Thursday, 7 March 2024

புத்தகம்-7


Reading_Marathon2024
#24RM050

Book no:7/100+

உரையாடல்களின் காலம்
-சுகுணா திவாகர்

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. நான் மதிக்கும் எழுத்தாளுமைகளில் ஒருவரான சுகுணா திவாகரின் கட்டுரை நூல்கள் தான் இவை. எந்த ஒரு கட்டுரை தொகுப்பும் கட்டுரையின் ஆழங்களை தரவுகளோடு அலசி, பின் முடிவுகளை அனைவரின் கண்ணோட்டத்தில் இருந்தும் பார்த்து இறுதியில் கட்டுரை முடியும் போது நாமே சொல்ல வந்த கருத்தினை போல் உணர வைப்பதாக இவர எழுத்துக்கள் இருக்கும். அவ்வாறு இதில் உள்ள 11 கட்டுரைகளும் பல்வேறு இதழ்களில் வெளிவந்த முக்கிய கட்டுரைகளாக சேர்க்கப்பட்டுள்ளது.

சமகால பிரச்சனைகளை சொல்ல வேண்டிய சரியான நேரத்தில் எதிர்வினை ஆற்றி அந்த எதிர்வினைகளுக்கு தக்க ஆதாரங்களோடு வெளிப்படும் கட்டுரைகளாக ஆனந்த பவனை எதிர்க்கும் ஆரியம் கட்டுரை இருந்தது. மக்களின் உடை நாகரீகம் போன்றவற்றை வரலாற்றின் அடியொற்றி இதில் விளக்கியிருப்பார். ஆரிய பவன் ஐயங்கார் பேக்கரி என இருக்கும் தமிழகத்தில் தான் மற்ற கீழ் சாதியினர் பெயர்களில் உணவகங்கள் இல்லை என்பதும் முத்தாய்ப்பாக சொல்லி இருப்பார்

மதம் குறித்த கட்டுரைகளில் சமகால ஆளுமைகளின் கருத்துக்களை சொல்லியதோடு மதம் குறித்த பெரியாரின் நிலைப்பாடு என்ன மதத்தையும் கடவுளை மறுத்தால் அந்த இடத்தில் எதை வைப்பது என்ற கேள்வி பெரியாரின் காலத்திலேயே கேட்கப்பட்டபோது "நடுவீட்டில் மலம் நாறுகிறது அதை எடுத்து வீசு என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்று ஏன் கேட்கிறாய்? என்றார் பெரியார் என்று இந்த கட்டுரைக்கு வலு சேர்க்கும் விதமாக இக்கூற்று இருந்தது. மதத்திலிருந்தும் கடவுளிடமிருந்தும் விடுபட்டு நமக்கான சுயேச்சை அறங்களை நாமே உருவாக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் மிகப்பெரும் மகிழ்ச்சி இருக்கிறது .அது மதவாதிகளின் கற்பனை சொர்க்கத்தை விட அற்புதமானது என்று இறுதியில் இந்த வரிகளுடன் முடித்து இருப்பார்.

மாமன்னன் படம் வந்தபோது தேவர் மகனுக்கு எதிரானதா என்பதை உரையாடல் வழியே காண்பித்து இதில் கூறியிருப்பார். அதேபோல் படைப்பு சுதந்திரத்தின் அடையாள அரசியல் வரம்புகளில் பர்கானா திரைப்படத்தை முன்வைத்தும் அவர் தனது சினிமா கட்டுரைகளில் உள்ள மதம் அரசியல் ஆகியவற்றைப்பற்றி பேசி இருப்பார்

கவிஞர்களின் காலம் முடிகிறதா எனும் கட்டுரையில் எந்திரங்கள் தங்கள் வாழ்க்கைக்குள் வரும்போது மனிதர்கள் பதற்றம் அடைவார்கள், எந்திரங்களினால் தொழிலாளர்கள் வேலை இழந்தார்களா? அதில் மார்க்ஸ்ன் சிந்தனை என்ன? உற்பத்தியும் நுகர்வும் சரி விகிதத்தில் இருந்தால் நிச்சயம் பொருளாதார முன்னேற்றம் தான்
 இதில் நுகர்வு குறையும்போது உற்பத்தி அதிகரிப்பதால் என்னென்ன முரண்பாடுகள் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி இதில் கூறியிருப்பார்

இமையத்தின் படைப்புகளை பற்றி கூறும் போது எது நம்மை பாதிக்கிறதோ தொந்தரவு செய்கிறதோ விமர்சனம் செய்ய தூண்டுகிறதோ அதை நாம் எழுத்தின் மூலம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் பகிர்ந்து கொள்ள முடியும் என்று கருதுகிறோமே அதுவே எழுத்தாகிறது படைப்பாகிறது என்று கூறுகிறார். அடுத்ததாக ஜெயமோகனின் எழுத்துக்களை குறித்த விமர்சனங்களை தரும்போது துணைவன் கதையில்
வரும் வாக்கியம் "அதிகாரம் துப்பாக்கிக் குழாய் வழியான்னு தான் மார்க்ஸ் சொல்லி இருப்பார் என்கிறார் அது உண்மையில் மார்க்ஸ் சொல்லவில்லை மாவோ சொன்னதாய்  என்று திருத்தி சொல்கிறார். மேலும் துணைவன் கதை குறித்தும் மா.லெ இயக்கத்தை பற்றிய கருத்தியல் குறித்தும் ,வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கு பெற்ற நிகழ்வை குறித்தும் விமர்சனப் பார்வையோடு இக்கட்டுரை அமைகிறது.

*பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது அதை மறுத்து கல்வி மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்று அழுத்தமாக வாதிட்டவர் அம்பேத்கர்

*வார்த்தைகளை விமர்சனங்களை மௌனப்படுத்துவதற்காக முன்வைக்கும் போது அந்த வார்த்தைகள் ஆற்றல் இழந்து நீர்த்துப் போகின்றன

*கருத்து சுதந்திரம் என்பது ஒருவர் என்ன வேண்டுமானாலும் சொல்வதற்கான சுதந்திரம் தானே தவிர, அவர் என்ன சொன்னாலும் யாரும் விமர்சித்து எதையும் சொல்லிவிடக்கூடாது என்பதற்கான சுதந்திரம் இல்லை

சமகாலத்தில் நடந்த நிகழ்வுகளை விமர்சனப் பார்வையுடன் அணுக வேண்டிய கட்டுரைகளை இதில் பேசியிருப்பார் 11 கட்டுரைகளும் வெவ்வேறு அனுபவங்களை தரும் வகையில் அமைந்திருந்தது.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment