Tuesday, 5 May 2020

கற்றதும் பெற்றதும்-92*மணி



“நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தின் மனிதனுக்கான வரலாறாக மாறுகிறது”… மார்க்ஸ்

#மாவீரன் வாட்டாக்குடி இரணியன்
-ச சுபாஷ் சந்திரபோஸ்

இரணியனைத் தெரியுமா? ஓ முரளி நடிச்ச படம்னு எளிதாய் சொல்வோம். ஆனால் அதைவிட பன்மடங்கு ஆற்றல் மிக்க ஆளுமையாய் பொது உடைமை போராளியாய் விளங்கினார் என்பது அவரின் வரலாற்றை படிக்கும்போதுதான் தெரிகிறது.

#பிறப்பு

வெங்கடாசலம் எனும்
வாட்டாக்குடி இரணியன் தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம்,வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர்-தையல் அம்மாளுக்கு 1920, நவம்பர் 15 அன்று பிறந்தவர்.உயர்வு தாழ்வு கருதாது அனைவரும் ஒன்றாய் பழகியர்.முதலில் ஒரு பெண்.பின் இவரை தொடர்ந்து ஆறு குழந்தைகள் பிறந்தனர் .இளமையிலேயே மிகுந்த கோபமும் நியாயமும் உள்ளவராய் வாழ்ந்தார்.இவரின் சுபாவத்தை மாற்ற தமக்கையின் ஊரான சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர்.அங்கே கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார்.

#சிங்கப்பூரில் போராளியாக

அஞ்சி அஞ்சி வாழ்ந்த தொழிலாளர்களுக்கு மத்தியில் மிகுந்த  துணிச்சல் மிக்கவராக விளங்கினார் வெங்கடாசலம்.ரஷ்ய புரட்சி தொடர்பான புத்தகங்களை அங்குதான் படித்தார்.புட்டு விற்கும் வேலை பார்த்தார்.இரண்டாம் உலகப்போரில் ராஷ் பிஹாரி போஸின் இந்திய தேசிய லீக்கில் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்கள் பயிற்சி பெற்றனர்.ஜப்பான் இந்தியா, கிழக்காசியாவை வெற்றி பெற்று விட மறுத்தால் கொரில்லா போர் முறையில் இந்தியாவை விடுவிக்க பயிற்சி பெற்றனர்.இங்குதான் தன் பெயரை இரணியன் என மாற்றிக்கொண்டார்.நேதாஜியின் படையில் 1943ல் இணைகிறார். கல்கத்தா வரை முன்னேறிய ஐ.என்.ஏ டெல்லியை பிடிக்க முடியவில்லை.ஜப்பான் சரணடைந்தது.நிலை குலைந்தனர் அனைவரும்..செய்வதறியாது திகைத்தனர்

#சிங்கப்பூர் தொழிற்சங்கத் தலைவராக

வெற்றி பெற்ற ஆங்கில அரசு சிங்கப்பூர் தொழிலாளர்களை கொடுமைப்படுத்தியது.துறைமுக தொழிலாளர் சங்கத்தின் தலைவரானார்.பட்டுராசு காரியதரிசி ஆனார்.12000 தொழிலாளர்களுக்கு விடிவெள்ளியாகவும், ஆங்கிலேயர்க்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார். நான்கு ரவுடிகளை வேட்டையாடினார்.இவரின் பணியால் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. ஆனாலும் தன் வீட்டிற்கு ஒரு பணமும் அனுப்பவில்லை. தனக்கென எதுவும் சேர்த்துக்கொள்ளாதவராக ஒரு நாள் ஊர் ஞாபகம் மேலிடவே அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகி இந்தியா வர தீர்மானித்தார்.

#பொதுவுடைமைவாதியாக

1948 ம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினார்.இங்கு வந்ததும் அப்பகுதி இடது சாரி தோழ்ர்களிடம் பழகி கம்யூனிஸ்டானார்.அங்குள்ள பண்ணையாரிடம் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றினார். அப்பகுதி மக்களுக்கு நல்லது செய்தது பல இடங்களில் பரவியது. அப்போதுதான் ராயர் பண்ணைக்கு வருமாறு ரகுநாதன் அழைத்துச் சென்றார்.அங்கு நடைபெறும் சாதிய கொடுமைகள் கோபத்தை வரவழைத்தது.

