பீலி என்றால் மயிலிறகு. வால்போல் தோன்றினாலும் அது வாலன்று என்பதால் மயிலிறகுக்குப் பீலி என்ற சிறப்புப் பெயர். மயிற்பீலிக்கு எடையே இராது. அவ்வளவு மெலிது. மயில் தோகை விரித்து ஆடுவதன் உண்மைச் செயல் என்ன தெரியுமா ? தோகை விரித்து நிற்கும்போது தோகைப்பரப்பில் காற்று மோதுவதால் தடுமாறும். ஒரு பக்கமாக இழுபடும். அவ்வாறு காற்றின் போக்கிற்கேற்பத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள கால் மாற்றி வைப்பதுதான் மயில் ஆடுவதுபோல் தோன்றுகிறது. பெய்தல் என்றால் சிறிய விடுபாடுகூட இல்லாமல் நிறைத்துக்கூடி விழுவது. மழை பெய்கிறது. இவ்விடத்தில் ஒரு புள்ளியில் மழைத்துளி விழவில்லை என்று கூற இயலாது. இடைவெளி விட்டுவைக்காமல் அடித்துக் கொட்டும். அதுதான் பெய்தல். விருந்தினர்க்குச் சோறிட்டு நெய் பெய்தனர் என்றால் சோற்றின்மீது இடைவெளியே இல்லாமல் நிறைய ஊற்றினர் என்று பொருள். சகடம் என்பதற்குச் சக்கரம், வண்டி, தேர் எனப் பல பொருள்கள். சகடு என்பதற்கும் அவ்வாறே பொருள்கள். அதனால் அக்காலத்தில் சகடுகள் சேர்த்துச் செய்யப்பட்ட வண்டிகளைச் ’சாகாடு’ என்றனர். சகடு = சாகாடு. (ஒரே வீட்டில் அக்கை, தங்கைகளைக் கட்டியவர் சகலை. வண்டியில் இணைச் சகடுகள். இரண்டும் ஒரே செயலைச் செய்யும் சகடுகள். சகடை => சகலை.) அச்சு என்றால் தெரியும். இரண்டு சகடுகளுக்கு இடையே பொருத்தப்பட்டு அவ்விரண்டையும் இணையாய் இணைப்பது அச்சு. அச்சிலிருந்து சகடு கழன்றுவிடாமல் இருக்கக் குத்துவது அச்சு ஆணி = அச்சாணி. சாகாட்டின் இருபுறத்தும் கடைசியில் இருப்பதால் அது கடையாணியும் ஆகும். அறும் என்றால் அற்றுப்போதல். இறும் என்றால் இற்றுப்போதல். இறுதல். தன் இணைப்பிழந்து இற்று உடைதல். பண்டம் என்றால் வண்டியில் ஏற்றப்பட்ட பொருள். பொதுவாகவே பண்டம் என்பதுதான் சரக்கு, பொருள். அப்பண்டம் = அ பண்டம். அ என்பது சேய்மைச் சுட்டு. அந்தப் பண்டம் என்பதுபொருள். (நம் மக்கள் புனைவு அல்லாத எழுத்துகளை அ புனைவு என்று எழுதுகிறார்கள். அது ஒருபோதும் புனைவல்லாதவற்றைக் குறிக்கும் பொருள் தராது. அந்தப் புனைவு என்ற பொருளைத்தான் தரும். அல்லாத புனைவு என்ற பொருளில்தான் அல்புனைவு எனலாம். தமிழில் அல் என்று ஒரு சொல்லைச் சொல்வது பெருவழக்கன்று. அல்திணை => அற்றிணை / அஃறிணை, அல்வழி என்று சில சொற்களே அம்முறையில் ஆகியுள்ளன. அபுனைவு என்று சொல்வது பெரும்பிழை.)சால என்றால் அதனை அடுத்து வரும் சொல்லின் மிகுநிலை. சாலச் சிறந்தது என்றால் சிறப்பின் மிகுநிலை. சால மிகுத்து என்றால் மிகுதியாய் மிகுத்து. பெயின் = பெய்யின். இடைவெளியில்லாமல் நெருக்கிக் கட்டி அடுக்கினால். ஏற்றிக்கட்டினால். பீலி பெய் சாகாடும் அச்சு இறும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்.திருக்குறட்பாக்களின் வழியே தமிழைக் கற்பது பேரின்பம். - கவிஞர் மகுடேசுவரன்

Wednesday, 22 January 2025

புத்தகம்-11


Reading_Marathon2025
#25RM055

Book No:11/100+
Pages:-188

மந்தை மனிதர்கள்
-லதா

இந்த ஆண்டு புத்தகத் திருவிழா வாங்கிய புத்தகம்.
கழிவறை இருக்கை ஆசிரியரிடமிருந்து வந்துள்ள மற்றுமொரு கவனிக்கத்தக்க நூல். பொதுவாக மந்தை என்பது ஆடு மாடுகள் சேர்ந்து வாழும் இடமாக சொல்லப்படுகிறது. சமூகச் சூழலில் தனித்துவம் இன்றி பிறர் சொல்வதை எந்த விதத்திலும் அலசி ஆராயாமல் மந்தை மனப்பான்மையுடன் தனித்துவமான சிந்தனை இல்லாமல் கூட்டத்தைப் போல் பின்பற்ற வேண்டாம் என்பது அதன் உட்கருத்தாகும். தனித்துவ அடையாளம் இல்லாமல் "நாம் கூட்டுப் பயணத்தை பிணங்களின் ஊர்வலமாக மாற்றி விட்டோம் எனக் கூறும் போது நெற்றி பொட்டில் அடித்தது போல் உள்ளது.

பொதுவாக தனியாக சிந்திப்போரை மட்டுப்படுத்துவதற்கு சொல்லும் வார்த்தை தனி மரம் தோப்பாகாது. பிறர் சிந்தனையின் நிழலில் வாழும் போது நம்முடைய சிந்தனை மட்டு படுகிறது என்பது உண்மை. நூலில் இடம் பெற்றுள்ள 23 கட்டுரைகளும் தனிமனித பார்வை குறித்தும், சமூகத்திற்கும் தனிமனிதனுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள் எவ்வாறு உள்ளன என்பதை குறித்தும், மனிதனின் சுய சிந்தனை வளர்க்கும் தேவையை முன்வைத்தும் இந்த நூல் பேசப்படுகிறது. ஒருவரை கண்மூடித்தனமாக பின்பற்றும் போது அவரின் தவறுகளையும் ஏற்றுக் கொள்கிறோம். சரியான விஷயத்தை அவரிடம் சொல்ல தயங்குகிறோம். நாம் கற்றவர்கள் அல்ல கற்பிக்கப்பட்டவர்கள் என்பதனை அழுத்தமாக சொல்லி நாம் பாதை மாறி செல்கிறோம் என்பதனையும் எச்சரிக்கிறது.

எல்லோருக்கும் நல்லவனாக இருக்க ஆண்டவனாலும் முடியாது. ஆனால் மனிதன் ஒரு படிக்கு மேலே சென்று மற்றவர்களுக்காகவே பேசுகிறான், வாழ்கிறான் ,இயங்குகிறான். கருத்து முரண் வந்தாலும் அதனை விவாதிக்காமல் தவறாக எண்ணுவார்களோ என்று நினைத்து அப்படியே கடந்து செல்கிறான். இதே பழக்கத்தை தம் குழந்தைகளுக்கும் கற்பித்து அவர்களுடைய சுயத்தையும் அழிக்கிறோம் என்ற குற்றச்சாட்டையும் சொல்கிறார். தயக்கமே நம்முடைய எண்ணங்களை குழி தோண்டி புதைத்து விடுகிறது.

நிதர்சனத்தின் துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாக்கள் போல சொற்கள் நம் சுயத்தை நோக்கிப் பாய்கின்றன. கூட்டம் என்றாவது நல்லது செய்து இருக்கிறதா? தனி மனிதருக்கு என்றால் இல்லவே இல்லை. மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சியாளர்களும் சரி தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவரின் சுயலாபத்துக்காகதான் ஆண்டாண்டு காலமாக இங்கு ஆட்சி நடைபெறுகிறது என்பதை சுட்டிக்காட்டி விட்டு நமக்கென ஒரு அறிவு இருக்கிறது அதை உபயோகிக்காவிட்டால் நாம் மற்றவர்கள் வாழ உபயோகப்படுவோம் என்று குட்டுகிறார்.

தலைவர்களை வாழவைக்கும் தொண்டர்கள் தான் நாட்டில் அதிகம்.அவர்களின் குடும்பம் பற்றி கூட கவலைப்படாமல் தலைவர்களின் குடும்பங்களை பற்றி எண்ணிக் கொள்கிறார்கள்‌. ஆனால் தொண்டர்களின் குடும்பங்களின் நிலைதான் மிகவும் கவலைக்குரியது. சில விஷயங்களில் சுயநலத்தோடு இருந்தால் மட்டுமே நம்முடைய சுய சிந்தனை, சுயமதிப்புடன் வாழலாம் என்பதை பல இடங்களில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்

தன்னிடம் பதில் இல்லாதவன் தான் பிறரிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான் என்று  நான் எழுதிய வரி நினைவுக்கு வருகிறது சமுதாயத்திலும் இதை பலர் செய்வதாக கட்டுரையாளர் தெரிவிக்கிறார் உதாரணத்துடன்.

தியாகமே உன்னை வழிநடத்தும் என்பது பிரபல சினிமா வசனம்.ஆனால் தியாகத்தினால் சொந்த விருப்பு வெறுப்பு இயல்பாய் அழித்தொழிக்கப்படுகிறது.அன்பே தலையெழுத்தாக்கப்பட்டு மனிதர்களின் ஆசைகள் நிர்மூலமாக்கப்படுகிறது.நம் ஆசைகளும் விருப்பங்களும் மற்றவர்களை சார்ந்திருக்கும் போது நிச்சயம் நிறைவேறாது என்பதை திருமண பந்தத்தில் நடக்கும் சிக்கல்களை குறித்தும் விளக்குகிறார்.சுயசிந்தனையை மீட்டுருவாக்கம் செய்வதற்கு நண்பர்களும் உரையாடல்களும் புத்தகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தன்னிச்சையாக ஒருவர் அலுவலகத்திலோ வீட்டிலோ யாரையும் கலந்தாலோசிக்காமல் அவருடைய இயல்பில் தனக்கு இருக்கும் அறிவில் ஒரு முடிவை எடுத்து விட்டால்.. அவர் யாரையும் கலந்தாலோசிக்க மாட்டார். திமிர் பிடித்தவர் என்ற ஒரு முத்திரையை நாம் எப்போதும் வைத்துக் கொண்டு அலைகிறோம்.அதாவது தம்மை விட பிறர் அறிவில் மேம்பட்டவராக இருக்கக் கூடாது என்பது நம் எண்ணம். நாம் ஊருடன் ஒன்றி வாழ்கிறோம் அவர் மட்டும் தனித்து இருப்பதா? அதற்கு உதாரணமாக புத்தகத்தில் மேற்கோள் கதைகளையும் சம்பவங்களையும் தொகுத்து இந்த வரிகளுக்கு மேலும் உண்மை சேர்க்கும் விதத்தில் பல எடுத்துக்காட்டுகளையும் கூறியுள்ளார்.

சம்பவங்களை பொதுமைப்படுத்துவது, நாளைய வாழ்வுக்கு எதிர்கால வாழ்வுக்கு இன்றே நம்மை இரையாக்கிக் கொள்வது, அவசர உலகில் அன்பாய் இருக்க நாம் தவறுவது. சினிமாவில் பார்த்து ரசிக்கும் அன்பினை நம்முடைய வீட்டில் காட்டாதது. ஆக ரசிப்பதற்கு ஒன்றும் வாழ்வதற்கு ஒன்றுமாய் இரு வேறு வாழ்க்கையை மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று சாடுகிறார்.

இறுதியாக உண்மைகள் உண்மைகள் மட்டுமே. யார் விருப்பத்திற்கும் அவற்றை வளைக்க இயலாது. உண்மைகளை நாம் தான் நம் 
 அபிப்பிராயங்களால் பொய்களாக்க முயல்கிறோம். நாம் உணர தவறினாலும் உண்மைகள் மட்டுமே வாழும் என்ற எதார்த்த வெளிச்சத்தில் உண்மை மிளிர்கிறது..

*சிலர் பாதி வழியிலேயே தெளிகிறார்கள். இன்னும் சிலர் தன்னைப் போலவே சிந்திக்காத இன்னும் சில மனிதர்களை உருவாக்கி விட்டு செல்கிறார்கள்

*கூட்டமாக சேர்ந்து கோஷம் போடும் குரல் தனக்கு என்ன தேவை என்பது குரல் கொடுப்பதில்லை.

சில புத்தகங்கள் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும். சில புத்தகங்கள் சிந்திக்கும் அனுபவத்தை கொடுக்கும். அந்த வகையில் இந்த புத்தகம் தனி மனிதர்களை உளவியல் ரீதியாக பார்ப்பதுடனும் தனிமனிதர்கள் செய்யும் தவறுகள், கூட்டமாக சேரும்போது நாம் தவறவிடும் கணங்கள், வாழ்வின் மீதான படிப்பினையை எவ்வாறு நாம் மீட்டுருவாக்கம் செய்து கொள்வது என ஒரு உளவியல் அறிஞரைப் போல நமக்கு இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் பாடம் எடுக்கின்றன 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம்-10


#Reading_Marathon2025
#25RM055

Book No:10/100+
Pages:-197

திருநீறுசாமி
-இமையம்

இமையம் அவர்களின் படைப்புகள் பொதுவாக மனித வாழ்வின் நுணுக்கங்களை, சமூகத்தின் அவலங்களை, மற்றும் எளிய மனிதர்களின் யதார்த்தங்களை நேர்மையாகப் பிரதிபலிக்கும்.
இந்த புத்தகத்தில் அமைந்துள்ள 10 கதைகளும் வெவ்வேறு வகைகளில் சிறந்தவையாக உள்ளன.

 முதலாவதாக திருநீறுசாமி கதை
 சமூகத்தின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை டெல்லியில் தனது மனைவி வர்ஷாவுடன் வசித்து வருகிறான். தங்களின் பிறந்த குழந்தைக்கு முடி எடுக்க தன் சொந்த கிராமமான திருநீறு சாமி கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று மனைவியுடன் சொல்லிக் கொண்டிருக்கிறான். அது அவர்களுக்கு புரியவில்லை திருநீறு சாமி குறித்த விவாதங்கள் நிகழ்கிறது இறுதியில் என்ன ஆனது என்பது கதை. கிராமத்து மனிதர்களின் நம்பிக்கையும் நகரத்து மனிதர்களின் எள்ளல்களும் தராசில் வைத்து எடை போட்டு வைப்பதுபோல் கதை நகர்கிறது.

குழந்தை பேரு இல்லாத சங்கீதாவுக்கும் அவரின் கணவர் அசோக்கும் இடையே நடக்கும் மனப்போர் தான் சண்டையாக அடிக்கடி வெடிக்கிறது. இதில் இருவரின் நியாயங்களும் சமூகத்தில் கேள்விகளுக்கு பயந்து ,இவர்களின் உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது அதனால் கணவரின் தாழ்வு மனப்பான்மை அதிகமாகி இன்னும் இன்னும் அந்த விரிசல் தொடர்கிறது. சங்கீதா ஒரு இடத்தில் சொல்கிறாள் "வாழ்க்கை என்பது இதுதான் போல, கர்ப்பப்பை பிரச்சனன்னாளும் பொம்பள தான் சாக வேண்டி இருக்கு ,விந்தணுவில் பிரச்சனைனாளும் பொம்பள தான் சாக வேண்டி இருக்கிறது" என்று சொல்லி அழுகிறாள்.

கல்லூரி மாணவியான சாராவுக்கு ஆசை வார்த்தை காட்டி காதலில் விழுச்செய்யும் அந்த கல்லூரியில் விரிவுரையாளர் செந்தூரப் பாண்டியன் அவளை காதலிக்கிறார். இது அவரின் மனைவிக்கு தெரிய வர சாராவை வீட்டுக்கு வந்து திட்டுகிறாள். அவமானம் அடையும் சாரா என்ன முடிவு எடுத்தாள், இதற்கு ஒத்துழைக்காததால் சாராவுக்கு செந்தூர்பாண்டியன் செய்த கீழ்த்தரமான விஷயம் அவளை வாழ்க்கையின் எல்லைக்கு கொண்டு போய் தள்ளுகிறது. கதையைப் படித்து முடிக்கும்போது புத்தகத்தை மூடி வைத்து கொஞ்சம் கனமான மனதை இலகுவாக்கிக் கொண்டுதான் அடுத்த கதையை படிக்க முடிகிறது .இமையத்தின் சொற்களுக்கு மட்டுமே உள்ள ரகசியம் இது தான்.
 வார்த்தைகளில் தனது அத்தனை கணத்தையும் நம் மீது இறக்கி வைத்து விடுவார்.

கொல்லிமலை சாமி கதையில் கொல்லிமலை சித்தரை தேடிச் செல்லும் சிவகுமார் அங்கு அந்த சாமியாராய் இருக்கும் அவனுடைய இளமைப் பருவத்தில் பழகிய ஜோதியை காண்கிறான். நான் கடவுள் ஆர்யா போல எவ்வளவு தான் தன்னுடைய இளமைப் பருவ நினைவுகளை சொன்னாலும் ஜோதி முக்தி அடைந்தவள் போல் பேசுகிறாள். ஜோதிக்கு நடந்த விஷயம் என்ன? எவ்வாறு அவள் சாமியாராக ஆனாள்? என்பதை இயல்பு மாறாமல் இவ்வாரெல்லாம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்தால் என்ன செய்வது என்று யோசனையில் அந்த கதையை படித்து முடிக்க வேண்டி உள்ளது.

சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளை வார்த்தை வடிவமாக்குவதிலும், கற்பனைக் கதாபாத்திரங்களை கதை வழியே கொண்டுவருவதிலும் வாசகர்களின் மனங்களில் ஆழப் பதிய வைக்கும் விதத்தில் அமைந்தவை தான் பிணத்துக்கு சொந்தக்காரி கதை .அவசர பிரிவில் இருக்கும் ராமன் இறந்து விடுகிறான். அவர் வயதானவர் ஓய்வு பெற்றவர். அவர் இறந்துவிட்ட செய்தியை உடன் இருப்பவருக்கு தெரிவிக்க நர்ஸ் அழைக்கிறார். அப்போது மீனாட்சி ஓடி வருகிறாள். ஆனால் அவள் ராமனின் வீட்டு வேலைக்காரி. ராமனின் பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். அவரின் அக்கா மட்டுமே சென்னையில் உள்ளார். இப்போது அந்த பிணத்தை யார் வாங்குவது? என்ன நடந்தது? மனிதநேயத்துடன் செயல்படும் மக்கள் இந்த பூமியில் உள்ளதுபோல் இக்கதை நமக்கு காட்டுகிறது.

மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், சமூகத்தின் மறைமுகங்கள், மற்றும் மனிதநேயத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம். இமையம் அவர்களின் எழுத்து பாணி, வாசகர்களை ஆழமாகச் சிந்திக்க வைக்கும் தன்மை கொண்டது.
ஆண்டவரின் கிருபை கதையும் அந்த வகையில் தான் நாளை கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு தயாராக காத்திருக்கும் சுலோச்சனா அவனின் தாய் கணவன் விக்டர் ஆகியோர் மூலம் அந்த கதையின் பின்னணி நமக்குச் சொல்லப்படுகிறது குழந்தை பெயர் வைக்காத சுலோச்சனாதீங்க கடந்த காலம் மிகவும் கசப்பானது அந்த கசப்பானது எல்லாம் இன்று மேலும் கசப்பாக்கம் வண்ணம் ஒரு செயல் நடைபெற உள்ளது அதனை அவர் எவ்வாறு எடுத்துக் கொண்டார் சமூகம் தரும் அழுத்தம் எவ்வாறெல்லாம் அவளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. 
பொம்பளைங்கறது கர்ப்பப்பை தான். அதுவே செத்துப் போய் இருந்தா அப்புறம் என்ன பொம்பள? புடவை ஜாக்கெட் போட்டுட்டா மட்டும் பொம்பளை ஆயிட முடியாது' என்று விக்டரின் அம்மா தேள் கொடுக்கு கொட்டுவது போல் சொன்னது அவள் நினைத்து நினைத்து அழுகிறாள் இறுதியில் என்ன ஆனது என்பது கதை.

 கோபத்தை அதிகாரத்தை பார்வையில் மட்டும் தான் காட்டுவார்கள் உயர் அதிகாரிகள். அதிகாரத்தின் முன்பு நாம் எல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல எஸ் சார் எனும் கதை. கவர்னர் மாளிகையில் சந்தித்துக் கொள்ளும் டிஜிபியும் தலைமைச் செயலாளரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும்போது கவர்னரிடமிருந்து டிஜிபிக்கு அழைப்பு வருகிறது. கவர்னர் பட்டமளிப்பு விழாவுக்கு செல்லும் போது காரின் குறுக்கே மாடு வந்ததால் கார் நின்று சென்றதாக புகார் சொல்கிறார். இதற்கு டிஜிபி தகுந்த விளக்கம் கொடுத்தும் அதிகாரத்தின் முன் என்ன ஆனது என்பதுதான் இக்கதை. அழகிரி சாமியின் அதிகாரியின் நாய் எனும் கதை தான் நினைவுக்கு வருகிறது இறுதியில் பாதிக்கப்படுவது கடைநிலை ஊழியர்கள் தான் என்பதையும் ஆசிரியர் சொல்கிறார்.

மேற்கோளாக மாமல்லபுரத்தில் மோடியும் சீன அதிபரும் கலந்து கொண்ட சந்திப்பில் நாய் ஒன்று சென்றதால் என்ன ஆனது என்பதையும் இச்சிறுகதையில் நகைச்சுவை தகுந்த விளக்கியுள்ளார்.

"எல்லா இடத்திலும் டார்ச்சர் இருக்கத்தான் செய்கிறது மனுஷன் ஆகாயத்தில் வாழ முடியாது மண்ணுல தான் வாழ முடியும். டார்ச்சர் இல்லாட்டியும் வாழ முடியாது தங்கம்" என்று 'வீட்டை எரிக்கும் விளக்கு' கதையில் ஆய்வியல் மாணவியாக இருக்கும் பூங்குழலி என்ன என்ன இடர்களை எல்லாம் சந்திக்கிறார் என்பதை கதையில் தெளிவாக சொல்லி இருப்பார். மேலதிகமாக 
"நீ எதை பெருசு என்று நினைக்கிறாயோ அது பெருசு. எத சிறுசுன்ன நினைக்கிறயோ அது சிறுசு. நேத்து இருந்த மனசு இன்னைக்கு உன்கிட்ட இல்ல, இன்னைக்கு இருக்கிற மனசு நாளைக்கு உன்கிட்ட இருக்காது. அதுதான் உனக்கு பிரச்சனை படிப்பு என்பதை வெறும் புத்தகத்தில் மட்டும் படிக்கிறது இல்லை. பக்கத்தில் இருக்கிற மனுஷங்களையும் படிக்கிறது தான் படிப்பு .புரிஞ்சுதா என்று கேட்டார் பூங்குழலிக்கு போதிமர நிழலில் கிடைத்த உபதேசம் போல தோன்றுகிறது.

கதைகள் யாவும் படிக்க படிக்க அடுத்து என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் தான் உண்டாக்கிறது.குறுநாவல் போல் இருந்தாலும் சிறுகதைகள் ஆழமான கருத்தினை உள்ளடக்கத்துடன் சொல்லியுள்ளது.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday, 18 January 2025

புத்தகம்-9


#Reading_Marathon2025
#25RM055

Book No:9/100+
Pages:-353

கையறுநதி
-வறீதையா கான்ஸ்தந்தின்

உன் துயர் இறப்பவளைக் குறித்ததா, அல்லது என்னைக் குறித்ததா?

(சகோதரனை இழந்தபோது ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தன்னையே கேட்டுக் கொண்டது)

மனச்சிதைவுக்கு ஆட்பட்ட மகளைப் பராமரித்துவரும் தந்தையின் மனவோட்டத்தின் பதிவு இந்த நூல்.
மூளை சுரப்பிகளின் அதிசெயல்பாட்டால் ஒரு சராசரி வாழ்வை வாழ முடியாத மகளைப் பேணும் ஒரு தந்தையின் கதை இது.
புற்று நோயால் மனைவியை இழந்த பேராசிரியர் அவரின் மகளும் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்படுகிறார். இது மனசிதைவுதான் என்பதை அறிவதே பெரும் போராட்டமாய் இருக்கிறது.
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் எனும் அலைக்கழிப்பில்
ஜூலி எனும் தன் மகளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெளியே காத்திருக்கும் தகப்பனின் மனதில் எழும் மனவோட்டம் நூல் முழுக்க நம்மையும் இழுத்துக் கொண்டு செல்கிறது.

மனநோய்களிலேயே மிகவும் கொடுமையான ஸ்கிசோஃப்ரீனியா என்கிற மனச்சிதைவு நோய், பதின்வயதுப் பருவத்தில் வெளிப்படத் தொடங்கி, கண்காணிப்பற்ற நிலையில் மேலும் தீவிரப்படுகிறது. மரபியல் ரீதியாக வருகிற பட்சத்தில் அதற்கு முன்பாகவே தொடங்குவதும் உண்டு. எவ்வளவு முன்னதாக அடையாளம் காண்கிறோமோ அவ்வளவுக்கு சிகிச்சையை எளிதாக வகுக்க முடியும். அந்தச் சிகிச்சை குணப்படுத்துவதற்கல்ல, கோளாறைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்குத்தான்.

முதல் 14 வரையிலான இயல்கள் கதைசொல்லியின் மகள் ஜூலியாவுக்கு நேர்ந்த மனச்சிதைவை மையமாகக் கொண்டுள்ளவை. மகளுக்கு வாய்த்துப்போன நோயைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட காலதாமதம், மருத்துவ உதவியை நாடிச் சென்றதால் ஏற்பட்ட அனுகூலங்கள், இவ்விஷயங்களை அசைபோட்டு எழுதும்போது ஏற்படும் மனத்தாங்கல், குற்றவுணர்வு, உளவியல் நெருடல்கள், நோய் பற்றிய புரிதலானது எவ்வாறு ஒருவரின் மானுடம் பற்றி ஒருவரை யோசிக்க வைக்கிறது.அவளின் பராமரிப்பை ஏற்க தயாராகும் தந்தைக்குள் எழும் கேள்விகள் அவரின் தேடலையும் விடையையும் தந்து கொண்டே இருக்கிறது.

தத்துவார்த்தக் கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருக்கிறார் அவருக்கேயுரிய விதத்தில் விடைகளையும் கண்டடைகிறார். ஆய்வுத்தன்மை ஒவ்வொரு அத்தியாயத்திலும் உடன் வந்து கொண்டே இருக்கிறது.

நான் வீழ்ந்துவிடக் கூடாது. என்னதான் காயமுற்றாலும், பலவீனப்பட்டுப் போனாலும் கம்பீரத்தோடு நடை பயில வேண்டும் எனக் கங்கணம் செய்து கொள்கிறேன். தொடங்கிய பயணத்தில் தோற்றுவிடக் கூடாது என்று எனக்கு நானே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அனுதாபத்துக்குரிய ஆளாக நான் தோற்றமளித்துவிடக் கூடாது, கழிவிரக்கம் என்பது தனக்குத் தானே பெய்துகொள்ளும் நஞ்சு என ஆறுதல் சொல்லிக் கொள்கிறார்.

இறிதியில் இவ்வாறு முடிக்கிறார்..

தொலையாத தூரம் கண்முன்னே விரிந்து கிடக்கிறது. என்னைத் தேடிக் கண்டடையும் முயற்சியைத் தொடர்கிறேன். அதோடு, ஜூலியா தன் வாழ்வின் பொருளைக் கண்டடையவும் நான் துணை நிற்கவேண்டும். காலமென்னும் வர்மக் கலைஞன் அவளுக்கு இன்னும் என்னென்ன விதித்திருக்கிறானோ, அறியேன். அவளது பசுமையான நினைவுகளில் அசைபோட்டு அனுபவிக்கச் சில நல்ல அனுபவங்களையாவது அவளுக்குத் தந்துவிட வேண்டும். எவ்வளவு சீக்கிரமாய் முடியுமோ, அவ்வளவு.

#ரசித்தவை

*சில நம்பிக்கைகள் எவ்வளவு அழகானவை

*தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, நம்பிக்கையான நட்பிடம் ஒரு சுமையை இறக்கி வைத்த நிவாரணம் கிடைத்தது.

*மூளையில் சுரக்கும் நாளமில்லாச் சுரப்புகளில் ஒன்று டோப்பமைன். நாளமில்லாச் சுரப்புகளின் தனித்தன்மை என்பது, அவற்றின் உற்பத்தியிலும் செயல் இலக்கிலும் வெளிப்படும் துல்லியம். மனித உடலின் இயல்பான இயக்கத்துக்கு இச்சுரப்புகள் இன்றியமையாதவை. டோப்பமைன் சுரப்பின் அளவு குறைந்துபோனால் பார்க்கின்ஸன் கோளாறு உண்டாகிறது.

*கேட்பவனுக்கு இது வெறும் செய்தி; அனுபவிப்பவனுக்கு அல்ல

*சாதித்துவிட்டோம் என்கிற நினைப்பே பல சமயங்களில் நம் பார்வையை மறைத்துவிடுகிறது. 

*இறப்புக்கும் இருப்புக்கும் இடையில் சிறுசிறு தழுவலும் நழுவலும். வாழ்க்கை நெடுக சிறுசிறு விபத்துகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதும், ஒவ்வொன்றிலும் எப்படியோ பெரிய இழப்புகள் இல்லாமல் தப்பித்துக் கொள்வதும் தற்செயலாய்த் தோன்றவில்லை. 

"*மனம் கழிவிரக்கத்தால் துடித்துத் திக்கற்று நின்றது.

*நரை தோன்றுமுன்னே உத்வேகம் கரைந்துவிடுகிறது, எதிலும் சீக்கிரமாய்ச் சலிப்புத் தட்டிவிடுகிறது; காலாவதியான வீசாவை வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாய்த் தங்கியிருப்பது போல

*துயரம் எனக்குத் தந்துசென்ற தங்கக் கோப்பை மறதி. 

*உடல் எதார்த்த உலகத்தை எதிர்கொள்ளும் நேரத்தில் மனம் மற்றோர் உலகத்தில் உலவிக் கொண்டிருக்கும் விசித்திர நிலை அது. மனித வாழ்வு தீர்மானங்களின் தொகுப்பு.

*கவலைகளின் மொத்த உருவமாய்த் தெரிகிறேன். கவலைகளும் பயங்களுமே என் முடிவுகளைக் கட்டுப்படுத்துகின்றன. சொல்லப்போனால், வாழ்க்கை நெடுக அவைதான் என்னை வழிநடத்தி வந்திருக்கின்றன.

*வாழ்வு தேடி ஓடியது ஒரு காலம். பிறகு கிடைத்த வாழ்க்கையைக் காத்துக் கொள்வதற்கு ஓடினேன்.

*நினைவுகளின் சுமையிலிருந்து விடுபட மனிதனின் மனம் போதைப் பொருட்களை நாடுகிறது. நாளையைப் பற்றிய பயங்கள் வலுப்பெற்று, சமயங்களில் உயிரை மாய்த்துக் கொள்ளவும் தூண்டுகிறது

*வாழ்க்கையில் என்னதான் மிச்சம்? கொஞ்சம் சுமை, அந்தச் சுமையின் சுகம்- அவ்வளவும்தான்

*மனிதர்கள் இழப்பின் துக்கத்தை வெளிப்படுத்தியே தீர வேண்டும்; இயல்பு வாழ்க்கைக்கு மீள்வதற்கு அது தேவை.

*நிகழ் துயரம் ஒன்றை நெஞ்சில் சுமந்து நடப்பவனின் மனம் புதிய துயரத்துக்குப் பல விதங்களில் பிரதிவினை ஆற்றும். என் நிலைமை அதுதான். 

*“துயரம் பகாசுர வலிமை வாய்ந்தது. இரையை எதிர்நோக்கிப் புதரில் ஒளிந்திருக்கும் பசித்த சிறுத்தை போல, எதிர்பாராத தருணத்தில் அது உங்களை அடித்து வீழ்த்திவிடப் பார்க்கும்; மிகுந்த எச்சரிக்கையுடன் முன்னோக்கி நகருங்கள் தோழர்…”

*மனநல மாற்றுத்திறனாளி அக்கறையாளனாக நான் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் பாதிக்கப்பட்டவரின் புறச்சூழலைப் பராமரிப்பது.

*கடலைப் போலவே, மந்தணங்களின் சேகரமான மனம், சிதைவுறும்போது கடலின் ஆக்ரோஷத்தோடு சில சமயங்களில் தன்னை வெளிப்படுத்துகிறது.

நாவலின் பெரும்பலம் வார்த்தைகள். புத்தகம்.முழுக்க அடிக்கோடிட்டு ரூல்ட் நோட் போல ஆகிவிட்டது. தத்துவார்த்த வார்த்தைகளை உளவியல் ரீதியாக விளக்கியுள்ளார்.
ஒரே ஒரு ஒன்லைனரில் நாவல் முழுக்க அயர்வின்றி சொல்லாற்றலால் கட்டிப் போட்டுளார்.

ஒரு பத்து நாளாகவே நானும் ஜீலியுடனும் பேராசிருயருடனும் இருந்த உணர்வு.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

புத்தகம்-8


Reading_Marathon2025
#25RM055

Book No:8/100+
Pages:-528

அவள்
-லா.ச ராமாமிர்தம்

பன்னிரண்டாம் வகுப்பு படித்த முடித்தவுடன் நூலகத்துக்கு முதன்முறையாக நுழைந்தபோது கண்ணில் பட்டது தன் லாசரா அவர்களின் புத்தகம்.
 முதல் இரண்டு, மூன்று பக்கங்கள் படித்தவுடன் அவரின் எழுத்து நடை எனக்கு பிடிபடவில்லை, வைத்து விட்டேன். இருப்பினும் மீண்டும் முயன்று பார்க்கலாம் என்று படித்த போது தான் அந்த சொற்களின் லாவகம் சொற்களின் அடியாளத்தில் வரும் அந்த அர்த்தங்களின் தரிசனம் எனக்கு கிடைத்தது. அதன் பின் எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் லா.ச.ரா அவர்களின் எழுத்தினை படிக்க ஆரம்பித்து விடுவேன். மலையாள படங்களைப் போல பொறுமையாக நகரும் அவருடைய எழுத்து நடையில் உள்ளார்ந்த நோக்கினால் ஒரு தெய்வீகத்தின் தரிசனம் கிடைக்கும். இந்த புத்தகத்தில் பெண்மையை உயர்வு செய்யும் விதத்தில் அவருடைய அனுபவங்களை நாவலாக்கி கொடுத்திருப்பார்.
அனுபவங்களின் நீட்சியில் ஒரு பெரிய வாழ்க்கை கதையாக படர்ந்துள்ளது

லா.ச.ராமாமிருதம் எழுதிய 'அவள்' என்ற தனித்துவமான நாவல்.பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்களைக் மையமாகக் கொண்டு, அவர்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றை மிக நுட்பமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்துள்ளார்.
 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்புகளாகவே வெளிவந்துள்ளன.

பேத்தியின் வருகைக்காக காத்திருக்கும் தாத்தா அவர்கள் வந்தபின் நடக்கும் பாசம் ஆகியவை சொர்க்கவாசல் என்ற முதல் பகுதியில் சிறுகதை போல் சொல்லி இருப்பார். அம்மாவின் உணர்வுகளை மகன் சொல்வதாக இரண்டாவதாக பகுதி அமைந்துள்ளது.ஒரு இடத்தில் இப்படி எழுதுகிறார் "ஆம் நினைத்துப் பார்ப்பது என்பது சுருதி மீட்டல் தானே. சிந்தனையின் இசைவில், சிந்திக்கும் விஷயங்கள். அவைகளின் சூட்டின் அவசரமும் ஆத்திரமும் பின்னோக்கில் தணிந்து தன் இடத்தில் விழுந்து அமைதி பெற்று விடுகின்றன" இதில் அம்மா அவளைப் பற்றி நான் எண்ணும்போதெல்லாம் அவளை எண்ணாத நாட்களே இல்லை என்கிறார்.

தனக்கு பிறந்தநாள் பரிசாக தன்னுடைய குலதெய்வத்தின் புகைப்படத்தை நண்பர் அனுப்பி இருந்தார் .அதை பார்க்கும் போதெல்லாம் அம்மாவின் நினைவு. அவர் எப்போது சாமி கும்பிடுவார்.. வேண்டுதல் இல்லாமல் வெறுமனே பார்த்து இருப்பது சாமியே நிற்பது போல இருக்கும் என்று தனது நினைவலைகளை பகிர்ந்து இருப்பார்.

மகனின் காதல் வாழ்க்கையை பற்றி சொல்லும் போது கவிதை உடன் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் பெற்றோருடையது

காதல் என்னும் புரையோட்டம் 
காதல் எனும் துரோக நதி ஆனால் ஜீவநதி 
காதல் எனும் வெண்ணீர் வீழ்ச்சி 
அதன் தழும்பில் இருந்து மீள முடியாது 

 தன்னை அலசிப் பார்த்துக் கொள்கிறான். மனதை சாட்டையில் அடித்து கேட்கிறான். மனம் மருளுகிறது. உடலின் வேட்கை அன்றி இது மனம் துணைக்கு தவிக்கிறது. ஒரு பாதி குருதி சொட்ட தனிமையின் ஏக்கத்தில் நிற்கிறேன் என்று காதல் உணர்வினை சொல்லி மனதுக்குப் பிடித்தவளை வீட்டுக்கு அழைத்து வருகிறான் மது. அப்போது பெற்றோர் அவனை அவன் உணர்வுகளை மதித்து ஏற்றுக் கொள்கிறார்கள். இப்போது காலில் விழும் மகனை தூக்கி விட்டு அழுகிறார். இது அழுகை இல்லை என் அழுக்குகள் கழுவப்பட்டு துல்லியமாகிக் கொண்டிருக்கின்றன என்கிறார் அப்பா. என்ன ஒரு கவித்துவமான முடிவு.

 இவரது சிறுகதைகளில், பெண் கதாபாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களின் உள் உலகத்தை ஆழமாக ஆராயும் விதத்தில் கதைகள் அமைந்திருக்கும்.அவள்' என்ற தனிப்பட்ட பெயரை வைத்து ஒரு நாவல் எழுதவில்லை என்றாலும், அவரது படைப்புகளில் ஒவ்வொரு பெண் கதாபாத்திரமும் ஒரு தனி 'அவள்' என்றே அடையாளம் காணப்படுவார்கள்.

லா.ச.ரா.வின் பெண் கதாபாத்திரங்கள் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான பண்புகளையும், வாழ்க்கை அனுபவங்களையும் கொண்டிருப்பார்கள்.
பெண் கதாபாத்திரங்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுவார்கள். அவர்களின் மனதில் நிகழும் சிக்கலான உணர்வுகளை அவர் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் சமூகம் மீது பெரும் பொறுப்பை உணர்பவர்களாக சித்தரிக்கப்படுவார்கள்.

பெண்களை எப்போதும் under estimate செய்யும் கணவன் அதை உடைக்கும் விதமாக கிராமத்து பெண்ணான அனு..தன்னுடைய வார்த்தையை ஒரு இடத்தில் உதிக்கிறார். மனுஷன் ஒற்றுமை வேற்றுமை என்கிறோமே ஆனால் உண்மையில் இரண்டுக்கும் என்ன பாரோமீட்டர் என கேட்கிறார் கணவன். மனம் என்ற ஒன்று இருக்கிறது. அதன் ஓட்டம் என்ற ஒன்று இருக்கிறது. அந்த ஓட்டத்தின் படு ஆழத்தின் அந்தகாரத்தில் இருந்து எழுந்த களிப்புகளின் வெளித்தெறிந்த மட்டம் தானே நாம் போட்டுக் கொள்ளும் சண்டைகள் சமாதானங்கள் பூச்சிக்கள் மீண்டும் வெடிப்புகள் என்கிற மேலோட்டின் வித்தியாசங்கள் என்கிறார். இப்படி சொன்னவுடன் அவளின் கணவன் கிராமத்து பெண்ணாலே ஜட்டி பானை ஜெயிக்கத்தான் இஷ்டம் என்று சொல்லியவள் இப்போது இப்படியா என்று பெருமூச்சு விடுகிறான் கணவன்.

*புத்தியின் வளர்ச்சி இன்றியமையாத, ஓயாத கேள்விகள், சிந்தனையின் ஓயாத உறுத்தல். இந்த கேள்விகளுக்கு பதில் தேடலின் அடிப்படைக்கு ஆரம்ப அனுமானம் தான் தெய்வம்

*தெய்வம் இருக்கிறதோ இல்லையோ தெய்வீகம் நிச்சயம் உண்டு. தெய்வீகம் ஒரு அனுபவம். பிறவியின் உரிமை. ஆனால் அது எந்த சமயத்தில் எப்படி நேரம் இன்று முன்கூட்டி அறிய முடியாதது.

*சிந்திக்க சிந்திக்க அந்த அனுமான மண்டலம் அச்சத்தை தான் தருகிறது. அங்கே ஒரு வெறிச் இருக்கும் என்று நினைக்கிறேன்.

*வேடிக்கை பார். தெளிவு அவ்வப்போது கிடைப்பது போல் காட்டினாலும், உறுதிப்படுத்த உன்னையே அணுக வேண்டி இருக்கிறது. தெளிவிலிருந்து தோன்றும் புது மூட்டங்களில் புதைந்து வெந்து கொண்டிருக்கிறேன். தவம் என்பது இதுதானோ?

*உயிருடன் இருப்பது ஒரு நிலை. உயிரோடு இருக்கிறேன் என்று உணர்ந்து வாழ்வது வேறு நிலை.

*இப்போது ஒரு தனிமை இருக்கிறது. இது உணர்வு பெற்றதும் விளைவு. அதனை நான் அறிகிறேன்.

வாசிப்பின் மனநிலை மெலிதானதாக எல்லா இடங்களும் ஒரு தத்துவ வார்த்தைகளின் பின்னே பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். அன்றாட வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட தத்துவ வார்த்தைகளை உதிர்த்து வாழ்வின் எதார்த்தத்தை தனது வார்த்தைகளின் வழியே தாயம் உருட்டுவது போல் உருட்டி விளையாடி இருப்பார். இவரின் நேரடி அனுபவங்கள் நமக்கு வாழ்வு எல்லைகளை எளிதாக காட்டியிருப்பவை. கடின வார்த்தைகளுக்கும் புரிந்துணர்வை தனது அடுத்தடுத்த வார்த்தைகளின் வழியே விளக்கி இருப்பது சிறப்பு.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 17 January 2025

அருள் மெர்வின்

விரகறி பொருந

தமிழில் என்னை மீண்டும் மீண்டும் ஆச்சரியப்படுத்தும் விஷயம் இதுதான். சினிமாப்படத் தலைப்புகளை வைத்துகூட சங்க இலக்கியங்களைப் புரிந்து கொள்ளலாம். சங்க காலத் தமிழுக்கும் இப்போதைய தமிழுக்கும் நூல் அறுபடாத தொடர்பு உள்ளது. நாம் பெரும்பாலும் இழந்திருப்பது அந்தகாலச் சொற்களைதான் (vocabulary). உதாரணமாக, ‘விரகறி பொருந’  என்ற சொற்றொடர். பொருநராற்றுப்படையில் வருவது. எடுத்த எடுப்பில் ஏதோ ஆப்பிரிக்க வார்த்தைகள் போல இருக்கும். 

‘துப்பறிவாளன்’ விஷால் படம். ‘அறிவாளி’ நான் அந்த காலத்தில் டிடியில் பார்த்த சிவாஜி படம். இந்த ‘வாளன்’, ‘வாளி’ என்று முடியும் தமிழ் வார்த்தைகள் ஒருவரின் நிபுணத்துவத்தை (expertise) குறிக்கும் வார்த்தைகள் என்பதை உணர்ந்து கொள்ள X-தளத்தில் ஒரு ஃபாலோவரை வைத்துக்கொண்டு பின்னூட்டம் இடுபவர்கள் அளவு மூளையே போதுமானது. அந்த காலத்தில் வாள் வீசுவதில் சிறந்தவர்களை ‘வாளி’ அல்லது ‘வாளன்’ என்றார்கள். பரிபாடலில் உதாரணங்கள் உள்ளன. பிற்காலத்தில் எதிலும் சிறந்ததைச் செய்பவர்களுக்கு அது ஒட்டிக்கொண்டது. அறிவில் சிறந்தவன் அறிவாளி. துப்பறிவதில் சிறந்தவன் துப்பறிவாளன். 

நான் இங்கே எழுதவந்தது அதற்கு முன்னே வந்த ‘அறி’ என்ற சொல். துப்பு+’அறி’+வாளன். ‘அறி’ என்றால் என்ன அர்த்தம் என்று விளக்க அவசியமில்லை. விளக்கும் அளவு ‘அறி’வுமில்லை.

விரகு+அறி+பொருந - நமக்கு ‘விரகு’க்கும் அர்த்தம் தெரியாது, ‘பொருந’க்கும் அர்த்தம் தெரியாது. 

திரைப்படத்தலைப்புகளில்  ‘தலைவர்’ அல்லது ‘தலைவன்’ என்பதை ‘தலைவா’ என்று இழுத்தார்கள். படையப்பனை படையப்பா, வீரனை வீரா என்றெல்லாம் இழுத்தார்கள். சங்க காலத்திலும் தொழிற்பெயர்களை இப்படி இழுத்திருக்கிறார்கள். பெரும்பாலும், தளை தட்டாமல் இருக்க அல்லது அப்படியொரு பழக்கமும் அந்த காலத்தில் இருந்திருக்கலாம். பொருநனை ‘பொருந’ என்று கூப்பிட்டார்கள், அல்லது இழுத்தார்கள். அந்த காலத்தில் சொல்லவந்ததை துணைக்கால் போட்டு முட்டுக்கொடுத்து முடிப்பது போன்ற வேலையெல்லாம் கிடையாது. தேவையும் அல்ல. ‘பொருந’ என்று பாகவதர் போல இழுத்துப் பாருங்கள். ‘பொருநா’ என்றே படையப்பா போல முடியும். 

யார் இந்த பொருநன்? சிங்காரவேலன் கமல் போல எல்லா வாத்தியமும் வாசிப்பவர். பொருநர் பற்றிய ஆராய்ச்சியை செய்தவர்கள், செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதை தமிழ் வரலாற்று அறிஞர்களிடம் விட்டுவிடுவோம்.

‘விரகு’ என்றால் knack. பிக்பாஸில் ஆளாளுக்கு ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார்கள், ஸ்டாராடஜி வைத்திருக்கிறார்கள் என்று சொல்வதைக் குறிக்கும் வார்த்தை. தமிழில் வழக்கொழிந்துவிட்ட வார்த்தை. ‘தந்திரம்’ என்றும் அர்த்தம் சொல்லலாம். 

இப்போது சொல்லிப்பாருங்கள் - ‘விரகறி பொருந’!

தந்திரம் அறிந்த பொருநனே!

சங்கத் தமிழ் அச்சு இயந்திரத்தில் உள்ள அச்சு போல. அதில் பழைய வார்த்தைகளுக்குப் பதிலாக இன்று புழங்கும் வார்த்தைகளைப் போட்டால் பல செய்யுள்கள் சட்டெனப் புரிந்துவிடும், பெரும்பாலும். 

பொறுமை இருந்தால் பொருநராற்றுப்படையை வாசித்துப்பாருங்கள். சங்க இலக்கியத்தில் இவ்வளவு நகைச்சுவை உணர்வா என்று வியந்து போவீர்கள். 

தமிழ் நாட்டில் அந்தக் காலத்தில் விழாக்களுக்குப் பஞ்சமில்லை. ஊர் ஊருக்கு ஒரு விழா எடுத்திருக்கிறார்கள். சாப்பாடு, சரக்கு எல்லாம் ஃப்ரீ. இதை என்ஜாய் பண்ணவே வாத்தியங்களைத் தூக்கிக் கொண்டு பலபேர் க்ரூப் க்ரூப்பாகச் சுற்றியிருக்கிறார்கள். எங்கே ஒரே ஊரில் டேரா போட்டுவிட்டால் சாப்பாட்டுக்கு அலைபவன் என்று நினைத்து விடுவார்களோ என்று எண்ணி, ஒவ்வொரு டைமுக்கும் ஒவ்வொரு ஊராக மாறிக்கொண்டிருந்தான் ஒரு தந்திரக்கார வாத்தியக்காரன், அதாவது விரகறி பொருநன்.

அவனிடம், “அப்படியெல்லாம் அலைய வேண்டாம். நான் சொல்லும் இடத்தில் டேரா போடு. நீயே போறேன் என்று சொன்னாலும் தடுத்து நிறுத்தி சாப்பாடும், சரக்கும் கொடுக்கும் ஒரு மகராசன் இருக்கான்” என்று ட்ராவல் டிப்ஸ் கொடுக்கும் பாடல்தான் பொருநராற்றுப்படை.

“விருந்து வீட்டுக்குப் போன இடத்தில், நிலத்தை ஏர் உழுவது போல பற்களால் மட்டன் கறியை உழுதோம். அதன்பின் வயிறு முட்ட சரக்கடித்தோம். Hang over தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. பல மாதம் இப்படியே உண்டு குடித்து போரடித்துப் புறப்பட்டோம். ‘அதற்குள் கிளம்பி விட்டீர்களா’ என்று எங்களுக்கு யானையும், தேரும் கொடுத்து அனுப்பினான் அந்த மகராசன்”, என்கிறது அந்த பாடல். யார் இந்த மகராசன்?

இன்னும் பலப்பல சுவாரசியங்கள் உள்ள பாடல் அது. தமிழின் மிகப் பழமையான பாடல் என கருதப்படுவது (சமஸ்கிருத கலப்பு ஒரு சில வார்த்தைகளே). ஒரு பெண் புலவர் எழுதியது. ‘அல்குல்’-ஐ ஓர் அழகான உவமையைச் சொல்லி உபயோகித்த பாடல். இன்று அந்த உவமையைச் சொன்னால் ஆபாசம் என்று கேஸ் போட்டுவிடும் உன்னத நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.

சரி, மேலும் டென்ஷனாகாமல் முடிவுரைக்கு வந்துவிடலாம். 

Hang over-க்கு சங்கத் தமிழில் உள்ள வார்த்தை, ‘அனந்தர் நடுக்கம்’. மேற்குறிப்பிட்ட பாடலில் வரும் அந்த மகராசன் யாரென்றால் கல்லணை கட்டிய கரிகாலன்.

நாம் பலவீனமாக இருக்கும் ஏரியாக்களில் எல்லாம் நம்மை வலுப்படுத்த முயல்வது நல்லது அல்லஎல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு சமமாக இருந்தால் நாம் சராசரிஜீனியஸ்கள் ஒரே ஒரு விசயத்தில் மற்ற அனைவரை விட புத்திசாலிகளாக இருப்பார்கள். மற்ற அனைத்து விசயங்களிலும் சராசரியை விட மோசமாக தான் இருப்பார்கள்.தாம்ஸ் ஆல்வா எடிசனின் பிரச்சனை ஞாபகமறதி. அவர் இறங்கவேண்டிய ரயில்வே ஸ்டேஷன் பெயரையே எழுதிவைத்துக்கொண்டு போகாவிட்டால் மறந்துவிடுவார். இதனால் கேலி, கிண்டலுக்கு ஆளானர்ஆனால் அவரது மூளை பெரிய விசயங்களை நினைவில் கொள்ளவேண்டி இருந்ததால், ஸ்டேஷன் பெயர் மாதிரியான சின்ன விசயங்களை அதனால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லைதன் ஞாபகமறதியை சரி செய்ய அவர் முனைந்திருந்தால், தன் ஜீனியஸ் மூளையின் சில செல்களை அதற்கு ஒதுக்கவேன்டி இருக்கும். அவர் அதற்கு தயாரில்லைபலவீனம் என நாம் நினைக்கும் பல விசயங்கள் பலவீனம் அல்ல, நம் பலத்திற்கு நாம் கொடுக்கும் விலை அது~ நியாண்டர் செல்வன்

நான் ஒரு கச்சேரிக்குப் போயிருந்தேன் சார். சிமிண்டுத் தரை போட்ட அற்புதமான ஆடிட்டோரியம். ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் தோடி ராகத்தில் மிகச் சிறப்பான வித்துவான். அப்பேர்ப்பட்ட மேதை தோடிராகத்தை வாசிச்சிட்டிருக்கும் போது உச்சக்கட்டத்தைத் தொடப் போறாரு. எல்லோரும் சீட் நுனிக்கு வந்து உட்கார்ந்துக்கிட்டிருக்காங்க. கை தட்டுறதுக்கு இரண்டு கையையும் விரிச்சு வைச்சிட்டிருக்காங்க. ஒண்ணு சேரணும்.அந்த நேரத்தில் பின் வரிசையில் யாரோ ஒருத்தரு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து டங்... என்ற சத்தத்தோட கீழ போட்டாரு. தன்னுடையதில்லைன்னு தெரிஞ்ச முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவன் கூட எல்லோரும் யாரது காசுன்னு பார்க்கிறான். இப்போ எந்த நாதம் பெரிசுங்கிறீங்க? காசுடைய நாதமா? இல்லே சங்கீதத்தினுடைய நாதமா? "-சிட்னியிலிருந்து ஒலிபரப்பப்படும் ' தமிழ் முழக்கம் ' வானொலி நிகழ்ச்சிக்கு நாகேஷ் அளித்த பேட்டியிலிருந்து .

புத்தகம்-7



#Reading_Marathon2025
#25RM055

Book No:7/100+
Pages:-227

காதற்கள்
-செளம்யா

அரட்டை கேர்ள் எனும் சௌமியா அவர்கள் 2012 ஆம் ஆண்டு முதல் டுவிட்டரில் அவருடைய எழுத்தை வாசித்து வருகிறேன். மிக நுட்பமான அவருடைய பதிவும் ,தமிழின் மொழி விளையாட்டும் அவருக்கு கை வந்த கலையாக இருக்கிறது. இந்த குறு நாவல்கள் இரண்டும் அவருடைய முகநூலில் வெளிவந்து அன்றாடம் பலரின் பாராட்டையும் பெற்றவை.

ஆங்கிலம் பேசுவோரை வியந்து பார்ப்பது அவர் ஆங்கிலம் பேசுவதால் அல்ல.. நமக்குத் தெரிந்த அத்தனை சிறிய வார்த்தைகளையும் எவ்வாறு அழகாய் கோர்த்து பேசுகிறார் என வியப்பாய் இருக்கும். அதே போல் தான் இந் நூலாசிரியரும் கேட்ட கதை தெரிந்த வார்த்தைகள் எவ்வாறு நுட்பமாய் கோர்த்து நமக்கு அழகிய மாலையை தருகிறார் என்பதும் இவருடைய எழுத்தை பார்த்து எப்போதும் வியப்பது ஆகும்.
பேசாப் பொருளை பேசத் துணிந்தேன் எனும் பொருளில் இவர் தொட்டிருக்கும் கதைக்களம் சற்று பிசகினாலும் விமர்சனத்திறகு உள்ளாக நேரிடலாம். ஆனாலும் தன் எழுத்து வன்மையால்
அதனை சமப்படுத்தி ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார்.

#கூர் ஏரி

காதல் என்பது எளிதான உணர்ச்சி மட்டுமல்ல, அது ஒரு ஒழுக்கமும் பொறுப்பும் கலந்த உரிமை என்பதை இந் நாவல் பேசுகிறது. டீக்கடை நடத்தும் ராமனின் மனைவி சரஸ்வதி அவனைவிட 15 வயது இளையவர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சந்தேக புத்தி உள்ள ராமன், மனைவியை சந்தேகப்படுவதால் அவளும் கணவரின் நிலை அறிந்து கவனமுடன் இருக்கிறார்.அவர்களின் வாழ்வில் சரஸ்வதி விட ஆறு வயது இளைய மெக்கானிக் ஷாப் இளைஞன் புஷ்பராஜ் சரஸ்வதியின் மீது காதல் கொள்கிறான். இது வரம்பு மீறிய காதலை நியாயப்படுத்தும் முயற்சி அல்ல, அவர்களை அறியும் முயற்சியே என்பதை ஆசிரியர் முன்னுரையிலேயே சொல்லி விடுவதால் நாமும் கதையில் ஒன்றி பயணிக்க முடிகிறது.

புஷ்பராஜின் காதலை ஏற்றும் ஏற்க முடியாமலும் சரஸ்வதி தவிக்கிறாள். புஷ்பராஜ் எதற்கும் துணிந்தவனாக மாறிவிடுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்த குறுநாவலின் கதை. 14 பகுதிக்குள் இந்த குறுநாவல் வேகமாய் தன்னுடைய வார்த்தை ஜாலத்தை காட்டிக் கொண்டு பறக்கிறது.

கதாபாத்திரங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளில் காதலின் வலிமை, பிரிவின் வேதனை, மற்றும் மனதின் நுட்பமான போராட்டங்கள் செழுமையாக அலசுகிறது. இறுதியில் வரும் ட்விஸ்ட் அடுத்த கதைக்கான ஆரம்பமாகவும் அமைகிறது.

#காதற்கள்

கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு வேலை தேடி வரும் இந்திராணியின் அறிமுகத்திலிருந்து இந்த குறு நாவல் துவங்குகிறது. மறுநாள் வந்து பார் என மேலாளர் சொன்னவுடன் வீட்டிற்கு போகிறாள். தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை எண்ணி பார்க்கிறாள். இளமை முதலே வேலைக்குச் செல்லும் இந்திராணி திருமணமானவுடன் வேலைக்கே செல்லாமல் இல்லத்தரசியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவளின் ஆசை. அவள் பணி செய்யும் துணிக்கடையில் அறிமுகமாகும் அழகப்பனுடன் அவளுக்கு சூழ்நிலையால் காதல் மலர்கிறது என்பதை அழகாக அந்த இடத்தில் சொல்லி இருப்பார். 

அதன் பிறகு காதல் திருமணம் செய்து கொண்டு 14 ஆண்டுகள் யாழினி என்னும் மகளுடன் இயல்பாக செல்லும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அந்த திருப்பத்தினால் இந்திராணிக்கு என்ன ஆனது இந்திராணி எவ்வாறு குடும்பத்தை நடத்துகிறாள், இந்திராணியின் மனதில் ஏற்படும் சஞ்சலம் என்ன, அதற்கு தீர்வு என்ன என்பதுதான் காதற்கள் கதை.

இந்நாவலில் யாழினி சந்தோஷ் இரண்டு கதாபாத்திரங்களும் இந்திராணிக்கு பக்க பலமாக இருக்கின்றன. அவர்களின் அன்பின் வழியே இந்திராணி உணர்வது பெரும் வாழ்க்கை தரிசனமாக ஆசிரியர் கூறுகிறார். 'எங்கேயும் தேங்காதிங்க எனும் சந்தோஷம் குரல் காதில் ஒலித்த போது, கற்றுத் தருவது காதல் மட்டுமல்ல காதலனும் தான்'என நினைத்து சிரிக்கும் இந்திராணி.. புதிய வாழ்க்கை புதிய அனுபவம் அவள் கண்களில் பிரகாசிப்பதை நாம் எழுத்துக்களின் மூலம் காண முடிகிறது.

எழுத்தில் விவரிக்கும்..மொழி மிக நேர்த்தியானது. குறிப்பாக காதல் பற்றிய உள்ளார்ந்த கவிதைமிகு வரிகள், உரையாடல்கள் வாசகர்களின் மனதில் நிற்கும் படி உள்ளது.

*ஒவ்வொரு முறை மனம் வெறுக்கும் போதும் அவன் தன்னிடம் அன்பாய் இருந்த தருணங்களை வலுக்கட்டாயமாக நினைவுக்கு கொணர்ந்து தேற்றிக் கொள்வாள்.

*ஒருமைல  கூப்பிடறதுதான் நெருக்கத்தோட முதல் படி.

*என்ன திடீர்னு இந்த பக்கம் காத்து வீசுது?
உன் பக்கமாக இருந்துடனும்னு தான்

*தனக்கான பெண்ணின் மகிழ்ச்சிக்கு காரணம் தெரியவில்லை என்றாலோ தான் காரணம் இல்லை என்றாலோ ஆண் அஞ்சுகிறான்.

*அழுகையை விட சிறந்த ஆறுதல் எதுவும் இல்லை

காதல் என்பது ஒரு தனிநபரின் உரிமை என்பதையும், அதற்குள் இருக்கும் சமூக தடைகள் மற்றும் சவால்களையும் புத்தகம் கவனமாக விவரிக்கிறது.காதல், துயரம், மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளை மிக ஆழமாக கையாளும் விதம் வாசகர்களை புனைவுலகத்தில் மூழ்கடிக்கிறது.

 காதலின் மிக நுணுக்கமான தருணங்களையும், வாழ்க்கையின் சிக்கலான உண்மைகளையும் எளிமையாகவும் அழகாகவும் விவரிக்கிறார்.சில இடங்களில் கதை மெதுவாக நகர்ந்தாலும், அதன் மனமூட்டம் அனைத்தையும் சரி செய்கிறது.

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday, 15 January 2025

புத்தகம் -6


#Reading_Marathon2025
#25RM055

Book No:6/100+
Pages:-123

நூலகாலஜி
-ஆயிஷா நடராஜன்

புத்தகத் திருவிழா மாதம் மட்டும் புத்தகங்களை கொண்டாடிவிட்டு விட்டுவிடுகிறோம் அல்லது வாசிப்பை குறைத்துக் கொள்கிறோம். ஒருவர் திறமட வாசிக்க வேண்டும் எனில் அவர் நூலகத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. 

ஏனெனில் நூலகத்தின் மூலம் தான் நல்ல புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் பழக்கம் வரும். அட்டையை பார்த்தோ ஆயில் பிரிண்ட் பார்த்தோ யாரேனும் ஒருவர் சொல்லியதை காதால் கேட்டோ புத்தகத்தை எடுத்து பயிற்சி செய்து பார்க்கலாம்.15 நாட்களுக்கு ஒரு முறை புத்தகத்தை மாற்றி கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை நம்மை வாசிக்கத் தூண்டிக்கொண்டே இருக்கும். மேலும் அச்சில் இல்லாத அல்லது மீண்டும் பதிப்பிக்காத புத்தகங்களும் அந்த ஞானக்கிடங்கில் தான் ஒளிந்துள்ளது. அந்த நூலகம் குறித்தும் உலகளாவிய நூலகம் குறித்து தான் இந்த புத்தகத்தில் ஆயிஷா நடராஜன் அவர்கள் எழுதியுள்ளார்.

நூலகம் ஒருவரை எவ்வாறு மாற்றும் என்பதற்கு உதாரணமாக ஓக் மாண்டினோ எனும் எழுத்தாளரை பற்றி குறிப்பிடுகிறார். இளம் வயதில் அமெரிக்க படையில் ராணுவத்தில் சேரும் இவர் ஜெர்மனியின் மீது போர் தொடுத்த போது ஜெர்மனி வீரர்களை சுட்டுக் கொண்டதை நினைத்து குறற உணர்வில் மனம் வருந்துகிறார்
 அது தற்கொலை எண்ணம் வரை செல்கிறது அந்த நேரத்தில் அருகிலுள்ள நூலகத்துக்குச் சென்று இதனை செய்து முடிக்க திட்டமிடுகிறார் அவர் அமர்ந்திருந்த மேசையில் இருந்த ஒரு புத்தகம்
‘நான் இறந்து போவதற்கு முன்… (Before I die) என்கிற அந்தப் புத்தகத் தலைப்பு அவரைக் கவர்ந்திழுத்தது. துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு புத்தகத்தைக் கையில் எடுத்தார். அந்தப் புத்தகத்தை எழுதியவர் கிளமெண்ட் ஸ்டோன். இந்த புத்தகம் அவரை எந்த விதத்தில் மாற்றியது என்பதை பற்றி தான் முதல் கட்டுரை துவங்குகிறது.

ஆலய நுழைவுப் போராட்டங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பெண்கள் படிப்பதற்காக நூலகத்துக்கு நுழைய போராட்டங்கள் நடத்திய வரலாறும் உள்ளது. சொல்லப்போனால் பெண்கள் நூலகத்துக்குள் நுழைய 500 ஆண்டுகள் தேவைப்பட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
சோவியத் நாட்டில் இருந்த நூலகங்களை பற்றி சிங்காரவேலர் பதிவு செய்ததையும் கூறியிருப்பார் அதில் வாசிப்பே கற்றல் என்று குரூப்ஸ்கயாவின் தீவிர இயக்கப்படி, 1924ல் தலைவர் லெனின் மறைவிற்குப் பிறகும் அயராது மேலும் தீவிரமடைந்த அவரது நூலகப் புரட்சி மூன்று லட்சம் நூலகர்களை கற்றல்- தேவதைகளாக சோவியத் முழுதும் பயிற்சி தந்து நியமித்து 1939 வரை தொடர்ந்தது.

காமிக் புத்தக உலகம்தான் இன்றைய சர்வதேச நூலகங்களின் ரத்த ஓட்டமாக பிரகடனப்படுத்தப்படுகிறது. காமிக்ஸ் புத்தகங்கள் நூலகங்களில் நுழைந்த வரலாறும் மக்களிடம் அது ஏற்படுத்திய அதிர்வு குறித்த கட்டுரை சுவாரசியமாக இருந்தது.

1915ல் டெஸ்லாவும் எடிசனும் இயற்பியல் நோபல் பரிசை பகிர்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டபோது பரிசைப் பெற உடனடியாக மறுப்பை வெளியிட்டார் டெஸ்லா. ஆனால் பிரான்ஸ், யுகோஸ்லேவியா உட்பட 17 நாடுகளின் உயரிய விருதுகள் பெற்றவர் அவர். தனது ஆய்வகங்கள் தீயிடப்பட்ட பிறகு கடும் வறுமையில் அடுத்தடுத்து விடுதிகளில் அறை எடுத்துத் தங்கிட... 1922 முதல் அவர் வாழ்வு அவரைப் பணித்தது. பசியும் பிணியும் வாட்டி எடுத்தன. அறிவியலுக்காக திருமணம்கூடசெய்து கொள்ளாமல் வாழ்ந்த டெஸ்லா இறுதிவரை இரண்டு பழக்கங்களை கைவிடவில்லை. பூங்காக்களில் புறாக்களுக்குத் தீனி போடுதல்... தேடித் தேடி நூலகங்களில் வாசிப்பு என்ன வரலாற்றுச் செய்தியும் இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடமாடும் நூலகம் கேள்விப்பட்டோம் ஆனால் நடக்கும் நூலகத்தை அறிவீர்கள் என்ற கேள்வியுடன் தொடங்கும் கட்டுரையில் போலன் சர்க்கார் அங்கத்தின் விடுதலையில் முக்கிய பங்கு வைத்த நட்சத்திரம் அவர் என்ன செய்தார் தெரியுமா? 

1970ல் சட்டென்று ஒருநாள் அவர் இரு தோள்களிலும் தோள்பைகளில் வங்க- விடுதலையின் எழுச்சி நூல்களை எடுத்துக்கொண்டு தனது நடைப்பயணங்களைத் தொடங்கினார். அவரிடம் அவரது நடையின்போது இருநூறு புத்தகங்கள் இருந்தன. ராஜ்ஷஷி மாகாணத்தின் முப்பத்தாறு கிராமங்களில், தானே நேரில் நடந்து சென்று மக்கள் வாசிக்க புத்தகங்களை அறிமுகம் செய்திட அவர் முடிவெடுத்தார். ஒரு நாளைக்கு நான்கு கிராமங்கள். முற்றிலுமாக 36 கிராமங்களை, தானே நேரில் நடந்து சென்று மக்கள வாசிக்க புத்தகங்களை அறிமுகம் செய்திட அவர் முடிவெடுத்தார். ஒரு நாளைக்கு 4கிராமங்கள். முற்றிலுமாக 36 கிராமங்களை தனது புத்தக நடைப்பயணத்தில் முடித்தபின் ஒன்பது நாட்கள் கழித்து மீண்டும் அதே கிராமத்திற்கு வருவார். ஊர் மக்கள் முதலில் அவரது நூல் – அறிமுகத்தைக் கேட்டார்கள். பிறகு தங்களது விருப்ப நூலை தேர்வு செய்வார்கள். ஒன்பது நாட்களில் மறுமுறை அவர் வரும்போது திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த நூலை பெற்றுக்கொள்ளலாம்.

*டார்வினின் உயிரினங்களின் தோற்றம் மற்றும் வெர்னாட்ஸ்கியின் ‘பயோஸ்பியர்’ நூலும் தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நாட்களில் அந்த இரண்டு புத்தகங்களுமே சிங்காரவேலரிடம் இருந்தது மட்டுமல்ல... மேலும் இரண்டு பிரதிகளை ‘எப்படியோ’ வரவழைத்து அவர் பெரியாருக்கு ஒரு செட் மற்றும்  வீரத்துறவி விவேகானந்தருக்கு ஒரு செட் (இருவரின் நூலையும்) வழங்கி வாசிப்பு ஓர் அரசியல் செயல்பாடு என்பதை செயலில் காட்டியதை வரலாறு பதிவுசெய்துள்ளார்.

*படகு நூலகங்கள் பற்றி நமக்குத் தமிழில் முதலில் எழுதியவர் தோழர் சிங்காரவேலர். மகா கவிசுப்பிரமணிய பாரதி நடத்திய 'யங்- இண்டியா' இதழ் பற்றி ஒரு தனிக்கட்டுரையில் குறிப்பிடும் அவர் அது ஆந்திராவில் விஜயவாடா படகு நூலகங்கள் வரை பிரபலமாக வாசிக்கப்படுகிறது என்று ஒரு வரி எழுதுகிறார். இக்கட்டுரை 1941ல் எழுதப்பட்டது.

இந்த புத்தகத்தின் மூலம் நூலகம் குறித்த உலகெங்கிலும் உள்ள வரலாற்றினை அறிய முடிகிறது.நூலகத்தை பயன்படுத்திய அறிஞர்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு உலகம் முழுவதும் நூலகம் குறித்த பல்வேறு தகவல்கள். இந்த சிறிய புத்தகத்தில் சிந்திக்கும் விதத்தில் அமைந்துள்ளது. நூலகம் நம் ஊரில் இருந்தாலும் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இன்று செல்போனுக்கு அடிமையான இளம் தலைமுறையை மடைமாற்றும் விதத்தில் நூலகத்தை பயன்படுத்துவது மிகச் சரியான தீர்வாக இருக்கும். ஏதேன்ஸ் நகரத்தில் முதலில் வந்தவை பள்ளிகள் அல்ல நூலகங்களே என்னும் செய்தியும் நமக்கு அறிய முடிகிறது. இன்று ஊடகத்தில் முன்வைக்கப்படும் புத்தகங்களை மட்டுமே வாங்கும் பழக்கத்தை நாம் கொண்டுள்ளோம். மாறாக புத்தகங்களை நாமே தேர்ந்தெடுக்கும் ரசனையை வளர்த்தெடுப்பதில் நூலகம் முக்கிய பங்கு வைக்கிறது. ஆகவே நூலகத்தில் நாம் உறுப்பினராகி வாசிப்பை மேம்படுத்துவோம் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Monday, 13 January 2025

புத்தகம்-5



Reading_Marathon2025
#25RM055

Book No:5/100+
Pages:-160

கைகாட்டி மரம்
-மினிமீன்ஸ்

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம்.குழந்தைகளை மையப்படுத்தி அவர்கள் வாசிக்கும் வகையில் இருந்தாலும் பெரியவர்களும் வாசிக்கும் வகையில் ஒரு பக்கத்தில் அமைந்த 107 கதைகள் உள்ளன. பாமரனுக்குச் சொன்னால் பண்டிதனும் புரிந்து கொள்வான் எனும் நோக்கில் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதைகளில் பெரியவர்களான நமக்கும் உணர்த்தும் பேருண்மைகள் இந்த கதைகளின் வாயிலாக எழுதப்பட்டுள்ளன. பொதுவாக கைகாட்டி மரம் என்பது ஊருக்குள் செல்லாது.. ஆனால் ஊருக்குள் செல்ல வழி காட்டும். அதே போல் இந்த கதைகளில் வரும் கருத்துகள் யாவும் அறம் சார்ந்த, உளவியல் சார்ந்த, நீதி சார்ந்த எளிமையான உண்மைகளை மனதில் பதியும்படி நமக்குச் செய்கிறது.

அரசனிடம் மந்திரியாய் இருந்த ஒருவர் தவறு செய்துவிட அவரை தண்டிக்கும் நோக்கில் நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் தூக்கி வீச ஆணையிட்டார். ஆனால் மந்திரி பத்து நாள் அவகாசம் கேட்டு அந்த நாயுடன் சகஜமாகி கொண்டார். தண்டனை நிறைவேற்றும் போது அந்த நாய்கள் மந்திரியை கடிக்க வில்லை. அரசனுக்கு உண்மையை புரிய வைக்க மந்திரி இதன் மூலம் முயல அரசரோ மந்திரியை முதலைகள் இருக்கும் குளத்தில் எறிய சொன்னார். நிர்வாகம் உன்னை தோக்கணும்னு முடிவு பண்ணினால் அதில் மாற்றம் இருக்காது கண்ணு என கார்ப்பரேட் உலகின் நிதர்சன வார்த்தைகளை நீதி கதைகளின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

ஒரு பக்கக் கதைகள் சுருக்கமானதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும். கதையின் திருப்பம் ஒரு சிறிய வார்த்தைகளிலும் வெளிப்படலாம். உண்மையின் மறுபக்கம் கதையில் வரும் சிறுவன்  தனது இரட்டை காலணிகளை தொலைத்து விட்டதால் அதில் ஒன்றை மட்டும் அணிந்து வந்தார்.. அவரைப் பார்த்த பெரியவர் ஏன் ஒன்றை மட்டும் அணிந்து இருக்கிறாய்? என்று கேட்டபோது என்னால் ஒரு காலணியை மட்டும் தான் கண்டுபிடிக்க முடிந்தது என்று சொன்னவுடன் ஒற்றை வார்த்தையில் ஒரு பெரிய உண்மை ஒளிந்திருப்பதை அறியலாம்.

சுருக்கமான தோரணமாய் குறுகியளவில் கதைகள் 20-20 விளையாட்டு போல சொல்லும் போது கதையின் மையமும் நீதியும் சரியான விதத்தில் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு பிரச்சினை வரும் போது நாம் ஒதுங்கினால், நம் அக்கறையின்மைக்கு நாமும் தான் ஏதோ ஒரு வழியில் பதில் சொல்ல வேண்டி வருகிறது என்பதை எலிபொறி கதை என் வாயிலாக சொல்கிறார்.

கன மழை பெய்யும் சமயம் ஐந்து பேர் சாலையில் நடந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மட்டும் நனையவில்லையே ஏன்? என்று கேட்டார். அதற்கான பதிலை புத்தகம் படித்து அறிந்து கொள்ளலாம். இந்த கோணத்தில் நாம் சிந்திக்கவில்லையே என்று
வலுப்படுத்தப்பட்ட மையக் கருத்தினை வைத்து வார்த்தை ஜாலத்தில் வலை பின்னி இருக்கிறார்.

எடுத்துக்கொண்ட தலைப்பில் ஒரே ஒரு முக்கிய விஷயம்.. 
கதையின் அடிப்படையில் கட்டமைத்து கருத்துகளை கதை நெடுக மறையாமல் தொடர்ந்து கொண்டே இருந்தால்தான் சுவாரசியம் குன்றாமல் இருக்கும். பல புத்தகங்கள் கதைகளை தற்காலத்துக்கு ஏற்ற வகையில் தன்னுடைய கருத்தினையும் சேர்த்துச் செல்லும் போது கதைகள் யாவும் புதிய வடிவத்தில் மிளிர்கின்றன.

சிறப்பான தொடக்கம் மற்றும் முடிவு
வாசகர்களை ஈர்க்கும் வகையில் கதை தொடங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் பெண் புத்தி கதையில் அடடே மசாலாவை ஏன் வாங்க விரும்புகிறீர்கள்?எனும் கேள்விக்கு சரியான பதில் சொல்பவருக்கு வைர நெக்லஸ் பரிசு என அறிவிக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண்மணி எழுதிய பதில் தான் சிறந்த பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நேர்மைக்கு பரிசு கொடுக்கிறார்கள். 
பெண்புத்தி முன்புத்தி என்பதற்கான பதில் அது.. பதில் புத்தகத்தில்.

முடிவு சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சிந்திக்கவைக்கும் விதத்திலும் அமைக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் நல்ல மனிதன் கதை.
இறப்பை பற்றிய இக்கதையில் இறுதியாக உண்மையில் இறப்பு என்பது உங்களைப் பற்றிய நினைவுகளை கடைசி மனிதன் மறப்பது தான். அதனால் இறந்த பின்னும் வாழ வேண்டும் எனில் நல்ல மனிதனாய் வாழுங்கள் என்று சொல்வதாக கதை முடிகிறது. 

ஒரு பக்கக் கதையில் இருக்கும் முக்கிய சவால் கடுமையான சொல் சிக்கனம். சொல்லவரும் கருத்தினை நீட்டி முழக்காமல் சுருக்கமாய் சொல்ல வேண்டும். புத்த மத கதையில் நீங்கள் எவ்வளவு காலம் வாழ விரும்புகிறீர்கள்? என புத்தரிடம் கேட்டபோது அவர் தயங்காமல் 80 வருடம் என்கிறார். சீடர்களில் ஒருவன் ஏன் ஆயிரம் வருடங்கள் கேட்கவில்லை என கேட்கும் போது.. ஆனந்தா நான் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் மக்கள் ஞானம் வளர்ப்பதை விட.. தங்கள் ஆயுளை எப்படி நீட்டிப்பது என்பதில் தான் அக்கறை காட்டுவார்கள் என்ற புத்தர் சொல்வதாக மினிமீன்ஸ் சொல்வது புத்தரே நேரில் வந்து சொல்வது போல் இருந்தது.

மிகத் தேவையான வார்த்தைகளே பயன்படுத்த வேண்டும் எனும் நோக்கில்.. 'கூட்டணி' கதையில் இறுதியில் "தொலைந்து போவதை பற்றி சிறுவர்கள் பேசும்போது, துணைக்கு ஒருவர் இருக்கும் போது நாம் ஒருபோதும் தொலைந்து போவதில்லை என்று தத்துவம் சொல்கிறார்.

விவரிப்புகள் மிகக் குறைவாகவும், அழுத்தமாகவும் இருக்க வேண்டும் என்னும் வகையில் 'கண்ணாடி' கதை தினசரி ஒருவர் கண்ணாடி பார்க்கிறார். ஏன் அழகை ரசிக்கவா? என்று கேட்டதற்கு ,அதில் ஒரு உருவம் எனக்கு தெரியும். அந்த உருவத்தில் எனக்கு கிடைத்த பெருமையை நான் பார்ப்பேன். இந்தப் பெருமையை தலையில் ஏற்றிக் கொண்டால் அடையப் போகும் வீழ்ச்சியையும் அதில் காண்பேன். ஆகவே இந்த உண்மையை புரிந்து கொண்டு நான் இயல்பு நிலைக்குத் திரும்புவேன் என்று சொல்வது மனதை தொடும் விதத்தில் இருந்தது. தினசரி கண்ணாடி பார்க்கும்போது நானும் இதையே கடைப்பிடிப்பேன்.

ஒரு சிறிய திருப்பம் அல்லது எதிர்பாராத முடிவு இருப்பது கதையை சுவாரஸ்யமாக்கும் என்னும் வார்த்தைகளுக்கு உயிர் விட்டும் வகையில் மகிழ்ச்சி எனும் கதையில் மனைவி எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார் என சொல்லி இருப்பார்.

படிப்பதற்கும் நினைவில் நிறைவதற்கும் எளிதானதாக "சாலச் சிறந்தது" கதையில் தெரிந்ததை பற்றி பேசுவதும், தெரியாததை பற்றி மௌனம் காப்பதும் தான் சாலச் சிறந்தது என்று முத்தாய்ப்பாய் சொல்லியிருந்தார்.

படிப்பவர்கள் உடனடியாகச் செரித்துக் கொள்ளும் விதமாக கதைகள் அமைந்திருக்கிறது.
சில நேரங்களில் ஒரு முக்கியக் கற்பனை அல்லது அனுபவத்தை மையமாகக் கொண்டிருக்கிறது.
இது போன்ற சிறப்புகளுடன் தனித்துவத்துவமாகவும்
படிப்பதற்கு இலகுவாகவும் புத்தகம் அமைந்துள்ளது. நல்ல வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. மேடையில் உரையாற்றவும் பயன்பட போகிறது. 

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

கடல் எல்லை-ஜீயோ டாமின்


கெடுவாய்ப்பாகப் பல நேரங்களில் நாம் விரும்புவதுபோல வரலாறு அமைவதில்லை. 

பொதுவாக, கடற்கரையிலிருந்து கடல் நோக்கிச் செல்லச் செல்ல சீராக கடலின் ஆழம் அதிகரித்துச் செல்வதாக நாம் கருதுகிறோம். உண்மையில் கடலலைகள் தாலாட்டும் நீரின் எல்லையிலிருந்து நிலத்தின் விளிம்பு பல கிலோமீட்டர்கள் உள்ளே தள்ளியிருக்கும். இதனை காண்டினென்டல் ஷெல்ப் (continental shelf) என்பார்கள்.  இந்த காண்டின்னென்டல் ஷெல்புக்கு அப்பால்தான் கடல் ஆழம் மிக அதிகமாக இருக்கும். இந்த காண்டினென்டல் சரிவு (continental slope) தொடங்கும் இடத்தையே புவியியல் ரீதியாக நிலத்தின் எல்லையாகக் கொள்ள முடியும்.  (விவரப்படம் பின்னூட்டத்தில்)

இவ்வாறு எடுத்துக்கொண்டால் நிலவியல்ரீதியில் இந்திய நிலப்பரப்பு இலங்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. ஆனால், அதற்கு அப்பால் continental slope தொடங்கிவிடுகிறது. அதாவது இலங்கையைத் தாண்டி எந்த கண்டமும் இப்போது கடலில் புதைந்து கிடக்கவில்லை. மனிதன் தோன்றிய சில இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பும்கூட அப்படியான நிலப்பகுதி எதுவும் இருந்ததற்கான தடையங்கள் எதுவும் நம்மிடையே இல்லை. 

இப்படி இருக்க, சங்க இலக்கியத் தடங்களைத் திரித்துப் பொருள்கொண்டு கற்பனையான ஒரு குமரிக் கண்டத்தை உருவாக்கி அதுதான் உலகின் மையமென்றும் அங்கேதான் மனித சமூகம் தோன்றிப் பரவியது என்றும் தமிழர்கள்தான் ஆதி மனிதர்கள் என்றும் தமிழ்தான் முதல் மொழியென்றும் கதைப்பது நமக்கு நாமே சொறிந்து விட்டுக்கொள்ள மட்டுமே பயன்படலாமேயன்றி, எந்த நிலவியல், மொழியியல், மானுடவியல் தரவுகளும் இந்த கருத்துக்குத் துணையாக இல்லை.

படத்தில் தெரிவது கடல்கள் இல்லாத புவியின் தரைப்பகுதி.

புத்தகம் 4

Reading_Marathon2025
#25RM055

Book No:4/100+
Pages:-120

மூளை மனம் மனிதன்
-,டாக்டர்ஜி.ராமானுஜம்

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகம் டாக்டர் ராமானுஜம் அவர்கள் எப்போதும் மருத்துவரைப் போல தெரியாத பல விஷயங்களை சொல்வதோடு அவரே பாமரத்தனமாகவும் கேள்வி கேட்டு அதற்கான பதிலையும் அந்த கட்டுரையிலேயே சொல்லி விடுவது சிறப்பான விஷயம். "மனம் ஒரு கொடி போன்றது, அது தனித்தே இல்லாது எப்பொழுதும் எதையோ ஒன்றை பற்றி கொண்டே இருக்கிறது என்பதைத்தான் இந்த புத்தகம் படித்த உடன் அறிய முடிந்தது.

கேள்விகளுக்கான விடையை மத குருமார்களிடமும் தத்துவ அறிஞர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டபோது வந்து அறிவை விட, மனிதன் தானே முயன்று தேடி கண்ட போது அறிந்த பதில்களை  தான் அவனை அறிவை விரிவடையச் செய்தது.பிற உயிரினங்களைப் போல் இல்லாமல் உலகம் தோன்றிய நாளில் சூழலுக்கு தக்கவாறு மனித இனம் தனக்கு ஏற்றவாறு உலகை மாற்றிப் பார்க்கிறான் அதன் மூலம் பரிணாம வளர்ச்சியில் அறிவை விரிவு செய்து தான் நினைத்தவற்றை சாதிக்கிறான்.

சிந்தனை பற்றி சொல்லும்போது ஒரு நாய் இன்னொரு நாயை பார்த்தால் குறைக்கிறது. ஆனால் யாருமே இல்லை என்றால் அது ஒரு வேறு நாயை பற்றி யோசித்து கொண்டு இருக்காது. ஏனெனில் அதற்கு சிந்தனை இல்லை. ஆனால் மனிதர் இருவர் கூடி பேசும்போது இல்லாத மூன்றாவதவர் பற்றி பேசுகிறார். தனியாக இருக்கும்போது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறான். இவ்வாறு எண்ணங்களும் மொழிகளும் சிந்தனையும் வளர்ந்ததன் வரலாற்றினை உளவியல் பூர்வமாக எடுத்துரைக்கிறார்.

பல திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம்.. மூளையை கேட்டு வேலை செய்ய மாட்டேன் மனசாட்சியை கேட்டு வேலை செய்கிறேன். மனசாட்சி இருக்கா மனதின் குரல் கேட்கவில்லையா என்று பலமுறை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம். ஆனால் மருத்துவர் மூளை செய்யும் வேலைக்கு இதயம் பேர் வாங்கிக் கொள்வதாக கூறி, மனதின் குறியீடாக இதயம் இயங்குகிறது. ஆனால் அதிலிருந்து லேப்டாப் சத்தம் மட்டும்தான் கேட்கிறது என்பதை நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் சிந்திக்கும் விதத்திலும் சொல்லி இருக்கிறார்.

நந்தலாலா படம் வந்த புதிலில் மிஸ்கின் அவர்கள் பகிர்ந்த செய்தி.. சாதாரண மனிதர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணங்கள் வருகிறது. ஆனால் அதில் ஒரு இணைப்பு தன்மை இருக்கிறது. அந்த எண்ணங்களிலிருந்து நினைத்தவுடன் வெளியேற முடிகிறது. ஆனால் மனப்பிறழ்வு இருக்கும் மனிதர்களிடம் நூற்றுக்கணக்கான எண்ணங்கள் தொடர்பற்று வெளியே வர முடியாமையாலும், அவர்கள் மனபிறழ்ச்சியாகவும் மன நோயாளிகளாகவும் மாறுவதாக சொல்லி இருப்பார்.இதிலும் மனிதனின் எண்ணங்கள் தோன்றிய சிந்தனைப் புரட்சியில் ஆரம்பித்து எண்ணங்கள் எவ்வாறெல்லாம் மனிதர்களிடம் வளர்ச்சி பெற்றது என்பதனை பற்றிய வரலாற்று பூர்வமாக தகவல்களை கொடுத்திருக்கிறார்.

உளவியலில் சூழல் முக்கிய பங்காற்றுகிறது. தன்னைச் சுற்றி இருக்கும் சூழல்தான், மனிதனுடைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதனை வாத்து கதை மூலம் நமக்குச் சொல்கிறார். வாத்துக்களை ஆராய்ச்சி செய்த கோன்ராட் லோரான்ஸ் வாத்துக்கள் பிறந்த சில மணி துளிகளில் அதன்முன் யார் அசைகிறார்களோ அவர்களையே தன் அம்மாவாக கருதி பின்னால் வருவதாக சொல்கிறார். இதனை மனிதனுடைய மூளையோடும்  மொழி அறிவோடும் தொடர்பு படுத்தி ஒரு சித்திரமாக நமக்கு கொடுத்திருக்கிறார்.

மூளையில் மொழி எங்கு உருவாகிறது எப்படி உருவாகிறது என்பதை சொல்லும் பகுதியில் மொழியால் தொடர்பு கொள்வது வெர்னிக், ப்ரோக்கா ஆகிய இரண்டு பகுதியில் வெர்னிக் பகுதி உள்வாங்கி புரிந்து கொள்வதற்கும் ப்ரோக்கா பகுதி வெளிப்படுத்துவதற்கும் செயல்படுவதாக சொல்கிறார். எண்ணங்கள் உணர்ச்சிகள் நினைவுகள் தவிர மூளையின் பகுதியில் உருவாகுபவை எவை எப்படி என்பதை குறித்து விரிவாக அலசி உள்ளார்.

மேலும் நினைவு, கவனம், மறதி எல்லாம் மூளையின் பகுதியில் எவ்வாறு உருமாற்றம் அடைகின்றன, வளர்கின்றன என்பது குறித்து எல்லாம் சொல்லிவிட்டு கலைப்படைப்புகளின் செயல்பாடுகளில் மனிதன் ஈடுபடும்போது மூளையின் பங்கு என்பன குறித்து எல்லாம் பேசியிருக்கிறார். மூளை குறித்து பல்வேறு புத்தகங்கள் வந்துள்ளன. மூளையின் உள்ள பாகங்கள் மூளையின் செயல்பாடுகள் என்பன குறித்து எல்லாம் வந்துள்ளன. ஆனால் இந்த புத்தகம் அதிலிருந்து வேறுபட்டதாக மூளையில் நடைபெறும் மாற்றங்களால் மனிதன் எவ்வகையில் மாற்றம் அடைகிறான். இந்த வரலாறு படிப்படியாக எவ்வாறெல்லாம் மனித மூளையில் வளர்ந்து வந்துள்ளது என்பது குறித்து எல்லாம் ஒரு ஆய்வு நூலுக்கே உரிய அம்சங்களுடன் பேசுகிறது.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

ஒவ்வொரு பொருளும் அணுக்களால் ஆனது. அணுவின் மையத்தில் புரோட்டான்கள் (நேர்மறை மின்சாரம்) மற்றும் நியூட்ரான்கள் (மின்சாரம் இல்லை) உள்ளன. இந்த மையத்தை எலக்ட்ரான்கள் (எதிர்மறை மின்சாரம்) சுற்றி வருகின்றன.ஒரு பொருளை நாம் தொடும்போது, நம் கை மற்றும் அந்த பொருளின் அணுக்களில் உள்ள எலக்ட்ரான்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வருகின்றன. எலக்ட்ரான்கள் எதிர்மறை மின்சுமை கொண்டவை என்பதால், அவை ஒன்றை ஒன்று விலக்குகின்றன. இந்த விலக்கு விசையைத்தான் நாம் "தொடுதல்" உணர்வாக உணர்கிறோம். உண்மையில், நம் கையின் அணுக்களும் பொருளின் அணுக்களும் நேரடியாக ஒன்றை ஒன்று தொடுவதில்லை. ஒரு சிறிய இடைவெளி எப்போதும் இருக்கும்.-நியாடண்டர்

Thursday, 9 January 2025

இருப்புக்கான போராட்டம் 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟படத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரு கரடி சாலமன் வகை மீனை வேட்டை ஆடுவவது போன்றே தோன்றும். ஆனால் சற்று உன்னிப்பாக அவதானித்தால் 'வாழ்வா சாவா' என்ற உள்ளுணர்வுப் போராட்டம் ஒன்று இங்கே நடப்பதை நன்கு அவதானிக்க முடியும். பல மில்லியன் ஆண்டுகள் பாரம்பரியத்தைக் கொண்ட இந்த மீனினம் பல ஆண்களாக ஊர் விட்டு ஊர் இடம் பெயர்ந்து வந்து இங்கே முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்துவிட்டு இந்த நதியில் சமாதியாவதே இயல்பானது. ஆனால் இங்கே மரணம் நிச்சியமாகிவிட்டது என்று அது உணர்ந்த நொடிப்பொழுதில் தனது முட்டைகளை கக்கி ஆற்றில் விட்டு தனது இனத்தின் இருப்பையாவது காக்க வேண்டும் என்ற ஒரு போராட்டம் இங்கே நடைபெறுகின்றது.அதன் வாயிலிருந்து செம்மை நிற துளிகள் வடிவில் சிதறி விழுவதுதான் அது விட்டுச் செல்லும் அதன் முட்டைகள், இல்லை அதன் இருப்புக்கான அடையாளங்கள். இறைவன் படைத்த படைப்பினங்கள் யாவற்றிலும், இனத்தின் இருப்புக்கான போராட்ட உள்ளுணர்வை அவன் வைத்ததால்தான் இன்று வரை இந்த பூலோகம் ஓடிக்கொண்டிருக்கின்றது. அதிலே உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.✍ தமிழாக்கம் / imran farook

எனக்குத் தெரிந்த முக்கியமான மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு நண்பரொருவர் கேட்டிருந்தார். அந்தப் பட்டியலை இங்கு இணைத்திருக்கிறேன். இவற்றில் ஏதேனும் விடுபடல்கள் இருப்பதாக எண்ணினால் அந்தத் தொகுப்புகளைக் குறிப்பிடுங்கள். வாங்கி வாசிக்க நினைப்பவர்களுக்கு உதவியாயிருக்கும். நன்றி.(குறிப்பு: என்னுடைய மொழிபெயர்ப்புச் சிறுகதைகளைத் தவிர்த்திருக்கிறேன்)இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் – தமிழில்: ஆர் சிவகுமார் (பாதரசம்)மீ – உலக விஞ்ஞானப் புனைவுகள் – தொகுத்தவர்: பிரவீண் பஃறுளி (யாவரும்)கிருமி – தமிழில்: நரேன் (யாவரும்)பறந்துபோய்விட்டான் – எட்கர் கீரத் – தமிழில்: செங்கதிர் (நூல்வனம்)ஆறாவது வார்டு – செகாவ் – தமிழில்: ரா கிருஷ்ணய்யா (நூல்வனம்)ஆக்டோபஸின் பேத்தி – தமிழில்: லதா அருணாச்சலம் (நூல்வனம்)கடவுளின் பறவைகள் – தமிழில்: வி பாலகுமார் (நூல்வனம்)கடைசி வருகை: மாய எதார்த்த உலகச் சிறுகதைகள் – தமிழில்: எழில் சின்னத்தம்பி (நூல்வனம்)சுழலும் சக்கரங்கள் – அகுதாகவா - தமிழில்: கணேஷ்ராம் (நூல்வனம்)மூன்று ரத்தத்துளிகள் - தமிழில்: கணேஷ்ராம் (நூல்வனம்)அது உனது ரகசியம் மட்டுமல்ல – தமிழில்: இல சுபத்ரா (தமிழினி)சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் – தமிழில்: அமரந்தா (காலக்குறி)ஜப்பானிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் (கனலி)அமெரிக்க மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் (கனலி)பெண்களற்ற ஆண்கள் – முரகாமி – தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ் (எதிர்)கினோ – முரகாமி – தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ் (எதிர்)ஒரு வாழ்க்கை சில சிதறல்கள் – தமிழில்: ஜான்சி ராணி (எதிர்)கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்து விட்டன – தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ் (எதிர்)பூனைகள் நகரம் - முரகாமி – தமிழில்: ஜி குப்புசாமி (வம்சி)கனவு இல்லம் – தமிழில்: கயல் (தமிழினி)பழைய துர்தேவதைகளும் புதிய கடவுளரும் - தமிழில்: கயல் (எதிர்)ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை – தமிழில்: எம் எஸ் (காலச்சுவடு)இறுதி யாத்திரை – எம்.டி.வி. – தமிழில்: கே வி ஷைலஜா (வம்சி)யேசு கதைகள் – பால் சக்கரியா – தமிழில்: கே வி ஜெயஸ்ரீ (வம்சி)பஷீர் சிறுகதைகள் – தமிழில்: குளச்சல் மூ யூசுப் (காலச்சுவடு)எரியும் சமவெளி - யுவான் ரூல்ஃபோ - தமிழில்: இல சுபத்ரா (எதிர்)

Wednesday, 8 January 2025

#கற்கை_நன்றே_10தற்காலத்திய நாகரிக உலகில் மறைந்து போன ஒன்றில் நன்றி சொல்வது என்பது முக்கியமானது.  ஏதேனும் ஒருவர் சந்தேகம் கேட்ட பின் அந்த சந்தேகத்தை தீர்த்து வைக்க பதில் சொன்னவுடன் மரியாதை நிமித்தமாக கூட நன்றி சொல்வதில்லை.சக மனிதர்களுக்கும் நமக்கும் இடையில் பெரிய வெற்றிடத்தை அதிகரித்துக் கொள்கிறோம்இதயபூர்வமாக நன்றியை வெளிப்படுத்துவதற்கு சில வினாடிகள் தான் தேவை என்கிறார் ரூஸ்வெல்ட்.Try Giving Yourself Away என்னும் நூலில் டேவிட் டன் என்பவர் நன்றி பாராட்டும் உக்தியை சொல்கிறார். நாள் முழுவதும் பரபரப்பாக செயல்படும் மனிதர்கள்.. நட்பை வளர்க்கக்கூடிய வாய்ப்புகளை நோக்க வேண்டும். மற்றவர்களின் சந்தோஷத்திற்காகவும் வெற்றிக்காகவும் அவர்களுடைய பிரச்சினைகளையும் நம்பிக்கைகளையும் செவி கொடுத்து கவனிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கும் நிலையற்ற தன்மைக்கும் மத்தியில் பிறருக்கு நம்பிக்கை கொடுக்கலாம். சிறிய உதவிக்கும் நன்றி சொல்வதன் வழியே நமக்கும் அவருக்கும் ஒரு நட்பு பாலம் ஏற்படுகிறது. ரோஜாவின் நறுமணத்தை ஓடும் போது நுகர முடியாது. சற்று நேரம் நின்றால்தான் அதை நுகர முடியும். வாழ்க்கையும் அது போன்றது தான். நின்றால் மட்டுமே கொண்டாட்டத்தை அனுபவிக்க முடியும். பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியை தவற விட்டு விடுகிறார்கள். அதற்கு காரணம் அது அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதல்ல; அவர்கள் அதை அனுபவிக்க பொறுமையாக நிற்பதில்லை என்பதுதான்.நற்காலை வணக்கம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம்-2


#Reading_Marathon2025
#25RM055

Book No:2/100+
Pages:-78

வாழ்வியல் கையேடு 
எபிக்டிடெஸ் 
தமிழில் சந்தியா நடராஜன் 

வாங்கக்கூடிய விலையில் இருக்கும் புத்தகங்கள் படிக்கும் நிலையில் இருக்காது. படிக்கக்கூடிய புத்தகங்கள் வாங்கும் விலையில் இருக்காது. ஆனால் இப் புத்தகம் மிகக் குறைந்த விலையில்.. குறைந்த பக்கங்களில், ஆனால் அடர்த்தியான மொழியில்.. நம்மை ஒவ்வொரு பக்கமும் சிந்திக்க வைத்து விட்டு தான் திருப்ப வைக்கிறது.

பொதுவாக கையேடு என்றால் புத்தகத்தில் உள்ள கடினமான பகுதிகளை எளிமையாக புரிந்து கொள்ளும் நோக்கோடு தான் கையேடு வடிவமைக்கப்படுகிறது. அதேபோலத்தான் இப்ப புத்தகம் வாழ்வியலுக்குரிய எளிய உண்மைகளை பேசும் புத்தகமாக மிளிர்கிறது. துருக்கி நாட்டில் பிறந்த எபிக்டிடெஸ் ரோமாபுரியில்  அடிமையாய் இருந்தார். பின்பு விடுதலை கிடைத்ததும் தத்துவ ஆசனாக விளங்கியவர். அவரின் மாணவராக இருந்த எர்ரியன் தான் தன் குருவின் போதனைகளை தொகுத்து பதிப்பித்தார். 52 போதனைகளுடன் பின் இணைப்பாய் தனிமையின் வலி பகுதியும் இடம் பெற்றுள்ளது.

பொதுவாக மனிதர்கள் அதிகாரம் செலுத்துவதிலே மிகுந்த ஆர்வத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் பிறரை குற்றம் சுமத்தாமல் தன் மனதுக்கு மாறாக எதுவும் செய்யாமல் இருந்தாலே எதிரிகள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு மனிதனின் தோற்றத் திறனையும் விருப்பு வெறுப்புகளையும் வேட்கையும் அடக்கி பழகினாலே தன்னலமின்றி இன்பமாய் வாழலாம் என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளையும் விளக்குகிறார்.

மனிதர்கள் சுயத்தை இழப்பதாலேயே பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். நாம் நாமாக இருக்கும் போது தான் உண்மையாக இருக்க முடியும்.
உன்னைத் தவிர யாராலும் உனக்கு அமைதியை தர முடியாது எனும் பொன்மொழியின் பொழிப்புரையாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் உனக்கு நீயே ஒளியாவாய் என்பதனை விளக்கும் வகையில் வாழ்வியல் கருத்துக்கள் உள்ளன.

பொதுவாக ஓஷோ புத்தகங்களில் ஒரு உண்மை கருத்தை விளக்குவதற்கு கதை அனுபவம் தத்துவம் என்ற பலவற்றை கலந்து இந்த உண்மை என்னும் மருந்தினை கொடுப்பார். ஆனால் இப் புத்தகத்தில் எந்தவித ஆடம்பரமும் அலங்காரமும் இன்றி, தத்துவார்த்த வாழ்வியல் கருத்துக்களை சாறு பிழிந்து கொடுத்தது போல ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளது.

மனித வாழ்வில் மனித ஏற்றுக் கொள்ள மாட்டாதது யதார்த்தம் என்பதுதான். அதனை எதிர்கொள்ள துணிவில்லாமல் எங்கெங்கு சுற்றி இறுதியில் அதை எதிர்கொள்வதை ஆரம்பத்திலேயே எதுர்கொண்டு திட்டமிட்டபடி, இன்பமான வாழ்வை அமைத்துக் கொள்வது பற்றிய விதிகள் தான் நூல் முழுக்க நுண்ணிய கருத்தை விளக்கும் விதத்தில் உள்ளது.

சாதாரண ஆர்வம் கொண்டவனுக்கு ஆசை மட்டும் இருக்கும். முடிந்த வரையில் முயல்வான். அது மேன்மை இல்லை .முற்றிலும் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் ஒலிம்பிக் போட்டியில் நீ பதக்கம் வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால் அந்த ஆசையோடு தொடர்ந்து அதற்கான தேவை உழைப்பு முயற்சி என்பதனை பற்றி கடுமையாக பயிற்சியும் செய்ய வேண்டும். உனது பயிற்சியாளரை மருத்துவர் போல கருதி அவருடைய வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்ற வேண்டும். நீ களத்தில் இறங்கிய பிறகு வெற்றியும் தோல்வியும் ஏற்படலாம். நீ தோற்றம் கூட போகலாம். ஆனால் ஒட்டு மொத்த விஷயங்களையும் சாதகமாக்கி முழு மனதிலும் போட்டியில் பங்கேற்க சென்று வெற்றி பெற வேண்டும் என உழைப்பின் மேன்மையை வெற்றி பெறுதலின் அவசியத்தையும் தொடர்பு படுத்தி கூறியுள்ளார்.

பழைய எதிர்நீச்சல் படத்தில் நாகேஷ் ஒரு காட்சியில் சொல்லுவார்.பால் சிந்திவிட்டால் வருந்தாதே.அதில் உள்ள தண்ணீர் சிந்திடுச்சேனு நினைச்சு லேசா விடுனு சொல்லுவார். வருத்தப்பட்டால் சிந்திய பால் வந்துவிடுமா என்று கேட்பார். அதுபோல் மனித வாழ்வின் துன்பங்களை நினைத்து உடைந்து போகாமல் மேலும் முன்னேற நமக்கு ஆலோசனையை சொல்கிறது.

*உண்மைக்கு ஆசைப்படு

*விருப்பம் என்பது நாம் நாடுவதை நோக்கி நம்மை ஓட வைக்கிறது வெறுப்பு என்பது நமக்கு ஒவ்வாததை தவிர்க்க வற்புறுத்துகிறது.

*நம்புவது என்பது கசப்புக்கும் குழப்பத்துக்கும் மருந்து. 

*இது என் வெற்றி ,இது அவரது தவறு, இது என் மோசமான துரதிருஷ்டம் என்றெல்லாம் ஒரு நிகழ்வை தன்மையப்படுத்திக் கொள்ளாதே .அந்த நிகழ்வை எந்த அளவுக்கு வசப்படுத்தலாம் என்று மட்டும் பார்.

*முடிந்தவரை மௌனமாய் இரு அல்லது பேசுவது குறைவாக இருக்கட்டும். பெருமை பற்றி பேச தொடங்கினால் நாம் சிறு புத்தி கொண்டவர்களாகிவிடுகிறோம்.பிறரை குறை சொல்வதையும் பிறரோடு ஒப்பிடுவதையும் புகழ் பாடுவதையும் தவிர்த்து விடு.

எதிர்காலம் குறித்த அச்சப்படுவதை காட்டிலும் நிகழ்காலத்தில் செம்மையாக வாழ்வது எப்படி என்பதை கையேடு நமக்கு உணர்வுபூர்வமாக ஒவ்வொரு வரிகளிலும் சொல்லி விடுகிறது. நமது கட்டுப்பாட்டில் இருப்பவைக்கு மட்டுமே, நாம் கவனம் செலுத்த முடியும் இல்லாதவற்றை என்ன பயன் என்பதையே சொல்கிறார்.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

நீராவி எஞ்சின், ரயில் பாதையின் கண்டுபிடிப்பு எல்லாம் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மாற்றமான நிகழ்வு. ரயில் என்பது மனிதனின் கண்டுபிடிப்பில் ஒரு பெரும் ஆச்சரியம் தான், கரும்புகையை கக்கிக்கொண்டு ரயில்கள் வந்த போது மனிதர்கள் அதை கண்டு அஞ்சி ஓடிஒளிந்திருக்கிறார்கள் ஆனால் இன்றைக்கு உலகம் முழுவதும் ரயில்கள் வந்துவிட்டன. இந்த வரைபடத்தில் வட ஆப்பிரிக்க நாடுகளில் ரயில்கள் இல்லாமல் இருப்பது தெரிய வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சரக்கு போக்குவரத்தில் 40% இன்றைக்கும் ரயில்களின் மூலமே நிகழ்கிறது. உலகம் முழுக்க 11,48,186கிமி துரம் ரயில்களால் இணைக்கப்பட்டுள்ளன, அதில் இந்தியாவில் மட்டும் 68,584 கிமி துரத்திற்கும் ஊர்கள் ரயில்களின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இரயில் பாதைகள் உலகம் முழுவதும் உள்ள சமூகங்கள், பொருளாதாரங்கள் மற்றும் நிலப்பரப்புகளை மறுவடிவமைத்துள்ளன, இன்றைக்கும் ஒரு ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து செல்லும் ரயில் பயணங்கள் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.-,அ.முத்துகிருஷ்ணன்

வாழ்க்கை என்பது இறுதியில் நினைவுகளின் சேகரமாகவே எஞ்சப்போகிறது. நம்முடைய நிகழ்காலமே அத்தகைய நல்நினைவுகளுக்கான முதலீடுதான். அப்படி ஏராளமான நினைவுகளைச் சேமிக்க வேண்டுமெனில் வெறுமனே எண்ணங்களிலோ பகற்கனவுகளிலோ உழன்றால் போதாது. நீங்கள் பார்வையாளராக அகன்று இருந்தால் வேலைக்காகாது. எதிலாவது குன்றா ஊக்கத்துடன் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். இன்பங்களில் திளைக்க வேண்டும். பயணம், சாகசம், காதல்கள், வாசிப்பு, அறிவுத்தேடல் எனப் பொருட்படுத்தத்தக்கச் செயல்களில் ஆழ்ந்துபோக வேண்டும். அனுபவப் பெட்டகமாக மலரவேண்டும். சாதாரண அன்றாட வேலைகளில் அதுபோன்ற உணர்வாழம் மிக்க நினைவுகளை ஈட்ட முடியாது. முதுமையில் நினைத்து நினைத்துச் சுவைப்பதற்கு எண்ணற்ற நிகழ்வுகளும் தருணங்களும் மனத்துள் பொங்கி வந்தால் மட்டுமே உங்களது வாழ்க்கையை முழுவீச்சில் வாழ்ந்திருக்கிறீர்கள் எனப் பொருள்.

ஒரு தத்துவவாதி வாழ்வின் பிடிபடாத சங்கதிகளை ஒன்று திரட்டி கேள்வியாக்குகிறான். கேள்வி என்பதே தேடலின் கருவிதானே. அதைச் சுருட்டிப் பிசைந்து வட்டமாய் ஒரு பந்தாக்கித் தனிமையில் அமர்ந்து அதை அசைத்தும், எறிந்தும், சுவற்றிலடித்தும் பார்க்கிறான். மெல்ல கேள்விகள் சிடுக்குகளை நோக்கி சில விடைகளைத் தருவதாக உணர்ந்து கொண்டு அந்த சங்கேதங்களை மொழியில் குறித்துக் கொள்கிறான். சில கேள்விகளுடனான போராட்டத்துடன் அவனுக்கான நேரம் முற்றிவிடுகிறது, அவனது குறிப்புகளிலிருந்து அவனது மாணவர்கள் தன்னை முன்னோக்கி நகர்த்திக் கொள்கிறார்கள்.தேடல் எனும் பந்து தொடர்ந்து எறியப்படுகிறது-கோ.கமலக்கண்ணன்

Sunday, 5 January 2025

Procrastination என்பது ஒரு செயலை உடனே செய்யாமல் தள்ளிப்போடுவது. அது ஒரு உளவியல் சிக்கல். புறத்தில் தடைகளே இல்லாதபோதும் தானாகச் சோம்பலின் காரணமாகவோ, தோல்வி அச்சத்தின் காரணமாகவோ ஒரு செயலைத் தள்ளிப்போட்டபடி இருப்பது.அதைக் கடப்பதற்குச் செயலே மருந்து. செயலின் முழுத் தோற்றமும் தெரியாதபோதும் அதில் இறங்கிவிடுவது நல் விளைவையே தரும். கடலை முழுதாகப் பார்த்த பிறகுதான் கால் நனைப்பேன் என்பதன் அடம் அகத்தின் அழுகலுக்கு வித்திடும். இந்த உளச் சிக்கலுக்கு அழகிய தமிழ்ச்சொல்லை வள்ளுவர் தந்திருக்கிறார். நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன்.காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அதிக தூக்கம்.இவை நான்கும் கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் தோணிகளாகுமாம்நன்றி கமலக்கண்ணன்

Thursday, 2 January 2025

கற்கை நன்றே-2


உலகில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். செய்பவர்கள், பார்ப்பவர்கள், வெறுமனே இருப்பவர்கள்.

 முதல் பிரிவில் இருப்பவர்கள் 'செயல் வீரர்' என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆர்வமும் உற்சாகத்துடன் எதையாவது புதிதாக செய்து கொண்டே இருப்பார்கள். அது வெற்றி பெற வேண்டும் என முழுமையாய் நம்புவார்கள். தோல்வி ஏற்பட்டாலும் துவண்டு விடமாட்டார்கள். 

இரண்டாவது வரும் பிரிவினர் ''பார்ப்பவர்கள்' புதிய முயற்சியில் ஆர்வம் இருக்கும். அதே சமயத்தில் தயக்கமும் இருக்கும். புதிய முயற்சியில் ஒருவர் வெற்றி பெற்று விட்டால் உடனே இவர்கள் அதனை தொடர்ந்து செய்யத் தொடங்கி விடுவார்கள். வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சியும் தோல்வியடைந்தால் பின்வாங்கியும் விடுவார்கள். 

இறுதியாக வருபவர்கள் தான் 'வெறுமனே பார்ப்பவர்கள்' இவர்களுக்கு எந்த ஆர்வம் இருக்காது. முயற்சித்துப் பார்ப்பதில் ஆசையும் இருக்காது. தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு இறுதிவரை பொழுதை போக்கி விடுவார்கள். இதில் எந்த ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் 

இனிய காலை 

#கற்கை_நன்றே_2

மெகாபிக்ஸல் megapixel என்பது டிஜிட்டல் கேமராக்களின் தெளிவுத் திறனைக் (resolution) குறிப்பது.பிக்ஸல் என்பது ஒரு படத்தை உருவாக்க உதவும் நிறங்களின் தகவல் அடங்கிய புள்ளிகளைக் குறிக்கிறது.பிக்ஸல்களின் எண்ணிக்கையையே ரெஸலுயூசன்.கிடையாகவும் நிலைக்குத்தாகவும் உள்ள பிக்ஸல்களின் (640X480) இது எடுத்துரைக்கப்படும்.ஒரு மில்லியன் (10 இலட்சம்) பிக்ஸல்களின் (pixels) எண்ணிக்கையையே மெகா பிக்ஸல் எனப்படுகிறது.உதாரணமாக 7.2 மெகா பிக்ஸல் கேமரா என்பது 7,200,000 பிக்ஸல்கள் கொண்டுகொண்டது.பிக்ஸல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தரம் அதிகரிக்கும்.ஒரு டிஜிட்டல் கேமரா நிலைக்குத்தாக 2048 பிக்ஸல்களையும் கிடையாக 3072 பிக்ஸல்களையும் உருவாக்குகிறது.அதாவது மொத்தம் 6,291,456 (2048 X 3072) பிக்ஸல்களை உருவாக்கிகிறது. எனவே அதன் தெளிவுத் திறன் 6.3 மெகாபிக்ஸல் என நிர்ணயிக்கப் படுகிறது.-படித்தது