உலக புத்தக தினம்! என்னிடம் வந்து, எனக்கு ஒரு புத்தகம் பரிந்துரை செய்யுங்கள்! என்று எத்தனையோ பேர் கேட்டது உண்டு. ஆனால், ஒரு புத்தகத்தைப் பரிந்துரை செய்வதிலும் பார்க்க, அதை வாங்கிப் படிப்பதிலும் பார்க்க நுட்பமான காரியங்கள் நிறையவே இருக்கிறது. அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
1. முதலாவதாக, "நம்மைப்போல யோசிக்கிறாரே இந்த எழுத்தாளர்!" என்கிற எழுத்து உங்களை நல்ல சௌகரியமாக வைத்துக்கொள்ளும். ஆனால், அப்படியான எழுத்துத் தருகிற சௌகரியம் முக்கியமா? அல்லது, "இப்படியும் முன்னோக்கி யோசிக்கலாம்!" என்று உங்களைக் கொஞ்சம் அசௌகரியத்திற்கு உள்ளாக்கி நுட்பமாய் மேலே தூக்கிவிட அழைக்கும் எழுத்து முக்கியமா? என்பதை நீங்கள்தான் கண்டறியத் தயாராக இருக்கவேண்டும். அதற்காக உங்கள் மூளையைப் பயிற்றுவிக்கவேண்டும்.
2. முதலாவது கூற்றின்படி, அப்படியானதொரு கண்டடைதலை நோக்கிப் பயணிக்க வேண்டுமானால், நீங்களும் உங்களைக் கொஞ்சம் தயார் செய்துகொள்ளவேண்டும். அதற்கு நீங்கள் கேட்பவராக இருக்கவேண்டும். எங்கிருந்து பெற்றுக்கொள்கிறீர்களோ அதை உங்களைவிட உயர்வான ஒன்றாகவும் குருவாகவும் நினைக்கவேண்டும். காரணம் நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்றை நமக்குத் தருகின்ற வல்லமை அதனிடம் இருக்கிறது. அதை நீங்கள் மதிக்கவேண்டும்.
3. எவ்வளவுக்கு எவ்வளவு படிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் நியூரான்கள் ஒன்றையொன்று தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும். உதாரணமாக, ஒரு நாவல் உங்களை மனித உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொள்ளச் செய்கிறது என்றால், ஒரு விஞ்ஞான நூல் அல்லது ஆய்வு நூல் ஒரு விடயத்தைப் பகுத்தறிந்து கற்கச் சொல்லித்தரும். இந்த இரண்டையும் இணைத்து இடையில் ஒரு மையப்புள்ளியை உருவாக்கி உங்களைச் சிந்திக்க வைப்பது நியூரான்களின் வேலை.
4. ஒருபக்கம் பழைய அனுபவங்களையும், மனித உள்ளத்தையும் கற்றுக்கொள்கிற அதேநேரம் மறுபக்கம் மாறிவரும் உலகத்தின் போக்கையும், சிந்தனையையும், புதிய உலகம் எதிர்கொள்ளும் சவால்களையும் கற்றுக்கொள்ள விளையவேண்டும். இது நமது சிந்தனையின் போக்குக்கு மிக உதவியாக இருக்கும். காரணம், பழைய அனுபவங்கள் உங்களை மீண்டும் மீண்டும் பழைய சிந்தனைக்குள் வைத்திருக்கப் பார்க்கும். அதனால் புதிதாக வருகிற தொழிநுட்பம் முதலாக, விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் வரை எல்லாவற்றையும் படியுங்கள். முடிந்தளவு அடிப்படையையேனும் படியுங்கள்.
5. எத்தனை புத்தகங்கள் படித்தாலும் எல்லாவற்றையும் கூட்டத்தோடு சேர்ந்து சிந்திக்காமல் அல்லது செயற்படாமல் தனக்கெனத் தனியாக உருவாக்கிக்கொண்ட ஒரு நிகழ்ச்சிநிரலின்படி சிந்திப்பதும் செயற்படுவதும் மிகவும் முக்கியம். சுயமாகச் சிந்திப்பதும் எழுதுவதும் செயற்படுவதும் மிகவும் சிரமமான காரியம். அதற்காக நாம் கொடுக்கவேண்டிய விலை அதிகமாக இருக்கலாம். ஆனால் இறுதியாக நீங்கள் உங்கள் தனிச் சிந்தனையோடு இருப்பதும் செயற்படுவதும் உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் பரிசாக இருக்கும். காரணம் அப்படி இருக்கும் போது உங்களால் மேலும் மேலும் கற்றுக்கொள்ள முடியும்.
6. கற்கின்ற, வாசிக்கின்ற விடயத்தில் ஒரு பத்து வீதத்தையேனும் உங்கள் யதார்த்த உலகில் நிகழ்த்திப் பார்க்கவேண்டும். சராசரி எழுபது வருட வாழ்க்கையில் நம் வாழ்நாள் வாசிப்பிலிருந்து ஒருசில கூறுகளையேனும் எடுத்து, நம் நியூரான்கள் மூளையில் உருவாக்கிய தொடர்புகளின் விளைவினால் உருவான அறிவில் பத்து வீதத்தையேனும் நம்மால் நிஜ வாழ்க்கையில் பிரயோகப்படுத்திப் பார்க்க முடிந்தால் அது நமக்கு ஒரு திருப்தியைத் தரும். அது உங்களை மேலும் மேலும் கற்கச் சொல்லித் தூண்டும்.
7. கற்கத் தயாராவதும், கற்பதும், தொடர்புபடுத்துவதும், தொடர்புபடுத்தியதை தனிச் சிந்தனையில் அலசுவதும். அதைப் பிரயோகித்து சுவை காண்பதும் முடிந்தவுடன் கற்றவற்றைக் கத்தரித்து அழகாக்க முயலவேண்டும். அவற்றை ஒழுங்குபடுத்தவேண்டும். புதிதாக ஒன்றைக் கற்கும்போது பழையதில் தேவையில்லாதவற்றை அகற்றத் தெரியவேண்டும். அவற்றை நறுக்கி சிந்தனையைச் செழுமைப்படுத்தத் தெரியவேண்டும்.
8. உங்களையும் உங்கள் கற்றலையும் சிந்தனையையும் செழுமைப்படுத்தும் போது நீங்கள் எதை நோக்கிப் போகிறீர்கள் என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும். உங்கள் கற்றல் உங்களை வெறுமனே கண்மூடித்தனமாக ஒரு சித்தாந்தத்தையும் ஒருவழிப் போக்கையும் நோக்கிக் கொண்டுசெல்கிறதா? ஒரு சார்பாக மட்டும் சிந்திக்க வைக்கிறதா என்பதை மீள்பரிசீலனை செய்து கற்றலை மேலும் விரிவுபடுத்துங்கள். அதாவது உங்கள் மூளைக்கு மேலும் மேலும் சவாலான சிந்தனைகளை வழங்கி நீங்கள் சிந்திக்கிற விதம் சரிதானா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே கற்ற விடயத்தின் உறுதித் தன்மையைப் பரிசீலியுங்கள்.
9. கற்பது ஒருபக்கம். அதைச் சுவைபடக் கற்பது இன்னமும் முக்கியமானது. உங்களுக்குப் பிடித்த, மிகப்பிடித்த விடயத்தையும் அவ்வப்போது கற்க ஆரம்பியுங்கள். புத்தகத்தோடு அதையும் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு பாடல் கேளுங்கள். அதில் கற்பனையைப் படியுங்கள். ஓவியத்தில் வண்ணங்களைப் படியுங்கள். இசையைப் படியுங்கள். இரசிக்கப் பழகுங்கள். ஒன்று கற்பனை உலகம். இன்னொன்று இன்னொருவரின் அனுபவத்தையும் அறிவையும் படிப்பது. அடுத்தது நிகழ் உலகம். இந்த மூன்றையும் ஒரு கோலம் போல் இணைக்கவேண்டும். இப்படி ஒன்றைச் சுவைபடக் கற்பது முக்கியமானது.
10. இறுதியாக இந்தக் கற்றலை மீண்டும் மீண்டும் முடிவில்லாமல் கற்கத் தயாராகவேண்டும். கற்றலுக்கு முடிவில்லை. புத்தகங்களுக்கு முடிவில்லை. நாம் அதன் முடிவை விட, கற்பதில் இன்பம் காண்கிறோம், வாசிக்கிற கணப்பொழுதில் இன்பம் காண்கிறோம் என்கிற உண்மையையும் உணர்ந்தே புத்தகங்களை வாசிக்கவேண்டும்.
-சுதர்சன்
No comments:
Post a Comment