Thursday, 11 April 2024
சமீபத்தில் அஜர்பைஜானில் நவ்ரூஸ் கொண்டாட்டங்களின் போது நெருப்பு தாண்டும் விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். போகி போல, நெருப்பு கொளுத்தி பழைய விஷயங்கள் போய், புது விஷயங்கள் வரவேண்டும் என்கிற சிந்தனை தூக்கலான ஒரு விழா. இனிப்புகளும் (பக்லவா போக, நம்ம ஊர் சோமாஸ் போன்ற சக்கர்பாராவும் பிரபலம்), பூக்களும் போக, கொளுத்திய நெருப்பை மூன்று முறை தாண்டிக் குதிக்கிறார்கள். அப்போது, இப்படி ஒரு சொலவடையையும் உரக்கச் சொல்கிறார்கள்: Ağırım-uğurum bu tonqala,Azarım-bezarım bu tonqala.“என் சுமைகளை, என் குப்பைகளை, இத் தீயில் இடுகிறேன்.என் நோய்கள் அனைத்தையும் இத் தீயில் இடுகிறேன்.”அந்தத் தீப்பிழம்புகளைத் தாண்டிக் குதித்த பிறகு அது தொடர்ந்து சிந்தனையில் இருந்தது: நாம் தயங்கக் கூடாது. குப்பையை ஒழிக்கத் தயங்குதல் ஓர் ஆற்றல் கொல்லி. தயக்கம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக ஏறி கடைசியில் நம்மை மொத்தமாக நசுக்கும் சுமை. நாம் நம்முடைய தயக்கங்களின் கண்ணை உற்றுப் பார்க்க வேண்டும். அவற்றை அணைத்து, உட்காரவைத்து, அந்தக் கடினமான உரையாடலை மேற்கொண்ட பிறகு, அவற்றை வழியனுப்பி வைக்கவேண்டும். தயக்கங்களும் பழைய சுமைகளும் போனபிறகு, ஒரு வெற்றிடம் வரும். நம் இப்போது செய்ய வேண்டிய முக்கிய வேலைகள் மட்டுமே அந்த வெளியை நிரப்பக் காத்திருக்கும். அது அர்த்தமுள்ளது.-ஸ்ரீதரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment