கற்றதும் பெற்றதும்-58
*மணி
ஒரு தெருவைக் கடப்பது
அத்தனை எளிதல்ல;
ஒரு தெருவைக் கடப்பது
சமயங்களில் ஒரு
வாழ்வைக் கடப்பது போல
-சுந்தர்ஜி
#தெருவென்று எதனைச் சொல்வீர்?
-தஞ்சாவூர்க் கவிராயர்
தஞ்சாவூர் கவிராயர் ஞாயிறு தோறும் தி இந்துவில் எழுதியவர். தஞ்சை மண்ணைப்பற்றி சிலாகித்து எழுதுபவர்.இதிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் அம்மக்களின் வாழ்வியலை படம்பிடித்து சொல்லியுள்ளார். "எல்லா பேருந்து பயணங்களிலும் ஜன்னல் வழியே தெரியும் ஊரில் ஒரு நிமிடம் வாழ்ந்துவிட்ட போவதாக ஜெயமோகன் எழுதியிருப்பார்.அதுபோல் இக்கட்டுரை வாசிக்கும்போதெல்லாம் நம் ஊர் நினைவுகளும் வந்து செல்லும்
#தெருவென்று எதனைச் சொல்வீர்
நகர்மயமாதலுக்கு முதலில் பலியாவது மரங்களே.ஒவ்வொரு தெருவின் அடையாளத்தையும் இவை மாற்றுகின்றன.வேப்பமரம் இருக்கிற வீடு,முருங்கைமர வீடு என அடைமொழி இட்டு அழைத்த காலம் உண்டு.இன்றைய யதார்த்ததை பதிவு செய்கிறார்.
/தெருக்கள் சுருங்கி அடுக்குமாடி ஆகிவிட்டன.அழைப்பு மணி ஓசை உள்ளிருப்போரைக் கலவரப்படுத்துகிறது யாரென/ திண்ணையில் உட்கார்ந்தபடி தெருவைப் பார்த்தபடி ஒரு வாழ்நாளை கழித்துவிடலாம் என்பார் தி.ஜா.அதன்படி இத்தெரு கட்டுரை படித்தபடி அன்றைய நாட்களை அசைபோடலாம்.
#புகைப்படம்
"கடந்த காலத்திற்குள் நம்மை அழைத்துப் போவதற்கு கால இயந்திரம் தேவையில்லை.ஒரு கருப்பு-வெள்ளை புகைப்படம் போதும் என்பார் எஸ்.ரா.அதுபோல் பால்யகால புகைப்படமும்,
கருப்பு வெள்ளையில் நம் முன்னோர்களை பார்க்கும்போது அழகான நொடிகள் சேமிக்கப்பட்ட உண்டியலை திறந்துபார்ப்பது போல் இக்கட்டுரை இருந்தது.
#மனதில் நிற்கும் ரயில்கள்
"இன்றும் கூட ரயில் நிற்காது ஊர்களில் அம்மக்கள் ரயிலை வியந்துபார்த்து கையசைப்பார்கள்". அப்படி இதில் ரயில் பயண நினைவை பகிர்கிறார்.ரயிலை ரசிப்பவர்கள் என்றும் குழந்தை மனம் கொண்டவர்கள்.ரயிலை மையப்படுத்தி ஜே.கே எழுதிய பகல்நேர பாசஞ்சர் வண்டி மற்றும் வண்ணநிலவனின் கதைகளும் வருகிறது.
#புத்தகங்களை தேடி
புத்தகத்தை தேடிய கட்டுரையில் தான் தேடி அழைந்த புத்தகத்தையும் தனக்கு குருவாய் இருந்த தஞ்சை பிரகாஷ் பற்றியும் கூறுகிறார்.அக்காலத்தில் புத்தகத்தை தேடி அலைவது கடினமானது.அப்போதுதான் நூலகம்.பிரபலமானது.ஒவ்வொருவரும் திருப்பித்தரும் புத்தகத்தை வாங்க போட்டியே இருக்கும்.இன்று புத்தகம் பற்றி பேசினால் எனக்கு குடுனு சொல்வாங்க,இல்ல எனக்கு புக் பி.டி எப் குடு நானா அதுவானு பார்க்கிறேங்கிற ரேஞ்சிலதான் இருக்கும்.இதுவரை மின்னூலை படித்து விட்டு அதுகுறித்து எழுதியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.சேகரித்து வைத்திருப்பதை எப்போது பயன்படுத்தப் போகிறோமோ அப்போதுதான் அது பலம் தரும்
#பேச்சரவம் கேட்டிலையோ
இக்கட்டுரையில் ஒவ்வொரு பறவைக்குமான ஒலிகளை காரணத்துடன் விளக்கியுள்ளார். எழுத்தாளர் கு.ப.ரா. "பரத்வாஜம்' என்ற குருவியின் சமஸ்கிருத பெயரை 'கரிச்சான்' என தமிழில் மாற்றினார்.அவரின் சீடரான நாராயணசாமி அவர் மீதுள்ள மதிப்பால் 'கரிச்சான்குஞ்சு' என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.மனிதர்களின் பொருளற்ற புலம்பலை விட மகத்தானது பறவையின் குரல்கள் என்கிறார்
#காந்தி குறித்த இந்தியாவிலேயே முதன் முதலில் டாக்குமென்ரி படம் எடுத்த தமிழரும் பயணக்கட்டுரையின் முன்னோடியுமான ஏ.கே.செட்டியாரை பற்றி கூறுகிறார்.ஆப்ரிக்காவுக்கே சென்று டால்ஸ்டாய் பண்ணை குறித்து படம் எடுத்துள்ளார்.
#பானுமதி குறித்த நீண்ட கட்டுரையில் ஒரு இடத்தில் மலைக்கள்ளன் படபிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் ரேகையை பார்த்த பானுமதி "பின்னாளில் பெரும் புகழ் வரும் சினிமாவில் அல்ல என்று சொன்னதை எம்.ஜி.ஆர் ஒரு மேடையில் சொன்னாராம்.
பானுமதி சோதிடம் பார்ப்பதில் சிறந்தவர்.
26வயதுள்ள ஒருவனின் ரேகையை பார்த்து ஒன்றும் சொல்லவில்லையாம்.பின் சில நாட்களில் அவன் இறந்ததை அறிந்து " எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்ப்பதைப் போல் முட்டாள் தனம் என்ன இருக்க முடியும் என தோன்றி, அதற்குப் பிறகு கைரேகை பார்ப்பது நிறுத்தி விட்டதாக சொன்னார்.
இதுபோல் தகவல்களும் செய்திகளும் உள்ளன.ஒவ்வொரு கட்டுரை ஆரம்பத்திலும் ரூமியின் வரிகளுடன் ஆரம்பித்திருப்பது சிறப்பு
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment