கற்றதும் பெற்றதும்-51
*மணி
எல்லோருக்கும் எருமையில் வரும் எமன்,பாரதியின் பெருமை கருதி, அவனுக்கு யானையில் வந்தான்
#யாதுமாகி நின்றாய்
-த.ராமலிங்கம்
பாரதியின் பெருமைகளை நேர்த்தியாகவும்,அதேநேரம் நமக்கு தெரியாத பல்வேறு தகவல்களை தருகிறார் கட்டுரையாளர்." செத்துப்போன திமிங்கலம், ஆழ்க்கடல் நீர் அலைபோல் அடங்கும்.ஆனால் உயிரோடு உள்ள சின்ன செதில் மீன் நதியின் போக்கைத்தன் நாவால் கிழிக்கும். பாரதி ஒரு செதில் மீன் என வலம்புரி ஜான் தன் வாழ்த்துரையில் சொல்வது பொருத்தமானது.
#பாரதி என்றொரு மானுடன்
பிறப்புக்கு பின் தான் இறப்பு என்பது உலகநியதி.ஆனால் கவிஞனுக்கு மட்டும் இறப்புக்குப் பின்புதான் பிறப்பு எனும் கண்ணதாசன் இயற்றிய ஜனனம் கவிதையை கூறுகிறார்.
"ஆஷ்" துரை கொலை குறித்து பாரதியிடம் கூறிய போது,
"இது மகத்தானதொரு சோக சம்பவம்" என எழுதுகிறார்.இது போல் ஒரு விபத்து நடக்க கூடாது. மாற்றுக்கருத்துகளை வெறுக்கலாமே தவிர,மாற்றுக் கருத்து கொண்ட மனிதர்களை வெறுக்க கூடாது என்கிறார்.
கடவுளை கஷ்டத்திலிருந்து காப்பாற்றும் ஒரு கருவியாகவே பார்க்கும் சமூகத்தில், பாரதி தனக்கான வேண்டுதலை சொல்கிறார்
"கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும்
நடுவயதிற்குள்ள மனதிடமும்
இளைஞனுடைய உற்சாகமும்
குழந்தையின் இதயமும்
தேவர்களே! எனக்கு எப்போதும்
நிலைத்திருக்கும்படி அருள் செய்க!
என்கிறார்
#பத்திரிக்கையில் கேள்வி பதில் தொடரில் "செத்துப்போன பிறகு மறுஜென்மம் உண்டா எனும் கேள்விக்கு பாரதி
*மனோதைரியம் இல்லாதவர் பேடிகள் புழுக்களாக,பிறர் துன்பத்தை தமதின்பமாக விரும்பினோர் பன்றிகளாக, சொந்த பாஷை கற்றுக்கொள்ளாதவர் குரங்காக, இவ்வாறு எழுதிக்கொண்டே செல்கிறார்.
*பயப்பட்டால் பாவமா? எனும் கேள்விக்கு
பயம் எல்லா பாவத்துக்கும் வேர். அதர்மர்த்தை கண்டு நகைக்காமல் எவன் பயப்படுகிறானோ,அந்த நீசன் எல்லா பாவமும் செய்வான்
#பாரதி ஒரு பத்திரிக்கையாளன்
பாரதி ஆசிரியராக பணியாற்றிய காலம் 2மாதங்கள்,பத்து நாட்கள். 1904 ஆகஸ்ட் முதல் நவம்பர் 10ம் தேதிவரை.அவர் வாங்கிய மாதசம்பளம் ரூ17.50.
பத்திரிக்கையில் வேலை கிடைத்ததும் ஆசிரியர் வேலையை துறந்தார்.இறுதிவரை பத்திரிக்கையாளனாய் வாழ்ந்தார்.சுதேசமித்ரன்,இந்தியா, கர்மயோகி பத்திரிக்கை நடத்தினார்.சித்ராவளி இதழ் முழுவதும் கார்ட்டுன் கொண்ட இதழாய் வடிவமைத்தார்.பால.பாரத் எனும் ஆங்கில இதழும் நடத்தினார்.
இந்தியா இதழ் சந்தா விபரம்
எல்லா கவர்மென்டார்க்கு-ரூ50
ஐமீன்தார்,ராஜாக்கள்-30
200க்கு மேற்பட்ட வருமானம் உடையோருக்கு -15
மற்றவர்களுக்கு -3
என இச்சந்தாவில் கூட புதுமையை கொண்டு வந்தார் பாரதி.
ஆர்பத்நாட் எனும் நிதிநிறுவனம் மக்களிடையே பெற்ற நிதியை வசூலித்து திவாலானது.இது குறித்து The arbuthnot disaster என இரு மொழியிலும் எழுதினார். மேலும் சமூக பொறுப்புடன் இது குறித்து thunder bolt "இடி" எனும் த்லைப்பில் தொடர்கட்டுரை எழுதினார்.
#பாரதி என்றொரு புரட்சியாளன்
"வறளுதல்" என்ற சொல்லிலிருந்து வறட்சி,மிரளுதல் என்பதிலிருந்து மிரட்சி,புரளுதல் என்பதிலிருந்து புரட்சி என தோன்றியது.புரளுதல் என்றால் மேல் கீழாவது, கீழ் மேலாவது என பொருள்.
*முன்னோர்கள் செய்தது என்றால் பாரதிக்கு கோபம் வந்துவிடும். பாஞ்சாலி சபதத்தில் முன்பிருந்தோர் காரணத்தாலே எனும் கவிதை பாடுகிறார்." நீங்கள் மட்டுமல்ல;நீங்கள் பிறப்பதற்கு முன்னால் கூட நாட்டில் முட்டாள்கள் இருந்திருக்கிறார்கள் எனும் அவரின் இறுதிவரி அமைந்திருக்கும்.
*ஒளவையின் ஆத்திச்சூடியை காலத்திற்கு ஏற்றதுபோல் மாற்றியிருப்பார்.
ஆறுவது சினம்-ரெளத்திரம்.பழகு
ஞயம்பட உரை-நேர்பட பேசு
கீழ்மை அகற்று-கீழோர்க்கு அஞ்சேல்
சுளிக்கச் சொல்லேல்-வெடிப்புறப் பேசு
சக்கர நெறிநில்-வையத்தலைமை கொள்
இவ்வாறு காலத்துக்கேற்றவாறு பல வரிகளை மாற்றி எழுதி மக்களை சிந்திக்க வைத்திருப்பார்.
#ஞானி
ஒவ்வொரு மனிதனுக்கும் மனதிற்கும் அறிவுக்கும் இடையே போராட்டம் நிகழும்.ஒரு தாளில் புள்ளி ஒன்று வைத்து.முடிவு பெறுகிற வரை கோடு இழுத்து முடிந்து விட்டது என சொன்னால் முடிந்தது தாள் தானே தவிர கோடு அன்று.
என இத்தொகுப்பு முழுவதும்.பாரதியின் எழுதுக்கள் குறித்து ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.பாரதியை பற்றி தெரிந்துகொள்ள வாழ்க்கை வரலாற்றை படிப்பதோடு அல்லாமல் இதுபோன்ற ஆய்வு கட்டுரைகள் படிக்கும்போதுதான் பாரதியின் உயரம் இன்னும் அதிகரிக்கிறது.இப்படிதான் இவரை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment