Wednesday, 18 January 2017

விரல்கள் பத்தும் மூலதனம்

வேலைகளல்ல வேள்விகளே!

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும் - உன்
கைகளில் பூமி சுழன்று விடும்
தோள்கள் உனது தொழிற்சாலை - நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச்சோலை
விழிவிழி உன்விழி நெருப்புவிழி உன்
விழிமுன் சூரியன் சின்னப்பொறி
எழுஎழு தோழா! உன் எழுச்சி இனி
இயற்கை மடியில் பெரும்புரட்சி

-எனும் தாராபாரதியின் கவிதைக்கிணங்க நான் பேச வந்துள்ளேன்.

நிறைய படித்தவர் ஜெயிக்க முடியுமா? பெரிய பணக்காரர் ஜெயிக்க முடியுமா?
இப்படிப்பட்ட கேள்விக்கு அவசியம் இல்லை.முனைப்பிருந்தால் அனைவரும் ஜெயிக்கலாம்.

மேதைகள் பிறக்கிறார்களா,உருவாகிறார்களா என்பது அடிக்கடி கேட்கும் கேள்வி.இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்

ஹாங்கேரியை சேர்ந்த லாஸ்லோ வின் ஆராய்ச்சி இதற்கு பதில் சொல்கிறது.அவரின் குழந்தைகள் மூன்று பேரை ஆய்வுக்கு எடுத்தார்.அவர்கள் சூஸன்,சோஃபியா,ஜூடித்.பெற்றோர்கள் செஸ் வீரர்களல்ல.ஆனால் பயிற்சி கொடுத்தார்கள்.தினசரி பயிற்சி,புதிர்கள் என வாழ்க்கை மொத்தமுமே சதுரங்கமானது.மகள் சூஸன் 4வயதில் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார்.1991ல் 22 வயதில் சேகரித்த புள்ளிகள் அடிப்படையில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.தொடர் பயிற்சி மூலம் வெற்றி அடைந்தது நீரூபிக்கப்பட்டது.

உன் கையில் விரல் இருக்கும்போது
உனக்கு வேறு எதுவும் தேவையில்லை

துரும்பை எடுத்து பார்த்தாலும்
இரும்பாய் ஆக்கும் சக்தி உனக்குண்டு என்பது புரியும்.ஒரு விஷயத்தை மனமே இல்லாமல் கடமைக்கு செய்வது ஒருவிதம்.இதனை இதற்காகதான் செய்கிறேன் என்கிற நம்பிக்கையோடு அதில் ஈடுபடுவது.இதனை நம்பும்போது உழைப்பும் திறமையும் பலமடங்கு உயர்கிறது.

பேதங்களை பிளந்து எறி
நீ ஆடும்
பல்லாங்குழியில் மட்டுமே
மேடு பள்ளம் இருக்கட்டும் என்பார் அப்துல்ரகுமான்.

ஏற்றமும்,ஏமாற்றமும் பற்றி கவலைப்படாமல் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்.எதிர்காலத்தில் இன்பமுடன் வாழ வேண்டுமானால் நிகழ்காலத்தை பயனுடையதாக,அறிவுடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்

"சாட்டையை எடுக்கும் அமைதியுடனும்
இரண்டாவதாக ஓங்கும் நிதானத்துடனும்
சுழற்றி வீசிய அடி கனத்துடன் செறிவாக அமையும் வகையில் நம் திட்டமிடல் இருக்க வேண்டும்.

வெந்ததை தின்று விதி வந்தால் சாவோமென அடிமைகளாய் வாழாமல்
சிகரங்களில் ஏறி கூடு கட்டும் கரங்கள் நம்முடையது.

சொந்த வாழ்வில் துயரங்களை தாண்டி,சமூகம் இழைக்கும் அவமானங்களை தாண்டி,தலைமுறை தலைமுறையாய் நிலைத்து நிற்கும்
மானுடம் தாங்கும் நம் நம்பிக்கையே நாளைய வரலாற்றை எழுதும்

மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையானவை உயரிய எண்ணங்களே.எண்ணங்களே மனதின் ஊற்றுக்கண்.

கனவுகள் பெரிதாக இருக்கும்போது உழைப்பு அதை விட பெரிதாக இருக்க வேண்டும்.

அறிவோடு உறவாடுவோம்
அழகோடு விளையாடுவோம்
நெறியோடு நடை போடுவோம்
நம்பிக்கை புகழ் பாடுவோம்

பூக்காட்டை பூக்க வைக்கும் புலர் ஞாயிறாய்
கறந்த பாலாய் இல்லாமல்
சுரந்த பாலாய் எண்ணி நடைபோடுவோம்

No comments:

Post a Comment