திருக்கவாலில் அடிப்பது,மூங்கில் குழாயில் சாணியை கரைத்து ஊற்றுவது, தம் பெண்டாட்டியின் மூத்திரத்தை குடிக்க வைப்பது என சில பண்ணை முதலாளிகள் துன்புறுத்தினர். குத்தகைதாரர்கள் 1 பங்கும், பண்ணைக்கு 3 பங்கும் கொடுக்க வேண்டும்.

இடையில் அவர் இருந்த வீட்டை இடித்து,துன்புறுத்தினார்கள். தாலி கட்டியவுடன் காட்டுக்குள் தலைமறைவாகிவிட்டார்.அந்நாளில் இவரை பிடிக்க  முடியாமல் திணறினர்.இருப்பினும் விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல போராட்டம்செய்தார்.உணவு தானியம் எடுத்து ஏழைகளுக்கு உதவினார்.அங்குள்ள சில பண்ணையார்கள் இவரை ஒழித்துக்கட்ட முயன்றனர்.

#கைது செய்ய ஆணை

கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர தினத்தை கொண்டாட தடை விதித்தது. கூலியை உயர்த்து,சாகுபடியாளரை நசுக்காதே,கம்யூனிஸ்ட் கட்சி தடையை ரத்து செய் போன்றவற்றிற்காக போராடினார். இதையறிந்த அரசாங்க அவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தது. அது முதல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பல முறை காவலர்களால் பிடிக்க முடியாமல் இறுதியில்.1950 மே 5ம் நாள் அதிகாலையில் போலிஸார் சுட்டதும் புரட்சி ஓங்குக! பாட்டாளி மக்கள் ஒன்று சேரட்டும் செங்கொடி வாழ்..க! என சொல்லி மண்ணில் விழுந்தார்.

"ஒரு தலைவன்(கார்ல்மார்க்ஸ்) பிறந்தநாளில் ஒரு தொண்டனின் உயிர் பிரிவதைவிடப் பெரும் பேறு எதுவுமே இருக்க முடியாது என கூறினார்.

#ஒரு புரட்சி நடக்கணும்னா தீய சக்திகள் மட்டும்தான் அழியும் என்பதில்லை.நல்லவர் இரத்தமும் திரிக்கும் எண்ணெய் போல இருந்தாக வேண்டும்.

*மாளிகையில் உட்கார்ந்து மக்களுக்காக சிந்திப்பதை விட வறுமையில் வாடிய மார்க்சின் கருத்துகள் மக்களிடம் சென்று சேரும்

*நிலவு கொடுக்கிற வெளிச்சத்த, நட்சத்திரம் கொடுக்க முடியுமா?

*ஒரு புள்ளைய பெத்தா சோறும் தண்ணியும் சேரும்.ஆறு புள்ளைய பெத்தா அடியும் ஒதயும் தான் மிச்சம்.

*பாம்புனா படையும் நடுங்கும். துப்பாக்கினா தொடையும் நடுங்கும்.

#கற்றதும் பெற்றதும்

உழுபவனுக்கு நிலம் சொந்தமென போராடவில்லை.பாட்டாளிகள் சுரண்டாமல் மனிதனாய் மதிக்க வேண்டுமென இரணியன் போராடினார்.ஐ.என்.ஏ வில் தியாகியாவும் இவர்களுக்கு நான் துரோகியாகவும் தெரிகிறேன் என ஒருமுறை மனம் நொந்து சொல்லுவார்.மறுஜென்ம நம்பிக்க்கையில்லை எனினும் பலியானவர்கள் ஒருதாய் வயிற்றில் பிறந்து அடிமைப்படும் மக்களுக்காக போராட வேண்டுமென்கிறார். இறந்த உடலை ஊரார் பார்த்ததும் மரங்ககை போல் கண்ணீர் மல்க நின்றனர். பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு இலக்கியமாய் திகழ்ந்தவரை நினைவு கூர்வோம்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment