Sunday, 22 June 2025

115


#கற்கை_நன்றே_115

Education is not the imparting of a settled body of knowledge; but the inculcation of a spirit of enquiry"

மனிதனைத் தேடவைப்பது தான் கல்வி. தேடிக்கொண்டே இருப்பது கல்வி. தேடல்தான் கல்வி

-பெட்ரண்ட் ரசல்

கல்வி குறித்த சிந்தனை உலகெங்கும் உண்டு.ஒரு புறம் அறிவுதான் என்று சொல்லும்.. மறுபுறம் மதிப்பெண்ணை முன்னிறுத்தும்.எழுத்தாளர்களின் பார்வையில் கல்வி ஒன்றை அசலானதை முன்னிறுத்தும்.அந்த வகையில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்வி குறித்து படித்தவை இவை

உங்கள் கல்வி என்ன சொல்கிறது தெரியுமா? மாபெரும் சிந்தனையாளர்கள் உங்களுக்கும் சேர்த்து சிந்தித்து முடித்துவிட்டார்கள். உன்னதமான கவிதைகள் ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டன. அழகிய பாடல்கள் ஏற்கெனவே பாடப்பட்டுவிட்டன. முக்கியமான கண்டுபிடிப்புகள் முன்பே நிகழ்ந்துவிட்டன. இவற்றை எல்லாம் அறிந்துகொள்வதைத் தவிர்த்து வேறு எதுவும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்கிறது.

உலகின் சிறந்த கல்வி என்ன செய்யும் தெரியுமா? இன்னொருவரின் விழிகளை எடுத்துவந்து உங்களுக்குப் பொருத்தாது. இன்னொருவரின் விடையை, இன்னொருவரின் பாடலை, இன்னொருவரின் இசையை அள்ளி எடுத்துவந்து, 'இதுவே உயர்வானது' என்று உங்களை நம்ப வைக்காது. எந்தத் தீர்மானமான விடைகளையும் அது அளிக்காது. எந்த விவாதத்தையும் முடிவுக்குக் கொண்டுவராது. எந்தத் தீர்வையும் திணிக்காது. எந்தப் பாடத்தையும் கற்பிக்காது. எதையும் மனனம் செய்துகொள்ளுமாறு தூண்டாது.

மாறாக, தனது மெல்லிய கரங்களால் உங்கள் விழிகளை அது முழுமையாகத் திறக்கும். உங்கள் கண்களுக்குள் விழுந்துகிடக்கும் தூசியை அகற்றி உங்கள் பார்வையை அகலப்படுத்தும். உங்கள் புலன்களை வருடிக்கொடுத்து, கூர்மைப்படுத்தும். உங்கள் தோள்மீது கையைப் போட்டுக்கொண்டு தோழமையோடு உரையாடும். உங்கள் சமூகம் உங்கள் சாயலில் இருப்பதையும் உங்கள் பிரச்சினைகளே உங்கள் உலகின் பிரச்சினைகளாக நீண்டிருப்பதையும் அது சுட்டிக்காட்டும். இதைப் பற்றி எல்லாம் நீ என்ன நினைக்கிறாய் என்று உங்களைக் கிளறிவிட்டு, நீங்கள் சொல்வதைக் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கும்.

உங்கள் தவறுகளை, உங்கள் தடுமாற்றங்களை, உங்கள் சறுக்கல்களை, உங்கள் குறைபாடுகளை அது ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக்கொள்ளாது. நீங்கள் எதிர்கொள்ளும் தேர்வுகளையும் நீங்கள் பெறும் மதிப்பெண்களையும் உங்களுக்கு வந்து சேரும் பாராட்டுகளையும் நகர்த்தி வைத்துவிட்டு, 'நீ மெய்யாக என்ன கற்றுக்கொண்டாய்? உன் வார்த்தைகளால் சொல், கேட்போம்' என்று புன்னகை செய்யும்.

முதுகில் மட்டுமல்லாமல், மூளையிலும் அதிகம் சுமக்காதே என்று அக்கறையோடு உங்கள் சுமையைக் கீழே இறக்கி வைக்கும். உங்கள் உடலும் உள்ளமும் பஞ்சுபோல் லகுவானதை உறுதிசெய்துகொண்ட பிறகு, புதிய சிறகுகளை எடுத்துவந்து உங்கள் முதுகில் செருகிவிடும். 'உன்னைக் கட்டுப்படுத்தும் அனைத்தையும் கடந்துசெல்' என்று உங்களை மேலே, மேலே உந்தித் தள்ளும்.

முதல் முறையாக ஒரு பறவையைப் போல் சிறகடித்து நீங்கள் பறக்க ஆரம்பிப்பீர்கள். உங்களுக்கான புத்தம் புதிய திசைகளை நீல வானம் காண்பிக்கும். புதிய பயணங்களை நீங்கள் மேற்கொள்ளும்போது புதிய வெளிச்சம் உங்களுக்குக் கிடைக்கும். அந்த வெளிச்சத்தைத் திரட்டிக்கொண்டு மெய்யான அறிவை நீங்கள் கண்டடைவீர்கள். அந்த அறிவு ஏற்கெனவே கண்டறியப்பட்டதாக இல்லாமல் இந்த ரோஜாவைப்போல் புதிதானதாக இருக்கும்.

ஒரு மலரை மலராகக் காண்பது எப்படி என்பதை உணரும்போது, ஒரு மனிதனை மனிதனாக மட்டும் காணும் திறனை நீங்கள் பெறுவீர்கள். இந்த அதிசயத்தை எது நிகழ்த்துகிறதோ அதுவே உலகின் சிறந்த கல்வி, உன் பாடலை நீதான் பாடவேண்டும் என்கிறார் கபீர். உன் தேடல் உன்னிடமிருந்து புறப்பட்டு வரட்டும் என்கிறார் புத்தர்.

நான் எழுப்பியவை என் கேள்விகள்; உன்னுடையவை எங்கே என்கிறார் சாக்ரடீஸ். உன்னதமான வரிகள் உன்னிடமிருந்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கின்றன என்கிறார் தாகூர். நான் சொல்லாமல் விட்ட ஆயிரம் கதைகளில் ஒன்றையேனும் சொல்லேன் கேட்போம் என்கிறார் டால்ஸ்டாய். நானும் அவர்களோடு சேர்ந்து காத்திருக்கிறேன். என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார் ஜேகே.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

சித்தாரே ஜமின்பர்


சித்தாரே ஜமின்பர் விமர்சனம்
-மணி

ஆமிர்கான் திரைப்படம் என்றாலே எதிர்பார்ப்புதான்.வழக்கமான படம் போல் இல்லாமல் ஏதொ ஒன்று இருக்கும்.2007ஆம் ஆண்டில் வெளியாகி
மக்களிடம் அமோக ஆதரவு பெற்ற தாரே ஜமீர் பர் படத்தின் அடுத்த வெர்சனாக இப்படம் வந்துள்ளது.2018 சாம்பியன்ஸ் என்ற ஸ்பானிஷ் படத்தை தழுவி எடுக்கப்பட்ட ரீமேக் படம் தான் என்றாலும் பாரப்பவர்களை எந்த அளவு கவந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

கதை

படத்தின் மையம் பேஸ்கட் பால் விளையாட்டுத்தான். டெல்லியில் பேஸ்கட் பால் அசோசியேசனில் கோச்சாக பணியாற்றுபவர் ஆமிர்.தன் உயரக்குறைவு  குறித்து கிண்டல் செய்வோருடன் சண்டையில்.ஈடுபடும் ஆமிர்..ஒருகட்டத்தில் சீனியருடன் இதே பிரச்சனையில் மோதல் வெடிக்க அங்கிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

கோபம் மற்றும் ஆற்றாமையில் மதுபோதையில் போலிஸ் வேன் மீது மோதி கோர்ட்டில் ஆஜராகிறார்.இவரின் நடவடிக்கையால் கோபமுறும் நீதிபதி அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு பேஸ்கட் பால் கற்பிக்க மூன்று மாதம் செல்ல உத்தரவிடுகிறார்.

மனைவியின் ஜெனிலியாவுடன் கருத்து வேறுபாடு காரணமாய் பிரிவு, வேலையிழப்பு, 3 மாத தண்டனை என வேண்டா வெறுப்பாய் சென்றவருக்கு அங்கு மாற்றுத்திறனாளிகளை தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயார் செய்ய வேண்டிய பணி கொடுக்கப்படுகிறது.

அதனை அவர் சரியாக செய்து முடித்தாரா? மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் நபராக அவர் மாறினாரா என்பதே மீதிக்கதை.

#ப்ளஸ்

*படத்தின் பெரிய பலம் கதை திரைக்கதையை தன் தோளில் சாய்த்து தூக்கிக் கொண்டு ஓடும் ஆமிர்கானின் யதார்த்த நடிப்பு

*அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் நடிப்பும் வசனமும் இயல்பான நகைச்சுவையை வரவழைக்கிறது

காதலியை தொழில் செய்பவர் எனக்கூறுவது, Ball பிடிங்கனு சொன்னதும் அவர்கள் செய்வது, த்ரோ என்றவுடன் வீசுவது,இறுதியில் போகிறேன் என்று சொல்லும்போது கூட செத்துப்போகப் போறீங்களானு வெள்ளந்தியாய் கேட்பது

*அவ்வப்போது அறிவுரை கூறுவதுபோல், உணர்வுகளை புரிய வைக்கும் ரோலில் நடித்துள்ள குர்பால் சிங்தான் அதிகம் ஸ்கோர் செய்கிறார்.

'எல்லோருக்கும் ஒரு நார்மல் இருக்கும். உங்களுடையது உங்க நார்மல் அவர்களுக்கு அது நார்மல்'

'விதி என்பது கைரேகைகளில் எழுதப்படுவதில்லை. நம் குரோமோசோம்களில் எழுதப்படுகிறது.ஒன்று மாறினாலும் அவ்வளவுதான் எனும் வசனங்கள பளிச்

#மைனஸ்

*முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் குறைவு

*இது போன்ற ஸ்போர்ட்ஸ் படங்களில் டெம்ப்ளேட் ஹீரோயின் ஜெனிலியா

 

யூகிக்க முடிந்த க்ளைமேக்ஸ்.ஆனால் அதில் ட்விஸ்ட் வச்சு..வழக்காமான வெற்றியை காட்டாமல்..அருகில் இருப்பவர்களின் வெற்றியை கொண்டாடும் மனநிலையை ஏற்படுத்தி எல்லா குறைகளையும் மறக்க வைத்துவிடுகிறது.வாய்ப்பு நல்லமுறையில் பயன்படுத்தனும் என சொல்லி..மாற்றுத்திறனாளிகளின் உலகை நம் கண் முன் நிறுத்துகிறார்கள்.

அவங்களுக்கு நான் எதையும் சொல்லிக் கொடுக்கல, அவங்ககிட்ட இருந்துதான் நான் கத்துக்கிட்டேன் என நம்மையும்.சேர்த்து சொல்ல வைத்துள்ளது.

பார்க்கலாம். ரசிக்கலாம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 21 June 2025

82



#Reading_Marathon2025
#25RM055

#12மாதம்_ஒரு_எழுத்தாளர்

Book No:82/100+
Pages:-199

காதல் சரி என்றால் சாதி தப்பு
-பெருமாள் முருகன்

ஜாதி அனைத்து இடங்களிலும் ஒளிந்துள்ளது படித்த ஆசிரியர்களின்
ஒவ்வொருவரின் முதுக்குக்கு பின்னும் ஜாதி ஒளிந்துள்ளது. அதிகாரமும் அரசியலும் கமுக்கமாக ஒளிந்திருக்கும்.சாதிய சமூகத்தில் சகமனிதனை அந்நியப்படுத்தும் வித்தை இருக்கும். புதிதாக ஒருவரை சந்திக்க நேர்ந்தால் நம்மை அறியாமலேயே அவர் ஜாதியை மனம் ஆராய ஆரம்பிக்கிறது. ஏதாவது ஒரு வகையில் ஜாதியை உறுதிப்படுத்தியதும் இணக்கமாக பெரும்பான்மையோ சுயசாதியை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது அப்போது பொதுவெளி கொள்ளும் சிலரை மட்டும் கொண்ட தனி வலியை உருவாக்கி நிம்மதி அடைகிறது.

மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவில் தமிழ் ஆசிரியர் ஒருவர் நியமிக்க நியமனம் செய்வதை அறிந்து அறிவியல் அறிஞர்களை நியமிக்காமல் தமிழ் ஆசிரியர்களை பண்டிட்களை ஏன் நியமிக்க வேண்டும் என்ற கருதும் மனப்பான்மை குறித்த விளக்கத்துடன் முதல் கட்டுரை துவங்குகிறது. தமிழ் ஆசிரியர்கள் என்றாலே சமூகத்தில் ஏளனம் காணப்படும் சூழலை தக்க உதாரணங்களுடன் வெளிப்படுத்துகிறார். 

பள்ளிகளுக்குள்ளும் தன் ஜாதி ஆசிரியர் யார் என்பதை மாணவர்கள் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு ஜாதி எவ்வாறு பள்ளிகளில் ஆக்கிரமித்துள்ளது ஒவ்வொரு இடங்களிலும் ஜாதி எவ்வாறு எல்லாம் நுழைந்துள்ளது என்பதனை கூறுகிறார்.

காதலை ஒரு மனிதனின் அடிப்படை உணர்வாகவும், சாதியை சமூக கட்டமைப்பாகவும் பார்க்கிறார். காதலில், இருவர் ஒருவருக்கொருவர் பிணைந்து, அன்பு செலுத்துகிறார்கள், ஆனால் சாதி என்பது ஒருவரை ஒருவர் பிரித்து, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது. எனவே, காதலின் அடிப்படையில் சாதி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறுகிறார்

கல்லூரியில் பணியாற்றும் முதல்வர் பொறுப்பு என்பது கல்லூரியில் மிகப்பெரிய பொறுப்பாகும். ஆனால் அப் பொறுப்புகளில் பணியமர்த்தப்படுபவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன் ஓராண்டு ஆறு மாதம் என்ற நிலையில் தான் அமர்த்தப்படுகின்றனர். அவர்களும் தங்கள் ஓய்வூதியத்தை பெரும் பொருட்டு எந்த ஒரு முன் நடவடிக்கைகள் வளர்ச்சிக்குரிய திட்டங்கள் எதனையும் செயல்படுத்தாது அவ்வாறே பணி ஓய்வு பெற்று விடுகின்றனர் என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தி இருப்பார். மேலும் தாம் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களையும் சுவாரசியமாய் இதில் கொடுத்திருப்பார்.

உண்மையில் அதிகாரம் பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தப்படும் போது சமூகத்தில் விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழும். ஆனால் அந்த அதிகாரம் மற்றவர்களை சிறுமைப்படுத்த பயன்படுத்தப்படும் போது நடப்பது  சிறந்த நிலையை அடைவதை தடுக்கும் வேகத்தடைகளாக உள்ளன. 

இதில் மாணவர்களைச் சமாளிப்பது எளிது. ஆனால் மாணவர் பிரச்சினை காளான் போல அங்கங்கே முளைத்துக் கொண்டேயிருக்கும். ‘வெட்ட வெட்டத் தழையும்’ என்பார்களே, அதுமாதிரி. ஓடும் வாய்க்காலில் ஒரு உடைப்பை அடைத்தால் பத்து உடைப்புகள் ஏற்படும். ஒவ்வொருவரின் பின்னும் சாதி அடையாளம் தெளிவாக இருக்கும். சாதி கடந்த நட்பைச் சாத்தியப்படுத்த இயலாத காலம் இது. ஒருகுழுவாக மாணவர் சேர்ந்திருந்தால் எல்லோரும் ஒரேசாதி என்று அனுமானிப்பது பெரும்பாலும் தவறாகாது. இன்னொரு குழு வேறுசாதி என்பதாலேயே இருகுழுக்களுக்கும் பகை மூண்டுவிடும். என்ற நிதர்சனத்தை முன்னோர்கள் நமக்கு தந்திருப்பார் ஆசிரியர் பெருமாள் முருகன் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 20 June 2025

எல்லாரும் சந்தோஷமாயிருக்கணும்.எல்லாரும் திருப்தியாயிருக்கணும். எத்தனையோ கிடைக்கும்.கிடைக்காம இருக்கும். எத்தனையோ வரும். எத்தனையோ போகும். அதுக்காக சந்தோஷமா இருக்கறதை விடப்படாது. முயற்சி பண்ணி சந்தோஷமாக இருக்கக் கத்துக்கணும்.நூறு இல்லாம இருக்கலாம். பத்து இல்லாம இருக்கலாம்.காசு இருக்கலாம். இல்லாம இருக்கலாம். வெயில் கொளுத்தலாம். மழை கொட்டலாம். எதாயிருந்தாலும் எல்லாரும் முயற்சி பண்ணி சந்தோஷமா இருக்கப் பாடுபடணும். சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணணும். சந்தோஷமாத்தான் இருப்பேன் பிடிவாதமாக இருக்கணும்.தி.ஜானகிராமன். மாப்பிள்ளைத் தோழன் சிறுகதையில்.

Thursday, 19 June 2025

114


#கற்கை_நன்றே_114

"சேமிப்பு"" என்பது 
மூன்று வீதமாக இருக்க வேண்டும்

'சோறு' -- இன்றைய தேவை... 
'அரிசி' -- நாளைய தேவை... 
:விதை நெல்' -- எதிர்கால தேவை...

சமீபத்தில் நாஞ்சில் நாடனின் கட்டுரை ஒன்றை வாசித்தேன். தமிழ் ஆர்வமும் ஆழமும் உடைய அவரின் எழுத்துக்களில் உள்ள  தமிழாராய்ச்சி மெய் சிலிர்க்க வைக்கும். அப்படித்தான் உபநெல்லும் ஊரையும் கட்டுரை காணக் கிடைத்தது.

உப என்னும் வடமொழிச் சொல்லானது ஒரு adverbial prefix. உப பயன்படுத்தப்பட்ட சொற்கள் பலவுண்டு நம்மிடம்.

உபக்கிரகம் என்றால் ஒரு கிரகத்தைச் சுற்றி ஓடும் சிறுகிரகம். அதாவது Satellite.

உபக்கிராமம் என்றால் உட்கிடைக் கிராமம். Hamlet, dependent Village.

உபகதை என்றால் கிளைக்கதை அல்லது கட்டுக்கதை.

உபகுரு என்றால் உதவியாசிரியர்.

உபசந்தி என்றால் சந்திக்கு சற்று முந்திய காலம்.

