Tuesday, 16 October 2018

கற்றதும் பெற்றதும்-49

கற்றதும் பெற்றதும்-49

*மணி

சூழ்ச்சி செய்யற தெறமெதான் மனுஷனெ மனுஷனாக்குது.
அதுதான் மனிதருக்கும் மிருகங்களுக்கும் உள்ள பெரிய
வித்தியாசம்.”

-ஜி.நாகராஜன்

#நாளை மற்றுமொரு நாளே..
-ஜி.நாகராஜன்

ஒரு ரயில் பயணயத்தில் இந்நாவலை படித்த நினைவு. வழக்கமாய் குடிசை,விளிம்பு மக்கள் பற்றி ஜெயகாந்தன் தான் சுவாரஸ்யமாய் எழுதுவார்.ஆனால் அவரின் டச் இதில் கொஞ்சமும் இருக்காது.தனக்கென தனி பாணியில் விறுவிறு நடை, காட்சியின் பின்புலத்தில் மற்றொரு கதை என ஒருநாளில் தென்படும் மனிதர்களை கதைகளினால் விவரித்திருப்பார்.

புதுமைப்பித்தனின் ஒருநாள் கழிந்தது,குரோசோவாவின் கதையை தழுவி ஜாவர் சீதாராம் எழுதிய அந்தநாள் படம் போல் இதுவும் ஒருநாளில் நிகழும் கதை.

கதைக்கரு

கந்தன் என்ற ஒருவனின் ஒருநாள் வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள்தான் இந்நாவலின் கதை. அவன் ஒரு கீழான வாழ்க்கை வாழ்பவன். தனது குடிசையில் காலையில் எழுந்திருக்கிறான், குடிக்கிறான். ஒரு நாளிலேயே மூன்று நான்குமுறை குடிக்கிறான். பெண்களோடு சாகசம் செய்கிறான்.
மீனாவை ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி குடும்பம் நடத்துகிறான்.மகன் சந்திரன் வீட்டைவிட்டு ஓடிவிடுகிறான்.மகள் கீதா நோயினால் இறந்துவிடுகிறது.
மனைவியை வேறு ஒருவனுக்கு திருமணம் செய்ய முயல்கிறான்.

ஏமாந்தவனிடம் லாட்ஜில் பணம் பறிக்கிறான். சாராயக்கடையில் சண்டை போடுகிறான். தனது நண்பன் ஒருவனுக்கு ஒரு கைம்பெண்ணை ‘ஏற்பாடு’ செய்கிறான். ஒரு லாட்ஜில் படுத்து உறங்குகிறான். மாலை திரும்பும்போது ஒரு கொலை நடப்பதைப் பார்க்கிறான். அதிலிருந்து தப்பித்துக்கொண்டு காணாதவன்போல் போகாமல், போலீசுக்குச் சொல்லி அனுப்புகிறான். பின்னர் தானே கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்படுகிறான்.

#என்ன இவ்வளவுதானா என புலம்பும் வாசகனுக்கு முன்னுரையிலேயே பொட்டில் அடித்தது போல் சொல்லிவிடுகிறார் ஜி.நாகராஜன்

"இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை.

நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்க வேண்டிய சின்னத்தனங்கள்,

நிர்பந்திக்கப்பட்டிருந்தால்
காட்டி இருக்கக்கூடிய துணிச்சல்,

விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக் கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம்- இவையே அவன் வாழ்க்கை.

அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம் ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலருக்கும் போலவே நாளை மற்றுமொரு நாளே!

#எழுதிய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் பொருத்திப்பார்க்கும் படி இருக்கும் அதன் நடையும், சொல்வளமும் இன்னும் புதிதாய் தெரிகிறது. ஒருநாளில் மனிதனின் வாழ்க்கையும் சம்பவங்களையும் 140 பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

#மனதை தொட்ட வரிகள்

* குடத்தில் நீர் நிரம்புவது போல மனதில் கவலைகள் நிரம்புகின்றன

* உரையாடல்கள் முடிந்த மௌனம் கசக்கின்றது

* வாழ்க்கையின் இறுதி பகுதியைப் போல நாவலின் கடைசி பகுதியும் வந்துவிடுகிறது

* தேவைப்படாத ஒரு ஏப்பம். அதைத் தொடர்ந்து  குமட்டல். குமட்டலோடு இருமல். விலா எலும்புகள் முறிந்து போலிருந்தது. வாயிலிருந்து 50மில்லி கோழை வழிந்து பனியனை நனைத்தபிறகு சிறிது நிம்மதி.

* குழந்தைங்க ஆசையா உன்னஆசையாய் ஒன்ன வெச்சி இருக்கும்போது அதை நாசப்படுத்த கூடாது

* சினிமா தியேட்டரில் இருந்து வருபவர்களை பார்த்து..

" ஏதோ தர்மசங்கடத்தில் இருந்து விடுபட்டு விட்ட ஆறுதலோடு எல்லோரும் வெளியே பிதுங்கிக் கொண்டு இருந்தார்கள் என சொல்லி இருப்பார்

* எவ்வளவு தப்பு வேணா செய்யலாம். நாலு காசு சம்பாதிச்சு அப்போதும் எல்லாம் சரியாகிவிடும்

* எங்கேயோ அனுபவித்த அவமானங்களுக்கு வேற எங்கேயோ அர்த்தமற்ற நிவாரணம் தேடிக் கொண்டிருக்கிறோம்

* ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் இருக்கிறது தான் உலகத்தின் தன்மை. எல்லாரும் நேர்மையாக  நடந்துகிட்டா வாழ்க்கையில் போட்டியோ முன்னேற்றமோ இருக்காது. வாழ்க்கையே சப்புன்னு இருக்கும்

*ஒன்னே ஒருத்தன் ஏமாத்தினா அவன் உனக்கு ஒரு தந்திரம் சொல்லிக் கொடுத்துருக்கான்னு நினைச்சிக்க. அவன் ஒரு வகையில உனக்கு குரு அதை மட்டும் மறந்துறாத.

(சதுரங்க வேட்டை படத்தில் டைட்டில் போட்ட வரிகள்.கதையின் மையமும் இந்த கான்செப்ட்தான்)

*பணமே ஒரு மானங்கெட்ட விஷயந்தானே?

#கற்றதும் பெற்றதும்

எழுத்தாளர் ஜி.நாகராஜன் திறமையான எழுத்தாளர். உடற்கட்டுடன் இருந்தவர். பெண்களுடன் தவறான பாதையில் சென்று குறுகிய காலத்தில் இறந்ததாக படித்தேன். இவரின் நாவலின் நடைகள் அனைத்தும் சினிமா பாணியில்
ப்ளாஸ்பேக் காட்சிகள் அனைத்தும் கதையுடன் ஒன்றி சுவாரஸ்யம் கூட்டின.

"எல்லாம் அழகானவையாகவும் இல்லை, எல்லாம் மோசமானவையாகவும் இல்லை, வாழ்க்கைதான் முக்கியமானது-வாழ்க்கையைத்தான் நான் அறிந்துகொள்ளவும் முயல்கிறேன்”
என்ற தாமஸ் வொல்ஃபின் முன்னுரையுடன் துவங்கியிருப்பார்.நாமும் தேடுவோம்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment