Sunday, 30 April 2017

மினிமீன்ஸ் பதிவிருந்து

துறவி ஒருவரிடம் பல இளைஞர்களும், இளம்பெண்களும் குருகுலத்தில் பாடம் கற்றுக் கொண்டிருந்தனர்.

துறவியும் அழகும், இளமையும், அறிவும் எல்லோரையும் பிரமிப்பில் ஆழ்த்த, ஒரு பெண்ணுக்கு மட்டும் அது காதலாய் மலர்ந்துவிட்டது.

அது தவறு என்று தெரிந்தாலும் மனது கேட்கவில்லை.

ஒருநாள் குருவை தனியே சந்தித்த அவள், தன் காதலை சொல்லவும் செய்துவிட்டாள்.

குரு அப்போதும் புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

லேசான குழப்பத்துடன் அவள் கேட்டாள்.

"கோபப்படாமல் சிரிக்கிறீர்களே.. நான் உங்களைக் காதலிப்பது தவறில்லையா.?"

குரு சிரித்தார்.

"கவலைப்படாதே.. நீ காதலிப்பதில் தவறேதும் இல்லை. நம் இருவருக்கும் எவ்வளவு காதல் இருக்க வேண்டுமோ.. அந்த மொத்த காதலும் உன்னிடமே இருக்கிறது.!"

அவள் சந்தோசத்துடன் கேட்டாள்.

"அப்படியானால் இது நிறைவேறுமா.? நாம் திருமணம் செய்துகொள்ளலாமா.?இந்த சமூகம் நம்மை தவறாகப் பேசாதா.?"

குரு புன்னகைத்தார்.

"அது நடக்காது. ஒரு பெண்ணாய் உன்னிடம் நம் இருவருக்குமான காதல் இருப்பதைப் போல, ஒரு குருவாய் நம் இருவருக்கும் எவ்வளவு கட்டுப்பாடு இருக்க வேண்டுமோ... அந்த மொத்தக் கட்டுப்பாடும் என்னிடம் இருக்கிறது.!" என்றார்.

இரு பறவைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டிப் போடுங்கள். அவற்றால் பறக்க முடியாது. இத்தனைக்கும் இப்போது நான்கு இறக்கைகள்.!

-ஜலாலுதீன் ரூமி.

ராஜேந்திரகுமார் இளைஞனாக இருந்தபோது அப்போது பிரசுரமாயிருந்த என் நான்கைந்து கதைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அவற்றைப் படித்தாரா என்று தெரியாது. அவர் படிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். அந்தக் கதைகள் தொலைந்து போய்விட்டன. இது அவருடைய விமரிசனம் என்று கூட நினைத்துக் கொள்ளலாம்.!

-அசோகமித்திரன்

பாரதியைப் பார்த்ததில்லை
அவன் கவிக்குரலைக் கேட்டதில்லை
நான் பார்க்கக் கிடைத்ததெல்லாம்
நலிந்ததொரு புகைப்படம்தான்
வெறும் புகை... படம்தான்
அந்தப் பெரும் நெருப்பெங்கே?
துள்ளும் சுடர் ஒளியெங்கே?
அட.. அட... அத்தனையும்
அவனெழுதிய கவிதையிலே..
அவன்
நின்றதும்
நடந்ததும்
கிடந்ததும் என் நெஞ்சுள்ளே...

-பாலகுமாரன்

#கேள்வி: இந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்?

பதில்: பெட்ரோல், கூட்டுக்குடும்பம், கல்யாணம், தாய்ப்பாசம், விமான பயணம், பஸ்பயணம், டெலிபோன், பிலிம் ரோல் சினிமா, சில பெரிய வியாதிகள், கடவுள் பக்தி, கதை, கவிதைகள், ரூபாய் நோட்டுகள் என பெரிய பட்டியலே இருக்கிறது. தற்கொலை மட்டும் பாக்கி இருக்கும்.

#சுஜாதா

No comments:

Post a Comment