உபசீவனம் என்றால் பிறரைச் சார்ந்து வாழ்தல்.

உபதாது என்றால் பொன் முதலாய் ஏழு தாதுக்களைப் போலத் தோற்றம் உடைய மதிப்புக் குறைந்த ஏழு உலோகங்கள்.

உபதாளம் என்றால் ஐந்து சிறு தாளங்கள்.

உபநதி என்றால் பெரிய நதியில் வந்துவிழும் ஆறு.

உபபத்திரம் என்றால் இலைக்காம்பின் பக்கமுள்ள சிறிய இலை, 

உபபலம் என்றால் துணைப்படை. மூல பலம் எனில் மூலப்படை

பாண்டவர் என்பவரை அறிவோம். அவர்தம் வாரிசுகளை உபபாண்டவர் என்பார்கள். எடுத்துக்காட்டுக்கு அபிமன்யு, அரவான்... ' பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பொருள்களில் 'உப' எனும் சொல் ஆளப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட சில எடுத்துக்காட்டுகளில், உபநெல் என்றொரு சொல் இல்லை. எந்த நெல்லை எவ்வாறு பாதுகாத்து வைத்தாலும் அறுவடை நேரங்களில் சற்று  வீணாகும்.ஒரு வேளை தரிசடிக்க,காலா காலத்தில் மழை கிடைக்காமல் போனால்.  ஒரே உழவாக உழுது தரிசிலேயே விதைத்து விடுவார்கள்.

அவ்வாறு நெல் முளைக்கும் போது களையும் முளைக்கும்.அதை கட்டாயம் களைய வேண்டும்.சம்பா என்பது நான்கு மாதப் பயிர்.வாசறுமிண்டான் நெல் ஆறுமாசப்பயிர்.சம்பா பயிர் முளைத்து அறுவடைக்கு தயாராகும்போது முந்தைய அறுவடையின் எச்சமான வாசறுமிண்டான் பூவும் உடன் முளைத்திருக்கும்.எனவே சம்பா அறுவடையின் போது.. வாசறுமிண்டான் நெல்லையும் களையுடன் சேர்த்து பிடுங்கிவிடுவார்கள்.அதை களை என சொல்லாமல் உபநெல் என்கின்றனர் விவசாயிகள்.

நெல் போலத் தோற்றம் கொண்ட 'ஊரை' என்பதை களை என்கின்றனர்.நெல்லின் முனை ஓரஙகுல ஊசி போல நீண்டு நின்றால் அது ஊரை.இது கனமற்று..மனதில்லாமல் விளைந்தது போல் இருக்கும். காய்ந்தும் காயாமலும் சந்தைக்கு வரும் கருவாட்டை 'ஊரைக் கருவாடு', என்பார்கள்.நாட்டுப் புறத்தில் இங்கு கேட்டு அங்குச் சொல்பவனை ஊரை என்கின்றனர்.' ஊரை ஊரைக்கெடுக்கும், ஓட்டப்பம் வீட்டைக் கெடுக்கும்' என்றொரு சொலவமும் உண்டு.

உபநெல் என்பது சற்றுக் கரிசனத்துடன் பார்க்கப்படும் பயிரோடு வளரும் இனம் எனில், ஊரையோ பகையோடு பார்க்கப்படும் இனம்.

 நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 18 June 2025

113


#கற்கை_நன்றே_113

“Things won are done, joy’s soul lies in the doing”- Cressida,
’ by Shakespeare

"வெற்றி பெற்றவைகள்
செயல்களின் மூலமே முடிந்தது., மகிழ்ச்சியின் ஆன்மா செயல்களில் உள்ளது" -ஷேக்ஸ்பியர்

வெற்றி, தோல்வி என்பவை அவரவர் மனப்பான்மை
வெற்றி பெற முயற்சி செய்'' (Motivate to win) என்ற நூலின் ஆசிரியர் ரிச்சர்டு டென்னி

 "நொண்டிச்சமாதானங்களைத் தவிர்த்துத் தீவிர முயற்சிகளை மேற்கொள். வெற்றி நிச்சயம்' என்கிறார். அவர் மேலும் தமது நூலில் வெற்றியாளனின் மனோபாவமும், தோல்வியாளரின் அவநம்பிக்கைச் சிந்தனைகளும் பின்வரும் குறிப்பிட்ட வகைகளில் வேறுபடுகின்றன என்கிறார்.

வெற்றி பெற்றவன் தவறு செய்தால், ""நான் தவறு செய்தேன்'' என்றான். தோல்வியாளன் "" அது என் பிழை அல்லா'' என்கிறான்.வெற்றியாளன் கடுமையாக உழைக்கிறான். நிறைய நேரமும் இருக்கிறது. தோல்வியாளன் எப்போதும் தான் பிசியாக இருப்பதாகச் சொல்லி தோல்வி காண்கிறான்.

வெற்றியாளன் பிரச்னையின் நடுவில் மத்தியில் செல்கிறான். தோல்வியாளன் நகராமல் பிரச்னையைச் சுற்றி
நின்று கொண்டிருக்கிறான்.

வெற்றியாளன் தவறு நேர்ந்ததற்கு வருந்துகிறான். தவறைத் தவிர்க்கிறான். தோல்வியாளன் தவற்றுக்கு "சாரி சொல்கிறான். ஆனால் மீண்டும் அதே தவறைச் செய்கிறான்.

5. எது குறித்துப் போராட வேண்டும். எந்த விஷயத்தில் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிந்தவன் வெற்றியாளன். சமாதானம் செய்து கொள்ள வேண்டிய இடத்தில் சண்டையும், சண்டை செய்ய வேண்டிய விஷயத்தில் ஒதுங்கி நின்று இழப்பும் ஏற்படுத்திக் கொள்வது தோல்வியாளனன் வழக்கம்.

வெற்றி, தோல்வி என்பவை அவரவர் நல்ல மனப்பான்மையையும், சிந்தனைத் தெளிவையும் போட்டிகளில் முன்னதாக வர வேண்டும் என்கிற தணியாத ஆர்வத்தையும் பொறுத்து அமைகின்றன.

கிரிக்கெட்டில், தற்போது அதிகம் நேசிக்கபடுவது T20 தான் ! டெஸ்ட் தொடரை நல்ல கிரிக்கெட் ரசிகன் மட்டுமே பார்க்கிறான். பொது மக்கள் அதிகமாக டெஸ்ட் தொடரை விரும்புவதில்லை அல்லது பார்க்க நேரம் இல்லை.

T20 கிரிக்கெட் ஆடும் போது, பேட்ஸ்மேன் எந்த பந்தயும் விட கூடாது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்து ஆடி ரன்கள் சேர்க்க வேண்டும். நல்ல பந்து, மோசமான பந்து என்றில்லை. ஒரே அடி தான்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை எப்படி விட வேண்டும் என்பது ஒரு கலை. எல்லாருக்கும் வராது. ஆனால் நீங்கள் அடிக்க வேண்டும் என்றே சில பந்துகளை வீசுவார்கள். பந்தை அடிக்கலாமா, வேண்டாமா என்பது திறமையான decision making. மோசமான பந்தை அடிக்க வேண்டும். நல்ல பந்தை விட்டு விட வேண்டும்.

"சந்தேகம்" பந்தை அடிக்க விடாது. எந்த மேட்ச், எந்த பந்து, தற்போது ஸ்கோர் என்ன நிலை, நம்மிடம் விக்கெட் எப்படி இருக்கிறது, எதிரே பந்து வீச்சில் எந்த பவுலர் இருக்கிறார், இதெல்லாம் யோசிக்கும். குழப்பும்.
கொடுக்கப்பட்ட ஒரே சூழ்நிலை தான். ஆனால் "அறிவு" பந்தை அடித்து வெற்றிக்கு அடி கோலும். எந்த விதமான சூழ்நிலை அழுத்தத்திற்கும் உட்படாது. அதை உள்வாங்கி கொள்ளாது. எப்பொழுதும் Cool" ஆக இருக்க வேண்டும் என்கின்றனர்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 17 June 2025

112


#கற்கை_நன்றே_112

" மாற்றம் என்பது எப்போதும் நடந்து கொண்டிருக்கும்  ஒரு விசயம் என்பதை ஏற்றுக் கொள்ளவும், அதனுடன் சவாரி செய்யவும், அதை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும். "

-ஆலிஸ் வால்க்கர்.

உலகெங்கிலும் வாழும் பெற்றோரின் ஒரே கனவு..தம் பிள்ளை நன்கு படித்து பெரிய ஆள் ஆக வேண்டுமென்பதே.ஆனால் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நடைபெறும் மாற்றங்களில் கல்வியின் இன்றியமையாமை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இன்று பிறக்கின்ற ஒரு குழந்தை 2050ல் எவ்வாறு தன் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதை யுவால் நோவா ஹராரி ஒரு குட்டி ப்ளாஷ் பேக் சொல்லி ஆரம்பிக்கிறார்..

ஓராயிரம் ஆண்டுக்கு முன் அதாவது 1018ல் எதிர்காலத்தைப்பற்றி மக்கள் அறிந்திருக்கவில்லை.1050ம் ஆண்டிலும் பலர் நெசவாளர்களாக, உழவர்களாக,பல்வேறு பணிகளுக்கு மனிதர்களை சார்ந்திருப்பார்கள் என நம்பினர்.தன் குழந்தைக்கு நெற்பயிரை எவ்வாறு பயிரிடுவது என்பதை அவனின் எதிர்கால நன்மைக்காகச் செய்தனர்.இதற்கு நேர்மாறாக 2050ல் பெரும்பாலான விஷயங்கள் பொருத்தமற்றவையாக இருக்கும்  வாய்ப்பு அதிகம் என்கிறார்.

தற்போது ஏராளமான பள்ளிகள் குழந்தைகள்மீது தகவல்களைத் திணிப்பதன்மீது கவனம் செலுத்துகின்றன. கடந்தகாலத்தில் இது அர்த்தம் வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில், அப்போது தகவல் பற்றாக்குறை இருந்தது. இதற்கு நேர்மாறாக, இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நம்மைத் திணறடிக்கும் அளவுக்குத் தகவல்கள் வந்து குவிகின்றன. தணிக்கைக் குழுக்கள்கூட அவற்றைத் தடுக்க முயற்சி செய்வதில்லை. மாறாக, தவறான தகவல்களைப் பரப்புவதிலும் பொருத்தமற்ற விஷயங்களால் நம்முடைய கவனத்தைத் திசை திருப்புவதிலும் அவர்கள் மும்முரமாக இருக்கின்றனர். அதீத தகவல்கள் இருப்பதால், எதை நம்புவது என்பதை அறிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. 

மேலும், எண்ணற்றப் பிற விஷயங்களும் ஒரே ஒரு சொடுக்கில் நமக்குக் கிடைக்கக் காத்திருப்பதால், ஒன்றின்மீது கவனம் செலுத்துவதை அது கடினமாக்குகிறது. அரசியலோ அல்லது அறிவியலோ அதிகச் சிக்கலானதாகத் தெரியும்போது, கேளிக்கையின் பக்கம் திரும்புவதற்கான சபலம் ஏற்படுகிறது.

அப்படிப்பட்ட ஓர் உலகில், ஓர் ஆசிரியர் தன் மாணவர்கள்மீது அதிகமான தகவல்களைத் திணிக்க வேண்டியதில்லை. ஏற்கனவே அவர்களிடம் அளவுக்கதிகமான தகவல்கள் இருக்கின்றன. மாறாக, தகவல்களை அர்த்தப்படுத்துவதற்கும், எது முக்கியம், எது முக்கியமற்றது. ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் புரிந்து கொள்வதற்கும்.. எல்லாவற்றுக்கும் மேலாக, பல தகவல் துணுக்குகளை ஒருங்கிணைத்து உலகத்தைப் பற்றிய ஒரு பெரிய படத்தை உருவாக்குவதற்குமான திறன் மக்களுக்குத் தேவை.பல மேற்கத்திய நாடுகளின் கல்வியின் நோக்கம் இதுதான்.

  ஏராளமான தரவுகளையும் ஓரளவு சுதந்திரத்தையும் மாணவர்களுக்குக் கொடுத்தால், அவர்கள் தாங்களாகவே இவ்வுலகத்தைப் பற்றி தம்முடைய சொந்தக் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வர் .உலகைப் பற்றிய ஒரு விலாவாரியான கண்ணோட்டம் இந்தத் தலைமுறையினருக்கு இல்லாவிட்டால், வாழ்வின் எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையக்கூடும்
என எச்சரிக்கிறார்.

மாற்றத்திற்கான வேகம் அதிகரிக்கும் போது, 'மனிதராக இருத்தல்' என்பதன் அடிப்படை அர்த்தம் கூட உருமாறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மாற்றம் மட்டும் நிரந்தரமானது

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 16 June 2025

111

#கற்கை_நன்றே_111

"வீரர்களிடம் சிந்திக்கும் திறனையும், சிந்தனையாளர்களிடம் வீரத்தையும் வளர்க்காத சமூகத்தில் சிந்தனையாளர்கள் கோழைகளாக இருப்பார்கள், வீரர்கள் முட்டாள்களாக இருப்பார்கள்" 

-துசிடியஸ்

நன்றாக இருட்டிய சிறிது நேரத்தில், பாலத்தில் நின்று கொண்டிருந்த ஒரு கப்பற்படை வீரர், “வலது பக்கத்திலிருந்து வெளிச்சம் வருகிறது,” என்று அறிவித்தார். “அது நகர்ந்து கொண்டிருக்கிறதா அல்லது நிலையாக இருக்கிறதா?” என்று கப்பற்படைத் தலைவர் கேட்டார்.
 அதற்கு அந்த வீரர், “நிலையாக இருக்கிறது,” என்று பதிலளித்தார்.

 அப்படியென்றால், அந்தக் கப்பலுடன் பயங்கரமான மோதல் ஏற்படக்கூடிய ஒரு பாதையில் கப்பல் சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம். எங்கள் தலைவர் எங்கள் கப்பலின் சமிக்கையாளரை அழைத்து, “ ‘உங்கள் கப்பலுடன் மோதக்கூடிய ஒரு பாதையில் எங்கள் கப்பல் வந்து கொண்டிருக்கிறது; 20 டிகிரி பாதை மாறிச் செல்லவும்’ என்று அந்தக் கப்பலுக்குச் சமிக்கை அனுப்புங்கள்,” என்று கட்டளையிட்டார். 

“நீங்கள் 20 டிகிரி பாதை மாறிச் செல்லுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்று அவர்களிடமிருந்து பதில் சமிக்கை இந்தக் கப்பலுக்கு வந்தது. “ ‘நான் இக்கப்பலின் தலைவன். உடனடியாக 20 டிகிரி பாதை மாறிச் செல்லவும்’ என்று சமிக்கை அனுப்புங்கள்,” என்று எங்கள் தலைவர் உத்தரவிட்டார்.

 “நானும் ஒரு கடற்படை வீரன்தான். 20 டிகிரி பாதை மாறிச் செல்லுவது உங்களுக்கு நல்லது,” என்று பதில் வந்தது. அதற்குள் எங்கள் தலைவருக்குக் கோபம் தலைக்கேறியிருந்தது. “ ‘நான் ஒரு போர்க்கப்பல். 20 டிகிரி பாதை மாறிச் செல்லவும்,’ என்று சமிக்கை அனுப்புங்கள்,” என்று அவர் கத்தினார்.

 “நான் ஒரு கலங்கரைவிளக்கம்,” என்று மின்னல் வேகத்தில் பதில் வந்தது. நாங்கள் எங்கள் பாதையை மாற்றினோம். 

அந்தக் கப்பற்படைத் தலைவரும், அந்த நிகழ்வைப் படித்த நாம் அனைவரும் அனுபவித்தக் கருத்துக் கண்ணோட்ட மாற்றம், சூழ்நிலையை முற்றிலுமாக வேறொரு கோணத்தில் நிலைநிறுத்துகிறது. மட்டுப்படுத்தப்பட்ட நம்முடைய கண்ணோட்டம் ஒரு யதார்த்தத்தை மிஞ்சி நின்றதை நம்மால் காண முடிகிறது. மூடுபனியில் பயணித்த அந்தத் தலைவருக்கு இருந்ததுபோல, நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய இக்கட்டான ஒரு யதார்த்தம் அது. 

கொள்கைகள் கலங்கரைவிளக்கங்களைப் போன்றவை. மீறப்பட முடியாத இயற்கை விதிகள் அவை. ‘த டென் கமென்ட்மென்ட்ஸ்’ என்ற தன்னுடைய  திரைப்படத்தில் உள்ளடங்கியிருந்த கொள்கைகளைப் பற்றி சிசில் பி. டெமிலி இவ்வாறு கூறினார்: “விதிகளை உடைப்பது நமக்கு சாத்தியமற்றது. விதிகளுக்கு எதிராகச் சென்றால் நம்முடைய எலும்புகள் மட்டுமே உடைந்து நொறுங்கும்.”

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 15 June 2025

ஒரு கருத்தாக மட்டுமே இருக்கும் ஒரு கருத்தை விட, உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் ஒரு கருத்து மிகவும் முக்கியமானது.— புத்தர்

110

#கற்கை_நன்றே_110

தேர்ந்தெடுப்பதற்கான திறன் தான்
நம்மை மனிதர்களாக்குகிறது

-மேடலின்

வெற்றுப் படகு..... (empty boat)

ஜென் துறவி "லீன்ஸீ" படகில் பயணம் செய்வதில் மிகுந்த நாட்டம் உடையவர்!! அவரிடம் சீடர்களால் வழங்கப்பட்ட ஒரு படகு இருந்தது. மடத்திற்கு அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் பயணம் செய்வார்!!சில வேளைகளில் தியானம் செய்வது கூட, அந்த படகில் இருந்தபடிதான்!!

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்தபோது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு அதிர்ச்சியினால் சற்று கோபம் ஏற்பட்டது. யாரோ அலட்சியமாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தன் படகில் மோதி தனது தியானதிற்கு இடையூறு செய்துவிட்டதாக எண்ணி, கண்களைத் திறந்து திட்டுவதற்கு முற்பட்டார்.

என்ன ஆச்சர்யம்!! அங்கு பார்த்தால் காலிப் படகு ஒன்றுதான்[ அவர் படகின் அருகில் மிதந்து நின்று கொண்டிருந்தது "என் கோபத்தை அந்த காலிப்படகின் மீது காட்டிப் பயன் இல்லை.....

மௌனமாகத்தான் நான் ஞானம் பெற்றேன்!! அந்த வெற்றுப் படகு (empty boat) எனக்கு குருவாக இருந்தது!! இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன், இந்தப் படகும் காலியாகத்தான் இருக்கிறது!! என்று எனக்குள் கூறிக்கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது".... என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

அனைத்தும் அதனதன் சுயத்திலிருந்தே இயங்குகின்றன!! ஆழமாகப் பார்த்தால் யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல!!

குரு லீன்ஸீ கூறியது போல் இங்கு அனைவருமே "வெற்றுப் படகுகள்தான்"!!

ஒருவகையில் அறியாமையும் இன்பம்தான்!! அங்குதான் கடந்து செல்வதற்கு பாதை மிச்சம் இருக்கும்!!படகு கரையில் நிற்பது பாதுகாப்பானது!! ஆனால் படகுகள் அதற்காக உருவாக்கப் படுவதில்லை!! படகின் இருப்பு பயணம் செய்வதற்காகத்தான்....

தொடர்ந்து பயணம் செய்யுங்கள்.... எப்பொழுது வேண்டுமானாலும் "வெற்றுப் படகுகள்" நம் படகின் மீது இடிக்கலாம் என்கிற எண்ணத்துடனேயே!!-ஓஷோ

நற்காலை 

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 14 June 2025

விவாதிக்கும் விஷயத்தில் எந்தவித அறிவுமற்ற ஒருவரிடம் கூட ஓரளவு விவாதிக்க முயற்சிப்பேன். ஆனால் அவரது அந்த அறியாமை திமிராகத் திரளும்போது நாம் விவாதத்திலிருந்து ஒதுங்கிவிடுவதே மாண்பு - ஷோபாசக்தி

பரூக் அப்துல்லா


தெம்பா பவுமாவும் 
ரிசர்வேசனும் 


27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க 
ஆடவர் அணி ஒரு ஐசிசி கோப்பையை வென்றெடுத்துள்ளது. 

அதிலும் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்  
பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று 
உலக டெஸ்ட் சாம்பியன் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளது. 

வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். 

இந்த வெற்றிக் கோப்பையை தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணி கேப்டன் 
டெம்பா பவுமா பெறும் போது 
உள்ளபடி நம்மில் பலரும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்திருப்போம். 

காரணம் 
தென் ஆப்பிரிக்காவில் கருப்பினத்தவர் 
ஒருவர் - கேப்டனாக இருந்து 
கோப்பையை வெல்வார் என்று 
சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு அங்கு மாத்திரம் இல்லை உலகில் யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். 

தென் ஆப்ரிக்காவின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்து அது அடைந்து வந்துள்ள மாற்றங்களை உள்ளடக்கி நோக்கினால் 
இன்று நிச்சயம் அதன் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் வடிக்கப்பட வேண்டிய நாள் என்றால் அது மிகையாகாது.  

எப்படி பன்னெடுங்காலம் கிரிக்கெட் பேட்டையே தொடக்கூடாது என்று 
தீண்டாமை செய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட 
இனத்தில் இருந்து தலைவன் தோன்றி 
இன்று கோப்பையை கைப்பற்றினான் என்பது திரைப்படமாக எடுக்க வேண்டிய கதை. 

ஆம்... 

தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் 
ரிசர்வேசன்  எனும் கோட்டா முறை உண்டு.

ஒரு சீசன் கிரிக்கெட் விளையாட 
அறிவிக்கப்படும் 15 பேர் கொண்ட அணியில் 
ஐந்து பேர் - வெள்ளையரும்
மீதமுள்ள ஆறு பேர் - PEOPLE OF COLOUR( கலப்பு இனத்தவரும்) , BLACKS (கருப்பு நிறத்தவர்களுக்கும்) ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆறு பேரில் இரு இடங்கள் கருப்பு நிறத்தவர்களுக்கு என்று பிரத்யேகமான இடங்களாகும். 

பொதுவாக மேற்கூறிய செய்தியைப் படிக்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறது??? 

என்னங்க இது விளையாட்டுல
எதுக்குங்க இது மாதிரி கோட்டா/ரிசர்வேசன் சிஸ்டம்... நல்லா திறமையா விளையாடுறவங்கள வச்சு டீம் உருவாக்கி ஜெயிக்கிறது தானங்க முக்கியம்... 

இப்படித்தானே தோன்றுகிறது நண்பர்களே... 

தங்களுக்கு தோன்றும் எண்ணம் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கிருந்த எண்ணமும்... 

அப்போது நான் மூன்று  பதங்கள் குறித்து அறிந்திராதப் பேதையாக இருந்தேன்

முதல் பதம் 
சமூக நீதி (SOCIAL EQUITY) 

இரண்டாவது பதம் 
அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ( INCLUSIVENESS) 

மூன்றாவது பதம் 
முறையான/சமமான/ சரியான  பிரதிநிதித்துவம்
( EQUAL REPRESENTATION) 

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியில் ஏன் கோட்டா சிஸ்டம் இருக்கிறது? என்பதை அறிய அந்த நாட்டில் நிலவிய கருப்பர்களுக்கும் கலப்பினத்தவருக்கும் எதிரான அடக்குமுறை ஒடுக்குமுறை நிறைந்த அபார்தைடு ( APARTHEID) முறை குறித்து அறிய வேண்டும். 

கல்வி 
பொருளாதாரம் 
கலை / இலக்கியம்/ விளையாட்டு 
ஆகிய அனைத்து துறைகளிலும் 
கருப்பு நிறத்தவர்கள் வெள்ளையர்களால் அடக்குமுறைக்கு உள்ளாகி நெடுங்காலம் அவதிக்குள்ளாகினர். 

இதனால் அவர்களுக்கு
முறையான வாய்ப்பு வழங்கப்படவில்லை.. பயிற்சி கிடைக்கவில்லை.. பொருளாதார பின்புலம் இல்லை. கல்வி இல்லை.
இதையும் மீறியும் அதீத திறமை கொண்டு வெளியே வந்தாலும் 
அணியில் இடம்பெற்றாலும்
அங்கும் தீண்டாமை / இன வெறுப்பு / வாய்ப்பு வழங்காமை / இருட்டடிப்பு ஆகியவற்றை சந்தித்தனர்

இதற்கு மகாயா நிட்டினியின் பேட்டியே சாட்சியங்கள். 

மேற்கூறிய நிறவெறிக் கொள்கைகளை தென் ஆப்ரிக்க வெள்ளையரால் நிர்வகிக்கப்பட்ட அரசாங்கம் தனது அங்கீகரிக்கப்பட்ட சட்டமாக நிறைவேற்றி அபார்த்தைடு என்று கடைபிடித்து வந்தது. 

இதற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்தது. 
ஐநாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா 
1974 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டது. 
மீண்டும் தென் ஆப்ரிக்காவில் திரு நெல்சன் மண்டேலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக ஜனநாயகம் மலர்ந்ததும் 1994 ஆம் ஆண்டு மீண்டும் ஐநாவில் இணைக்கப்பட்டது. 

இத்தகைய வரலாற்றை அறிந்தால் 
தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் ஏன் ரிசர்வேசன் இருக்கிறது என்பதும் புலப்படும். 

அதன் நியாயங்களும் விளங்கும். 

அந்த அணியின் முன்னாள் கோச் ராபர்ட் அவர்களிடம் இந்த நிற பேதம் குறித்துப் பேட்டி காண்கையில் 
"வெற்றி தான் முக்கியம்... பல்வேறு இனங்களில் திறமையான வீரர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது" என்றார். 

என்னைப் பொருத்தவரை 
மனிதன் ஒரு சமூக விலங்கு
சமூகத்துடன் இணைந்து பழகி அதன் மூலம் இன்பத்தைத் துய்க்கப் பழகி அதன் மூலம் நாகரீகம் அடைந்தவன். 

இதில் 
சாதி மத இன மொழி நிற ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதையும்
தீண்டாமை எண்ணங்கள் இருப்பதையும் நாம் ஏற்கிறோம். 

மேற்கூறிய விசயங்களால்
வாய்ப்புகள் கிடைப்பதிலும் 
வாய்ப்புகளை ஒடுக்குவதிலும்
பன்னெடுங்காலம் கழிந்திருப்பதையும் அறிய முடிகிறது. 

சமூகத்தில் நிலவும் இத்தகைய 
ஏற்றத்தாழ்வுகளை இயன்ற அளவு செப்பனிட்டு அவரவர்க்குரிய வாய்ப்புகளையும் பிரிதிநிதித்துவத்தையும் வழங்கும் முயற்சியே "ரிசர்வேசன்"

இங்கு நம் ஒவ்வொருவரின் மனங்களிலும் மிருகங்களின் எச்சங்கள் ஒளிந்து கொண்டு தான் இருக்கின்றன. 
இதை வெளியில் மறைத்தாலும் உள்ளே இருப்பது அவ்வப்போது வெளி வரத்தான் செய்யும். 
இது இயற்கை.

உலகின் பெரும் புரட்சிகளும்
போர்களும் அடுத்தவனுடைய வாய்ப்பையும் பிரிதிநிதித்துவத்தையும் நீண்ட காலம் தொடர்ந்து பறித்து வந்ததாலேயே/பறித்து வருவதாலேயே நடந்திருக்கிறது. 

எனவே என்னைப் பொருத்தவரை 
சமூகமாக அதில் பங்கு வகிக்கும் அனைத்து மக்களின் பிரிதிநிதிகள் அனைத்து துறைகளிலும் இருப்பதே முழுமையான வெற்றி..

மாறாக வெறுமனே வெற்றி பெறுவதில் எனக்கு தற்போது அதிக நாட்டம்  இருப்பதில்லை. 

தென் ஆப்ரிக்காவில் பெரும்பான்மை கருப்பு நிறத்தவரும் கலப்பு நிறத்தவரும் என்றால்
அவர்களின் பிரதிநிதிகள் அந்த அணியில் இருந்தால் தான் அது என்னைப் பொருத்தவரை சரியான அணி. 

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ரிசர்வேசன் முறை தென் ஆப்ரிக்காவில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் 
கடந்த பல்லாண்டுகளாக தென் ஆப்ரிக்காவால் ஒரு உலகக்கோப்பை கூட பெற இயலவில்லை. 

அதற்குக் காரணம் 
கருப்பு நிற வீரர்கள் அல்லர்
அவர்களை வெளிக்கொணராத
அல்லது அவர்களிடம் தீண்டாமை செய்து சகிப்புத்தன்மையின்றி பேதம் பார்க்கும் வெள்ளையர்களின் குணமே ஆகும். 

இன்று டெம்பா பவுமா எனும் கருப்பினத்தவர் கேப்டனாக இருந்து 
இறுதி வரை போராடி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து டெஸ்ட் கோப்பையை வென்றுள்ளார் என்றால் 
நிச்சயம் ரிசர்வேசனால் குவாலிட்டி எனும் தரம் குறையாது என்பதற்கு இதைவிட வேறு சான்றில்லை. 

இதை உணர்ந்தால் நமக்கு 
நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் ரிசர்வேசன் முறை குறித்தும் அறிவு தெளிவு ஞானம் கிடைக்கும். 

சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அவரவர்க்குரிய வாய்ப்பும் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டு
அனைவரின் உழைப்பும் சேர்ந்து கிடைப்பதே மெய்யான வெற்றி 

மெய்யான வெற்றியே 
தூய்மையான மகிழ்ச்சி 
அதுவே பன்முகம் கொண்ட நாட்டின் வளர்ச்சி

தென் ஆப்ரிக்காவின் பன்முகத்தன்மையினாலும் 
பிரிதிநிதித்துவ நடைமுறைகளாலும் 
கிடைத்த இந்த கோப்பை 
உண்மையில் மிகவும் வலிமையானது. 

இந்த வெற்றியில் நாமும் பங்கு பெறுவோம்...

தனது பேட்டியில் தனது பாட்டி டெம்பா என்று பெயர் வைத்ததாக கூறினார் அந்த அணி கேப்டன். 
டெம்பா என்றால் ஹோப்/ நம்பிக்கை என்று ஆப்ரிக்க மொழியில் அர்த்தமாம். 

ஏலேய் மக்கா 
எங்கூர்ல கூட நம்பிக்கை இல்லாம இருக்கவன் கிட்ட நாங்க இப்டி தான் சொல்லுவோம்

"டேய் கவலைப்படாத டா. தெம்பா இரு. நாங்க இருக்கோம்.. "

இங்க தெம்பா என்றால் வலிமை / strength 
மற்றும் நம்பிக்கை இரண்டையும் குறிக்கிறது .

ஆப்பிரிக்க மொழியில் உள்ள பல கூறுகளும் தமிழ் மொழிக் கூறுகளும் ஒன்றாக இருப்பது விசித்திரமில்லை 

யாதும் ஊரே 
யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார் 

அதையே நானும் வழிமொழிகிறேன்..

நன்றி 

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

Thursday, 12 June 2025

109



#கற்கை_நன்றே_109

கேள்வி இருள்,
பதில் வெளிச்சம்.

-செழியன்

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் இசிடார் ஐசக் ராபி, "பெரிதாக எதுவும் திட்டமிடாமலேயே என் தாயார்தான் என்னை ஓர் அறிவியலறிஞராக ஆக்கினார். புரூக்லினில் உள்ள ஒவ்வொரு யூதத் தாயாரும் தன் குழந்தை, பள்ளியிலிருந்து திரும்பியவுடன், 'இன்று ஏதேனும் கற்றுக் கொண்டாயா?' என்று கேட்பதுதான் வழக்கம். ஆனால் என் தாயாரோ 'இஸ்ஸி, இன்று ஏதேனும் ஒரு நல்ல கேள்வியைக் கேட்டாயா?' என்று என்னிடம் கேட்பார். 

அந்த வித்தியாசம் — நல்ல கேள்விகளைக் கேட்டதுதான் என்னை ஓர் அறிவியலறிஞர் ஆக்கியது," என்று கூறினார். "ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது?" என்று ஒருவர் கேட்டார். அன்றிலிருந்து உலகம் முற்றிலுமாக மாறியது. 

சிராவஸ்தி நகரில் இருந்த ஜேதவனத்தில் வேதியர் உருவில் வந்த தேவனுக்கும் புத்தருக்கும் இடையில் வினா-விடை வடிவில் நடந்த உரையாடல் நம் சிந்தனைக்கு விருந்து என்கிறார் தமிழருவி மணியன் ஒரு கட்டுரையில்..

கூர்மையான வாள் எது?

கோபத்தில் வெளிப்படுத்தும் சொல்.

கொடிய விஷம் எது?

பேராசை

கொடிய நெருப்பு எது ?

காம உணர்ச்சி.

துளைக்க முடியாத கவசம் எது?

பொறுமை

தலைசிறந்த ஆயுதம் எது?

ஞானம்.

மிகச் சிறந்த பொக்கிஷம் எது?

ஒழுக்கம்.

மிகக் கொடிய காய்ச்சல் எது?

துவேஷம்.

இருளடர்ந்த இரவு எது?

பேதைமை.

நிகரற்ற நன்மை அடைபவன் யார்?

மற்றவர்களுக்குத் தானம் செய்பவன்.

அதிகமாக இழப்பவன் எவன்?

பதிலுக்கு உபகாரம் செய்யாதவன்.

உண்மையில், அனைத்துக் கண்டுபிடிப்புகளும் கண்டறிதல்களும் ஒரு கேள்வியில் தான் துவங்குகின்றன. 

எல்லா விடைகளும் உங்களிடம் இல்லாவிட்டால் பரவாயில்லை. இங்கு முக்கியமான விஷயம், உங்களிடம் சரியான கேள்விகள் இருக்கின்றனவா என்பதுதான். உங்கள் அறிவு காத்துக் கொண்டிருக்கிறது. கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 11 June 2025

108


#கற்கை_நன்றே_108

துக்கத்தை கூடுதலாக கற்பனை செய்து கொண்டு,பரிதாபப்பட்டு கொள்வதிலும் உள்ளூர ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது

-சுந்தர ராமசாமி

எப்போதும் மக்களிடம் ஒரு பெரும் சோகத்தின் கற்பனை சிலருக்கு இழையோடிக்கொண்டே இருக்கும். நம் மனம் எப்போதும் எதிர்மறை சிந்தனையையே அதிகம் நினைக்கும்.இதன் கருத்துப் படிவம்
"Catastrophic fantasy" என்கிறார்கள். பெரும் சோகத்தின் கற்பனை.நம்மை நாமே பரிதாபகரமாய் கற்பனை செய்து கொண்டு..சுய இரக்கத்திற்கு ஏங்குவது.ஒருவன் எதிர்பாராத அளவுக்கு மிக மோசமான விஷயங்கள் நடக்கும் என்று மனதில் பயத்துடன் கற்பனை செய்வதை குறிக்கிறது. 

ஏதேனும் நோய் அறிகுறியை படித்து கற்பனை செய்து கொள்வது, வீட்டுக்காரர் வீட்டுக்கு வர தாமதமானால் விபரீத கற்பனையை கட்டவிழ்த்து விடுவது என அதிக மன அழுத்தங்களை ஏற்படுத்துவது.

கோகுல் பிரசாத் ஒரு கட்டுரையில் துயரத்தை பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்

பல நேரங்களில் நாம் உண்மையிலேயே துயருறுவ தில்லை. நம்முடைய துக்கம் என்பது எப்போதோ நடந்த நிகழ்வுடைய நினைவின் துயர் மட்டுமே. தற்கணத்தில் அந்தப் பழைய நினைவை மீட்டுவதால் ஏற்படுகிற கவலையை மனச்சோர்வுடன் முடிச்சிட்டுக் குழப்பிக்கொள்கிறோம். ஒன்றை நினைத்து நினைத்து பழையதைக் கற்பனையில் ஊதிப் பெருக்கிப் பெருக்கி ரணங்களின் சுகத்தில் சிறைப்பட்டிருக் கிறோம். எதனால் இப்படி நிகழ்கிறது எனில் வாழ்க்கையைப் போலவே, நினைவைப் போலவே, நினைவின் துயருக்கும் தொடர்ச்சியுண்டு என நம்புவதால்!

மனிதர்கள் நினைவுகளின் தொகுப்புதான் என்றாலும் தேவையானதை வடிகட்டவும் விலக்கவும் மனதால் இயலும் அதற்கு, நம்முடைய நிகழ்காலத் துயரம் ஒரு பிரமையே என்கிற தெளிவு வேண்டும். காலம் கடந்துவிட்டதைப் போலவே நம்மைத் துயரில் ஆழ்த்திய சம்பவமும் காலமின்மையில் புதைந்தழிந்து விட்டது, நினைவு மட்டுமே பின்தொடர்கிறது, அதன் துயரமல்ல என்கிற புரிதல் வேண்டும். நினைவை முற்றாகத் துறக்க முடியாது, ஆனால் நினைவின் அங்கமாக முயங்கியிருக்கும் ஆற்றாமையையோ துக்கத்தையோ களைய முடியும். நம்மால் ஆவது அதுவொன்றே கொஞ்சம் பயின்றாலே இதை எளிதாகச் சாத்திய மாக்கலாம் என்கிறார்.

துயரம் தண்ணீரை நிகர்த்தது. அது நிறமற்றது.ருசியற்றது. ஆனால் நிறைந்துவிடும்போது பெயரற்ற ஒரு நிறம் அதற்குச் சேர்ந்து விடுகிறது. தாகத்தின் பொழுது ருசியற்ற நீர் அளிக்கும் நிகரற்ற திருப்தியைப் போலவே மனம் தளர்ந்த பொழுதுகளில் துக்கத்தின் அவருசி நாடி நரம்பெல்லாம் நிறைந்து பரவிவிடுகிறது.ஏதோ ஒரு கணத்தில் மனம் அதனை விரும்பி ஏற்கவும் தொடங்கிவிடுகிறது என்கிறார் பா.ரா

இதனை இயல்பாக்க

உண்மை சாத்தியங்களை சிந்திக்க வேண்டும்.“Evidence-based thinking” பயிற்சி செய்ய வேண்டும்.நாம் துக்கப்பட்டால் ஊரே வந்து கர்ச்சீப் நீட்டும் எனும் சிந்தனையை நிறுத்த வேண்டும்.மென்மையான ஒன்றை நம்மால் அதிக நேரம் கைகளில் வைத்திருக்க முடியாது. மனதிலும் வைத்திருக்க முடியாது. அதை கசக்கிப் பார்ப்பதையே மனம் நாடுகிறது. அதுபோல் இல்லாமல் புது மலர் பூப்பது போல் நம் எண்ணங்களை தூய்மையாய் வைத்துக் கொள்வோம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 10 June 2025

107


#கற்கை_நன்றே_107

முன் தயாரிப்பு இன்றி ஓட்டப்பந்தயத்தில் கலந்து உள்ளீர்களா?அப்படியானால் நீங்கள் முட்டாள் என்று அர்த்தம். எப்போதும் ஒரு செயலில் இறங்கும் முன் உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

ஜான் லீச் என்பவர் சொல்கிறார்.. எப்போதும் மாற்றுப் பாதைகளையே யோசித்துக் கொண்டிருந்தாலும் மனக்களைப்பினை தோற்றுவித்து.. இதைச் செய்வதால் என்ன லாபம்? என்கிற கேள்வியினை அடுக்கடுக்காய் நம்மிடம் கேட்டுக் கொண்டே இருந்து.. தொடர்ந்து செயல்படலாம் என்பது மாறி.. அதை 'விட்டுவிடலாம்' என நினைக்கும் அளவுக்கு மனம் செயலிழந்து விடுகிறது.

யோசனைகளை செயல்படுத்தும் முன் அதில் உள்ள சவால்களையும் தடைகளையும் தாங்குவதற்கான மனநிலை உருவாக்க வேண்டும். அதனால் தான் பிறரிடம் யோசனை கேட்க வேண்டும். ஒரு மூளையால் சிந்திப்பதைக் காட்டிலும் இரு மூளையால் சிந்தி என்கின்றனர். பிறர் கூறும் யோசனைகள் நம்மிடம் ஒரு தெளிவை ஏற்படுத்தும். புதிய சிந்தனை ஊற்றெடுக்க வைக்கும்.

பிறரின் யோசனைக் கேட்க நினைக்கும் போதே நம்மிடம் ஒரு பணிவு பிறக்கிறது. பணிவைக் குறிக்கும் humble எனும் வார்த்தை humus எனும் வார்த்தையிலிருந்து வந்தது.அதன் பொருள் மண், மண்ணைச் சார்ந்தது.அதுவே human, humanity எனும் சொற்களுக்கும் வேர்ச்சொல்.பணிவுள்ளபோதே மனிதனாகிறாய். மண்ணின் இயல்பை பெறும்போதே பகட்டின்றி பணிவுள்ளவனாகிறாய் என்று அர்த்தம்.பிறரிடம் ஆலோசனை கேட்கும்போதே நம் கர்வம் உடைகிறது.எது சரியாக வரும் எனும் முடிவுக்கு வர முடியும்.

யோசனைகளை யார் மூலம் பெறுவது?

ஒரு முறை டாட்டா குழுமத்தின் தலைவரான ஜே ஆர் டி டாடா அவர்களை சந்திக்க ஒரு நபர் பலமுறை முயற்சி செய்து கடைசியில் அவரை சந்திக்க வாய்ப்பு பெற்றார்.

அந்த நபர் டாட்டாவிடம் உப்பை விற்குமாறு கூறினார். டாட்டா விற்கு உப்பை விற்பதில் பெரிதாக ஆர்வமில்லை.‌

ஆனால் அந்த நபர் உப்பின் விற்பனை குறித்து பல்வேறு தகவல்களை கூறி டாட்டாவை வியக்க வைத்தார். உப்பானது இந்திய சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப்படும் ஒன்று. அதன் தேவையானது என்றும் இருந்து கொண்டே இருக்கும். எனவே உப்பினை விற்றால் அதிக பணம் பார்க்கலாம் என்று ஆலோசனை கூறினார்.

அந்த நபரின் யோசனையை கேட்ட டாட்டா உடனே உப்பினை விற்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டார். இன்று டாட்டா உப்பு இந்தியாவில் அதிகமாக விற்கப்படும் உப்பு. இந்தியாவில் உப்பு விற்பனையில் 17 சதவீதம் தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளது.

எனவே யோசனைகளை நாம் யார் மூலம் பெற்றாலும் அதனைச் சிந்தித்து செயல்படுத்த நாம் தயாராக இருக்க வேண்டும்.

இதனை இறுதி  வரை படிக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் இறுதிவரை படித்த உங்களுக்கு நன்றி

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 9 June 2025

107


#கற்கை_நன்றே_107

சதுரங்க காய்களுக்குச் சுய சிந்தனை கூடாது என்பது முதல் பாடம்..
-யுவன் சந்திரசேகர்

Cognitive Biases என்பவை மனிதர் செய்யும் சிந்தனைப் பிழைகள் (thinking error). மனித நுண்ணறிவு செயல்பாட்டில் ஏற்படும் தவறான முடிவுகள் அல்லது முன்னிலை சார்ந்த தவறான தீர்மானங்களை இவை ஏற்படுத்தும்.

ஏற்கனவே நம்பும் எண்ணங்களை ஆதரிக்கும் தகவல்களை மட்டுமே தேடுவது. ஒரு அரசியல் தலைவரை பிடிக்கும் நபர், அந்தத் தலைவரை புகழும் செய்திகளை மட்டும் படிப்பது.
ஒரு தகவல் முதலில் கண்டதும், அதன் அடிப்படையில் பிற முடிவுகள் எடுப்பது. ஒரு பொருள் ₹1000-இல் இருந்து ₹700 ஆக விலைகுறைக்கப்பட்டால், ₹700 "குறைவாகவே" தோன்றும்.ஒரு நபரின் நல்ல அம்சத்தை வைத்து முழுமையாக நல்லவராக மதிப்பீடு செய்வது. ஒரு அழகான நபர் நல்லவராகவும் புத்திசாலியாகவும் தோன்றுவது.

Self-Serving Bias வெற்றிக்கு நாமே காரணம், தோல்விக்கு மற்றவர்கள் காரணம் என நம்புவது. தேர்வில் வெற்றிபெற்றால் "நான் படித்தேன்" என்பார்; தோல்வியில் "கல்வி முறை மோசம்" என்பார்.பெரும்பாலோர் ஏற்கும் எண்ணத்தை நாமும் ஏற்க நாம் தூண்டப்படுகிறோம். ஒரு சினிமா ஹிட் என்றால் அதைப் பார்க்கத்தான் வேண்டும் என்று எண்ணுவது.

சில முக்கியமான cognitive basis

*(Parkinson's Law)

"வேலை, கொடுக்கப்பட்ட நேரத்தை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் விரிவடையும்."
நாம் அதிக நேரம் வைத்திருக்கும்போது, தாமதம் செய்வதும், அலட்சியமாக செயல்படுவதும் அதிகரிக்கும்.
பயனுள்ள ஆலோசனை: உங்கள் பணிகளுக்கு எடுத்த நேரத்தையும், உங்கள் ஆற்றல் நிலையையும் கண்காணியுங்கள்.

*(Goodhart's Law)

"ஒரு அளவை, இலக்காக மாற்றும்போது, அது நன்றாக உள்ள அளவாகத் தக்காது."
உதாரணம்: தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் கல்வியின் நோக்கை மாற்றியுள்ளன.
இப்போது மாணவர்களை வளர்ப்பது முக்கியமல்ல; மதிப்பெண்கள், சம்பளங்கள் ஆகியவையே கவனமாகிறன.

*அறிவின் சாபம் (The Curse of Knowledge)

நிபுணர்கள், தாங்கள் அறிந்ததை அனைவரும் அறிந்திருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள்.
அவர்கள் தொடக்க நிலை மாணவர்களுக்கு கற்பிக்கவோ வழிகாட்டவோ முடியாமல் தவிக்கிறார்கள்.
எளிமை என்பது ஒரு கலை.

* (Bandwagon Effect)

நாம் சமூக வாழ்வைக் கொண்டவர்கள்.
அதனால் மற்றவர்களைப் பின்பற்றுவதே இயல்பாகிவிட்டது—even யோசிக்காமலே.
"அனைவரும் செய்கிறார்கள்" என்பதால் செய்வது ஆபத்தானது.
இது "குழுமச் சிந்தனை" போன்று செயல்படுகிறது.

* (Egocentric Bias)

நாம் நம்மை தேவையற்ற அளவு உயர்த்திக் கொள்கிறோம்.
குழு வேலைகளில், நாம் எவ்வளவு பங்கு பெற்றோம் என்று அதிகமாக மதிப்பிடுகிறோம்.

* (Cynicism)

"நம்பிக்கையில்லாதவர்கள் புத்திசாலிகள்" என்று தோன்றலாம்.
ஆனால், ஆய்வுகள் அவர்கள் உண்மையில் குறைவான அறிவுடன் இருப்பதை காட்டுகின்றன.
மிகுதியான சிநிக்கிசம் ஒரு பாதுகாப்பு உளவியல் மறுப்பு (neuroticism) ஆகும்.
மிதமான அளவு நலம்.

* (Hofstadter's Law)

"நீங்கள் திட்டமிட்ட நேரத்தையும் செலவையும் எவ்வளவு முன்கூட்டியே கணித்தாலும், அது இன்னும் கூடுதலாகும்."
நேரம் இரட்டிப்பாகும். செலவு மூன்று மடங்காகும்.

Cognitive biases நம்முடைய தீர்மானங்களை, நம்பிக்கைகளை, சமூகவிழுப்பாடுகளை பாதிக்கின்றன. சிறந்த தீர்மானங்களை எடுக்கவும், உண்மை நிலையை அறியவும், இவை நம்மை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை புரிந்துகொள்வது முக்கியம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

நெய்கடை


ஒரு ஊர்ல ஒருத்தர் மெயின் ரோட்ல சின்ன கடை நடத்தி வந்தாரு.

ஒரு நாள் திடீர்னு எதிர்பக்கம் பெரிய கடை முளைச்சது.

அந்த புதுக் கடை ஓனர் " நெய் 1 கிலோ 300 ரூபாய்"னு போர்டு வெச்சாரு.

இந்த ஆளு பார்த்தான். " நெய் 1 கிலோ

280 ரூபாய்""னு போர்டு வெச்சான்.

இதை பார்த்த பெரிய கடை ஓனர்

"நெய் 1 கிலோ 260 ரூபாய்"னு "னு போர்டு வெச்சாரு.

இவன் விடுவானா? " நெய் 1 கிலோ 240 ரூபாய்" என்னு போர்டு வெச்சான்.

அவர் 200 ரூபாய் என்று போர்டு வைத்தார்.

இவனுங்க ரெண்டு பேரு போட்டியையும் பார்த்த ரொம்ப பெரியவர் ஒருத்தரு சின்ன கடை ஓனர்கிட்ட வந்து

"இதோ பாருப்பா.... நான் சொல்றேன் கேளு. உன்னாலலாம் பெரிய கடை கூட போட்டி போட முடியாது. அவனால நஷ்டத்தை தாங்கிக்க முடியும். உன்னால முடியாது. அதனால இந்த போட்டியை நிப்பாட்டிக்கோன்னு அட்வைஸ் பண்ணாரு.

இந்த ஆளு அவரை உச்சியிலிருந்து பாதம் வரை உத்து பார்த்துட்டு

எல்லாம் சரிங்க. நான்தான் நெய் விக்கறதே இல்லியே. அந்த பெரிய கடை எவ்வளவுதான் விலை குறைக்கிறான்னு

பார்ப்போம்னு சும்மா போட்டி போட்டேன்.

அவன் விலையை குறைக்கும் போதெல்லாம் என் பொண்டாட்டி இன்னும் ஊர் மக்கள் அங்க போய்

கம்மி விலையில நெய்

வாங்கட்டும்னு நான் செய்தேன்.

அப்போ டமால்னு ஒரு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தா அந்த பெரியவர் மயக்கம் போட்டு விழுந்து கிடந்தாரு!!!

Sunday, 8 June 2025

106


#கற்கை_நன்றே_106

“நீங்கள் விரும்பாத எதையாவது சந்திக்கும்போது, அதை மாற்றுவதுதான் நீங்கள் செய்ய வேண்டியது. அதை மாற்ற முடியாவிட்டால், அதைப் பற்றிய உங்கள் சிந்தனையையே மாற்றுங்கள். 
— மாயா ஆஞ்சலோ

 மாற்றங்களை புரிந்து கொண்டு, அதை எதிர்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திக் கொண்டால்,மாற்றத்தை எதிரியாக நினைக்காமல் நண்பனாக பார்க்க முடியும்.நாமோ மாற்றங்களை விதிவிலக்காகவே பார்க்கிறோம். ஆனால் உண்மையில், அவைதான் வாழ்க்கையின் மையம். 

Brad stulberg எழுதிய Master of change எனும் புத்தகத்தில்
non-dual thinking பற்றி சொல்கிறார்..

வாழ்க்கையில் சில விஷயங்கள் மட்டும் "இது அல்லது அது" என இருக்கும். ஆனால் பல விஷயங்கள் "இது மற்றும் அது" என்பதாக இருக்கும். இதைத்தான் தத்துவத்தில் non-dual thinking என்பார்கள்.
உதாரணமாக:

முடிவெடுப்பு என்பது “அறிவோ அல்லது உணர்வோ” அல்ல; அது “அறிவும் உணர்வும்” ஆகும்.

மன உறுதி என்பது “கட்டுப்பாடோ அல்லது கருணையோ” அல்ல; அது இரண்டும் சேர்ந்ததுதான்.

கடின உழைப்பும் ஓய்வும் இரண்டும் ஒன்றாகவே தேவை என உணர முடியும்.

Rugged Flexibility" (வலிமையான நெகிழ்ச்சி) என்ற மனநிலையை உருவாக்குவதற்கான அறிவியல், ஞானம் மற்றும் நடைமுறைகளைக் கூறுகிறது.

இந்த சிந்தனையில் நாம் உணர்வது: வாழ்க்கை மிக சிக்கலானது, உண்மை பெரும்பாலும் முரண்பாடுகளில் மறைந்திருக்கும்.
இவ்வாறு எண்ணும் போது, Rugged Flexibility தோன்றுகிறது:

Rugged என்பது உறுதியும் சகிப்புத் தன்மையும்

Flexible என்பது மாறுபாடுகளுக்கு உடனே ஒத்துழைக்கும் தன்மை

இரண்டும் சேர்ந்தால், மாற்றங்களில் கூட திகழும் தன்மை பெறலாம்.
ஞானம் என்ன?
அது ஒரு விஷயத்தை அறிந்து, எப்போது அதை பயன்படுத்த வேண்டும் என்பதை அறிவது.
 Daniel Kahneman சொல்வதுபோல்

“யாராவது எதையாவது சொன்னால், அது உண்மையா என்றே கேட்காதீர்கள். அது எதற்கேற்ப உண்மை என்பதை கேளுங்கள்.”

ஒருவர் வேலை செய்யும் முறை மற்றவருக்கு பொருந்தாமல் இருக்கலாம்.
சுய உணர்வு மற்றும் சோதனைகள் மூலம் தான் உங்களுக்கு ஏற்புடையதான ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டும்.
நாம் அனைவரும் மாற்றங்களை எதிர்பாராமல், தவிர்க்க முயல்கிறோம். ஆனால் உண்மையான வளர்ச்சி அந்த மாற்றங்களை கட்டுப்படுத்துவது நம்மால் மட்டுமே சாத்தியம். மாற்றத்தை எதிர்க்காதீர்கள்.

மாறுவது எல்லாம் உயிரோடு
மாறாதது எல்லாம் மண்ணோடு"

தேவையான சூழ்நிலையில் தேவையான மாற்றங்களை ஏற்றுக் கொள்வதும் ,கடைபிடிப்பதும் ஆரோக்கியமான செயலாக எடுத்து கொண்டு நம் வழி நடப்பது நல்லது

நடக்கும்போது ஒரு கால் முன்னாலும், மற்றொரு கால் பின்னாலும் இருக்கும்…

ஆனால், அதற்காக முன்னால் இருக்கும் கால் கர்வப்படவும் இல்லை… பின்னால் இருக்கும் கால் அவமானப்படவும் இல்லை…அவைகளுக்குத் தெரியும் நொடியில் நிலைமை மாறும் என்று…அதனால் தான் மாற்றம் ஒன்றே மாறாதது.

ஒரு சிறிய பறவை தினமும் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து சத்தமாகப் பாட்டுப் பாடும். ஒரு நாள், அந்த மரம் வெட்டப்பட்டது. பறவையை ஒரு பெரிய மாற்றம் எதிர்நோக்கியது. ஆனால் அது பயந்து விலகாமல், ஒரு புதிய மரத்தைத் தேடி, அங்கேயும் பாட ஆரம்பித்தது.

மாறுதல் என்பது முடிவு அல்ல — அது ஒரு புதிய தொடக்கம்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 7 June 2025

கோ.கமலக்கண்ணன்


பெரும் புதினங்கள் எழுத தன்னம்பிக்கையின்மையும் அதீத வியப்பும் தடைகள் ஆகின்றன. இரண்டையும் வீழ்த்தும் ஒரே கல் மனனத் திறனே. மேம்பட்ட சொற்கிடங்கும், கற்பனை வளமும், நுண்ணிய அவதானிப்புகளும் ஒரு புனைவெழுத்தாளருக்கு எவ்வளவு இன்றியமையாப் பண்புகளோ அவ்வளவு இன்றியமையாதது மனனத் திறன். 

மனனம் என்பது சங்கிலித் தொடராக அடுத்தடுத்து வருவன யாவை என்பதை  தெளிவாக நினைவில் இருத்துதல். ஒரு புதினத்தில் பகுதிகள், அத்தியாயங்கள், பத்திகள், காட்சித் தொடர்கள், காட்சிகள், சொற்றொடர்கள் என பல அலகுகள் உள்ளன.  நுண்ணிய அலகுகளில் எவ்வளவு ஆழம்வரை மனனத் திறன் பயன்படுகிறதோ, அந்த அளவுக்குப் படைப்பு துலங்கும். 

புதினத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு அலகுகளிலும் வரிசையில் சில மாற்றங்களையும் நீட்டல் குறுக்கல்களையும் செய்ய வேண்டிய தேவையும் எழும். அப்போது நினைவாற்றல் வெகுவாக கைக்கொடுக்கும். நினைவில் வைக்காமல் குறிப்புகளாக எழுதி வைத்திருந்தால் அதைத் தேடி வரிசைப்படுத்த திட்டமிடுவது அதிக ஆற்றலை வீணடிக்கும். ஒவ்வொரு முறையும் செய்ததைத் திருத்துகையில் வரிசையை மாற்றி அமைக்கவும் வேண்டியதாகும். எழுத்தே உற்சாகத் தடைக்குக்  காரணமாகிவிடும். மனனம் செய்த ஒரு தரவைத் தேர்ந்தெடுத்து அழிக்கவும் வழிகள் உள்ளன. 

மூளையை விடப் பெரிய கணினி ஏதுமில்லை. 

மனனம் என்பது ஒரு நேரடி படிமத்தையோ, சொல்லடைவின் வழியாக விரியும் காட்சியையோ ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி வரிசையாக நினைவில் இருத்துவதே. வரிசை என்பது ஒரு வசதிக்காகத்தான். எந்த ஒரு புள்ளியில் இருந்தும் விரைவாக ஒரு பொருத்தமான பார்வையை உருவாக்கித் தொகுத்துக்கொள்வதற்கு அது உதவும்.

திருக்குறளை மனனம் செய்தபோதும் மேளகர்த்தா ராகங்கள், குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள் உள்ளிட்ட பல பட்டியல்களையும் மனப்பாடம் செய்தபோதும் இதை நன்கு உணர்ந்தேன். சொற்களை நினைவில் மீட்டெடுப்பதற்கு அதை உள்ளே பதியும் முறைகளில் ஒரு நிதானமும் தெளிவும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும். 

மனத்தில் பதிவேற்றிய உணர்ச்சிகளும் நிகழ்வுகளுமே புனைவெழுத்தை உற்சாகம் மிக்கதாக்குகிறது. புனைவின் அடிப்படை அம்சமே நினைவுகள்தான். வாசிப்பின் கோணத்தில் பார்த்தாலே இதற்கு விடை கிடைக்கும். படித்து முடித்ததும் நம்முள் எத்தனை நுண்கதைகளும் பெருங்கதைகளும் பாத்திர அம்சங்களும் படிமங்களும் உவமைகளும் நினைவில் நிற்கின்றன என்பதும் அவை எவ்வளவு உவகை தருவனவாக இருக்கின்றன என்பதும்தான் அகத் தரத்தை நிர்ணயிக்கின்றன. புனைவு எழுதுகிறவருக்கும் நினைவுத் திறன் மிகுந்திருக்க வேண்டும். தொழில் நுட்ப ரீதியாகவும் அழகியல் ரீதியாகவும் அது மிக உதவும்.

-கோ.கமலக்கண்ணன்

Thursday, 5 June 2025

105


#கற்கை_நன்றே_105

தண்ணீர் கொதிப்பதற்கு தான் நேரம் தேவைப்படுகிறது. ஆவியாவதற்கு அல்ல. புரிதலும் தயாராவது அப்படித்தான்

-நபிகள்

நேரம் என்பது நாணயம் அல்ல, அதை சேமிக்க முடியாது, செலவழிக்க மட்டுமே முடியும்.நேர மேலாண்மை என்பது நேரத்தை மிச்சப்படுத்துதல் மட்டுமல்ல.. குறுகிய நேரத்தில் சமயோஜிதமாய் செயல்படுவதும் கூட..நண்பர் ஒருவர் மலைப்பகுதியில் காரை இயக்கிக் கொண்டு இருந்தார்.திடீரென கார் ஆஃப் ஆனதால்..வண்டியின் ப்ரேக் வேலை செய்யவில்லை. வேகம் குறையாமல் வண்டி முன்னோக்கி வேகமாக செல்கிறது. நண்பர் பதட்டமடையாமல் ஹேண்ட் ப்ரேக்கை மெல்ல உபயோகித்து.. கியரை மாற்றி வேகத்தை குறைத்த பின் நிம்மதி அடைந்தார்.

நேரம் அளவானது என்பதை சோம. வள்ளியப்பன் ஒரு உதாரணம் தருகிறார்..

லொம்பார்ட். யு.எஸ் தேசத்தின் கால்பாந்தாட்ட குழுவின் பயிற்சியாளராக வெகுகாலம் இருந்தவர். மிகச் சிறந்த பயிற்சியாளர். ஒரு பந்தயத்தில் யு.எஸ் அணி தோல்வி கண்டபோது, பயிற்சியாளரான அவரிடம், உங்கள் அணியின் தோல்விக்கு என்ன காரணம்? என்று கேட்டனர். அதற்கு அவர், "எங்கள் அணி திறமையான அணி. சிறப்பாகவே ஆடியது. நிச்சயம் நாங்கள் மேலும் சில கோல்கள் போட்டு, வெற்றிபெற்றிருப்போம். என்ன செய்ய, அதற்குள் ஆட்டம் முடிந்துவிட்டது" என்றார்.

ஆட்டத்தின் முதல் பாதி 40 நிமிடங்கள். அடுத்த பாதி இன்னொரு 40 நிமிடங்கள். அதற்குள் யார் வெற்றி என்கிற முடிவு வராவிட்டால் மேலும் பத்து பத்து நிமிடங்கள், கூடுதல் நேரம் (எக்ஸ்ட்ரா டைம்) தருவார்கள். இதுதானே ஆட்டத்தின் விதி! அந்த நேரத்திற்குள் எவ்வளவு கோல்கள் போடுகிறோமோ அதுதானே கணக்கு. அதை வைத்துதானே வெற்றி தோல்வி முடிவுசெய்யப்படும்! குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக கோல்கள் போடும் அணிக்குத்தானே வெற்றி. நேரம் போதவில்லை என்று சொல்வதைவிட குறிப்பிட்ட காலக்குவிற்குள் முடிக்கவும் வேண்டும்.

மேலும் நேரம் ஏன் பொன் போன்றது என்கிறோம்.. உதாரணத்திற்கு
கொல்லன் பட்டறையில் இரும்புத்துண்டுகள் அங்கொன்று இங்கொன்றுமாய் இருக்கும். பணி முடியும் போது.. பெரிய இரும்புத் துண்டுகளை உள்ளேவைத்து விட்டு, சிறிய இரும்புகளை அப்படியே போட்டுவிடுவார்கள்.அதே பொறகொல்லர் பட்டறையில் ஒரு தங்கத்துகளைக் கூட வீணாக்காமல் பத்திரமாய் சேமிப்பார்கள்.நேரமும் இந்தத் தங்கத்தைப் போலத்தான் சிறிய அளவில் கிடைக்கும். அவற்றை பொன்னைப் போல தவறவிடாது பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

மூன்று அமெரிக்கர்கள் இத்தாலி ரோம் நகர் வந்து போப்பாண்டவரை தரிசித்தனர். முதல் நபரை பார்த்து நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறார்கள் என்றார் போப். ஆறு மாதம் என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாக சுற்றிப் பார்க்க மாட்டீர்கள் என்றார்.

 அடுத்தவர் நான் மூன்று மாதம் தங்கப் போகிறேன் என்றார். அதற்குப் நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள் என்றார்.பிறகு மூன்றாமவர் எனக்கு ஒருவாரம் தான்  விடுமுறை என்றார்.போப் சொன்னார்.. நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள் என்றார்.அதற்கு விளக்கமும் தந்தார்.. 

நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாக அதனை பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறது பிறகு பார்ப்போம் என்று எதையும் முழுமையாக பாராது வீணாக்கி விடுகிறார்கள் என்றார். இது நேர நிர்வாகத்துக்கும் நேரம் மேலாண்மைக்கும் நிச்சயம் பொருந்தும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

104



#கற்கை_நன்றே_104

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்றுவது பற்றி சிந்திக்கிறார்கள். ஆனால், ஒருவர்கூட தங்களை மாற்றிக் கொள்ள சிந்திப்பதே இல்லை.
-டால்ஸ்டாய்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினம் இயற்கை ஆர்வலர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலம் மாறும் வேகத்தை விட சூழலியலும் மிக வேகமாக மாறிவருகிறது.

இயற்கையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று கொண்டாடப்படுகிறது. இயற்கையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அதன் மதிப்புகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று மக்களுக்குச் சொல்ல உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்த 2025 ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் 'உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்பதாகும்.#BeatPlasticPollution.
2030 ம் ஆண்டிற்குள் ப்ளாஸ்டிக் ஒழிப்பை மேற்கொள்ள செயல்திட்ட உருவாக்கம் நோக்கத்தை கொண்டுள்ளது.

உலகில் ஆண்டுக்கு 40 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 2040ல் இரு மடங்காக அதிகரிக்கும். இதில் பாதி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படுபவை. இதில் 10 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஏரி, ஆறு, கடலில் 1.1 கோடி டன் பிளாஸ்டிக் குப்பை சேர்கிறது.இதனால் பூமியின் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. 'உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

எந்த வடிவத்துக்கும் மாற்றலாம் என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையான "பிளாஸ்டிகோஸ்" என்பதிலிருந்து பிறந்த வார்த்தைதான் "பிளாஸ்டிக்"

ஒரு மெட்ரிக் டன் நெகிழி தன் முழுமையான வாழ்க்கைச் சுழற்சியில் 5 மெட்ரிக் டன்கள் CO2e (கார்பன்டை ஆக்சைடுக்கு நிகரான பசுங்குடில் வாயுக்கள்) உருவாக்குகிறது. 2019ஆம் ஆண்டில் நெகிழி உற்பத்தியினால் ஏற்பட்ட உமிழ்வு மட்டுமே அமெரிக்காவின் 200 நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களின் உமிழ்வுக்குச் சமமானது என்று CIEL ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது. நெகிழி உற்பத்தி இப்படியே தொடரும் நிலையில் 2030-2035களில் 2015ஆம் ஆண்டு உற்பத்தியை விட இரண்டு மடங்காகவும் 2050ஆம் ஆண்டு மும்மடங்காகவும் இது உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தநெகிழி உற்பத்தியில் 40% நுகர்பொருட்களை பொட்டலமாக்கும் (packaging) ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியாக பயன்பாட்டில் உள்ளன என்கிறார் ஜீயோ டாமின்.

#சுற்றுச்சூழல் தினம் தோன்றிய வரலாறு

1969ம் ஆண்டு மார்ச் மாதம் டென்மார்க்-கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இயற்கையியல் வரலாறு குறித்த கருத்தரங்கு நடந்து கொண்டிருந்தது.

மாணவர் குழு ஒன்று நுழைந்து அங்கிருந்த கதவுகளை பூட்டி.. சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டிற்கு எதிராய் முழக்கம் எழுப்பினர். மாசடைந்திருந்த குளத்து நீரை கொண்டுவந்து அனைவரின் மீதும் தெளித்தனர். ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது.

1970களில் வட அட்லாண்டிக் பகுதியில் குடிமக்களின் போராட்டம், சூழலியல் இயக்கங்களின் தன்னெழுச்சி போன்றவை 1970ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் புவிநாள் உறுதுமொழி நிகழ்வுக்கு முன்னுதாரணமாக அமைந்தது. இதற்கு கிடைத்த வரவேற்பு ஆகியவை சூழலியலாளர்களை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியது.1970ம் ஆண்டு புவிநாள் நிகழ்வுக்குப் பின் டைம் இதழ் பேர்ரி காமனர் படத்தை அட்டையில் வெளியிட்டு சூழலியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து 1972 இல் பொதுச் சபை சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட முதல் பெரிய மாநாட்டை நடத்தியது. இதனை மனித சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு அல்லது ஸ்டாக்ஹோம் மாநாடு என அழைக்கப்பட்டது. அந்த ஆண்டு ஐ.நா சபை ஜூன் 5ம் நாளை உலக சுற்றுச்சூழல் தினமாய் அறிவித்து முதன்முதலில் 1974 இல் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது.

"ஒரே ஒரு பூமி" எனும் முழக்கத்தைச் செய்தது. காற்று மாசுபாடு, பிளாஸ்டிக் மாசுபாடு, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம், போன்ற நமது சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு தளமாக WED உருவாக்கப்பட்டது நுகர்வு, கடல் மட்ட அதிகரிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு, தேசிய மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த WED உதவுவதற்காக அமைக்கப்பட்டது ஆகும்.

இந்த ஆண்டு கருப்பொருளை நிறைவேற்ற விழிப்புணர்வு செய்வதைவிட பெருநிறுவனங்களை கட்டுப்படுத்துதல் முக்கியம்.மீண்டும் மக்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என உபதேசித்துக் கொண்டே நெகிழி உற்பத்தியைக் குறைக்காமல் இருந்தால்.. இதுவும் விழிப்புணர்வு வாசகமாய் மட்டும் கடந்து போகும்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 3 June 2025

சுந்தர ராமசாமியிடம் டைப்பிஸ்டாக வேலை பார்த்த பெண்ணிற்கு அரசு வேலை கிடைக்கிறது, தன்னிடம் கடைசி வேலை நாளில் சு ரா அந்த பெண்ணிடம் கேட்கிறார். "எவ்வளவு சம்பளம்?""ஏழாயிரம்... மேற்படி பத்தாயிரம் வரும்னு சொல்லிருக்காங்க சார்" "ஊழல்ங்கிறதை மேற்படின்னு மாத்திட்டீங்களாம்மா?"

103


#கற்கை_நன்றே_103

'உலகத்துப்பொருள்களை நேர் நின்று நீயே பார். உனக்குப் புதிதாக ஏதாவது தோன்றலாம். பழைய உவமைகளும், கருத்துகளுமே அதிலிருந்து உதிக்க வேண்டுமென்பதில்லை. உன் அனுபவம் எவ்வளவோ சொல்லிக் கொடுக்கும். ஒவ்வொரு பொருளிலும் எப்போதும் ரகசியம் பதுங்கிக் கிடக்கிறது' 

-மாப்பசான்

ஒரு திருமணத்திற்கு குடும்பத்தையே அழைத்துக் கொண்டு அதிகாலை மண்டபத்திற்கு சென்றேன்.ஆனால் மணடவம் வெறிச்சோடி இருந்தது. முதலில் வந்த பெருமிதத்துடன் அவர்களை அலைபேசியில் அழைத்தேன்.எதிர்முனையில் இருந்தவர் சொன்னார்..திருமணம் அடுத்த வாரம் என்று.குடும்பத்தினர் முன் என்ன ஆகி இருக்கும்?! என் கணிப்பு தவறிய அதிர்ச்சியில் பல மணி நேரம் மெளனமாய் இருந்தேன்.
இதை அனுபவம் குறித்த அனுபவப் பிழை(cognitive error) என்கிறார்கள்.

"தகவல்களைப் புரிந்துகொள்வதிலும், முடிவெடுப்பதிலும், சில சமயம் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
ஒரு ஒற்றை நிகழ்விலிருந்து ஒரு பொதுவான முடிவுக்கு வருவது, அதை அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் பொருத்துவது.
இவரை பார்த்துக் கொண்டு போனால் காரியம் நடக்காது என நினைப்பது..ரிசர்வ் விழுந்த பைக் பங்க் வரை சென்றால் அதிர்ஷ்டம் என எண்ணுவது.

Mind Reading"எனில் அவர் என்னைப் பார்த்த விதத்தை வைத்து, அவர் என்னை விரும்பவில்லை என்று எனக்குத் தெரிகிறது என்பது. சிறிய விசயத்தை மிகைப்படுத்தியோ குறைத்தோ எண்ணுவது,நம்முடைய நம்பிக்கையை ஆதரிக்கும் தகவல்களையே மட்டும் தேடுவது, ஆரம்பத்தில் கிடைக்கும் தகவல் எதிர்கால முடிவுகளை அதிகம் பாதிப்பது,நம் நினைவில் எளிதாக வரும் தகவல்களைப் பயன்படுத்தி முடிவெடுப்பது. உதாரணத்திற்கு சமீபத்தில் விமான விபத்து நடந்ததால், விமானப் பயணம் மிகவும் ஆபத்தானது என்று நினைத்துவிடுதல்

இதனை சரிசெய்ய இருக்கும் ஒரு வழிதான் trust, but verify என்பது. இது சரியாக இருந்தாலும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்கிறேன் என சுயமதிப்பீடு செய்வது அவசியம். யோசிக்க வேண்டிய செயல்களில் முன் அனுபவத்தை பயன்படுத்துவதில் கவனம் தேவை.
இது குறித்து சுதாகர் கஸ்தூரி ஒரு உதாரணம் தருகிறார்.

   வட இந்தியாவில் ஜுகாட் (Jugaad) என்றொரு சொல் உண்டு. ஒரு சவாலுக்கு, தனக்குத் தெரிந்த, கிடைத்தபொருள்களை வைத்து ஒரு தீர்வைக் கொண்டுவருதல் என்பது ஜுகாட். தமிழில் சமயோஜிதம்.

அமிர்தசரஸ் அருகே, ஒரு கிராமத்தில், லஸ்ஸி தயாரித்த கடையொன்றில், பெருமளவு லஸ்ஸி தேவைப்பட, இவ்வளவு தயிரை எப்படிக் கடைவது என்று யோசித்தார்கள். வீட்டிலிருந்து, பழைய வாஷிங்மெஷினை கடை முதலாளியின் மனைவி கொண்டுவந்தார். நன்றாகத் தேய்த்துக் கழுவி, அதில் தயிரைக் கொட்டி, சுழலவைக்க, பத்து லிட்டர் தயிர் ஐந்து நிமிடத்தில் ரெடியானது. இது ஜுகாட். அனுபவம், வாஷிங் மெஷினில் நீர் சுழல்வது. அதன் நீட்சி, தயிர் கடைவது. இங்கு அனுபவம் சரியாக இயங்குகிறது.

ஆனால், எல்லா சூழ்நிலையிலும் இது ஒத்துப் போகாது. ஒருவன், வயிற்று வலிக்கு எட்டு கடுக்காய்களை அரைத்துச் சாப்பிட்டு, வலி சரியாகிப்போக, வேறு எந்த வலியுடன் வந்தவர்களுக்கும் எட்டு கடுக்காய் சாப்பிடுங்கள் என்று சொல்வது அபத்தம் என்பதையே முன் அனுபவப்பிழை காட்டுகிறது. "எல்லா வலிக்கும் எட்டே கடுக்காய்" என்று ஒரு பழமொழியே உண்டு.

எனவே, தன் அனுபவத்தைக் கருத்தாகவோ, அறிவுரையாகவோ முன்வைக்கும் முன்னர், ஒரு நிமிடம் 'இது சரியாக இருக்குமா?" என்று தன்னிடமும் பிறரிடமும் கேட்டுப் பின்னூட்டம் பெற்றுக்கொள்வது பல விபரீதங்களைத் தடுக்கும்.

Express correctly. Try to understand properly.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 1 June 2025

நாள்பட்ட சீக்கு - க்ஷயரோகம். இளைப்பும், தகையுமாக சருமம் விம்மி விம்மித் தணியும். நெஞ்சுக் கூட்டுக்குள் சலங்கை குலுங்குகிற மாதிரி 'கொல கொல'வென்று இரைச்சல் போடுகிற சளி. இருமல் வந்தால், சூறாவளி மாதிரி தான். வாடிப்போன சோளப்பயிரைச் சுழற்றியாட்டுகிற மாதிரி ஓர் உலுக்கு உலுக்கியெடுத்துவிடும் அய்யாவை.கட்டிலைச் சுற்றி ரொம்ப நாளாக ஒருவீச்சம். துப்பிய சளியின் துர்நாற்றம். நிரந்தர ஈர மொய்ப்பு. மணல் நிறைந்த சிரட்டை பூராவும் சளியின் கருமை.எலும்புக்கூட்டு மேலே நனைந்த காகிதம் போல படிந் திருந்தது, வெளுத்த சருமம். நிறைய நரைத்த ரோமங்களும், சுருக்கங்களும், அதில்.குத்துக்கால் வைத்து உட்கார்ந்தால்... முழங்கால் உயரத் திற்குள் மொத்த உடலே முடங்கிக்கிடக்கும். தசையில் அசையும்போதுதான் உயிர் இருப்பதே தெரியும்.-மேலாண்மை பொன்னுசாமிஒரு சிறுகதையின் ஆரம்பித்திலிருந்து இறுதி வரை இப்பிடி வார்த்தைகளில் காட்சிப்படுத்தும் கரிசல் காட்டு எழுத்து அரக்கர்

#கற்கை_நன்றே_101


#கற்கை_நன்றே_101

மனிதர்களுக்கு சுதந்திரம் மட்டுமே தேவை.ஆனால் அதனுடன் வரும் பொறுப்புகளை ஏற்க அவர்கள் தயாராக இல்லை
-சிக்மண்ட் ப்ராய்ட்

அண்மையில் சுதந்திர உணர்வு குறித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது.. சுதந்திரம் என்பதை விருப்பப்படி நடந்து கொள்வது, சும்மா இருப்பது எனும் பொருளில் தான் புரிந்து வைத்துள்ளனர்.கட்டுப்பாடற்ற சுதந்திரம் எல்லையற்ற தவறுகளையும் செய்ய தூண்டும் விதத்திலும் அமைகிறது.

சுதந்திரம் என்பதில் சுய பொறுப்புணர்வு,வாழ்க்கைத் திறன்களை வளர்ப்பதற்கு ஈடுபாடு,
விருப்பமான செயல்களையும் காலப்போக்கில் நீர்த்துப் போகச் செய்யும் சோம்பல்,புதுமை சிந்தனைகளில் நாட்டமின்றி சிந்தனை திருட்டு போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபட்டு அதுகுறித்த குற்ற உணர்வு சிறிதும் இன்றி..தனிமனித சுதந்திரம் என்பதில் கறாராய் இருக்கின்றனர்.

நம் நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்திரத்தை கெடுப்பது என்று தான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பார் பெரியார்.

சுதந்திர உணர்வையும் பொறுப்புணர்வையும் சிந்தனைக் குழப்பம் செய்து கொள்கின்றனர். ரஷ்யாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வை ஓஷோ மேற்கோள் காட்டும் காட்சி

ரஷ்யப் புரட்சி வெற்றி கண்ட அன்றைய தினம், மாஸ்கோவில் ஒரு பெண்மணி நடு ரோட்டில் நடந்து செல்ல ஆரம்பித்தாள். காவல்துறையினர் அவளிடம், "இது சரியல்ல. நீங்கள் நடுரோட்டில் நடந்து செல்லக் கூடாது!" என்றனர்.

அதற்கு அந்தப் பெண்மணி, "இப்போது தான் நாம் சுதந்திரமாகிவிட்டோமே," என்றாள்.

ஆனால், நீ விடுதலை அடைந்தாலும் கூட, போக்குவரத்து விதிகளை நீ பின்பற்றத் தான் வேண்டும்; இல்லையெனில் போக்குவரத்து சாத்தியமாகாது. வாகனங்களும் மக்களும் அவர்கள் விருப்பம் போல் போய்க் கொண்டிருந்தால், விருப்பம் போல் திரும்பிக் கொண்டிருந்தால், போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்குகளைக் கவனிக்காமல் போக ஆரம்பித்தால், மக்கள் வெறுமனே விபத்துக்குள்ளாகி கொல்லப்படுவார்கள். 

நீங்கள் இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ இப்படி அந்தந்த நாட்டின் சட்டத்தின்படி நடந்து செல்வதற்கு, உங்களை நிர்பந்தம் செய்ய காவல்துறை வந்துவிடும். எனவே, யாரும் நடுவில் நடந்து செல்ல முடியாது. அதன் பின்னர், துப்பாக்கி முனையில் நீங்கள் விதிகளைப் பின்பற்றும்படி செய்ய வேண்டியதாகிவிடும் என எச்சரித்த பின் அவர் விதிமுறைகளை பின்பற்றுவார்.

சுதந்திரம் என்பதை பொறுப்புணர்வுடன் கடைபிடிக்க வேண்டும்.அப்போதுதான் சுதந்திரத்தின் மகத்துவம் நமக்கு புரியும்.ஒழுக்கம் என்பதை சுதந்திரத்திற்கு எதிரானதாய் நினையாமல் ஒவ்வொருவரின் சுயக் கட்டுப்பாடும் தான் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு முக்கியமானது.
"சுதந்திரம் என்பதன் பொருள், ஒவ்வொருவரும் தமக்கு மட்டுமே எஜமானர்களாக இருக்க முடியும் என்பதுதான். பிறருக்கல்ல என்பார் காந்தி"

இனிய காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 28 May 2025

புத்தகம் 81


#Reading_Marathon2025
#25RM055

#12மாதம்_12எழுத்தாளர்

Book No:81/100+
Pages:-175

மாயம்
-பெருமாள் முருகன்

எழுத்தாளர் பெருமாள் முருகனின் 20 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு தான் இப்புத்தகம். பொதுவாகவே பெருமாள் முருகன் அவர்கள் கதாபாத்திரங்களுக்கு பெயர் சூட்டுவது வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடிப்பார். அதேபோல் இந்த புத்தகத்தில் உள்ள 20 கதைகளும் எறும்பு வரிசை கதைகள் என சொல்லும்படி ஒரே ஒரு கதாபாத்திரம் அல்லது ஒரே ஒரு பெயர் கொண்ட கதாபாத்திரம் 20 கதைகளின் நாயகனாக உருவெடுக்கிறான். அதாவது இரட்டை தசாவதாரம் போல. ஆனால் எல்லா கதைகளும் தொடர்புடையது இல்லாமல் தனித்தனியே முருகேசன் என்னும் கதாபாத்திரத்தின் வழியே எளிய மக்களின் வாழ்வியல் கதைகளை சொல்லி இருப்பார்.

முருகேசன் என்னும் இளைஞன் தான் இந்த புத்தகத்தின் நாயகன் என்று சொல்லலாம் .அவன் ஒரு எளிய மனிதனாக, பெண் தேடும் இளைஞனாக, கல்லூரியில் படிக்கும் மாணவனாக, குடும்பஸ்தனாக என பல்வேறு அவதாரங்களை எடுப்பது போல இந்த கதைகள் அமைந்துள்ளது. கதைகளில் மிகப்பெரும் புதிர்களோ எதிர்பாராத திருப்பங்களோ என இல்லாமல் ஒவ்வொரு கதைகளும் சமவெளியில் பயணிப்பது போல மலைகளில் ஏறுவது போல காடுகளில் அலைந்து திரிவது போல பல்வேறு அனுபவங்களை தருகிறது. 
ஊரு கதைகளின் இறுதிகளும் நாம் ஊகிக்க முடியாத சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன சில கதைகளில் இயல்பாகவும் முடிந்து இருக்கின்றன.
வாசகர்களைப் பிடித்து உலுக்காத வண்ணமும் இயல்பான நடையில் இந்த கதைகள் பவனி வருகின்றன.

தந்தை மகனுக்கு உள்ள உறவை பற்றிய கதையில் மகன் தந்தையை மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து விட்டால் அல்லது புகழடைந்து விட்டால் ஒரு தந்தையின் எண்ணம் பெருமிதப்படும் அதோடு தன்னுடைய சுயத்தை இழந்ததை எண்ணி ஒரு சில கனமேனும் அவர்களும் இயலாமையில் ஆற்றாமையில் வருந்துவார்கள் என்பதை தான் கடைக்குட்டி, நுங்கு, ஆட்டம், தொழில் போன்ற கதைகளில் மகனின் வளர்ச்சி அப்பாவின் சுயத்தை எப்படி ஒருகணமேனும் எண்ண வைக்கிறது என்பதை உளவியல் பூர்வமாக சொல்லி இருப்பார். மாறாக ஒளி என்னும் கதையில் தந்தையை இழந்து வாடும் மகனின் பார்வையில் தந்தை குறித்து பிம்பத்தை இதில் பதிவு செய்திருப்பார்.

பொதுவாக காதல் திருமணம் இன்றி பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணத்தில் உள்ள பெரும் குறைய பெண் தேடும் படலம் தான். அவ்வாறு பெண் தேடி அலுத்துக் கொள்ளும் இளைஞனின் மனநிலையை முருகேசன் தன்னுடைய கதைகளில் பதிவு செய்திருப்பார். போதும் என்னும் கதையில் காதல் தோல்வியை தாங்கும் இளைஞனாகவும், புதிதாய் திருமணமான புதிதில் ஏற்படும் கணவன் மனைவி இடையேயான பிணக்குகள் கதையை பசி என்னும் கதையிலும் ,திருமணம் ஆகி விருந்துக்கு செல்லும் வீடுகளில் பணம் வைத்து கொடுப்பதில் கணவன் மனைவியிடையே வரும் சந்தேகம் ஈகோவாக உருவெடுக்கும் தருணங்களில் பெண் என்ன செய்வார் என்பதனை அபிஷேகம் கதையில் அழகாக சொல்லி இருப்பார்.

இளம் வயதில் நண்பர்கள் கிடைப்பது வரம் ஆனால் சில சமயங்களில் நண்பர்களுக்கிடையே ஏற்படும் உணர்வுகள் சண்டைகள் சச்சரவுகள் பற்றிய கதைகளை தமக்கே உரிய பாணியில் இயல்பாக சொல்லி இருப்பார். அருவிக்கரையில் குளிக்கச் செல்லும் நான்கு நண்பர்களில் ஒருவன் இறந்து போனால் மீதமுள்ளவர்களின் மனநிலையை அருவி என்ன?இறந்து போன மகனை பெற்ற பெற்றோரின் மனநிலை எவ்வாறு மற்ற நண்பர்களை நடத்துபவர்கள் என்பதனை அருவி எனும் இக்கதை அழுத்தமாக விவரிக்கிறது.

முருகேசன் நண்பனான ரமேஷ் காதல் திருமணம் செய்து கொள்ள காதலியை முருகேசன் வீட்டிற்கு அழைத்து வருகிறான். தவறான நடவடிக்கையாக இருந்தாலும் நண்பனின் ஆசை நிறைவேற்றும் விதமாக முருகேசன் குடும்பமே நடந்து கொள்கிறது. ஆனால் விடியற்காலையில் எழுந்து பார்த்தால் ரமேஷை காணவில்லை அவன் அம்மாவின் பாசத்தினால் ஊருக்குச் சென்று இருப்பான். அங்கே உள்ள பெண்ணின் மனநிலை, முருகேசனின் குடும்பமும் தவிப்பும் இறுதியில் அந்த பெண் எடுக்கும் முடிவும் நான் என்னும் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. 

பொதுவாக பிரதிபலன் பார்க்காமல் செய்யும் உதவிகள் தான் நண்பர்கள் செய்வது. இது பண விஷயத்துக்கும் நிச்சயம் பொருந்தும். அடிக்கடி பணம் கேட்டு வாங்கிக் கொள்ளும் வீரேஷ் ஒருமுறை முருகேஸுடம் 10,000 உடனே அனுப்ப வேண்டும் என்று கூறுகிறான். மாத ஊதியத்தில் வேலை பார்க்கும் இவனிடம் பணம் இல்லை என்றாலும் பல்வேறு யோசனைகளுக்கு பின் அந்த பணத்தினை நண்பனுக்கு உடனே அனுப்புகிறான். ஆனால் அதற்கு பின்பு தான் தெரிகிறது அந்த நண்பனும் அவர்களின் நண்பர்களும் வைத்த சோதனை தான் அந்த பணம் கேட்பது என்று கூறி பணத்தினை திரும்ப 10500 ஆக அனுப்பும் போது நண்பனின் நம்பிக்கையை பெற்ற பெருமிதம் இருந்தாலும் ஒருமுறை சலனம் வந்ததை எண்ணி முருகேசன் வருந்துவது இயல்பான மனிதர்களின் எண்ணங்களை நம் முன் நிறுத்துகிறது.

ஒரு நொடி நேரத்தில் எடுத்த தவறான முடிவுகள் எவ்வாறு பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் ,உளவியல் சிதை மாற்றத்துக்கு உள்ளாகும் போது மனித நடவடிக்கைகள் எவ்வாறு எல்லாம் தவறான எண்ணத்தினை ஏற்படுத்துகிறது என்பதையும் முத்தம் என்னும் கதையிலும் பொண்டாட்டி என்னும் கதையில் கொலை செய்யும் அளவுக்கு செல்லும் காதலனின் நிலைமை சமகாலத்தில் நடைபெறும் கொலைகளுக்கான காரணங்களாகவும் இருக்கலாம் என்று எண்ணத்துடன் படிக்க வைக்கிறது. சில சமயம் நாம் நகைச்சுவை என்று செய்வதும் சர்ப்ரைஸ் செய்ய நினைப்பதும் எவ்வாறு தவறான நிலையை ஏற்படுகிறது என்பதனை வீராப்பு என்ற கதை நமக்குச் சொல்கிறது. 

கதைக்களங்கள் மிகவும் யதார்த்தமாகவும், கிராமத்து பின்னணியிடனும் இருக்கிறது. கதை நாயகன் பெரிய வேலை செய்வது போல் காட்டாமல், ஆடு மேய்ப்பவராகவும் அட்டை கம்பெனிக்கு வேலைக்கு போவோராகவும், காரை  வேலை செய்பவனாகவும் கதை மாந்தர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். எனினும் அன்றாட வாழ்க்கையில் விளிம்பு நிலை மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சனைகள், வாழ்வியல் சிக்கல்கள் உளவியல் காரணங்கள் பிரச்சனைகள் என அவர்கள் கடந்து செல்லும் வாழ்க்கையை நம்மையும் வாழ்ந்து பார்ப்பது போல் தன் எழுத்தில் வழயே காட்டியிருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 23 May 2025

அமலன் ஸ்டான்லி


புத்தத்தின் முதல் ஐந்து கட்டளைகளில் இரண்டாவது களவாடுதலுக்கு எதிரானது. அது பிறரது தீய குணங்களைத் களவாடி, அவற்றைப் பற்றியே எப்போதும் சிந்திப்பதைக் குறிக்கிறது. ஒருவர் பிறரின் தீய குணங்களைப் பற்றிச் சிந்திக்க அவர்களின் அனுமதியை ஒருபோதும்  கேட்பதில்லை. கேட்காமல் எடுப்பது களவுக்கு ஒப்பானது.

ஒரு வகையில் அது களவேதான். என்ன நடக்கிறது என்றால், உங்கள் மனத்தை எல்லா வகையான குப்பைகளையும் போட்டு நிரப்பிவிடுகிறீர்கள். பிறரது பழக்கவழக்கங்களையோ நடத்தையையோ களவாட நினைத்தால் அவர்களின் நன்னடத்தைகளைக் களவாடுங்கள்.

பிறரது செயல்களில் எவை நலமானதாக, முன்மாதிரியாக அமைகின்றன என்பதைப் பாருங்கள். அவற்றையே உங்களுக்கான பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். பிறரின் தவறுகளையோ தீய பழக்கங்களையோ மட்டுமே கணக்கிடப் போகிறீர்கள் என்றால், உங்களின் மனப்பாங்கைப் பற்றி மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.

பிறரது தீய பழக்கங்களைக் காண்கிறீர்கள். வெளியிலிருந்து பார்க்கையில் அவை தீயன என்றுணர்கிறீர்கள். உங்களுக்கும் அதே பழக்கங்கள் இருந்தால் அது போன்றே தீயதாகத்தானே இருக்கும்?  எனவே பிறரது தீய பழக்கங்களை ஒரு கண்ணாடியாகப் பயன்படுத்துங்கள். உங்களிடம் அவற்றில் ஏதேனும் இருக்கின்றனவா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். 

ஆனால் உங்களிடம் அப்பழக்கங்கள் இல்லையென்றால், அவற்றைப் பிறரிடமிருந்து களவாடத் தேவையில்லை. நீங்கள் வீணே உங்கள் மனத்தைக் குப்பைகளால் நிரப்பிக் கொண்டிருப்பதை நிறுத்திவிடலாம்! 

~ தனிசாரோ பிக்கு 
"மனவளத்திற்கான ஐந்து கட்டளைகள்" உரையிலிருந்து

Friday, 16 May 2025

ஒரு மரணம் என்ன செய்யும்சிலர் புரொபைலில் கறுப்பு வைப்பார்கள்சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள்சிலர் RIPயுடன் கடந்து போவார்கள்சிலர் ஆழ்ந்த இரங்கல்களை தட்டச்சிடுவார்கள்ஓர் உண்மையான ஜீவன்உலகுக்குத் தெரியாமல் அழுது கொண்டிருக்கும்எங்கேயாவது...- கீழை அ.கதிர்வேல்

ஈரோடு கதிர்


சாதாரணமாக ஒரு உரையாடலைத் தொடங்குவது மிகவும் எளிது. ’நல்லாருக்கீங்ளா, சாப்பிட்டாச்சா, வெயில் ரொம்ப’ என ஏதேனும் மிகச் சம்பிரதாயமான முறையில் உரையாடலைத் தொடங்கிவிட முடியும். ஆனால் அதனைத் தொடர்வதில்தான் பலருக்கும் சிக்கல் இருக்கின்றது.

*உரையாடலைத் தொடர்வதற்கு, நம் சொற்களஞ்சியத்தில் உயிரோட்டமுள்ள, மனப்பூர்வமான சொற்கள் இருக்க வேண்டும்* . நாம் யாருடன் உரையாடுகிறோமோ, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும், மலரச் செய்யும் திறன் அந்த சொற்களுக்கு இருக்க வேண்டும். சம்பிரதாயமான சொற்களில் அந்த உயிர்ப்பு ஒருபோதும் இருப்பதில்லை.

அவர்கள் மீது அக்கறை, அன்பு, மதிப்பு, ப்ரியம், மரியாதை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றைச் செலுத்தும் வகையிலான சொற்கள் நம்மிடம் இருக்க வேண்டும். 
அப்படிப்பட்ட உணர்வுகளை அவர்கள் உணரும்போது, உரையாடல் தானாகவே வளரத் தொடங்கும், ஆழமானதாகவும் இனிமையானதாகவும் மாறும்.

உண்மையில், *ஒவ்வொரு உரையாடலின் முடிவிலும் நம்மை நாமே புதுப்பித்துக்கொள்கிறோம்* .

~ ஈரோடு கதிர்

Tuesday, 13 May 2025

ராமானுஜம்


தற்குறிப்பேற்ற அணி- கவிமனமும் மனப் பிறழ்வும்

இயற்கையாக நடக்கும் விஷயத்திற்கு வேறொரு உள்ளர்த்தம் இருப்பது போல் கற்பிப்பது தற்குறிப்பேற்ற அணி!

ராமன் மணிமுடி சூடும் நாள் விடிகிறது. அயோத்தியில் சேவல் கூவுகிறது . " பட்டாபிஷேகம் இல்லை. ராமன் காட்டுக்குப் போகிறான். இது தெரியாமல் தூங்கிறீர்களே மக்களே" எனத் தங்கள் வயிற்றில் அடித்தபடி கூவுகின்றனவாம் சேவல்."தம் வயிறெற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே " என்கிறார் கம்பர். 

இதே போல் சிலப்பதிகாரத்திலும் உண்டு. கொடிகள் ஆடுவது வரவேண்டாம் எனக் கோவலனைச் சொல்வது போல் இருக்குமாம்.

"பொய்கை என்னும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள். தென்றல் என்னும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்" என இயற்கையாக நடக்கும் நிகழ்வை தென்றல் காதலன் நீர்மகளின் பூவாடையை விலக்கினான் எனப் புலமைப்பித்தன் எழுதிய  அபாரமாக வரிகளில் புதைந்திருப்பதும் இது போன்ற கற்பனைதான்.

இது கற்பனை என அறிந்திருக்கும் வரை அது ரசிக்கத்தக்கது. 
அதையே நிஜம் என நம்பினால் சாதாரண நிகழ்வுகளுக்குப் பின்னால் ஏதோ உள்ளர்த்தம் ( Unusual Significance) இருப்பது போல் யோசிக்க ஆரம்பித்து விடுவோம். சகுனம் போன்ற மூட நம்பிக்கைகள் பிறப்பது இங்குதான். 

 அதீதமானால் இது மனப்பிறழ்வில் ( Delusion) கொண்டுவிடும். இயற்கையாக நடக்கும் விஷயங்களுக்குப் பின் ஒரு விசேஷ உள்ளர்த்தத்தைக் கற்பிப்பது. Delusional mis interpretation or Delusional Perception.

குணா திரைப்படத்தில் பெயர்ப்பலகை தற்செயலாகச் சுட்டிக் காட்டும் பெண்தான் அபிராமி என குணா முடிவுக்கு வருவார். அது போல.

ஒரு நோயர் என்னிடம் சொன்னார் " புதிதாக வேலைக்குச் சேர கிளம்பினேன். ரோட்டின் குறுக்கே ஒரு பஸ் நின்று கொண்டிருந்தது. யாரோ இந்த வேலை வேண்டாம் என  என்னை வழி மறிப்பது போல் தோன்றியது. திரும்பி வந்து விட்டேன்" . அதன் பின்னர் பத்தாண்டுகள் அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை.

கற்பனை இனிமையானது.
ஆனால் அதனை உண்மையென நம்ப ஆரம்பித்தால் அது மனப்பிறழ்வாகிறது.

Fantasy and delusion differ only in the degrees of belief.

டாக்டர் ஜி ராமானுஜம்

தஸ்தா


தஸ்தயேவ்ஸ்கியின் ஒரு கதை இருக்கிறது .ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறான்.சுற்றியிருக்கும் மக்களுக்கு அவனை பிடிக்கவே பிடிக்காது .அவர்களை பொறுத்தவரையில் அவன் ஆபத்தானவன்,கெட்டவன்,மோசமானவன் ..

ஒரு நாள் காட்டுப்பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருத்தி தாகத்தால் மயக்கம் அடையும் நிலையில் "தண்ணி தண்ணி " என்று கத்திக் கொண்டு கீழே விழுந்து கிடக்கிறாள்.அப்போது அந்த வழியாக இளைஞன் வருகிறான் .அவனைப் பார்க்கும் அந்தப் பெண் இந்த நேரத்தில் இவனா வரணும் என்று நொந்து கொள்கிறாள் .அவன் அந்தப் பெண்ணைக் கடந்து செல்கிறான் .சிறிது நேரத்தில் தண்ணீருடன் வருகிறான் ,அந்தப் பெண்ணுக்கு அருகில் தண்ணீரை வைத்து விட்டு அவன் போக்கில் சென்று விடுகிறான்.

ஒருவன் எந்த நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் நல்லவனாக மாறலாம் ,அது மட்டுமில்லாமல் ஒருவனை மதிப்பிடுவது ,ஒருவனை பற்றி முடிவு செய்வது எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்த்தும் கதை .

 மற்றவர்களைப் பற்றிய நம் தவறான எண்ணங்களை ,மதிப்பிடுதலை நாம் உணர்கின்ற வகையில்  அழகாக சித்தரிக்கிறது

-இனிய காலை

Sunday, 11 May 2025

6 உளவியல் காரணங்கள்

உங்களை அறியாமலேயே உங்களுக்குள் இருக்கும் 6 உளவியல் நோய் அறிகுறிகள் 

😫 கிளினோமேனியா (Clinomania) 
கட்டிலில் இருந்து எழுந்த வர மனமின்மை. 
படுத்த வண்ணம் கட்டிலிலே இருக்க வேண்டும் என்ற ஆசை.

😫 ஜௌஸ்கா மோனியா (Jouska) 
உங்கள் மனதுக்குள் ஒடும் கற்பனை உரையாடல் காரணமாக கற்பனையான சம்பவங்கள், கற்பனை மனிதர்கள், கற்பனை காட்சிகள் உங்கள் தலையில் நாளாந்தம் வந்து தொல்லை தருதல். 

😫  பிலோபோபியா (Philophobia)
காதலில் விழுந்து விடுவேனோ, கல்யாணம்  கட்டினால் பிரச்சனை ஆகுமோ என்ற தீராத மனப் பயம் ஏற்படுதல். 

😫 நிக்டோபிலியா (Nyctophilia) 
தகுந்த காரணங்கள் எதுவுமின்றி இருட்டைக் காண்பதில் அல்லது இரவு வந்தால் பயம் ஏற்படுதல். 

😫 எக்ஸுலான்சிஸ் (Exulansis) 
யாரும் உங்களை புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் உங்களைப் பற்றியோ, உங்களுக்கு நடந்த சம்பவங்களைப் பற்றி யாரிடமும் வாய் திறந்து பேச மனமின்மை. 

😫 மோனோகோப்சிஸ் (Monachopsis) 
நீங்கள் உங்களுக்குப் பொருத்தமற்ற இடத்தில் இருப்பதால் உங்களை யாரும் கண்டுகொள்கிறார்கள் இல்லை என்ற மனவருத்தம்.

Saturday, 10 May 2025

புத்தகங்கள்


புத்தகங்கள்.

எந்தப் புத்தகமும் என்னை முட்டாளென்று
இழிவுபடுத்தியதேயில்லை!
மாறாக,என் அறிவைக் கிளறி விட்டது!

எந்த புத்தகமும் என்னைப் பைத்தியமென்று
பறைசாற்றியதேயில்லை!
மாறாகத் தெளிவை எனக்குத் தேடித் தந்தது!

எந்தப் புத்தகமும் என்னைப் பயன்படாதவனென்று விலக்கி வைத்ததேயில்லை!மாறாக,என் தோள்களைத் தூக்கி விட்டது!

எந்தப் புத்தகமும் எனக்குத் 
துரோகமிழைத்ததேயில்லை!
மாறாக,நேசத்தை நெஞ்சில் நிரப்பியது!

எந்தப் புத்தகமும் எனக்குப் பகைமையைப்
படிப்பித்ததேயில்லை!மாறாக, நாளும் நட்பை வளர்த்தது!

எந்தப் புத்தகமும் புகைபிடிக்கவோ, மதுவருந்தவோ என்னை அழைத்ததேயில்லை! மாறாக, 
ஒழுக்கத்தின் உயர்வை ஊட்டியது!

எந்தப் புத்தகமும் திருடவோ, பொய் சொல்லவோ எனக்குக் கற்பித்ததேயில்லை!
மாறாக, உழைப்பையும், உண்மையையும் ஒருங்கே உணர்த்தியது!

எந்தப் புத்தகமும், எனக்கு அநாகரிக வார்த்தைகளை அள்ளிக் கொடுத்ததேயில்லை!மாறாக,அன்பின் சொற்களையே அளித்தது!

மனிதர்களை விட அதிகமாக மானுடம் பேசுவதும், வளர்ப்பதும் புத்தகங்களாதலால்,
புத்தகங்களோடு பழகுங்கள்!

-படித்தது

Sunday, 4 May 2025

கோகுல் பிரசாத்


நவீன மனிதனின் வாழ்வில் அனுபவங்கள் குறைந்துவிட்டன. சராசரி மனிதனின் அனுபவக் கணக்கு எப்போதுமே குறைவானது என்றாலும் சமகாலத்தில் அது மேலும் அருகிவிட்டது. அனுபவச் சேகரத்தின் இடத்தைத் தற்போது எதிர்வினைகள் ஆக்கிரமித்துள்ளன. தீ சுட்டதும் கை தன்னிச்சையாக விரைந்து விலகி உதறிக்கொள்ளும் உடலின் மறிவினை (reflex action) போல மனமும் எதிர்வினைகளுக்குப் பழகிவிட்டது. உடலின் புறவய reflex-ஐப் போல அகவயமான reflex-ஆக மனம் செயல்படுகிறது. நமக்கு நேர்ந்த மாபெரும் இழப்பு என இதையே குறிப்பிட முடியும்.

ஒரு நிகழ்வை அதன் போக்கில் ஒழுகிச்செல்ல நாம் அனுமதிப்பதில்லை. நமது கருத்துகளால், ஓயாத எண்ணங்களால், அகந்தையால், எமோஜிக்களால் அன்றாடச் சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றிக்கொண்டே இருக்கிறோம். பின்னர், அந்த எதிர்வினைகளையே அனுபவம் என்றெண்ணி மயங்குகிறோம். Reacting and responding. இங்கே அறிதல் (revelation) நிகழ்வதில்லை.

புதிதாக ஒருவரைச் சந்திக்கிறீர்கள், அவருடன் உரையாடுகிறீர்கள், அந்தச் சந்திப்பு நட்பாக நீடிக்கிறது என வைத்துக்கொள்வோம். அவருடைய ரசனை, அறிவு, அழகு, குணம், பேச்சு என ஏதேனுமொரு பண்பு பிடித்துப்போய் நட்பு மலர்கிறது எனில் அது உங்களது விழிப்புநிலையின் அல்லது நீங்கள் வளர்த்தெடுத்த ஆளுமையின் இயல்பான எதிர்வினை மட்டுமே. தன்னை ஒத்த சக மனிதரைக் கண்டுகொண்டதிலுள்ள ஆர்வம், குறுகுறுப்பு. 

இந்த நட்பானது எதிர்வினை அல்லது ஒத்திசைவுள்ள எண்ணப் பிரதிபலிப்பு (harmonious reflection) என்கிற படிநிலையிலிருந்து ஆழ்ந்து சென்று வாழ்க்கை அனுபவமாக மாற வேண்டுமெனில் அகங்காரத்திலிருந்து சுயத்திற்கான (ego to self) பயணம் நிகழ வேண்டும். மன நகர்வு உண்டாக வேண்டும். ஒரு சுற்றுலாவுக்குச் செல்கிறீர்கள். இயற்கைப் பேரெழில் காட்சியைப் பார்க்கிறீர்கள். அப்போது ஏற்படுகிற ஆனந்தமும் பரவசமும் மனத்தின் எதிர்வினைகள். ஆனால், இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் உங்களது அகம் சீண்டப்பட்டுப் பிரமித்துப்போய் மூர்ச்சையாகிறீர்கள், உள்ளடங்கி இப்பிரபஞ்சத்தின் சிறுதுகள் என உணர்கிறீர்கள் எனில் அது அனுபவம். இந்த மாற்றம் சுயத்திலிருந்து அகந்தைக்கு (self to ego) எனத் தலைகீழாகவும் நடக்கலாம்.

எப்படியாகினும் உள்ளுக்குள் ஓர் உடைவு, ஓர் அசைவு ஏற்பட்டால்தான் அதனை அனுபவமாகக் கணக்கில்கொள்ள முடியும். உங்களது வாழ்க்கைக் கண்ணோட்டத்தை மாற்றாத எதுவும் உள்ளார்ந்த தரிசனத்துக்கு வழிகோலுவதில்லை. சிரிப்பு, அழுகை, கோபாவேசம் போன்ற மேலோட்டமான உணர்ச்சிகளும் எதிர்வினைகளிலேயே அடங்கும். இவற்றை மனத்தில் இருத்தி நம் வாழ்க்கையில் உண்மையிலேயே எத்தனை அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன எனச் சிந்திக்கலாம். எதிர்வினைகளுக்கான களம் பெருகி அனுபவங்களுக்கான இடைவெளி குறுகியிருப்பது புரியும். 

We’re not experiencing anything, just reacting. வாழ்க்கையின் பெரும்பகுதி வெறுமனே எதிர்வினைகளால் நிரம்பியிருக்குமானால் அதைவிட அவலம் வேறில்லை.

-கோகுல் பிரசாத்

Tuesday, 29 April 2025

பதுங்கியிருக்கும் போது அனைத்து விலங்குகளுக்கும் ஒன்றுதான். துணிச்சலுடன் சீறி அடிக்கும் போதுதான் புலியும் நரியும் வேறுபடும்-யாத்திசை

நியாண்டர் செல்வன்


உங்கள் வெற்றி, அது உங்கள் பார்வையில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், பிறருக்குப் பெரிதாகத் தெரியாது.

உதாரணமாக, நீங்கள் ₹10,000 ஊதிய உயர்வு பெற்றீர்கள் என்றால், அது உங்கள் வாழ்க்கையில் பெரிய செய்தியாக இருக்கலாம். ஆனால் பிறருக்குப் பெரிதாகக் கவலை இல்லை.

நீங்கள் அதை மிகப்பெரிய விருந்தாகக் கொண்டாடினால், வந்தவர்கள் உணவுக்காக வருவார்கள் — உங்கள் மகிழ்ச்சிக்காக அல்ல. சிலர் பொறாமையாகவும் பார்க்கலாம்.

ஆகவே, உங்கள் வெற்றிகளைப் பிறருடன் பெருமையாக பகிர்வது, அவர்கள் மனத்தில் பொறாமையை மட்டும் விதைக்கும்.

உங்கள் வெற்றிகள் சத்தமில்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் பேச வேண்டியதில்லை — உங்கள் வெற்றி பேச வேண்டும்.

மற்றவர்கள் தான் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தது என்பதை அறிய வேண்டும்.

மற்றவர்கள் தான் நீங்கள் செல்வந்தரானதை உணர வேண்டும்.

மற்றவர்கள் தான் நீங்கள் நல்ல நிலையில் வாழ்கிறீர்கள் என்பதை அறிய வேண்டும்.

நீங்கள் சொல்லி அவர்களை நினைவுபடுத்த வேண்டாம். அவர்கள் தானாகவே ஆச்சரியப்பட வேண்டும்:
“இந்த மனிதர் சத்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்… ஆனால் இத்தனை பெரிய வெற்றியை அடைந்திருக்கிறாரா?”

அதுவே உண்மையான வெற்றியின் அடையாளம்.

நீங்கள் இல்ல; உங்கள் வெற்றியே பேச வேண்டும்.

-நியாண்டர் செல்வன்

Sunday, 27 April 2025

நன்றி இம்ரான்


மனிதனின் மகிழ்ச்சியை தீர்மானிப்பதில் நான்கு ஹார்மோன்கள் மிக முக்கியமாக செல்வாக்கு செலுத்துகின்றன. 

