேரெழில் காட்சியைப் பார்க்கிறீர்கள். அப்போது ஏற்படுகிற ஆனந்தமும் பரவசமும் மனத்தின் எதிர்வினைகள். ஆனால், இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் உங்களது அகம் சீண்டப்பட்டுப் பிரமித்துப்போய் மூர்ச்சையாகிறீர்கள், உள்ளடங்கி இப்பிரபஞ்சத்தின் சிறுதுகள் என உணர்கிறீர்கள் எனில் அது அனுபவம். இந்த மாற்றம் சுயத்திலிருந்து அகந்தைக்கு (self to ego) எனத் தலைகீழாகவும் நடக்கலாம்.

எப்படியாகினும் உள்ளுக்குள் ஓர் உடைவு, ஓர் அசைவு ஏற்பட்டால்தான் அதனை அனுபவமாகக் கணக்கில்கொள்ள முடியும். உங்களது வாழ்க்கைக் கண்ணோட்டத்தை மாற்றாத எதுவும் உள்ளார்ந்த தரிசனத்துக்கு வழிகோலுவதில்லை. சிரிப்பு, அழுகை, கோபாவேசம் போன்ற மேலோட்டமான உணர்ச்சிகளும் எதிர்வினைகளிலேயே அடங்கும். இவற்றை மனத்தில் இருத்தி நம் வாழ்க்கையில் உண்மையிலேயே எத்தனை அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன எனச் சிந்திக்கலாம். எதிர்வினைகளுக்கான களம் பெருகி அனுபவங்களுக்கான இடைவெளி குறுகியிருப்பது புரியும். 

We’re not experiencing anything, just reacting. வாழ்க்கையின் பெரும்பகுதி வெறுமனே எதிர்வினைகளால் நிரம்பியிருக்குமானால் அதைவிட அவலம் வேறில்லை.

-கோகுல் பிரசாத்

No comments:

Post a Comment