தோய்-செய் என்ற தோசையின் வரலாறு.!
😋
தமிழைப் பொருத்தவரை ஒன்றன் வரலாற்றினை அறிய, இலக்கியமும் கல்வெட்டும்தான் நமக்குள்ள முக்கிய ஆதாரங்கள்.
தோசை என்னும் சொல் பழைய இலக்கியத்தில் வருகிறதா? கல்வெட்டில் வருகிறதா என்று பார்த்தால் அதன் வரலாற்றை ஓரளவு கணித்துவிடலாம்.
சுப்ரதீபக் கவிராயரால் கூளப்ப நாய(க்)கன்மேல் பாடப்பட்ட, விறலிவிடு தூது என்னும் நூலில் தோசை பற்றிய குறிப்பு வருகிறது.
( இந்நூல் தாய்ப்பரத்தை, தன் தொழில்(?) நுட்பத்தை மகளுக்குக் கூறுவது........உடலுறவு பற்றிய செய்திகள் என்றெல்லாம் தமிழில் பேசுகிறது (?!) என்பதால் வெளிவந்த புதிதில் தடைசெய்யப்பட்டது. பின்பு தணிக்கை செய்யப்பட்டு அந்நூலின் பலவரிகள் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது. சமீபத்திய இந்நூல் பதிப்பொன்றைப் பார்த்தேன். அதுவும் தணிக்கை செய்யப்பட்ட பதிப்பின் மறுபதிப்பாகவே இருந்தது. நீங்கள் படிக்க அதிகம் வாய்ப்பில்லாத தணிக்கை செய்யப்படாத அதன் பதிப்பைப் படித்திருக்கிறேன் என்பதில் எவ்வளவு சந்தோஷம். :) )
அதனுள்,
“-அப்பம்
வடைசுகியன் தோசை வகைபணி யாரம்
கடையிலே கொண்டுவகை கட்டி ” ( கண்ணி – 335 )
( பக்.24., நாகமகூளப்ப நாயகன் விறலிவிடு தூது, துலுக்காணசட்டியார் பதிப்பு. 1906 )
என்று வருகிறது.
ஆனால் இந்நூல் அத்துணை பழைமை உடையது அன்று. கூளப்ப நாய(க்)கனின் காலம் 1728 என்கிறது தமிழ் விக்கி.
நாம் இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போகலாம்.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிற் கல்வெட்டில், தோசை குறித்த சுவையான செய்தி ஒன்று காணப்படுகிறது.
இக்கல்வெட்டு கி.பி. 1542 ஆம் ஆண்டைச் சார்ந்தது.
அச்சுராயன் என்பவரது ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரத்தைச் சார்ந்த, திருவத்தியூர் அருளாளப்பெருமாள் கோவிலுக்குப் பக்தர் ஒருவர் அளித்த சிறு நிதி மூலம் அவர் செய்யச் சொன்ன நிவந்தம் பற்றிய செய்தியை அக்கல்வெட்டு சொல்கிறது.
ஒவ்வொரு ஏகாதசி அன்றும் பெருமாள் கருட வாகனத்தில் கிராம உலா சென்று திரும்பும்போது இன்னின்னார்க்கு அமுது படைக்க வேண்டும் எனவும், அதற்கு ஆகும் செலவாக, 250 பணமளிக்கப்பட்டது எனவும் அதைக்கொண்டு 35 தோசைகளை, 24 ஏகாதசிகளுக்குக் கொடுக்க வேண்டும் எனவும் அக்கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது.
( கல்வெட்டு எண்-614/1919/கோயில் சாசனங்கள். பகுதி – 1 பக். 326)
பொதுவாகக் கோயில்களில் படைக்கப்படும் திருவமுது அம்மண்ணிற்குரிய உணவாகப் பாரம்பரியம் மிக்கதாக இருத்தலே மரபாகும். வேற்றார் உணவுகள், புதிய உணவு முறைகள் அங்குப் புகுத்தப்பெறுவதில்லை என்பதையும் இவ்விடத்தில் நாம் நினைவு கூர வேண்டும்.
எனவே தோசை என்னும் சொல், இக்கல்வெட்டிற்கு முன்பாகவே மக்களின் மரபுணவாக இருந்திருக்கிறது.
சரி இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்.
“கஞ்சம் தோசை” (14)
என்றும்
“அபூபம் கஞ்சம் இலையடை மெல்லடை
நொலையல் பூரிகை சஃகுல்லி போனகம்
மண்டிகை பொள்ளலும் அப்ப வருக்கம் “ (17)
( பக்.174. பிங்கலநிகண்டு. மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை. சென்னை. 1917 )
என்றும் தோசையின் இன்னொரு பெயரையும் (கஞ்சம்) தோசையின் வகைகளையும் அறியத் தருகிறது பிங்கல நிகண்டு.
பிங்கல நிகண்டின் காலம் உத்தேசமாக 10ஆம் நூற்றாண்டு.
எப்படியோ தோசைக்கு நம்மிடம் ஆயிரம் ஆண்டு வரலாறு இருக்கிறது.
என்ன போதாதா?
சரி, இன்னும் ஒரு சான்று.
தமிழின் முதல் நிகண்டு எனப்படும் திவாகர நிகண்டு,
“ பூரிகம் நொலையல் கஞ்சம் தோசை
பேதப் பெயர்வகை அப்பம் ஆகும் “
(பக்.38. பலபெயர்பொருட்டொகுதி. சேந்தன் திவாகரம் மூலபாடம், தாண்டவராய முதலியார் பதிப்பு. 1880)
என அப்பத்தின் வகைகள் நான்கனுள் ஒன்றாகத் தோசையைக் காட்டுகிறது.
திவாகர நிகண்டின் காலம். கி.பி. எட்டாம் நூற்றாண்டு.
நிகண்டுகள் புதிய சொற்களை உருவாக்கிச் சேர்ப்பன அல்ல.
அவை முன்பே வழக்கில் இருக்கும் சொற்களைத் தொகுத்துரைப்பன.
எனவே தோசை என நாம் உண்ணும் உணவு இன்று நேற்றல்ல, ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் உணவு வகையுள் ஒன்றாக நம் மண்ணுக்கு உரிமை உடைய உணவு என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இறுதியாய்,
இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்,
( கல்லில் ) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில் தோய் + செய் என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல், மக்கள் வழக்கில் தோசை என்று ஆனது
என்றும்,
மலையாளத்திலும், தோச எனவும், தெலுங்கிலும் கன்னடத்திலும் தோசை என்றும் வழங்கப்படுகிறது என்றும் செய்யும் சொல்லாய்வு மிகப் பொருத்தம் உடையதாகத் தோன்றுகிறது.!
.
#படித்தது
No comments:
Post a Comment