21.09.2017
பதிவு - 50
நூலிலிருந்து நெசவு
*நாஞ்சில் நாடன்*
இயற்பெயர் திரு.சுப்ரமணியம். நூற்பாலைகளுக்கு சில உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் ஒரு வட இந்திய கம்பெனியின் கோவை கிளை அலுவலக மேலாளராக தொழில். தற்போது தொழிலில் ஓய்வு பெற்று 'கோவைப்புதூர்' பகுதியில் வசித்து வருகிறார். இவரைப் பற்றிய அறிமுகம் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு ஏற்கனவே அறிந்த ஒன்று. இலக்கிய உலகில் மிகச்சிறந்த ஓர் ஆளுமை! புகழ் பெற்ற எழுத்தாளர்!
ஆனால், இவர் என்னுடைய நண்பர் என்பதே மகிழ்ச்சியோடு நாம் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி. சுமார் 30 வருடங்களாகவே இவரிடம் தொடர்ந்த நட்பு இன்றும் பசுமை மாறாமல் உள்ளது, எனக்கு கிடைத்த வரமென்பேன். "சூடிய பூ சூடற்க" என்ற நூலுக்கு "சாகித்ய அகாடமி" விருது பெற்றவர். இலக்கிய உலகின் மிக உயரிய விருதான இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்ட போது எனக்குக் கிடைத்தது போன்ற ஒரு மகிழ்ச்சியான தருணமாக உணர்ந்தேன்.
*உறவு*
நான் மேட்டூர் அணையில் உள்ள நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்த போது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து அங்கு வருவார். தொழில் நிமித்தம் மிக கண்ணியமான பேச்சாக உரையாடல் இருக்கும். வேலை முடிந்து சென்று விடுவார். அறிமுகமாகி சுமார் 7-8 வருடங்கள் கழிந்து ஒரு முறை கோவை ராம்நகர் பகுதியில் உள்ள அவர் அலுவலகத்தில் அவர் முன்பு பேசிக்கொண்டு இருந்த போது fullscape size பேப்பரில் அவர் எழுதியிருந்த ஒரு நாவலை ஒரு கட்டாக எடுத்து என்முன்னே வைத்தார். நாவலின் கைப்பிரதியான அதை எடுத்து புரட்டிய போதுதான் தெரிந்தது, அவர் ஒரு எழுத்தாளர் என்று. அப்போதுதான் அவர் ஒரு எழுத்தாளர் என்பதை வெளிப்படுத்தினார். இயற்கையிலேயே எழுத்தில் ஆர்வமிருந்த எனக்கு அவரோடு பேசுவதற்கும், பழகுவதற்கும் அவ்வப்போது நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வாய்ப்புகள் ஆண்டவனின் கருணையால் பல வருடங்களாக தொடர்ந்தது. இவரின் பூர்விக ஊரான நாகர்கோவில் பற்றியும், அவர் குடும்ப பழக்கவழக்கங்கள் பற்றியும், நாஞ்சில் நாட்டு உணவு பழக்கங்கள் பற்றியும்
இவர் கூறக்கேட்டது ஏராளம். நல்ல மிடுக்கான தோற்றம் கொண்ட இவர், மென்மையான உணர்வுகளை தன் படைப்புகளில் வெளிப்படுத்துவதை நம்மால் உணரமுடியும். மெல்லிய குரலில் இனிமையாக பேசும் பழக்கமுள்ள இவர், தனது கட்டுரைகளில் சமூகத்தின் மீதுள்ள அக்கறையில் கோபம் கொப்பளிக்க வார்தைகளைப் பிரயோகம் செய்வார். இவரின் கட்டுரைத் தொகுப்புகளும், நேர்காணல்களும் இவரின் எழுத்துகளின் மீதான மரியாதையை ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் அதிகப்படுத்தும்.
*தனிப்பட்ட நட்பு*
பல்லடத்தில் ஒரு நூற்பாலையில் நான் பணிபுரிந்த போது அந்த நிர்வாகம் புதியதாக ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவினார்கள். மாணவர்களுக்கு எல்லாம் இலவசமாகவே கிடைக்கப்பெறும் வண்ணம் அமையப்பெற்ற அப்பள்ளியின் முதலாம் ஆண்டு விழாவிற்கு அவரை அழைத்து வந்து சிறப்புரை ஆற்ற வைத்தது மிக மிக மகிழ்ச்சியான தருணம். என் வீட்டுக்கும் சிலமுறை வந்து என் தாயாரோடும், என்னோடும் நீண்ட கலந்துரையாடல் செய்திருக்கிறார்.
*சிறந்த குணவான்*
இந்த இடத்தில், தொலைபேசியில் பேசும் போது இவரிடம் உள்ள சிறப்பான ஒரு குணம் பற்றி நண்பர்கள் உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன். ஒவ்வொரு முறை போனில் அழைக்கும்போதும் முதலில் என்நலம் விசாரிப்பு, மனைவி மற்றும் மகளைப்பற்றிய நலம் விசாரிப்பு, பிறகு வீட்டில் அனைவரும் நலமா? என்ற நல விசாரிப்பிற்கு பிறகுதான் உரையாடலே தொடங்கும். உள்ளார்ந்த அன்போடு எல்லோரிடத்திலும் இப்படித்தான் அவர் பேசுவதை கேட்டிருக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நல்ல குணம் இது! (Manners)
(இதேபோல, என் நண்பன் மருதாசலமூர்த்தி என்று பெயர். அவரின் மனைவி ஷோபனா. ஆனால், தற்போது அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் இருக்கும் போது, ஒவ்வொரு முறை போனில் பேச ஆரம்பிக்கும் போதும், வீட்டில் உள்ள அனைவரது பெயரையும் ஒவ்வொன்றாக கூறி, நலமா, நலமா? என விசாரிக்கும்போது அவரின் உண்மையான அன்பு வெளிப்படும். இப்போது அவரின் மகள் அதே போல நலம் விசாரிக்கிறார். நற்பண்புகள்,வாழையடி வாழை!).
*மிகச் சிறந்த கதைசொல்லி*
நாஞ்சில் நாடன் அவர்கள் சுமார் 40 வருடங்களாக எழுதி வைத்துள்ள எழுத்துக்கள் தமிழ் உலகிற்கு சொத்து! இவர் எழுதிய "தலைகீழ் விகிதங்கள்" என்ற புதினம், இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கி சேரன் நடித்து "சொல்ல மறந்த கதை" என்ற திரைப்படமாக வெளிவந்தது. சமீபத்தில் இயக்குநர் பாலா இயக்கிய "பரதேசி" என்ற திரைப்படத்தின் வசனம் மற்றும் காட்சி அமைப்பு இவரின் கைவண்ணம்.
*மண்ணுள்ளிப்பாம்பு, பேய்க்கொட்டு, பிராந்து, சூடிய பூ சூடற்க, கான்சாகிப், தொல்குடி, மிதவை, சதுரங்கக்குதிரை, எட்டுதிக்கும் மதயானை, வல்விருந்து, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, சிற்றிலக்கியங்கள், திகம்பரம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை இப்படி ஏகப்பட்ட நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் இவரது எண்ணங்களின் படைப்புகளாக மிளிர்கின்றன.
நாளை இவரின் எழுத்துக்களை ஊடுறுவிப் பார்த்து உவகை கொள்வோம்!
அன்புடன்,
நாகா.
21.09.2017
No comments:
Post a Comment