Sunday, 9 February 2025

ஜெயமோகன்


பட்டிமன்றத்துக்கு மட்டுமே இன்று மக்கள் வருகிறார்கள். சொற்பொழிவுகளுக்கு எவரும் வருவதில்லை. பட்டிமன்றம் என்னும் அமைப்பு உருவானது எதற்கு என குன்றக்குடி அடிகளார் ஒரு நூலில் சொல்கிறார். சிலப்பதிகாரம் முதலிய செவ்விலக்கிய நூல்களைப் பற்றிய உரைகள் நடக்கும்போது ஓர் உரை முடிந்ததுமே மக்கள் கலையும் வழக்கம் இருந்தது. அத்தனை உரைகளையும் அவர்களை கேட்கவைக்கும் பொருட்டே பட்டிமன்றம் என்னும் அமைப்பு உருவாகியது. ஓர் உரையை கேட்டவர் இறுதித் தீர்ப்புரையை கேட்காமல் கிளம்ப முடியாது.

நம் பட்டிமன்றங்களின் தலைப்புகள் இன்று எப்படி மாறியுள்ளன என்று பார்த்தால் இது தெரியும். ‘தலைவியரில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா?’ என்று விவாதித்த காலம் மறைந்துவிட்டது. ‘கொடுமைப்படுத்துவது மாமனாரா மாமியாரார்?’ ‘தமிழ் சினிமாப்பாடல்களில் காதலா காமமா?’ இதெல்லாம்தான் இன்றைய பட்டிமன்றத் தலைப்புகள். இன்னும் ஒருபடி மேலே சென்று திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் தமிழ்ச் செவ்விலக்கியங்களை, தனித்தமிழை, தமிழியக்கத்தையே கேலியும் கிண்டலும் செய்வதே இன்று பட்டிமன்றங்களில் நடைபெறுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சைவ ஆலயத்தின் திருவிழாவில் சொற்பொழிவு நிகழ்ச்சி. ஒரு பேச்சாளர் நகைச்சுவை என்ற பெயரில் அத்தனை நாயன்மார்களையும் கேலி செய்துகொண்டிருந்தார். திருமுறை பாடல்களை அபத்தமாக கேலிப்பாடலாக பாடிக்காட்டினார். பரோட்டாவுக்கு சால்னா கேட்பதை ‘பித்தா பிறைசூடி’ என்னும் பாணியில் சொல்லி காட்டினார். அரங்கு சிரித்துக்கொந்தளித்துக் கொண்டிருந்தது.

-ஜெயமோகன்

No comments:

Post a Comment