அவைகளாவன;
1- Endorphins 🥰
2- Dopamine 🥰
3- Serotonin 🥰
4- Oxytocin 🥰

🥰 எண்டோர்பின்
நாம் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது 
விளையாட்டுக்களில் ஈடுபட்ட பிறகு நாம் கொடுத்த முயற்சிக்கு ஈடாக நமது உடல் இந்த ஹார்மோனை சுரக்கிறது. அதனால் தான் உடற்பயிற்சி செய்த பிறகு நாம் ஒரு வகை மகிழ்ச்சியை உணர்கிறோம். மேலும் சிரிப்பும் எண்டோர்பின்களை சுரக்க ஒரு சிறந்த வழியாகும்.

எண்டோர்பின் ஹோர்மோன் நமக்குக் கிடைக்க, நாம் அன்றாடம் 30 நிமிட உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கான விஷயங்களைப் பார்த்து மகிழ்வது அவசியமாகும். 

🥰 டோபமைன்
நாம் நம் வாழ்க்கை என்ற தொடர் பயணத்தில், நம்மில் ஒவ்வொருவரும் 
பெரியதாகவோ , சிறியதாகவொ ஏதாவது ஒன்றை சாதிக்கிறோம். இத்தகைய சாதனைகளை நாம் உணரும் போது நமது உடல் டோபமைன் என்ற ஹார்மோனை சுரக்கிறது. நாம் செய்யும் பணிகளுக்கும் முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள் கிடைக்கும் போது இந்த ஹார்மோன் சுரந்து நமக்கு மகிழ்ச்சியை உண்டு பன்னுகிறது. 

இதனால்தான் வீடுகளில் பணி புரியும் பல இல்லத்தரசிகள் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பதற்குக் இந்த ஹார்மோன் சுரக்காமை காரணமாகும். ஏனென்றால் அவர்கள் நாளாந்தம் செய்யும் பணிகள் மற்றும் முயற்சிகளுக்காக சரியான பாராட்டுக்கள் கிடைக்காததால் இந்த ஹார்மோன் அரிதாகவே அவர்களிடம் சுரக்கின்றது. 

🥰 செரோடோனின்
இந்த ஹார்மோனானது நாம் பிறர் நலம் 
நாடும் போதும், அவர்களுக்காக நம்மால் முடிந்த உபகாரங்களை செய்யும்போதும் சுரக்கிறது. இதனால்தான் நம் இயற்கை உலகுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ள ஏதாவது ஒன்றை செய்து முடிப்பதோடு மனமகிழ்ச்சியை உணர்கிறோம். 

அதனால்தான் நாம் பிறருக்குக் ஏதாவது ஒன்று கற்றுக் கொடுக்கும் போது அல்லது ஷோசியல் மீடியாவில் ஏதாவது பயனுள்ள ஒரு பதிவை பகிரும் போது அல்லது ஒருவருக்கு ஏதாவது உதவிக் கரம் நீட்டும் போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். 

4 ஆக்ஸிடாஸின்🥰
இந்த ஹார்மோனானது நாம் நமது அன்புக்குரிய நண்பர்களை சந்தித்து,  ​​கைகுலுக்கும் போது,அல்லது அவர்களை ​​கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் சுரந்து வந்து மகிழ்ச்சி தருகிறது. அதனால்தான் நாம் வீட்டில் நம் மனைவியை, மற்றும் குழந்தைகளை அன்பாக கட்டிப்பிடித்து அரவணைக்கும் போது அலாதி மகிழ்ச்சி அடைகிறோம். 

மேலே உள்ளவற்றின் சுருக்கம்:

🎴 எண்டோர்பின் ஹார்மோன் கிடைக்க நாங்கள் தினமும் ஏதாவது உடற்பயிற்சி செய்தாக வேண்டும். 

🎴 டோபமைன் ஹார்மோன் கிடைக்க ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது சிறிய சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும். 

🎴 செரோடோன் ஹார்மோன் கிடைக்க ஏதாவது ஒரு வகையில் நாம் பிறர் நலம் நாடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். 

🎴 ஆக்ஸிடாசின் ஹார்மோன் கிடைக்க மனைவி, குழந்தைகளை அன்பாக 
அரவணைக்க வேண்டும். 

நன்றி:இம்ரான்

" ஆபத்தும், சவால்களும் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கும். எனவே, அவற்றை தவிர்ப்பதற்கு பதிலாக, அவற்றை கையாளக் கற்றுக் கொள்ளுங்கள். "-ராபர்ட் கியோஸாகி.

"வாழ்க்கையில் சில தருணங்கள் முக்கியமானவை. அத்தகைய தருணங்களில் ஒரு மனிதன் தன்னுடைய சக்தியை காட்ட வேண்டும். தான் இதற்குமுன் கடந்த காலங்களை வீணாக்கவில்லை, இத்தகைய தருணத்துக்கு அவை தயாரிப்புகளாக இருந்தன என்று எடுத்துக்கொள்ள வேண்டும்." -டால்ஸ்டாய்

Thursday, 24 April 2025

பொமட்ரோ உத்தி


எலான் மஸ்க் வாரம் ஒன்றுக்கு 100 மணிநேரம் வேலை செய்வதாக பரவலாக சொல்லப்படுகிறது. இந்த 100 மணிநேரத்தில் ட்விட்டர், ஸ்பேசெக்ஸ், டெஸ்லா, போரிங் கம்பனி என நாலு கம்பனிகளை நிர்வாகம் செய்கிறார்

நேர மேலாண்மைக்காக "பொமெடெரோ உத்தி" (Pomodoro Technique) எனும் உத்தியை பயன்படுத்துவதாக சொல்கிறார் மஸ்க். இத்தாலியில் "பொமோடோரோ" என்றால் "தக்காளி" என்று அர்த்தம். அதனால் நாம் இதை "தக்காளி உத்தி" என்றே அழைப்போம்

பொமோடோரோ உத்தி என்பது 1980களின் பிற்பகுதியில் ஃபிரான்செஸ்கோ சிரில்லோ என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு நேர மேலாண்மை முறையாகும்.

ஃபிரான்செஸ்கோ சிரில்லோ எனும் இத்தாலிய மாணவர் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, நேரத்தை திறமையாக நிர்வகிக்க ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் தக்காளி வடிவ கடிகாரம் ஒன்றை பயன்படுத்தினார். அதன் மூலம் தன்னுடைய வேலை நேரத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து வேலை செய்தார்.

அவர் தக்காளி வடிவ டைமரைப் பயன்படுத்தியதால், இந்த முறைக்கு "பொமோடோரோ டெக்னிக்" என்று பெயர் வந்தது.

தக்காளி உத்தி எப்படி வேலை செய்கிறது?

முதலில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். இது ஒரு வீட்டுப்பாடமாக இருக்கலாம், ஒரு அலுவலக வேலையாக இருக்கலாம் அல்லது வேறு எந்த வேலையாகவும் இருக்கலாம்.

செல்போனில் டைமரை 25 நிமிடங்களுக்கு செட் செய்துவிட்டு, அந்த வேலையில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்துங்கள். இந்த 25 நிமிடங்களுக்கு எந்தவிதமான இடையூறும் இருக்ககூடாது (உதாரணமாக, மொபைல் நோட்டிஃபிகேஷன்களை பார்க்ககூடாது. பிரவுசிங் செய்யகூடாது). இந்த 25 நிமிட வேலை நேரத்திற்கு ஒரு "பொமோடோரோ" என்று பெயர்.

25 நிமிடம் வேலை செய்த பிறகு, 5 நிமிடம் கட்டாயமாக இடைவெளி எடுங்கள். இந்த இடைவேளையில் நீங்கள் எழுந்து நடக்கலாம், தண்ணீர் குடிக்கலாம் அல்லது வேறு ஏதாவது ரிலாக்ஸாக இருக்கக்கூடிய விஷயங்களைச் செய்யலாம். வேலையைப் பற்றியே யோசிக்காமல் இருப்பது நல்லது.

அவ்வளவுதான். இதன்பின் வேலையை பொறுத்து அடுத்த பொமடரோவை மீண்டும் துவக்கலாம். இப்படி ஒரு நாலைந்து பொமடரோக்களை செய்தால், ஒரு இரண்டுமணிநேரத்திலேயே பெரிய விசயங்களை சாதிக்க முடியும் என்கிறார் மஸ்க்

இப்படி 20 நிமிடம் மட்டுமே வேலை செய்வதால், கவனச்சிதறல் குறையும். வேலையைச் சின்னச்ின்ன பகுதிகளாகப் பிரிப்பதால், குறித்த நேரத்துக்குள் முடிக்க முடியும்.

2006ல் சிரில்லோ இந்த உத்தியை "பொமடரோ உத்தி" எனும் பெயரில் மின் நூலாக இலவசமாக வெளியிட்டார். அது இருபது லட்சம் முறை தரவிறக்கபட்டது. அதில் ஒருவர் எலான் மஸ்க்

தக்காளி உத்தியை பயன்படுத்தினால் நாம விரைவில் பெரிய தக்காளி தொக்கா ஆகிடலாம். என்ன கடிகாரத்தை செட் பண்ணியாச்சா?

~ நியாண்டர் செல்வன்

Tuesday, 22 April 2025

புத்தகம் 54


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-54
பக்கங்கள் -252
நாள்-30

சமணமும் தமிழும் 
-மயிலை சீனி வேங்கடசாமி

மயிலை சீனி வேங்கடசாமி அவர்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்று.. இரு ஆண்டுகளுக்கு முன்பு சமர்ப்பித்து இருந்தேன். அந்த தேடலில் அவரைப் பற்றிய அறிந்து கொண்ட தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. இளம் வயதிலேயே ஆசிரியர் பணியில் சேர்ந்தாலும் நாள் தோறும் தன்னை புதுப்பித்துக் கொண்டும் தமிழுக்கு தொண்டு செய்தும் நூல்கள் எழுதியும் வெறுமனே புனைவுகள் போல் அல்லாமல் ஆய்வுக் கட்டுரைகள் நோக்கில் ஒவ்வொரு புத்தகமும் அவருடைய கை வண்ணத்தில் வெளிவந்துள்ளது. இந்த நூலில் சமணத்தின் வாழ்வும் அது சந்திக்க நேர்ந்த தாழ்வும் நம் நெஞ்சை நெகிழச் செய்யும் விதத்தில் உரிய சான்றுகளோடு.. நூலை படிப்பவர்கள் சமணம் குறித்த தன்னுடைய பார்வையை இன்னும் விசாலப்படுத்திக் கொள்ள உதவும் வகையில் இருக்கிறது.

சமண மதம் ஏன் மக்களிடையே பரவியது எனில் அவை கொலை வேள்விகளை எதிர்த்தது, சாதி வேற்றுமை பாராட்டுவதில்லை ,பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது இல்லை, தாய் மொழிக்கு மட்டும் உயர்வழிக்கும் வகையில் அதன் போதனைகள் இருக்கும் .ஏழை மக்களுக்கான உணவு, அடைக்கலம் மருந்து, கல்வி என நால்வகை தானங்களை அவை அளிக்க முன் வந்தது. குறிப்பாக இன்று நாம் படிக்கும் பள்ளிக்கூடம் சமணர்களின் சிந்தனையில் உதித்ததாகும். அக்காலத்தில் மதச் சண்டைகள் மூலமாக மன்னர்களை முதலில் மதம் மாற்றிய பின்பு மக்களை மாற்றினர். வன்முறைகளை ஏவி விட்டனர். பக்தி இயக்கம் தோன்றியதால் சமண மதம் வீழ்ச்சி அடைவதற்கான காரணங்கள். மேலும் வன்முறை ஏவி விட்டு சமணர்களை மதமாற்றம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனர். இதனால் சமண மதத்தில் உள்ள கருத்துக்கள் பலரம் இந்து மதத்தில் கலந்து விட்டன எனும் வியப்புக்குரிய செய்திகளையும் நாம் அறிய முடிகிறது.

சமணமும் தமிழும் என்னும் என் நூலை எழுதி முடிக்க 14 ஆண்டுகள் ஆயின என்று மயிலையார் தெரிவிக்கிறார். இந்த நூலில் வரலாற்று ஆய்வு நூல்கள், இலக்கிய ஆய்வு நூல்கள், சமயமும் தமிழும் ஆய்வு, கலையியல் ஆய்வு, கல்வெட்டு ஆய்வு பொது நூல்கள் என பல்வேறு தலைப்புகளில் சமணமும் தமிழும் எவ்வாறு சிறப்புக்கு விளங்கின என்பது குறித்த தகவல்களை ஆய்வு நோக்கில் தருகிறார்.

சமணர் என்பதற்கு துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி துறவு பூண்டவவரே வீடு பேறு அடைவார். என்று இந்த மதம் கூறுகிறது. எனவே துறவு எனப் பொருள்படும் சமணம் என்ற பெயர் இந்த மதத்துக்கு சிறப்பு பெயராக வழங்கப்படுகிறது. புலன்களையும் கர்மங்களையும் ஜெயித்தவர் வென்றவர் அவர்களின் தீர்த்தங்கரங்களுக்கு ஜீனர் என்னும் பெயரும் உண்டு. ஜுனரை கடவுளாக உடைய மதம் ஜெயின மதம் எனப்பட்டது. சமண சமய கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே அருகனை வணங்குவோர் ஆருகதர் என கூறப்படுகிறது. சமண கடவுள் பற்றற்றவர் என அதன் உட்பிரிவுகள் முதல் கொண்டு அந்த மதம் குறித்த தகவலையும் நமக்குத் தருகிறார்.

சமண சமயத்தின் தத்துவமாக உயிரினும் ஜீவன் பற்றி கூறுகிறது. உயிர்களை கடவுள் படைக்கவில்லை. நல்வினை தீவினை என்னும் இரு வினைகளை செய்து அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை துய்ப்பதற்கு நான்கு கதிகளில் பிறந்து இறந்து உலர்ந்து திரிவதும் இரு வினைகள் அறுத்து பிறவா நிலையாகிய பேரின்ப வீட்டினை அடைவதும் உயிர்களின் இயல்பாகும் என்ற ஒரு தத்துவத்தை கூறுகிறார். அதே போல உயிர் அல்லது எனும் அஜீவன் எனும் பொருள்படும்படி உள்ள பகுதிகளில் ஐந்து அஜுவப் பொருள்களின் இயல்பை விளக்குகிறார்.

சமணர்களின் ஒழுக்கமாக ஐந்து மா விரதங்களைப் பற்றிய கூறுகளில்.அகிம்சா பரமோதர்ம என்பது சமணர்களின் அடிப்படையான தர்மம் ஆகும். அது அகிம்சையை போதிக்கிறது. இரண்டாவதாக தீமை பயக்கும் சொற்களை கூறாமை ,அதாவது வாய்மை என்று கூறுகிறார். எவ்வளவு அற்பமான பொருளாய் இருந்தாலும் அதை அதற்குரியவர் கொடுத்தார் என்று எடுத்துக் கொள்ள மனதினாலும் நினையாதிருத்தலை கல்லாமை என்கிறார். பிரம்மச்சரியம் தமிழர்களின் முக்கிய கூறுகளில் ஒன்று அதேபோல முற்றும் துறத்தல் பொருளை பற்றற துறத்தல் எனும் அவாவறுத்தல் என ஐந்து கூறுகள் தமிழர்களின் ஒழுக்க நிலைகளை நமக்கு தெரிவிக்கிறது.

வடநாட்டில் தோன்றிய சமண சமயம் தமிழகத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ்நாட்டில் சமண சமயம் பரவ செய்யப்பட்டது. பாண்டிய நாட்டில் காணப்படும் மதுரை மாவட்டத்தில் காணப்படும் பிராமி கல்வெட்டு எழுத்துக்கள் சமணரால் எழுதப்பட்டவை .வடநாட்டிலிருந்து தென்னாடு வந்த பன்னீராயிரம் சமணத் துறவிகள் மைசூரில் தங்கி மதக் கொள்கைகளை பரப்பினர். சந்திரகுப்த மௌரியன் அரசன் காலகட்டத்தில் தான் இலங்கையில் பாண்டுகாபய அரசனும் ஒரே காலத்தில் அரசாங்கத்தால் இலங்கையிலும் மதம் பரவியது. இவ்வாறு சமண சமயம் தென் தமிழகத்திலும் பரவியது குறிப்பிடத்தக்கது. அதற்கு சான்றாக கல்வெட்டுகள் குகை ஓவியங்கள் சமணர் மலைகள் இன்றும் தமிழகத்தில் இருப்பது உண்மையாக இருக்கிறது.

சமயப் போர் என்பது பிராமணர்களுக்கும் சமணர்களுக்கும் இடையில் ஏற்பட்டது .சோழநாட்டில் கௌசிகன் எனும் வைதீக பார்ப்பனன் அதித்தன் பசுவின் கூறிய கொம்புகளால் குத்தி கிழித்து விட்டது. அப்போது உதவி வேண்டி சமணப்பள்ளி சென்ற போது.. அவர்கள் கொலை வேள்வி செய்பவனும்  வைதீக பார்ப்பனனுக்கு உதவி செய்ய உடன்படாமல் தங்கள் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பி விட்டனர். இதிலிருந்து அங்கு பகைமை ஆரம்பித்தது. அதற்கு பின்பு பௌத்தருக்கும் சமணருக்கும் இருந்த சமய பகை எல்லாருக்கும் அறிந்தது. குண்டலகேசி நூலை பௌத்தர் இயற்றியதும் பௌத்த சமயத்தை கண்டிக்க நீலகேசி எனும் நூலை சமணர் இயற்றியதும் பௌத்த சமய சண்டைகளுக்கு காரணமாக அமைந்தன இவ்வாறு சிறு சண்டைகள் மத சண்டைகளாக மாறியது.

சைவம் வைணவம் வந்த பின்பு சமணத்தை அழித்து ஒழிப்பதற்கான வழிகளை கண்டறிந்தனர். கொள்கை ரீதியாக எதிர்கொண்டனர் என பல்வேறு காரணங்களை அடக்கி சமண மதம் பிற மக்களிடையே பரவும் வாய்ப்பை குறைத்ததால் சமண மதம் வலிமை குன்றியது. சமணர் பள்ளி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கெங்கு உள்ளது என்பதனை பற்றிய முழு விவரமும் தரப்பட்டுள்ளன. 

சமணம் குறித்து அறிய முற்படும் வாசகர்களுக்கு ஆகச்சிறந்த நூலாக இந்த நூல் விளங்குகிறது. இடையே வரும் சங்க பாடல்கள் தமிழர்கள் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றாய் சொல்லி விளக்கமும் கொடுத்து.. இந்த நூல் ஒரு ஆய்வுக்குரிய சிறப்பு நூலாக மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது பாராட்டுக்குரியது. ஒவ்வொரு பக்கங்களிலும் அவருடைய ஆய்வும் உழைப்பும் தெரிகிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு