Thursday, 13 February 2025

முப்பது வருடங்களாக அரசின் அலுவலகத்தில் ஓர் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி அவர். ஒரு நாள் கூட அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. இன்னும் கொஞ்ச நாட்கள் தான் உயிருடன் இருக்கப்போகிறோம் என்பதை அறிந்து உடைந்துபோகிறார். அதுவரை வாழ்ந்த வாழ்க்கையை சுயபரிசோதனை செய்து பார்க்கிறார். இயந்திரம் போல வேலை செய்து 30 வருட வாழ்க்கையைத் தொலைத்துவிட்டேன் என்பதை உணர்கிறார். எப்படி வாழ்வது என்பதை அறிய ஒரு கலைஞனைத் தேடிப்போகிறார். அந்தக் கலைஞனோ இரவு விடுதி போன்ற களியாட்டங்களுக்கு அந்த அதிகாரியை அழைத்துச் செல்கிறான். களியாட்டங்களில் வாழ்க்கை இல்லை என்பதை உணரும் அதிகாரி, தனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணைச் சந்திக்கிறார். அவள் விரைவில்வேலையை விடப்போகிறாள். அதற்காகவே அவரைச் சந்திக்கிறாள். அவளது முகத்தில் எப்போதுமே ஒரு குழந்தையைப் போல சிரிப்பு , மகிழ்ச்சி, உற்சாகம். இது அந்த அதிகாரியை வசீகரிக்கிறது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடும் அவளிடம், “நீ எப்படி எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கிறாய்? உன்னைப் போல நான் இருக்க என்ன செய்யவேண்டும் ..? “ என்று கேட்கிறார். அவள் பொம்மைகளைச் செய்யும் வேலையை செய்கிறாள். அந்த வேலையை செய்யத்தான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் அரசாங்க வேலையை விடுகிறாள். அவள் அந்த அதிகாரியிடம் இப்படிச் சொல்கிறாள் : “பொம்மையைச் செய்யும்போது ஜப்பானில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையுடனும் விளையாடுவதைப்போல உணருகிறேன். இந்த வேலை எனக்கு மகிழ்ச்சியை ,உற்சாகத்தை நான் வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை தருகிறது...”அவளின் பதில் அந்த அதிகாரிக்குப் புத்துயிர்ப்பை அளித்து மீண்டும் இன்னொரு பிறவியை எடுக்க வைக்கிறது.ஆம்;பல நாட்களுக்கு முன்பு குழந்தைகள் விளையாடும் இடத்தில் சாக்கடை சூழ்ந்திருப்பதால் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்று மக்கள் அவரிடம் ஒரு மனுவைக் கொடுத்திருப்பார்கள். அதை ஒரு பொருட்டாக கூட மதித்திருக்க மாட்டார். அந்தப் பெண்ணின் சந்திப்பு கொடுத்த மாற்றத்தில் பழைய மனுவை பரிசீலித்து குழந்தைகளுக்கான மைதானத்தை சரி செய்யும் பணியில் இறங்குகிறார் அந்த அதிகாரி. அந்தப் பணியில் ‘வாழ்’தல்னா என்னவென்று உணர்கிறார்.OTD

No comments:

Post a Comment