கற்றதும் பெற்றதும்-52
*மணி
சிந்திப்பதற்கு நாம் வைத்திருந்த மூளையை
தங்கள் சேமிப்புக்கு உரியதாக
மாற்றிக் கொள்கின்றனர்
-யுகபாரதி
#மராமத்து
-யுகபாரதி
யுகபாரதியின் கவிதை எப்பொழுதும் மனதிற்கு நெருக்கமானது.சிறு கவிதை தொகுப்பாக நேர்நிறை பதிப்பில் வெளியிட்டிருப்பார்.அதில் ஒவ்வொரு கவிதை தொகுப்பிலும் யாரோ ஒருவருக்கு அர்ப்பணம் செய்திருப்பார்.அதில் ஒரு புத்தகத்தில் ""என் புத்தகத்தை வாசித்தீர்களா என ஏக்கம் தொனிக்க கேட்கும் எழுத்துக்காரர்களுக்கு"
டெடிகேட் செய்திருப்பார்.உண்மையில் கவிதைப்புத்தகம் வெளியிட்ட அனைவரும் இந்த வார்த்தைகளை கடந்திருப்பதை சுட்டியிருப்பார்.
ஒருகவிதைக்கு தேவையானது சுருங்கச்சொல்லுதல்,
புரியவைப்பது,ஆழமாய் சிந்திக்க வைப்பது இவையாவும் இவரின் கவிதையில் மின்னும்.
முதல்கவிதையே எடுத்துக்காட்டு
#பிழைக்க
கரைபெருக ஓடிய
காவிரியில் நீச்சலடித்தவர்கள்
தங்கள் மகன்களை
பழக்கிக் கொண்டிருக்கிறார்கள்
வாட்டர்கேன் தொழிலுக்கு
ஒரு ஊரின் மனநிலையை தம் பதிவில் கொண்டுவருகிறார்.
#இளவரசன் கொலையுண்ட போது ஆனந்தவிகடனில் வந்த இவரின் இக்கவிதை அன்றைய மனிதர்களின் கோர முகத்தை குத்திக்கிழிப்பது போல் இருந்தது. "ரயில்" 'எனும் தலைப்பிட்ட கவிதையில் சாதாரணமாய் துவங்கும்
*எங்கேயும் நிற்காது
குறித்த நேரத்தில் போய்விடும்
இந்த ரயில் இதுவரை
தடம் புரண்டதாகவோ
வழியில் நின்றதாகவோ
தகவல் இல்லை
....
என வர்ணித்து இறுதியில்.இவ்வாறு முடியும்
"சகல ஜீவபட்சிகளையும்
சமமாகவே பாவிக்கும்
ரயிலுக்குத் தெரியுமா?
தனக்குக் கீழேயும் சுழல்வது
சக்கரமில்லை சாதியென்று
பயணிகளின் கவனத்திற்கு
வருவதேயில்லை
போன ரயிலில்
போய்ச் சேர்ந்தவர்களின்
பட்டியல்"
#கவிதை என்பது இயற்கையை பாடுவதோ,பெண்ணை வர்ணிப்பதோ மட்டும் இல்லை.சமூகத்தில் அவ்வப்போது நடக்கும் குற்றம் குறைகளையும் மனிதனுக்கு தெளிவுபடுத்தும் விதத்தில் "சார் ஒரு கொஸ்டின் கவிதையில்
சோற்றைக் குறைத்தால்
சுகர் வராது
எச்சரிக்கையோடிருந்தால்
எண்பதுவரை சுகவாழ்வு
என அடுக்கி இறுதியில்
"எல்லாமே எளிதுதான்
பிரசங்கம் செய்தவரிடம்
பிரியத்தோடு கேட்டேன்
அசைவத்தை நிறுத்தினால்
ஆக முடியுமா
அய்யராக?
#பழகுதலின் பின் குறிப்பு கவிதையில் இயல்பான நறுக்குகள்
* ஒருவருடைய தயவு
தேவைப்படும் வரை
அவரை நாமோ அல்லது
அவர் நம்மையோ
சொல்லிக் கொள்கிறோம் நேசிப்பதாக
* ஊதியத்துக்காக
எந்த வேலையும் சரியெனில் கூலிப்படையை ஏன் பார்க்கிறோம் குற்றமாக?
*கட்டுக்குள் வாழ்வதெனில் கவலைதான்
* வாசலோடு சிலரை வரவேற்பறையோடு சிலரை கூடத்தில் சிலரை
கொல்லை வரை சிலரை
ஆள் பார்த்தே அரும்புகிறது அன்பு
* நெருக்கத்தில் விலகியும் தயக்கத்தில் பழகியும் முடியவே முடியாத உறவைத்தான் காதல் என்று சொல்கிறோமோ?
#ஜல்லிக்கட்டு தடை விதித்தபோது யுகபாரதியும் தன் எழுத்துகள் மூலம் கிராமத்து மக்களின் மாட்டின் மீதான பாசத்தை தன் எழுத்தில் காட்டிய கவிதை
தொழுவ மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளில் ரிப்பன் கட்டி குங்குமமும் சந்தனமும் வைத்து சாம்பிராணி புகையில்
ஆராத்தி எடுப்பவர்கள் கேள்வியாவது பட்டிருப்பார்களா?
பசுவதை தடுப்பு பற்றி
#அவ்வப்போது நடைமுறை யதார்த்தத்தை யாராவது சொன்னால் தான் உரைக்கிறது ஆமால என்று
* தேவையை நேரடியாக கேட்க தெரியாதவர்கள் தங்கள் உரையாடலை ஆரம்பிக்கிறார்கள் பாராட்டில் இருந்து
* எல்லா நன்மைகளையும் ஏந்தி வருகிற மழையே யாராவது கூப்பிட்டு இருக்கிறோமா வீட்டுக்குள்
* இவ்வளவு கறாராக பேரம் பேசிய ஒருவனுக்கு கொசுரு வழங்கக்கூடிய பூக்காரம்மா அந்த நேரத்தில் நுகர வைக்கிறாள் மனித வாசனையை
*மணல் திருட்டு குறித்து வற்றிய ஆற்றின் தன் வரலாறாக
நெல்லுக்கே களஞ்சியம் என்று பெயரெடுத்த ஊருதான் சோத்துக்கு வழி இல்லாத சோகத்தில்
கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி கொண்டிருக்கிறது
ஆறுகளை
*நாடே குப்பையாய்க் கிடக்க
எதை எரிப்பது
இந்த போகியில்?
*எப்பொழுதும் விவசாயின் வலிகளை தன் கவிதை குறிப்பில் கொண்டுவருவார்.கனத்த பெருமூச்சினையும் கண்ணீரையும் நமக்கும் கடத்துவார்.அவ்வகையில்
" இன்று விடுமுறை என தொங்கிக்கொண்டிருக்கும் பலகையை
எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியாமல்
விலையில்லா அரிசி
வரிசையில் நிற்பவனையும்
அழைக்கத்தான் வேண்டுமா? விவசாயியென்று
இது போல் எண்ணற்ற கவிதைகள் படித்தவுடன் சிந்திக்க வைக்கும் இத்தொகுப்பு முழுவதும்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment