Tuesday, 13 May 2025

ராமானுஜம்


தற்குறிப்பேற்ற அணி- கவிமனமும் மனப் பிறழ்வும்

இயற்கையாக நடக்கும் விஷயத்திற்கு வேறொரு உள்ளர்த்தம் இருப்பது போல் கற்பிப்பது தற்குறிப்பேற்ற அணி!

ராமன் மணிமுடி சூடும் நாள் விடிகிறது. அயோத்தியில் சேவல் கூவுகிறது . " பட்டாபிஷேகம் இல்லை. ராமன் காட்டுக்குப் போகிறான். இது தெரியாமல் தூங்கிறீர்களே மக்களே" எனத் தங்கள் வயிற்றில் அடித்தபடி கூவுகின்றனவாம் சேவல்."தம் வயிறெற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே " என்கிறார் கம்பர். 

இதே போல் சிலப்பதிகாரத்திலும் உண்டு. கொடிகள் ஆடுவது வரவேண்டாம் எனக் கோவலனைச் சொல்வது போல் இருக்குமாம்.

"பொய்கை என்னும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள். தென்றல் என்னும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்" என இயற்கையாக நடக்கும் நிகழ்வை தென்றல் காதலன் நீர்மகளின் பூவாடையை விலக்கினான் எனப் புலமைப்பித்தன் எழுதிய  அபாரமாக வரிகளில் புதைந்திருப்பதும் இது போன்ற கற்பனைதான்.

இது கற்பனை என அறிந்திருக்கும் வரை அது ரசிக்கத்தக்கது. 
அதையே நிஜம் என நம்பினால் சாதாரண நிகழ்வுகளுக்குப் பின்னால் ஏதோ உள்ளர்த்தம் ( Unusual Significance) இருப்பது போல் யோசிக்க ஆரம்பித்து விடுவோம். சகுனம் போன்ற மூட நம்பிக்கைகள் பிறப்பது இங்குதான். 

 அதீதமானால் இது மனப்பிறழ்வில் ( Delusion) கொண்டுவிடும். இயற்கையாக நடக்கும் விஷயங்களுக்குப் பின் ஒரு விசேஷ உள்ளர்த்தத்தைக் கற்பிப்பது. Delusional mis interpretation or Delusional Perception.

குணா திரைப்படத்தில் பெயர்ப்பலகை தற்செயலாகச் சுட்டிக் காட்டும் பெண்தான் அபிராமி என குணா முடிவுக்கு வருவார். அது போல.

ஒரு நோயர் என்னிடம் சொன்னார் " புதிதாக வேலைக்குச் சேர கிளம்பினேன். ரோட்டின் குறுக்கே ஒரு பஸ் நின்று கொண்டிருந்தது. யாரோ இந்த வேலை வேண்டாம் என  என்னை வழி மறிப்பது போல் தோன்றியது. திரும்பி வந்து விட்டேன்" . அதன் பின்னர் பத்தாண்டுகள் அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை.

கற்பனை இனிமையானது.
ஆனால் அதனை உண்மையென நம்ப ஆரம்பித்தால் அது மனப்பிறழ்வாகிறது.

Fantasy and delusion differ only in the degrees of belief.

டாக்டர் ஜி ராமானுஜம்

No comments:

Post a Comment